Friday, January 5, 2024

Mahabharatam in tamil 229

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-229
உத்யோக பர்வம்
..
பீஷ்மரால் நினைவிழந்த பரசுராமர்!
..
பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அங்கேயே தங்கியிருந்தவரும், உயர்ந்த நோன்புகளைக் கொண்டவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, ஓ! மன்னா {துரியோதனா}, மூன்றாம் நாளில் எனக்குச் செய்தி அனுப்பினார். {அந்தச் செய்தியில் அவர்}, "நான் இங்கே வந்திருக்கிறேன். எனக்கு ஏற்புடையதைச் செய்வாயாக" என்று சொல்லியிருந்தார். பெரும் வலிமைமிக்கவரான ராமர் {பரசுராமர்} எங்கள் நாட்டின் எல்லைக்குள் வந்திருக்கிறார் என்பதைக் கேட்டதும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், சக்தியின் கடலான அந்த ஆசானிடம் {பரசுராமரிடம்} விரைந்து சென்றேன். ஓ! மன்னா {துரியோதனா}, எனது அணிவகுப்பின் முன்னணியில் ஒரு பசுவை நிறுத்தியபடியும், பல அந்தணர்கள் மற்றும் (எங்கள் குடும்ப) புரோகிதர்கள், சிறப்பு நிகழ்ச்சிகளின் போது எங்களால் ஈடுபடுத்தப்படுபவர்களும், தேவர்களைப் போன்ற பிரகாசமிக்கவர்களுமான இன்னும் பிறர் ஆகியோருடன் நான் அவரிடம் {பரசுராமரிடம்} சென்றேன். அவரது முன்னிலையில் நான் வந்து சேர்ந்ததும், பெரும் ஆற்றலுடைய அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, நான் காணிக்கையாக அளித்த வழிபாட்டை ஏற்றுக் கொண்டு, என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.


ராமர் {பரசுராமர் பீஷ்மரிடம்}, "ஆசையை விட்ட நீ, ஓ! பீஷ்மா, காசி மன்னனின் மகளை {அம்பையை}, அவளது சுயம்வரத்தின்போது, என்ன மனோவுணர்ச்சியுடன் அபகரித்து, பின்பு அதன் தொடர்ச்சியாக அவளுக்கு விடைகொடுத்து அனுப்பினாய்? உன்னால் இந்தப் புகழ்பெற்ற மங்கை {அம்பை} அறத்தில் இருந்து வழுவியிருக்கிறாள்! உனது கரங்களின் தொடுகையால் களங்கமுற்ற இவளை {அம்பையை}, இனி எவன் திருமணம் செய்து கொள்வான்? ஓ! பாரதா {பீஷ்மா}, நீ இவளைக் கடத்தியதால், சால்வன் இவளை நிராகரித்துவிட்டான். எனவே, ஓ! பாரதா {பீஷ்மா}, எனது உத்தரவின் பேரில், நீயே இவளைப் பெற்றுக் கொள்வாயாக. ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மா}, இந்த மன்னனின் மகள் {அம்பை}, தனது பாலினத்திற்குரிய கடமைகளால் நிரப்பப்படட்டும்! ஓ! மன்னா, ஓ! பாவமற்றவனே {பீஷ்மா}, இவளுக்கு நேர்ந்திருக்கும் இந்த அவமானம் முறையாகாது" என்றார் {பரசுராமர்}.


(அந்தக் கன்னிகையின் {அம்பையின்} நிமித்தமாகத்) துயரில் மூழ்கியிருந்த அவரைக் {பரசுராமரைக்} கண்ட நான், அவரிடம், "ஓ! அந்தணரே, எக்காரணம் கொண்டும், என்னால் இந்தப் பெண்ணை {அம்பையை} எனது தம்பிக்கு {விசித்திரவீரியனுக்கு} அளிக்க முடியாது. ஓ! பிருகு குலத்தவரே {பரசுராமரே}, "நான் சால்வனுடையவள்" என்று என்னிடமே இவள் சொன்னாள். என்னால் அனுமதிக்கப்பட்ட பிறகே இவள் {அம்பை} சால்வனின் நகரத்திற்குச் சென்றாள். என்னைப் பொறுத்தவரை, நான், அச்சத்தாலோ, கருணையாலோ, செல்வத்தின் மீது கொண்ட பேராசையாலோ, காமத்தாலோ க்ஷத்திரியப் பயிற்சிகளைக் கைவிடமாட்டேன் என்பது எனது உறுதியான நோன்பாகும்" என்றேன்.


இந்த எனது வார்த்தைகளைக் கேட்ட ராமர், கோபத்தில் விழிகளை உருட்டியபடி என்னிடம், "ஓ! மனிதர்களில் காளையே {பீஷ்மா}, எனது வார்த்தைகளின்படி நீ நடந்து கொள்ளவில்லையெனில், இன்றே உன்னையும் உன்னோடு கூடிய உனது ஆலோசகர்களையும் கொன்றுவிடுவேன்" என்றார். உண்மையில், கோபத்தில் விழிகள் உருள, பெருஞ்சினத்துடன் ராமர் {பரசுராமர்} இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் என்னிடம் சொன்னார். எனினும் நான், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவரை {பரசுராமரை} இனிய சொற்களால் வேண்டிக் கொண்டேன். ஆனால் என்னதான் என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டாலும், அவர் {பரசுராமர்} குளிர்வடையவில்லை. அந்த அந்தணர்களில் சிறந்தவரிடம் {பரசுராமரிடம்} தலை வணங்கிய நான், அவர் {பரசுராமர்} என்னிடம் போரிட வேண்டுவதற்கான காரணம் என்ன என்று விசாரித்தேன்.


நான் {பரசுராமரிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, நான் சிறுவனாக இருந்த போது, நால்வகை ஆயுதங்களையும் எனக்கு நீர் கற்பித்தீர் [1]. எனவே, ஓ! பிருகு குலத்தவரே {பரசுராமரே}, நான் உமது சீடனாவேன்" என்றேன். பிறகு ராமர் {பரசுராமர்}, கோபத்தில் சிவந்த கண்களுடன், "ஓ! பீஷ்மா, நீ என்னை உனது ஆசானாக அறிகிறாய். எனினும், ஓ! கௌரவ்யா {பீஷ்மா}, என்னை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காகக் கூட இந்தக் காசி ஆட்சியாளின் மகளை ஏற்க மறுக்கிறாய். ஓ! குருக்களை இன்புறச் செய்பவனே {பீஷ்மா}, இவ்வழியில் நீ செயல்படாவிட்டால் நான் மனநிறைவு கொள்ள மாட்டேன்! ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {பீஷ்மா}, இந்தக் கன்னிகையைப் பெற்றுக் கொண்டு, உனது குலத்தைக் காத்துக் கொள்வாயாக! உன்னால் கடத்தப்பட்டதால், இவளுக்கு {அம்பைக்குக்} கணவன் அமையவில்லை" என்றார் {பரசுராமர்}.

[1] ஆயுத அறிவியல் (தனுர்வேதம்), ஆயுதங்களை முக்தம், அமுக்தம், முக்தாமுக்தம், யந்திரமுக்தம் என நால்வகைப்படுத்துகிறது. ஒரு முக்தா ஆயுதம் என்பது, ஒரு சக்கரத்தைப் போலக் கைகளில் இருந்து வீசி எறியப்படுவதாகும். ஒர் அமுக்தம் என்பது, ஒரு வாளைப் போலக் கைகளில் இருந்து வீசி எறியப்படாததாகும். ஒரு முக்தாமுக்தம் என்பது, ஒரு கதாயுதத்தைப் போல, சில வேளைகளில் வீசி எறியப்படுவதும், சில வேளைகளில் வீசி எறியப்படாததுமாகும். ஒரு யந்திரமுக்தம் என்பது, ஓர் அம்பைப் போன்றோ, ஓரு பந்தைப் போன்றோ, ஓர் இயந்திரத்தில் இருந்து அடிக்கப்படுவதாகும். முக்த ஆயுதங்கள் அனைத்தும் அஸ்திரங்களாகும். அதே வேளையில் அமுக்தங்கள் அனைத்தும் சஸ்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. என்கிறார் கங்குலி.


பகை நகரங்களை அடக்கும் அந்த ராமரிடம் {பரசுராமரிடம்} நான், "ஓ! மறுபிறப்பாள முனிவரே {பிராமணரே - பரசுராமரே}, இது நடக்காது. ஓ! ஜமதக்னியின் மகனே {பரசுராமரே}, உமது உழைப்பு வீணே. ஓ! புனிதமானவரே {பரசுராமரே} ஒரு காலத்தில் நீர் எனது ஆசானாக இருந்ததை நினைவுகூர்ந்தே, உம்மை மனநிறைவு கொள்ளச் செய்ய நான் மன்றாடுகிறேன்! இந்தக் கன்னிகையைப் {அம்பையைப்} பொறுத்தவரை, இவளை நான் முன்பே நிராகரித்துவிட்டேன். பெண்களின் குறைகள் {தோஷம்} பெரும் தீமைகளைத் தரவல்லவை என்பதை அறிந்த எவன், மற்றொருவனிடம் தனது இதயத்தை வைத்திருப்பவளும், (அக்காரியத்தில்) கடும் நஞ்சு கொண்ட பாம்பைப் போன்றவளுமான ஒருத்தியைத் தனது இல்லத்தில் ஏற்பான்?

ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே {பரசுராமரே}, வாசவனிடத்தில் {இந்திரனிடத்தில்} கொண்ட அச்சத்தால் கூட, நான் எனது கடமையைக் கைவிடமாட்டேன். என்னிடம் கருணையோடிரும், அல்லது நீர் முறையாக நினைப்பதை தாமதமில்லாமல் எனக்குச் செய்வீராக. ஓ! தூய ஆன்மா கொண்டவரே {பரசுராமரே}, ஓ! தலைவா, ஓ! பெரும் புத்திக்கூர்மை கொண்டவரே, உயர்ஆன்ம மருத்தனால் பாடப்பட்ட இந்தச் சுலோகம் நம்மால் புராணங்களில் கேட்கப்படுகிறது. அது {அந்தச் சுலோகம்} "மாயையால் நிரம்பியவரும், சரி, தவறு ஆகியவற்றின் அறிவில்லாதவரும், தீய பாதையில் நடப்பவருமான ஓர் ஆசானின் கட்டளையை ஒருவன் துறப்பதற்கு விதி அனுமதிக்கிறது" என்று சொல்கிறது {அந்தச் சுலோகம்}.


நீரோ எனது ஆசானாயிருக்கிறீர், இதன் காரணமாகக் கொண்ட அன்பின் நிமித்தமாகவே நான் உம்மைப் பெரிதும் மதிக்கிறேன். எனினும், நீர் ஆசானின் கடமையை அறியவில்லை. இதன் காரணமாகவே நான் உம்முடன் போரிடப் போகிறேன். நான் போரில் எந்த ஆசானையும் கொல்ல மாட்டேன். அதிலும் குறிப்பாக அந்தணரைக் கொல்லமாட்டேன், அதிலும் மிகக் குறிப்பாக, தவத்தகுதி கொண்ட ஒருவரைக் கொல்லவே மாட்டேன். இதற்காகவே நான் உம்மை மன்னிக்கிறேன். ஓடுவதற்கு முயலாமல், க்ஷத்திரியனைப் போல ஆயுதம் ஏந்தி, கோபத்துடன் போரிடும் ஒரு பிரமாணனைக் கொல்வது குற்றமாகாது என்பது சாத்திரங்களில் திரட்டப்பட்டிருக்கும் நன்கறியப்பட்ட உண்மையாகும்.

க்ஷத்திரியப் பயிற்சிகளில் நிலைபெற்றிருக்கும் நான் ஒரு க்ஷத்திரியனாவேன். தகுதியுடைய ஒருவனிடம் சரியாக நடந்து கொள்ளும் ஒருவன் எந்தப் பாவத்தையோ, எந்தத் தீங்கையோ செய்வதில்லை. காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் தன்மைகளை நன்கறிந்தவனும், பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டின் தாக்கமுடைய காரியங்களை அறிந்தவனுமான ஒருவன், {அவை} ஏதாவதொன்றில் ஐயங்கொண்டால், எந்த வகைத் தயக்கமுமின்றி அறத்தை அடைவதற்குத் தன்னை அவன் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அதுவே அவனுக்கு உயர்ந்த நன்மையைக் கொடுக்கும்.

நீரோ சந்தேகத்திற்குரிய உரிமை கொண்ட பொருளின் காரியத்தில் இணைந்து நீதியில்லாமல் செயல்படுவதால், நிச்சயம் உம்முடன் நான் ஒரு பெரும்போரில் போரிடுவேன். எனது கரங்களின் பலத்தையும், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட எனது ஆற்றலையும் காண்பீராக. அத்தகு சூழ்நிலைகளின் பார்வையில், நிச்சயம் நான், ஓ! பிருகுவின் மகனே {பரசுராமரே}, என்னால் முடிந்ததைச் செய்ய முடியும். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே - பரசுராமரே}, குருக்ஷேத்திரக் களத்தில் நாம் உம்முடன் போரிடுவேன். ஓ! பெரும் பிரகாசமுடைய ராமரே {பரசுராமரே}, நீர் கேட்பது போலவே தனிப்போரில் ஈடுபட உம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும். குருக்ஷேத்திரக்களத்திற்கு வந்து நிலைபெற்றுப் பெரும்போரில் எனது கணைகளால் துன்புற்று, எனது ஆயுதங்களால் தூய்மையடைந்து, (உமது தவங்களின் பயனால்) உம்மால் வெல்லப்பட்ட உலகங்களை அடைவீராக. ஓ! வலிமைமிக்கக் கரங்களையும், தவத்தைச் செல்வமாகவும் கொண்டவரே {பரசுராமரே}, போரில் மிக விருப்பமுடைய உம்முடன் அங்கே {குருக்ஷேத்திரத்தில்} போரிட நான் அணுகுவேன்.


பழங்காலத்தில், ஓ! ராமரே {பரசுராமரே} (இறந்து போன) உமது மூதாதையரை (க்ஷத்திரிய இரத்தம் எனும் நீர்க்காணிக்கையால்) எங்குத் தணித்தீரோ, அங்கேயே {குருக்ஷேத்திரத்திலேயே}, ஓ! பிருகுவின் மகனே {பரசுராமரே}, உம்மால் கொல்லப்பட்ட க்ஷத்திரியரை நான் தணிப்பேன். ஓ! ராமரே {பரசுராமரே}, தாமதமில்லாமல் அங்கே {குருக்ஷேத்திரத்திற்கு} வாரும். ஓ! வெல்லப்பட மிகக் கடினமானவரே {பரசுராமரே}, அந்தணர்கள் பேசி வரும் உமது பழம்பெருமையை நான் போக்குவேன். நீண்ட நெடும் வருடங்களாக, ஓ! ராமரே {பரசுராமரே}, "தனியாகவே, நான் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் வீழ்த்தினேன்" என்று உம்மால் பெருமையடிக்கப்படுகிறது. அந்தத் தற்புகழ்ச்சியில் உம்மை ஈடுபட வைக்க எது உதவியது என்பதை இப்போது கேளும். அக்காலங்களில் எந்தப் பீஷ்மனும் பிறக்கவில்லை, அல்லது பீஷ்மனைப் போன்ற எந்த க்ஷத்திரியனும் பிறக்கவில்லை. வீரமிக்க க்ஷத்திரியர்கள் தங்கள் பிறப்பை உண்மையில் பின்னரே அடைந்தார்கள். உம்மைப் பொறுத்தவரை, வைக்கோல் குவியலை மட்டுமே நீர் எரித்தீர். போரில் உமது செருக்கை எளிதாகத் தணிக்கும் ஒருவன் {அப்போது பிறக்கவில்லை;} இப்போது பிறந்துவிட்டான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, அவன் வேறு எவனும் அல்ல, பகை நகரங்களை அடக்குபவனான அவன் பீஷ்மனே ஆவான். ஓ! ராமரே {பரசுராமரே}, போரில் உள்ள உமது செருக்கை நான் தணிப்பேன் என்பதில் எந்த ஐயமுமில்லை" என்றேன்.

பீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், "எனது வார்த்தைகளைக் கேட்ட ராமர் {பரசுராமர்} சிரித்த படியே என்னிடம், "ஓ! பீஷ்மா, நீ என்னோடு போரிட விரும்புவது நற்பேறே ஆகும். ஓ! குரு குலத்தோனே {பீஷ்மா}, இப்போதே நான் உன்னுடன் குருக்ஷேத்திரத்திற்கு வருகிறேன். நீ சொன்னதை நான் செய்கிறேன். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அங்கே வா. ஓ! பீஷ்மா, எனது கணைகளால் துளைக்கப்பட்டு, தரையில் செத்து கிடந்து, கழுகுகளுக்கும், காக்கைகளுக்கும், பிற ஊனுண்ணி பறவைகளுக்கும் உணவாகப் போகும் உன்னை உனது தாயான ஜானவி {கங்காதேவி} காணட்டும். சித்தர்கள் மற்றும் சாரணர்களால் வழிபடப்படுபவளும், பகீரதனின் அருளப்பட்ட மகளும், நதி வடிவம் கொண்டவளும், தீயவனான உன்னைப் பெற்றவளுமான அந்தத் தேவி {கங்கா தேவி}, இத்தகு காட்சியை என்னதான் காணத் தகாதவள் என்றாலும், என்னால் கொல்லப்பட்டு, தரையில் பரிதாபநிலையில் கிடக்கும் உன்னைக் கண்டு இன்று அழப்போகிறாள்.


ஓ! பீஷ்மா, வா. ஓ! செருக்குடையவனே, எப்போதும் போரை விரும்பும் என்னைப் பின்தொடர்வாயாக. ஓ! குருகுலத்தோனே {பீஷ்மா}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உனது தேர்களையும், போருக்கான உனது பிற கருவிகள் அனைத்தையும் உன்னுடன் எடுத்துக் கொண்டு வா" என்றார் {பரசுராமர்}. பகை நகரங்களை அடக்குபவரான ராமர் {பரசுராமர்} சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட நான், என் சிரம் தாழ்த்தி அவரை {பரசுராமரை} வணங்கி, அவரிடம், "அப்படியே ஆகட்டும்" என்றேன்.

