மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-220
உத்யோக பர்வம்
..
அண்டப்பெருவடிவம் - விஸ்வரூபம்
..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விதுரர் இதைச் சொன்னதும், பகையணிகளைக் கொல்பவனும், பெரும் சக்தி கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரன் மகன் துரியோதனனிடம், "மாயையால், ஓ! சுயோதனா {துரியோதனா}, நான் தனியன் என்று நீ கருதுகிறாய். அதனால்தான், ஓ! சிறுமதி படைத்தவனே, வன்முறையால் என்னை வீழ்த்தி பிறகு, என்னைச் சிறைபிடிக்க நீ முயல்கிறாய். எனினும், பாண்டவர்கள், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் அனைவரும் இங்கேயே இருக்கிறார்கள். ஆதித்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள், மற்றும் பெரும் முனிவர்கள் அனைவரும் இங்கேயே இருக்கிறார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.
இதைச் சொன்னவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, உரத்தச் சிரிப்பை வெடித்துச் சிரித்தான். அப்படி அந்தச் சௌரி {கிருஷ்ணன்} சிரித்த போது, அவனது உடலில் இருந்து, சுடர்மிகும் நெருப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம், கட்டைவிரலைவிடச் சிறிய அளவில், மின்னலின் பிரகாசத்துடன் கூடிய எண்ணற்ற தேவர்கள் வெளிப்பட்டனர். அவனது {கிருஷ்ணனின்} முன்நெற்றியில் பிரம்மனும், மார்பில் ருத்ரனனும் தோன்றினார்கள். அவனது கரங்களில் லோகபாலர்கள் தோன்றினார்கள். அவனது வாயில் {முகத்தில்} இருந்து அக்னி, ஆதித்யர்கள், சத்யஸ்கள், வசுக்கள், அசுவினிகள், மருத்துகள் ஆகியோர், இந்திரன் மற்றும் விஸ்வதேவர்களுடன் சேர்ந்து வெளிப்பட்டனர்.
அண்டப் பெருவடிவம் - விஸ்வரூபம்
எண்ணற்ற யக்ஷர்களும், கந்தர்வர்களும், ராட்சர்களும்கூட அதே அளவில் அங்கே வெளிப்பட்டனர். அவனது இரு கரங்களில் இருந்து சங்கர்ஷணனும் {பலராமனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} வெளிப்பட்டனர். வலது பக்கத்தில் வில்லுடன் அர்ஜுனன் நின்றான். இடது பக்கத்தில் கலப்பையுடன் பலராமன் நின்றான். அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பின்னே, பீமன், யுதிஷ்டிரன் மற்றும் மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் நின்றனர். அவனுக்கு முன்னே அந்தகர்கள், பிரத்யும்னனுடன் கூடிய விருஷ்ணிகள் மற்றும் வலிமை நிறைந்த ஆயுதங்களை உயர்த்திப் பிடித்திருந்த மற்ற தலைவர்களும் இருந்தனர்.
{பாஞ்சஜன்யம் என்ற} சங்கு, {சுதர்சனம் எனும்} சக்கரம், {கௌமோதகி எனும்} கதாயுதம், சாரங்கம் என்றழைக்கப்படும் வில், {ஹாலம் எனும்} கலப்பை, {சக்தி ஆயுதம் எனும்}, நந்