இவையனைத்தையும் சொன்ன ராமர் {பரசுராமர்}, போரை விரும்பி குருக்ஷேத்திரத்திற்குச் சென்றுவிட்டார். நான் நமது நகரத்திற்குள் நுழைந்து, சத்தியவதியிடம் அனைத்தையும் சொன்னேன். பிறகு (எனது வெற்றிக்கான) தணிவுச் சடங்குகளைச் செய்து, எனது தாயால் ஆசி கூறப்பட்டு, அந்தணர்களை எனக்கு நல்லாசி கூறச் செய்து, வெள்ளியில் செய்யப்பட்ட எனது அழகிய தேரில் நான் ஏறினேன். ஓ! மங்கா புகழ் கொண்டவனே {துரியோதனா}, அத்தேரில் வெண்ணிறக் குதிரைகள் பூட்டப்பட்டன. அந்தத் தேரின் ஒவ்வொரு பகுதியும் நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிதாக இருந்த அது {அந்தத் தேர்}, அனைத்துப் புறங்களிலும் புலித் தோலால் மூடப்பட்டு இருந்தது. பல பெரும் ஆயுதங்களும், தேவையானவை அனைத்தும் நிரப்பப்பட்டதாகவும் அது {அந்தத் தேர்} இருந்தது. நற்குடியில் பிறந்தவனும் ,துணிச்சல் மிக்கவனும், குதிரைகளின் நுட்பங்களை நன்கு அறிந்தவனும், போரில் கவனமாக இருப்பவனும், தனது கலையில் நன்கு பழகியவனும், பல போர்களைக் கண்டவனுமான ஒரு தேரோட்டியால் அது {அந்தத் தேர்} செலுத்தப்பட்டது. வெண்ணிற கவசம் தரித்திருந்த நான், கையில் ஒரு வில்லைக் கொண்டிருந்தேன். நான் எடுத்துக் கொண்ட வில் வெள்ளை நிறத்தில் இருந்தது.

இப்படித் தயரான நான், ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {துரியோதனா} புறப்பட்டேன். வெண்ணிறத்தில் இருந்த ஒரு குடை எனது தலைக்கு மேலே எப்போதும் பிடிக்கப்பட்டிருந்தது. ஓ! மன்னா {துரியோதனா}, வெண்ணிறத்தில் இருந்த சாமரங்களால் நான் எப்போதும் வீசப்பட்டேன். வெள்ளுடை, வெண்கிரீடம் ஆகியவை போக, என்னை அலங்கரித்திருந்தவை அனைத்தும் வெண்ணிறத்திலேயே இருந்தன. எனது வெற்றியை விரும்பிய பிராமணர்களால் நான் (துதி பாடல்களைக் கொண்டு) துதிக்கப்பட்டேன். பிறகு யானையின் பெயரால் அழைக்கப்படும் அந்த நகரத்திலிருந்து {ஹஸ்தினாபுரத்தில் இருந்து) புறப்பட்ட நான், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா} போர் நடைபெறப் போகும் குருக்ஷேத்திரத்தை நோக்கி முன்னேறினேன். காற்றின் வேகமோ, மனதின் வேகமோ கொண்ட அந்தக் குதிரைகள், எனது தேரோட்டியால் செலுத்தப்பட்டு, ஓ! மன்னா {துரியோதனா} விரைவில் என்னை அந்தப் பெரும் மோதலுக்குச் சுமந்து சென்றன.

போருக்கான ஆவலுடன் குருக்ஷேத்திரக் களத்திற்கு வந்த நானும், ராமரும் {பரசுராமரும்} ஒருவருக்கொருவர் எங்கள் ஆற்றலைக் காட்ட விரும்பினோம். பெரும் தவசியான ராமரின் {பரசுராமரின்} பார்வையில் வந்த நான், எனது அற்புத சங்கை எடுத்து உரக்க ஊதினேன். ஓ! மன்னா {துரியோதனா}, பல அந்தணர்களும், காட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட பல தவசிகளும், இந்திரனின் தலைமையிலான தேவர்களும் அந்தப் பெரும் போரைக் காண அங்கே நின்று கொண்டிருந்தனர். பல தெய்வீக மலர் மாலைகளும், பல்வேறு விதங்களிலான தெய்வீக இசையும், மேகம் போன்ற பல வாகனங்களும் அங்குக் காணக்கிடைத்தன. ராமருடன் {பரசுராமருடன்} வந்திருந்த அந்தத் தவசிகள் அனைவரும், போரின் பார்வையாளர்களாக இருக்க விரும்பி, அந்தக் களத்தைச் சுற்றி நின்று கொண்டனர்.

சரியாக இந்த நேரத்தில், ஓ! மன்னா {துரியோதனா}, அனைத்துயிரின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட எனது தெய்வீகத் தாய் {கங்காதேவி}, தனது சொந்த உருவத்துடன் என் முன் தோன்றி, "நீ செய்ய முயலும் இது {காரியம்} என்ன? ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} சென்று, ஓ! குருகுலத்தோனே {பீஷ்மா, பரசுராமரிடம்}, "உமது சீடனான பீஷ்மனுடன் போரிடாதீர்" என்று மீண்டும் மீண்டும் நான் வேண்டிக் கொள்வேன். ஓ! மகனே {பீஷ்மா}, க்ஷத்திரியனாக இருந்து கொண்டு, அந்தணரான ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} போரிடுவதில் உனது இதயத்தைச் செலுத்தாதே" என்றாள். உண்மையில், அவள் {கங்காதேவி} என்னை இப்படியே கண்டித்தாள். மேலும் அவள் {கங்காதேவி}, "ஓ! மகனே {பீஷ்மா}, மகாதேவருக்கு {சிவனுக்கு} இணையான ஆற்றல் படைத்த ராமர் {பரசுராமர்}, க்ஷத்திரிய குலத்தை அழிப்பவராவார்! அதை நீ அறியாததாலேயே, நீ அவருடன் போரிட விரும்புகிறாய்" என்றாள் {கங்காதேவி}.

அவளால் இப்படிச் சொல்லப்பட்ட நான் அந்தத் தேவியை {கங்காதேவியை} மரியாதையாக வணங்கி, ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, கூப்பிய கரங்களுடன் அவளிடம் {கங்காதேவியிடம்}, (காசி மகளின் {அம்பையின்}) சுயம்வரத்தால் நேர்ந்த அனைத்தையும் உரைத்தேன். ஓ! மன்னா {துரியோதனா}, நான் அவளிடம், (போரில் இருந்து விலக) ராமரை {பரசுராமரை} எப்படியெல்லாம் வேண்டினேன் என்பது அனைத்தையும் சொன்னேன். மேலும் நான் அவளிடம் காசியின் (மூத்த) மகளின் {அம்பையின்} கடந்த காலச் செயல்களின் வரலாற்றையும் சொன்னேன். பிறகு, எனது தாயான அந்தப் பெரும் நதியானவள் {கங்காதேவி}, ராமரிடம் {பரசுராமரிடம்} சென்று, அந்தப் பிருகு குல முனிவரிடம் எனக்காக வேண்டினாள். அவள் {கங்காதேவி} அவரிடம் {பரசுராமரிடம்}, "உமது சீடனான பீஷ்மனிடம் போரிடதீர்!" என்று சொன்னாள். எனினும், இப்படி வேண்டிக்கொண்டிருந்த அவளிடம் {கங்காதேவியிடம்}, ராமர் {பரசுராமர்}, "போ. சென்று பீஷ்மனை விலகச் செய்! அவன் எனது விருப்பதைச் செய்ய மறுக்கிறான். இதற்காகவே நான் அவனுக்கு அறைகூவல் விடுத்தேன்" என்றார் {பரசுராமர்}." {என்றார் பீஷ்மர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ராமரால் {பரசுராமரால்} இப்படிச் சொல்லப்பட்ட கங்கை {கங்கா தேவி}, தனது மகன் மீது கொண்ட பாசத்தால் பீஷ்மரிடம் திரும்பி வந்தாள். ஆனால், கோபத்தில் விழி உருள நின்ற பீஷ்மர், அவளது {கங்காதேவியின்} வேண்டுதலைச் செய்ய மறுத்தார். சரியாக அதே நேரத்தில், பலமிக்கத் தவசியும், பிருகு குலத்தில் முதன்மையானவருமான ராமர் {பரசுராமர்}, பீஷ்மரின் பார்வையில் தோன்றினார். பிறகு, அந்த இரு பிறப்பாளர்களில் சிறந்தவர் {பிராமணரான பரசுராமர்}, அவரை {பீஷ்மரை} போருக்கு அழைத்து அறைகூவினார்". 

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு, போருக்கு நிலைபெற்றிருந்த ராமரிடம் {பரசுராமரிடம்} நான் புன்னகையுடன், "தேரில் இருக்கும் நான், பூமியில் நின்று கொண்டிருக்கும் உம்மோடு போரிட விரும்பவில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பரசுராமரே}, ஓ! ராமரே {பரசுராமரே}, உண்மையில், நீர் என்னோடு போரிட விரும்பினால், ஓ! வீரரே {பரசுராமரே} ஒரு தேரில் ஏறுவீராக; உமது உடலில் கவசத்தைத் தரிப்பீராக" என்றேன். ராமரும் {பரசுராமரும்}, அந்தப் போர்க்களத்தில் புன்னகையுடன் என்னிடம், "ஓ! பீஷ்மா, இந்தப் பூமியே எனது தேர், குதிரைகளைப் போன்ற வேதங்களே என்னைச் சுமக்கும் விலங்குகளுமாகும்! காற்றே எனது தேரோட்டி, (காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகிய) வேத தாய்மார்களே எனது கவசமுமாவர். இவர்களால் நன்கு மறைக்கப்பட்டே {பாதுகாக்கப்பட்டே}, ஓ! குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, நான் இந்தப் போரில் போரிடுவேன்" என்றார் {பரசுராமர்}.



இதைச் சொன்னவரும், கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்டவருமான ராமர் {பரசுராமர்}, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, அனைத்துப் புறங்களிலும் என்னை அடர்த்தியான கணைகளால் நிரப்பினார் {தாக்கினார்}. பிறகு நான், அனைத்து வகை அற்புத ஆயுதங்களும் நிரம்பிய தேரில், அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்} நிற்பதைக் கண்டேன். அவரது அந்தத் தேர் மிக அழகானதாகவும், அற்புதமான தோற்றத்தைக் கொண்டதாகவும் இருந்தது. அவரது சுயவிருப்பத்தின் விளைவாக, அழகிய ஒரு நகரத்தைப் போல அஃது உண்டாக்கப்பட்டிருந்தது. தெய்வீகக் குதிரைகள் அதில் பூட்டப்பட்டிருந்தன. மேலும் தேவைக்குண்டான அனைத்து காப்புகளாலும் அது நன்கு பாதுகாக்கபட்டிருந்தது. முழுவதும் தங்க ஆபரணங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் கடினமான தோல்களால் மூடப்பட்டிருந்த அது, சூரியன் மற்றும் சந்திரனின் இலச்சனைகளைத் தன்னில் கொண்டிருந்தது. வில், அம்பறாத்தூணி ஆகிவற்றைத் தரித்துக் கொண்டிருந்த ராமர் {பரசுராமர்}, தனது விரல்களுக்குத் தோல் கையுறைகளை அணிந்திருந்தார்.


பார்கவரின் {பரசுராமரின்} உயிர் நண்பரும், வேதங்களை நன்கு அறிந்தவருமான அகிருதவரணர், அந்த வீரரின் {பரசுராமரின்} தேரோட்டியுடைய கடமைகளைச் செய்து கொண்டிருந்தார். மேலும் அந்தப் பிருகு குலத்தவர் {பரசுராமர்} என்னை மீண்டும் மீண்டும் போருக்கு அழைத்து, "வா, வந்து எனது இதயத்தை மகிழ்ச்சியூட்டு" என்றார். வெல்லப்பட முடியாதவரும், [1]க்ஷத்திரிய குலத்தை அழித்தவரும், சூரியனைப் போலப் பிரகாசமாக உதித்தவரும், (தன் பங்குக்குத்) தனியாகப் போரிட விரும்பியவருமான ராமரை {பரசுராமரை} எனது எதிரியாக அடைந்த நான் அவருடன் தனியாகவே போரிட்டேன். மூன்று கணைமாரிகளைப் பொழிந்து எனது குதிரைகளை அவர் {பரசுராமர்} துன்புறுத்திய பிறகு, நான் எனது தேரில் இருந்து இறங்கி, எனது வில்லை ஒரு புறமாக வைத்துவிட்டு, கால்நடையாக {காலால் நடந்து} அந்த முனிவர்களில் சிறந்தவரிடம் {பரசுராமரிடம்} சென்றேன். அவர் {பரசுராமர்} அருகில் சென்று, அந்த அந்தணர்களில் சிறந்தவரை மரியாதையுடன் வழிபட்டேன். முறையாக அவரை {பரசுராமரை} வணங்கிய நான், இந்தச் சிறந்த வார்த்தைகளை அவரிடம் சொன்னேன். நான் {பீஷ்மனாகிய நான் பரசுராமரிடம்}, "ஓ! ராமரே {பரசுராமரே}, நீர் எனக்கு நிகரானவராவோ, என்னைவிட மேன்மையானவராகவோ இருந்தாலும், எனது நல்ல ஆசானான உம்மிடம், இந்தப் போரில் நான் போரிடப் போகிறேன்! ஓ! தலைவா {பரசுராமரே}, நான் வெற்றி பெற எனக்கு ஆசி கூறும்" என்று கேட்டேன்.


இப்படிச் சொல்லப்பட்ட ராமர் {பரசுராமர் பீஷ்மனாகிய என்னிடம்}, "ஓ! குருகுலத்தில் முதன்மையானவனே {பீஷ்மா}, செழிப்பில் விருப்பமுடைய ஒருவன் இப்படித்தான் செயல்பட வேண்டும்! ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {பீஷ்மா}, தன்னைவிட மேன்மையான போர் வீரர்களோடு போரிடுபவர்கள், இந்தக் கடமையைச் செய்தே ஆகவேண்டும். ஓ! மன்னா {பீஷ்மா}, நீ இப்படி என்னை அணுகவில்லையெனில், நான் உன்னைச் சபித்திருப்பேன். உனது பொறுமையனைத்தையும் திரட்டிக் கொண்டு, கவனமாகப் போரிடுவாயாக. போ. எனினும், ஓ! குரு குலத்தோனே {பீஷ்மா}, உன்னை வீழ்த்த நானே இங்கு நிற்பதால், நீ வெற்றி பெற என்னால் ஆசி கூற முடியாது. போ, உனது நடத்தையால் நான் மகிழ்ந்தேன்" என்றார் {பரசுராமர்}.

அவரை {பரசுராமரை} வணங்கிய நான், விரைந்து திரும்பி, எனது தேரில் ஏறிக் கொண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட எனது சங்கை மீண்டும் ஒருமுறை ஊதினேன். ஓ! பாரதா {துரியோதனா}, அதன் பிறகு அவருக்கும் {பரசுராமருக்கும்} எனக்குமான மோதல் நடைபெற்றது. மேலும் அஃது, ஓ! மன்னா {துரியோதனா}, ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய எங்களுக்கிடையில் பல நாட்கள் போர் நீடித்தது. அந்தப் போரில், கழுகின் இறகுகளைக் கொண்ட தொள்ளாயிரத்து {960} அறுபது நேரான கணைகளால், முதலில் ராமரே {பரசுராமரே} என்னை அடித்தார். அந்தக் கணை மழையால், ஓ! மன்னா {துரியோதனா}, எனது நான்கு குதிரைகளும், எனது தேரோட்டியும் முழுமையாக மறைக்கப்பட்டனர்! கவசம் தரித்திருந்த நான் இவையாவற்றையும் தாக்குப்பிடிக்க முடியாமல் அந்தப் போரில் அமைதியாக நின்றேன்.


தேவர்களையும், குறிப்பாக அந்தணர்களையும் வணங்கிய நான், போரில் நிலைத்திருந்த ராமரிடம் {பரசுராமரிடம்} புன்னகையுடன், "நீர் எனக்குச் சிறு மதிப்பையும் காட்டவில்லையெனினும், நான் உமது ஆசிரியத்தன்மைக்கு முழுமையான மரியாதையைச் செலுத்திவிட்டேன். ஓ! அந்தணரே, அறம் ஈட்டப்பட மேற்கொள்ள வேண்டிய வேறு பிற மங்கலக் கடமைகளையும் கேளும். உமது உடலில் இருக்கும் வேதங்களையும், உம்மில் இருக்கும் பிரம்மத்தின் உயர்நிலையையும், கடுந்தவங்களால் நீர் ஈட்டிய தவத்தகுதிகளையும் நான் அடிக்கமாட்டேன். எனினும், ஓ! ராமரே {பரசுராமரே}, நீர் ஏற்றிருக்கும் க்ஷத்திரியத் தன்மையை அடிப்பேன். ஒரு பிராமணன் ஆயுதங்களை எடுக்கும்போது, அவன் க்ஷத்திரியனாகிவிடுகிறான். எனது வில்லின் வலுவையும், எனது கரங்களின் சக்தியையும் இப்போதும் பாரும். ஒரு கூரிய கணையைக் கொண்டு உமது வில்லை நான் விரைந்து வெட்டுவேன்" என்றேன்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, இதைச் சொன்ன நான், அகன்ற தலையுடைய கூரிய கணையை {அர்த்தச் சந்திர பாணத்தை} அவர் {பரசுராமர்} மேல் செலுத்தினேன். இப்படியே அதைக் கொண்டு, அவரது வில்லின் நுனியை அறுத்து, அந்த வில்லைக் கீழே விழச் செய்தேன். பிறகு, அந்த ஜமதக்னியின் {பரசுராமரின்} தேர் மீது, கழுகின் இறகைக் கொண்டவையும், நேரானவையுமான நூறு {100} கணைகளை அடித்தேன். ராமரின் {பரசுராமரின்} உடலினூடாகத் துளைத்துக் கொண்டு காற்றால் சுமந்து செல்லப்பட்ட அவை {அந்தக் கணைகள்}, ஆகாயத்தில் சென்ற போது (தங்கள் வாய்களில் இருந்து) இரத்ததைக் கக்குவதாகவும், உண்மையான பாம்புகளைப் போலவும் தெரிந்தன.


இரத்தத்தில் நனைந்தபடியும், உடலில் இருந்து இரத்தம் வெளியேறியபடியும் இருந்த ராமர் {பரசுராமர்}, ஓ! மன்னா {துரியோதனா}, தன் மார்பில் நீர் {உருகிய} உலோகங்களாக {liquid Metals} உருளும் ஓடைகளுடன் கூடிய சுமேரு மலையைப் போலவோ, வசந்தகாலத்தின் வருகையால், சிவந்த பூங்கொத்துகளால் மறைக்கப்பட்டிருக்கும் அசோக மரத்தைப் போலவோ, ஓ! மன்னா {துரியோதனா}, பூக்களை ஆடையாகத் தரித்த கின்சுக {பலாச} மரத்தைப் போலவோ விளங்கினார். மற்றொரு வில்லை எடுத்த ராமர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்து, தங்கச் சிறகுகள் படைத்த மிகக் கூரிய எண்ணற்ற கணைகளை என் மீது மழையாகப் பொழிந்தார். மூர்க்கமான வேகம் கொண்டவையும், பாம்பையோ, நெருப்பையோ, நஞ்சையோ போன்றவையான அந்தக் கடுங்கணைகள், அனைத்துப் புறங்களில் இருந்தும் வெளிப்பட்டு, எனது முக்கிய உறுப்புகளைத் துளைத்து என்னை நடுங்கச் செய்தன. எனது பொறுமையனைத்தையும் திரட்டி, அந்த மோதலுக்குப் பதில் சொன்ன நான், கோபத்தால் நிறைந்து, அந்த ராமரை {பரசுராமரை} நூறு {100} கணைகளால் துளைத்தேன்.

நெருப்பு, அல்லது சூரியன், அல்லது கடும்நஞ்சு கொண்ட பாம்புகளின் தோற்றத்தைக் கொண்ட அந்தச் சுடர்மிகும் நூறு {100} கணைகளால் துன்புறுத்தப்பட்ட ராமர் {பரசுராமர்} தனது உணர்வுகளை இழந்தவரைப் போலத் தோன்றினார். ஓ! பாரதா {துரியோதனா}, (அக்காட்சியைக் கண்டு) பரிதாபத்தால் நிறைந்த நான், எனது சுய விருப்பத்தின் படி {அடிப்பதை} நிறுத்தினேன். "போருக்கு ஐயோ, க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ" என்ற நான், ஓ! மன்னா {துரியோதனா}, துயரில் மூழ்கி, மீண்டும் மீண்டும், "ஐயோ, க்ஷத்திரியப் பயிற்சிகளை நோற்கும் என்னால் எத்தகு பெரும் பாவம் இழைக்கப்பட்டுவிட்டது. எனது ஆசானும், அறம் சார்ந்த ஆன்மா கொண்டவருமான ஓர் அந்தணரைத் துன்புறுத்திவிட்டேனே" என்றேன். அதன்பிறகு, ஓ! பாரதா, ஜமதக்னியின் மகனை {பரசுராமரை} அடிப்பதை நான் நிறுத்தினேன். அவ்வேளையில், தனது கதிர்களால் பூமியைச் சுட்டுவந்த ஆயிரங்கதிர் பேரொளியோன் {சூரியன்}, மேற்கில் இருந்த தனது மாளிகைக்கு நாளின் முடிவில் சென்றான். எங்களுக்குள் நடந்த போரும் நின்றது" என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "போர் நின்றதும், இத்தகு செயல்பாடுகளில் மிகவும் திறன் பெற்ற எனது தேரோட்டி, தன் உடலிலும், குதிரைகளின் உடல்களிலும், எனது உடலிலும் தைக்கப்பட்டிருந்த கணைகளை அகற்றினான். அடுத்த நாள் காலையில், சூரியன் உதித்து, போர் தொடங்கிற்று. (அதற்குச் சற்று முன்னரே) நீராடவும், தரையில் உருளவும் அனுமதிக்கப்பட்டிருந்த எனது குதிரைகள், தாகம் தணிக்கப்பட்டதன் மூலம் பலப்படுத்தப்பட்டிருந்தன.


கவசந்தரித்து, தேரில் நின்றபடி மோதலுக்கு விரைந்து வரும் என்னைக் கண்ட வலிமைமிக்க ராமர் {பரசுராமர்}, தனது தேரை மிகக் கவனத்துடன் தயார் செய்தார். போருக்கான விருப்பத்ததுடன் என்னை நோக்கி வந்த ராமரைக் {பரசுராமரைக்} கண்ட நான், எனது வில்லை ஒரு புறம் வைத்துவிட்டு, எனது தேரில் இருந்து விரைந்து இறங்கினேன். ராமரை {பரசுராமரை} வணங்கியபின், மீண்டும் அதில் ஏறி, ஓ! பாரதா {துரியோதனா}, போரை அவருக்குக் கொடுக்க விரும்பி, ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} முன்னிலையில் அச்சமற்று நின்றேன்.


பிறகு, அடர்த்தியான கணைமாரியின் மூலம் அவரை {பரசுராமரை} மூழ்கடித்தேன். பதிலுக்கு அவரும் {பரசுராமரும்} தனது கணை மாரியால் என்னை மறைத்தார். கோபத்தால் நிறைந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, வாயில் நெருப்புச் சுடர்களைக் கொண்ட உண்மையான பாம்புகளைப் போன்றனவும், பெரும் சக்தியுடையப் பல கடுங்கணைகளை என்மீது மீண்டும் ஒருமுறை அடித்தார். நானும், ஓ! மன்னா {துரியோதனா}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கூரிய கணைகளை அடித்து, ராமரின் {பரசுராமரின்} கணைகள் என்னை அணுகுவதற்கு முன்னரே, நடு வானிலே அவற்றை மீண்டும் மீண்டும் வெட்டினேன். பிறகு, ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, என் மீது தெய்வீக ஆயுதங்களை வீசத் தொடங்கினார். பலமிக்கச் செயல்களைச் செய்ய விரும்பிய நான், ஓ! பலம் நிறைந்த கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, அவற்றை எனது கணைகளின் மூலம் முறியடித்தேன். பிறகு ஆகாயம் எங்கும் பேரொலி எழுந்தது.


அந்நேரத்தில் நான், ராமர் {பரசுராமர்} மீது வாயவ்யம் என்று அழைக்கப்பட்ட ஆயுதத்தை வீசினேன். ராமர் {பரசுராமர்} குஹ்யகம் என்று அழைக்கப்பட்ட ஆயுதத்தால் அதை மட்டுப்படுத்தினார். பிறகு நான், உரிய மந்திரங்களுடன் ஆக்னேயம் என்று அழைக்கப்பட்ட ஆயுதத்தை அடித்தேன். ஆனால் தலைவன் ராமரோ {பரசுராமரோ}, வருணம் என்று அழைக்கப்பட்ட (தனது) ஆயுதத்தால் அதை மட்டுப்படுத்தினார். இவ்வழியிலேயே நான், ராமர் {பரசுராமர்} அடிக்கும் தெய்வீக ஆயுதங்களை மட்டுப்படுத்தினேன். அதே போல, எதிரிகளைத் தண்டிப்பவரும், பெரும் சக்தி கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை அறிந்தவருமான ராமரும் {பரசுராமரும்}, என்னால் அடிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுப்படுத்தினார்.


பிறகு, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அந்தணர்களில் சிறந்தவரும் வலிமைமிக்கவருமான ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்து, திடீரென வலது பக்கமாகச் சுழன்று வந்து, என்னை மார்பில் துளைத்தார். இதனால், ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, எனது தேர்களில் சிறந்த அந்தத் தேரில் மயங்கிச் சாய்ந்தேன். உணர்விழந்த என்னைக் கண்ட எனது தேரோட்டி, போர்க்களத்தில் இருந்து என்னை விரைந்து வெளியே கொண்டு சென்றான். ராமரின் ஆயுதங்களால் பீடிக்கப்பட்டவனாகவும், துளைக்கப்பட்டவனாகவும், வாடிப் போய் மூர்ச்சையடைந்திருந்த என்னைக் கண்டவர்களும், அகிருதவரணவருடன் கூடிய ராமரின் {பரசுராமரின்} தொண்டர்கள் அனைவரும் மற்றும் பிறரும், காசியின் இளவரசியும் {அம்பையும்}, ஓ! பாரதா {துரியோதனா}, மகிழ்ச்சியால் நிறைந்து உரக்க ஆரவாரம் செய்தனர்!

உணர்வை மீண்டும் அடைந்த நான், எனது தேரோட்டியிடம், "ராமர் {பரசுராமர்} எங்கிருக்கிறாரோ அங்கே செல்வாயாக! எனது வலிகள் என்னை விட்டு அகன்று விட்டன. நான் போருக்குத் தயாராக இருக்கிறேன்" என்றேன். இப்படிச் சொல்லப்பட்ட எனது தேரோட்டி, (சமவெளியில்) ஆடிக்கொண்டு செல்வன போன்ற எனது மிக அழகான குதிரைகளின் உதவியால், காற்றின் வேகத்தில் என்னை ராமரிடம் {பரசுராமரிடம்} கொண்டு சென்றான். ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, கோபத்தில் நிறைந்த நான், அவரது {பரசுராமரது} கோபத்தை வீழ்த்தும் விருப்பத்தில், கணைமாரியில் அவரை மூழ்கடித்தேன். ஆனால், எனது ஒவ்வொரு கணைக்கும் மூன்று அம்புகளை அடித்த ராமர் {பரசுராமர்}, நேராகச் செல்லக்கூடிய எனது கணைகள் அவரை அடையும் முன்பே, நடுவானிலேயே அவற்றைத் துண்டு துண்டாக அறுத்தார்.


நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எனது நல்ல கணைகள் ராமரின் கணைகளால் இரண்டாக அறுக்கப்படுவதைக் கண்ட ராமரின் {பரசுராமரின்} தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். ஜமதக்னியின் மகனான ராமரை {பரசுராமரைக்} கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட நான், தன் தலையில் மரணத்தையே {காலனே} அமர வைத்திருக்கும் ஓர் அழகிய கணையால் அவரை {பரசுராமரை} அடித்தேன். அதனால் கடுமையாகத் தாக்கப்பட்டு, அதன் வேகத்திற்குப் பலியான ராமர் {பரசுராமர்}, மயக்கத்தில் விழுந்து, தரையில் சாய்ந்தார். அப்படி ராமர் {பரசுராமர்} தரையில் விழுந்த போது, "ஓ!" என்றும், "ஐயோ!" என்றும் அனைத்துப் புறங்களில் இருந்தும் ஆச்சரிய ஒலிகள் கேட்டன. ஓ! பாரதா {துரியோதனா}, ஆகாயத்தில் இருந்து சூரியன் விழுந்துவிட்டதைக் கண்டதைப் போல, இந்த முழு அண்டமும் குழப்பத்தாலும், அச்சத்தாலும் நிறைந்தன.

பிறகு காசியின் இளவரசியோடு {அம்பையோடு} இருந்த தவசிகள் அனைவரும்,  ஓ! குருகுலத்தின் மகனே {துரியோதனா}, ராமரை {பரசுராமரை} நோக்கி அமைதியுடனும், பெருந்துயரத்துடனும் சென்றனர். அவரை {பரசுராமரை} வாரி அணைத்துக் கொண்ட அவர்கள், ஓ! கௌரவா {துரியோதனா}, தங்கள் கரங்களின் மென்மையான தொடுதலாலும், நீரைச் சொரிந்து குளிரூட்டியும், வெற்றி குறித்த உறுதிகளைச் சொல்லியும், அவருக்கு ஆறுதல் அளிக்கத் தொடங்கினர். இப்படி ஆறுதலளிக்கப்பட்ட ராமர் {பரசுராமர்}, எழுந்திருந்து, தனது வில்லில் கணையைப் பொருத்திக் கொண்டே நடுங்கும் குரலில் என்னிடம், "ஓ! பீஷ்மா, நில்! நீ ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டாய்!" என்று சொன்னார். அவரால் செலுத்தப்பட்ட அந்தக் கணை, அந்தக் கடும் மோதலில் எனது இடது புறத்தைத் துளைத்தது. அதனால் தாக்கப்பட்ட நான், புயலால் அசைக்கப்பட்ட மரத்தைப் போல நடுங்கத் தொடங்கினேன்.


அந்தப் பயங்கர மோதலில் எனது குதிரைகளைக் கொன்று, பெரும் நிதானத்துடன் போரிட்ட ராமர் {பரசுராமர்}, குறிப்பிடத்தகுந்த கரவேகத்துடன் அடிக்கப்பட்ட சிறகு படைத்த கணைகளின் கூட்டத்தால் என்னை மூழ்கடித்தார். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, ராமரின் {பரசுராமரின்} கணை மழையைத் தடுக்கும்பொருட்டு, பெரும் கரவேகத்துடன் நானும் கணைகளை அடிக்கத் தொடங்கினேன்.

பிறகு என்னாலும், ராமரால் {பரசுராமராலும்} அடிக்கப்பட்ட கணைகள் ஆகாயத்தையே மூடியபடி (கீழே விழாமல்) அங்கேயே தங்கின. அந்தக் கணைகளின் மேகத்தில் மறைந்த சூரியனால் அதனூடாகத் தனது கதிர்களைச் செலுத்த முடியவில்லை. அந்த மேகங்களால் தடுக்கப்பட்ட காற்றும், அவற்றைக் கடந்து செல்லும் திறனற்றதாக இருந்தது. காற்றின் அசைவும், சூரியனின் கதிர்களும் தடுக்கப்பட்டதாலும், கணைகளின் ஒன்றோடொன்றான மோதலாலும் ஆகாயத்தில் நெருப்பு உண்டானது. தங்களால் உண்டாக்கப்பட்ட நெருப்பின் விளைவாக எரிந்த அந்தக் கணைகள் அனைத்தும், சாம்பலாகப் பூமியில் விழுந்தன.

பிறகு, கோபத்தால் நிறைந்த ராமர் {பரசுராமர்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, நூறாயிரக் கணக்கான {லட்சக்கணக்கான}, கோடிக்கணக்கான கணைகளால் என்னை மறைத்தார். நானும், ஓ! மன்னா {துரியோதனா}, கடும் நஞ்சைக் கொண்ட பாம்புகளைப் போன்ற எனது கணைகால், ராமரின் {பரசுராமரின்} கணைகளைத் துண்டுகளாக அறுத்து, துண்டு துண்டாக வெட்டப்பட்ட பாம்புகளைப் போல அவற்றைப் பூமியில் விழச் செய்தேன். இப்படியே, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அந்த மோதல் நடைபெற்றது. எனினும், மாலையின் நிழல் வந்ததும், எனது ஆசான் {பரசுராமர்} போரில் இருந்து விலகினார்" என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அடுத்த நாள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, எனக்கும் ராமருக்கும் {பரசுராமருக்கும்} இடையில் மீண்டும் ஒரு முறை நடைபெற்ற மோதல் அச்சந்தருவதாக இருந்தது. தெய்வீக ஆயுதங்களை அறிந்தவரும், அறம்சார்ந்த ஆன்மா கொண்ட வீரருமான தலைவன் ராமர் {பரசுராமர்}, நாளுக்கு நாள் பல்வேறு விதங்களிலான தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார். தியாகம் செய்வதற்குக் கடினமான உயிரையே துச்சமாக மதித்த நான், அந்தக் கடும் மோதலில், ஓ! பாரதா {துரியோதனா}, அவற்றைக் கலங்கடிக்கச் செய்யும் அதே போன்ற எனது ஆயுதங்களால் அவற்றைக் கலங்கடித்தேன்.


மேலும், ஓ! பாரதா {துரியோதனா}, பல்வேறு விதமான ஆயுதங்களும் இவ்வழியில் மட்டுப்படுத்தப்பட்டு, பதில் ஆயுதங்களின் மூலம் கலங்கடிக்கப்பட்ட போது, பெரும் சக்தி கொண்ட ராமர் {பரசுராமர்}, உயிரைத் துச்சமாக மதித்து எனக்கெதிராகப் போரிட ஆரம்பித்தார். தனது ஆயுதங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட அந்த உயர் ஆன்ம ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, சுடர்விடும் வாயுடன் கூடியதும் எரிந்து கொண்டு வருவதுமான எரிநட்சத்திரத்திரம் போன்றதுமான ஒரு கடும் வேலாயுதத்தை என் மீது வீசினார். மரணத்தால் {காலனால் - எமனால்} வீசப்பட்ட கணையைப் போன்று, தனது பிரகாசத்தால் உலகையே நிறைத்தபடி அது வந்தது. எனினும் நான், எனக்கு எதிராக விரைந்து வந்ததும், யுகத்தின் முடிவில் எழும் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்தச் சுடர்மிகும் வேலை எனது கணைகளால் மூன்று துண்டுகளாக வெட்டினேன்.


அப்போது, நறுமணம் நிரம்பிய தென்றல் (என்னைச் சுற்றி) வீச ஆரம்பித்தது. தனது வேல் வெட்டப்பட்டதைக் கண்ட ராமர், எரியும் கோபத்துடன், பனிரெண்டு {12} கடும் வேலாயுதங்களை வீசனார். அவற்றின் {அந்த 12 வேலாயுதங்களின்} வடிவங்களை, ஓ! பாரதா {துரியோதனா}, அவற்றின் பிரகாசம் மற்றும் வேகத்தின் விளைவாக நான் விபரிக்க இயலாதவனாக இருக்கிறேன். உண்மையில், அவற்றின் வடிவங்களை நான் விளக்குவது எப்படி? நெருப்பின் நீள நாக்குகளைப் போலவும், பிரளய காலத்தில் உதிக்கும் பனிரெண்டு சூரியனைகளைப் போலவும் கடும் சக்தியுடன் சுடர்விட்டுக் கொண்டு அனைத்துப் புறங்களில் இருந்தும் என்னை அணுகிய அந்த வித்தியாசமானவற்றைக் கண்டு, நான் அச்சத்தால் நிறைந்தேன். ஒரு கணை வலையே என்னை நோக்கி முன்னேறி வருவதைக் கண்ட நான், எனது கணை மழையால் அவற்றைக் கலங்கடித்து, மேலும் பனிரெண்டு {12} கணைகளை அடித்து, ராமரின் {பரசுராமரின்} அந்தக் கடுமையான சக்தி கொண்ட கணைகளை எரித்தேன்.


பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, அந்த உயர் ஆன்ம ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, பார்க்கக் கடுமையானவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுப் பலவண்ணங்களில் இருந்தவையும், தங்கச் சிறகுகள் படைத்தவையும், சுடர்மிகும் எரிகற்களைப் போல இருந்தவையுமான எண்ணற்ற கணைகளை என் மீது அடித்தார். எனது கேடயம் மற்றும் வாளினால் அந்தக் கடும் கணைகளைக் கலங்கடித்து, அந்த மோதலில் அவற்றைத் தரையில் விழ வைத்த நான், சிறந்தவையான கணை மேகங்களால் ராமரின் {பரசுராமரின்} அற்புதக் குதிரைகளையும், அவரது தேரோட்டியையும் மூழ்கடித்தேன்.


பிறகு, ஹேஹயர்களின் தலைவனை {கார்த்தவீரியார்ஜுனனைக்) [1] கொன்ற அந்த உயர் ஆன்ம தலைவர் {பரசுராமர்}, தங்கப் பிடி கொண்டவையும், பொந்துகளில் இருந்து வெளிவரும் பாம்புகளைப் போன்றவையுமான எனது வேலாயுதங்களைக் கண்டு கோபத்தால் நிறைந்து, மீண்டும் ஒருமுறை தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார். வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போன்றிருந்த அந்தக் கடுங்கணைகளின் கூட்டம் என் மேல் விழுந்து, என்னையும், எனது குதிரைகளையும், எனது தேரோட்டியையும், எனது தேரையும் மூழ்கடித்தது.

[1] கார்த்தவீரியார்ஜுனன் என்றும் அழைக்கப்பட்டவனும், ராவணனை வீழ்த்தியவனும், ஹேஹய குல க்ஷத்திரியர்களின் தலைவனும், நர்மதைக் கரையில் உள்ள மாஹிஷ்மதி என்ற தலைநகரைக் கொண்டவனுமான ஆயிரங் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், ராமரால் {பரசுராமரால்} கொல்லப்பட்டவனாவான். என்கிறார் கங்குலி.


உண்மையில், ஓ! மன்னா {துரியோதனா}, எனது தேர், குதிரைகள், தேரோட்டி ஆகிய அனைத்தும் அந்தக் கணைகளால் மறைக்கப்பட்டன! அந்தக் கணை மழையால், எனது தேரின் நுகத்தடி, மூக்கணை {தேரின் ஏர்க்கால்}, சக்கரங்கள், அச்சுமரம் ஆகியன அறுக்கப்பட்டு உடனே முறிந்தன. எனினும், அந்தக் கணைமழையின் முடிவில், நானும் எனது ஆசானை {பரசுராமரை} அடர்த்தியான கணை மழையால் மறைத்தேன். பிரம்மத் தகுதியின் இருப்பிடமான அவர் {பரசுராமர்}, அந்தக் கணை மழையால் சிதைக்கப்பட்டதால், அவரது உடலில் இருந்து இரத்தம் தொடர்ச்சியாகக் கொட்டத் தொடங்கியது. உண்மையில், எனது கணை மேகங்களால் ராமர் {பரசுராமர்} துன்புற்றது போலவே, அவரது கணைகளால் நானும் அடர்த்தியாகத் துளைக்கப்பட்டு இருந்தேன். இறுதியாக மாலையில், மேற்கு மலைகளுக்குப் பின்னால் சூரியன் மறைந்ததும், எங்கள் மோதல் ஒரு முடிவுக்கு வந்தது" என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "அடுத்த நாள் காலையில், ஓ! மன்னா {துரியோதனா}, சூரியன் பிரகாசமாக உதித்த போது, எனக்கும், பிருகு குலத்தவருக்கு {பரசுராமருக்கும்} இடையிலான போர் மீண்டும் தொடங்கியது. பிறகு, அந்த அடிப்பவர்களில் முதன்மையானவர் {பரசுராமர்}, விரைவாக நகரும் தனது தேரில் நிலைபெற்று, மலையின் மார்பில் விழும் மேகங்களைப் போல, என் மீது கணைமாரியைப் பொழிந்தார். அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்ட எனது அன்புக்குரிய தேரோட்டி, தேரில் தனது இடத்தில் இருந்து நழுவி விழுந்ததால், அவன் {தேரோட்டி} நிமித்தமாகத் துயரம் என்னை நிறைத்தது. அவனோ சுய நினைவு முழுவதையும் இழந்தான். இப்படி அந்தக் கணைமாரியால் காயமடைந்த அவன் {தேரோட்டி}, மயங்கி பூமியில் சாய்ந்தான். ராமரின் {பரசுராமரின்} கணைகளால் பீடிக்கப்பட்ட அவன் {தேரோட்டி}, விரைவில் தனது உயிரையும் விட்டான்.


பிறகு, ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, அச்சம் எனது இதயத்தில் நுழைந்தது. எனது தேரோட்டியின் மரணத்தால் ஏற்பட்ட சோகத்தின் விளைவாக நான் அழுது கொண்டிருந்த போதே, ராமர் {பரசுராமர்}, மரணத்தைக் கொடுக்கும் பல கணைகளை என் மீது தொடுத்தார். உண்மையில், ஆபத்திலிருந்த நான் எனது தேரோட்டியின் மரணத்துக்காக அழுது கொண்டிருந்த போது, தனது வில்லைப் பலங்கொண்டமட்டும் இழுத்த அந்தப் பிருகு குலத்தவர் {பரசுராமர்}, கணை ஒன்றால் என்னை ஆழத் துளைத்தார். ஓ! மன்னா {துரியோதனா}, இரத்தத்தைக் குடிக்கும் அந்தக் கணை என் மார்பின் மீது விழுந்து என்னை ஆழமாகத் துளைத்ததன் தொடர்ச்சியாக நான் பூமியில் விழுந்தேன்.


பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நான் இறந்ததாக நினைத்த ராமர் {பரசுராமர்}, மேகங்களைப் போல மீண்டும் மீண்டும் கர்ஜித்து மிகவும் மகிழ்ந்தார். உண்மையில் ஓ! மன்னா {துரியோதனா}, நான் அப்படிப் பூமியில் விழுவதைக் கண்டு, எனக்குப் பின்னால் இருந்த கௌரவர்களும், அந்தப் போரைச் சாட்சியாகக் காண வந்தவர்களும் பெரிதும் வருந்திக் கொண்டிருக்கையில், மகிழ்ச்சி நிறைந்த ராமர் {பரசுராமர்}, தனது தொண்டர்களுடன் சேர்ந்து உரத்த கர்ஜனைகளை வெளியிட்டார். அப்படி நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த போது, ஓ! மன்னர்களில் சிங்கமே {துரியோதனா}, சூரியனைப் போன்றோ, நெருப்பைப் போன்றோ பிரகாசம் கொண்ட எட்டு {8} அந்தணர்களை நான் கண்டேன். அந்தப் போர்க்களத்தில் என்னைச் சூழ்ந்திருந்த அவர்கள், தங்கள் கரங்களால் என்னைச் சுமந்து கொண்டிருந்தனர். உண்மையில் அந்த அந்தணர்களால் சுமக்கப்பட்டதால், நான் தரையைத் தொடவேண்டிய நிலையில் இல்லை.


நண்பர்கள் தாங்கிக் கொள்வது போல, பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்த என்னை ஆகாயத்தில் அவர்கள் {8 அந்தணர்கள்} தாங்கிக் கொண்டனர். மேலும் அவர்கள் நீர்த்துளிகளை என் மீது தெளித்தனர். நின்று கொண்டே என்னைச் சுமந்த அவர்கள், ஓ! மன்னா {துரியோதனா}, என்னிடம் மீண்டும் மீண்டும், "அஞ்சாதே! செழிப்பு உனதாகட்டும்" என்றனர். அவர்களது வார்த்தைகளால் ஆறுதல் அடைந்த நான், விரைவாக எழுந்தேன்.


பிறகு நான், நதிகளில் முதன்மையான எனது தாய் கங்கை, என் தேரில் நிலைபெற்றிருப்பதைக் கண்டேன். உண்மையில், ஓ! குருக்களின் மன்னா {துரியோதனா}, (எனது தேரோட்டி விழுந்த பிறகு) பெரும் நதியான அந்தத் தேவியே {கங்காதேவியே} எனது குதிரைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். பிறகு எனது தாயின் பாதங்களையும், எனது மூதாதையர்களின் ஆவிகளையும் வழிபட்ட நான், எனது தேரில் ஏறினேன். பிறகு எனது தாய் எனது தேர், குதிரைகள் மற்றும் போருக்கான அனைத்து கருவிகளுக்கும் தனது பாதுகாப்பை அளித்தாள். கூப்பிய கரங்களுடன் நான் அவளைச் செல்லுமாறு வேண்டினேன். இப்படி அவளை வழியனுப்பிய நானே, காற்றின் வேகம் கொண்ட எனது குதிரைகளைக் கட்டுப்படுத்தி, ஓ! பாரதா {துரியோதனா}, அந்த நாளின் முடிவு வரை ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} போரிட்டேன்.

பிறகு, ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, அந்தப் போரின் போக்கில் நான் பலமிக்க ராமரின் {பரசுராமரின்} மேல், இதயத்தைத் துளைக்கும் பெருவேகம் கொண்ட கணையொன்றை அடித்தேன். அந்தக் கணையால் பீடிக்கப்பட்ட ராமர் {பரசுராமர்}, பிறகு, வில்லில் இருந்த தனது பிடியைத் தளர்த்தி, முழந்தாழ்களை ஊன்றியபடி பூமியில் சுயநினைவின்றி விழுந்தார்.


பல்லாயிரம் (தங்க நாணயங்களைத்) தானமளித்த ராமர் {பரசுராமர்} விழுந்த போது, ஆகாயத்தில் மேகத்திரள் சூழ்ந்து, இரத்த மழையை அதிகமாகப் பொழிந்தது. நூற்றுக்கணக்கான எரிகற்கள் விழுந்தன. அனைத்தையும் நடுங்கச் செய்யும் இடிமுழக்கங்கள் கேட்டன! சுடர் மிகும் சூரியனைத் திடீரென ராகு மறைத்தான். கடுங்காற்று வீசத்தொடங்கியது! இந்தப் பூமியே நடுங்கத் தொடங்கியது. கழுகுகள், காகங்கள், நாரைகள் ஆகியன மகிழ்ச்சியால் விழத் தொடங்கின. அடிவானத்தின் புள்ளிகள் {திசைகள்} பற்றி எரிவதாகத் தோன்றின. நரிகள் மீண்டும் மீண்டும் கடுமையாக ஊளையிடத் தொடங்கின. (மனித கரங்களால்) அடிக்கப்பட்ட துந்துபிகள் கடுமையான ஒலியை வெளியிடத் தொடங்கின. உண்மையில், அந்த உயர் ஆன்ம ராமர் {பரசுராமர்}, சுயநினைவை இழந்து, பூமியை அரவணைத்த போது, அச்சந்தரும் இந்தத் தீய சகுனங்கள் அனைத்தும் காணப்பட்டன.

பிறகு, திடீரென எழுந்த ராமர் {பரசுராமர்}, ஓ! கௌரவா {துரியோதனா}, அனைத்தையும் மறந்துவிட்டு, கோபத்தால் உணர்வுகளை இழந்து மீண்டும் ஒரு முறை என்னை அணுகினார். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அவர் {பரசுராமர்}, பெரும் வலுவுடைய தனது வில்லையும், மரணத்துக்கு ஒப்பான ஒரு கணையையும் எடுத்தார். எனினும், நான் அவரை வெற்றிகரமாகத் தடுத்தேன். அந்தப் பிருகு குலத்தவர் {பரசுராமர்} பெரும் கோபத்துடன் இருந்தாலும், (அங்கே நின்று கொண்டிருந்த) பெருமுனிவர்க்ள அனைவரும் அந்தக் காட்சியைக்கண்டு பரிதாபத்தால் நிறைந்தனர். யுகத்தின் முடிவில் தோன்றும் சுடர்மிகும் நெருப்பைப் போன்ற கணையொன்றை நான் எடுத்தேன், எனினும், அளவிலா ஆன்மா கொண்ட அந்த ராமர் {பரசுராமர்} அந்த எனது ஆயுதத்தைக் கலங்கடித்தார்.


புழுதி மேகத்ததால் மறைக்கப்பட்டிருந்த சூரிய வட்டிலின் பிரகாசம் மங்கியது; சூரியனும் மேற்கு மலைக்குச் சென்றுவிட்டான். குளிர்ந்த இனிய தென்றலுடன் இரவும் வந்தது. பிறகு நாங்கள் இருவரும் போரில் இருந்து விலகினோம். இவ்வழியிலேயே, ஓ! மன்னா {துரியோதனா}, மாலை வந்ததும் கடும்போர் நின்றது. மேலும் (அடுத்த நாளில்) சூரியன் மீண்டும் தோன்றிய போது, அது {போர்} தொடங்கியது. அது {அந்தப் போர்} தொடர்ச்சியாக இருபத்து மூன்று {23} நாட்களுக்கு நீடித்தது" என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்} சொன்னார், "பிறகு, ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, இரவின்போது, அந்தணர்கள், முனிவர்கள், தேவர்கள், இரவில் நடமாடும் அனைத்து உயிரினங்கள் {பூதங்கள்} மற்றும் பூமியின் அனைத்து மன்னர்கள் ஆகியோரை வணங்கியபின், எனது படுக்கையில் என்னைக் கிடத்திக் கொண்ட நான், எனது அறையில் தனிமையில் பின்வருமாறு சிந்தித்தேன். "பயங்கர விளைவுகளைக் கொடுக்கவல்லதும், எனக்கும், ஜமதக்னிக்கும் {பரசுராமருக்கும்} இடையில் நடைபெறுவதுமான இந்தப் போர் நெடுநாட்களாக நீடிக்கிறது. எனினும், வலிமையும் சக்தியும் கொண்ட ராமரை {பரசுராமரை} போர்க்களத்தில் என்னால் வீழ்த்த இயலவில்லை. உண்மையில், வலிமைமிக்க அந்தணரும், பெரும் ஆற்றலும் கொண்டவருமான ஜமதக்னியின் மகனை {பரசுராமரை} நான் வீழ்த்தவல்லவனெனில், இவ்விரவில், தேவர்கள் அன்புடன் எனக்குத் தங்களைக் காட்டிக் கொள்ளட்டும் {தரிசனம் அளிக்கட்டும்}" என்று சிந்தித்தேன்.


கணைகளால் சிதைக்கப்பட்டிருந்த நான், ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, அவ்விரவில் வலப்பக்கமாகப் படுத்து உறங்கிய போது, காலையின் நெருக்கத்தில் {அதிகாலையில்}, அந்தணர்களில் முதன்மையானோரும், தேரில் இருந்து விழுந்த என்னைத் தூக்கிப் பிடித்து எனக்கு ஆறுதல் அளித்தவர்களான அவர்கள் {அந்த 8 அந்தணர்கள்}, கனவில் தங்களை என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டு "அஞ்சாதே" என்றனர். மேலும் அவர்கள் என்னைச் சூழ்ந்து நின்று கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள். ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {துரியோதனா}, அவற்றை நான் திரும்பச் சொல்கிறேன்; கேட்பாயாக.


அவர்கள் {அந்த 8 அந்தணர்கள்}, "ஓ! கங்கையின் மகனே {பீஷ்மா} எழுவாயாக. உனக்கு அச்சம் தேவையில்லை! நாங்கள் உன்னைக் காப்போம், ஏனெனில் நீ எங்கள் சொந்த உடலே ஆவாய்! ஜமதக்னியின் மகனான ராமரால் {பரசுராமரால்}, போரில் உன்னை வீழ்த்த இயலாது! ஓ! பாரதக் குலத்தின் காளையே {பீஷ்மா}, போரில் நீயே ராமரை {பரசுராமரை} வெல்வாய்! ஓ பாரதா {பீஷ்மா}, விருப்பத்திற்குரியதும், பிரஸ்வாபம் என்று அழைக்கப்படுவதும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுக்குச் {பிரம்மாவுக்குச்} சொந்தமானதும், தெய்வீகக் கைவினைஞனால் {விஸ்வகர்மாவால்} காய்ச்சி வடிக்கப்பட்டதுமான இந்த ஆயுதம் உனது நினைவுக்கு வரும். ஏனெனில், முந்தைய வாழ்வில் {முற்பிறவியில்} நீ இதை அறிந்திருந்தாய். ராமரோ {பரசுராமரோ}, பூமியில் உள்ள எவருமோ இதை அறிந்ததில்லை. எனவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அதை நினைவுகூர்ந்து, பலத்துடன் பயன்படுத்துவாயாக!


ஓ! மன்னர்களின் மன்னா, ஓ! பாவமற்றவனே {பீஷ்மா}, அது {பிரஸ்வாப ஆயுதம்} தானாகவே உன்னிடம் வரும். அதைக் கொண்டு, ஓ! கௌரவா {பீஷ்மா}, வலிமையுத் சக்தியும் கொண்ட அனைவரையும் நீ தடுக்க இயன்றவனாவாய். ஓ! மன்னா {பீஷ்மா}, அந்த ஆயுதத்தால் ராமர் {பரசுராமர்} முற்றிலுமாகக் கொல்லப்படமாட்டார். எனவே, ஓ! மதிப்புகளை அளிப்பவனே {பீஷ்மா}, அதைப் பயன்படுத்துவதால் நீ எந்தப் பாவத்தையும் அடையமாட்டாய்! இந்த உனது ஆயுதத்தின் {பிரஸ்வாபத்தின்} சக்தியால் பீடிக்கப்படும் அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்} உறக்கத்தில் வீழ்வார்.


இப்படி அவரை {பரசுராமரை} வீழ்த்தும் நீ, ஓ! பீஷ்மா, சம்போதனம் என்று அழைக்கப்படும் விருப்பத்திற்குரிய ஆயுதத்தால் போரில் மீண்டும் அவரை எழுப்புவாய். ஓ! கௌரவ்யா {பீஷ்மா}, காலையில் தேரில் நிலைத்து நின்று நாங்கள் சொன்னதைச் செய்வாயாக! உறக்கத்தையும், மரணத்தையும் நாங்கள் சமமாகவே மதிக்கிறோம். ஓ! மன்னா, ராமர் {பரசுராமர்} நிச்சயம் இறக்கமாட்டார்! எனவே, பிரஸ்வாபம் என்ற இந்த ஆயுதத்தை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து அதைப் பயன்படுத்துவாயாக!" என்றனர். ஓ! மன்னா {துரியோதனா} இதைச் சொன்னவர்களும், எண்ணிக்கையில் எட்டாக {8} இருந்தவர்களும், ஒருவரை ஒருவர் ஒத்திருந்தவர்களும், பிரகாசமிக்க உடல்களைக் கொண்டவர்களுமான அந்த அந்தணர்களில் முதன்மையானோர் அனைவரும் எனது பார்வையில் இருந்து மறைந்து போனார்கள்" என்றார் {பீஷ்மர்}.

….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment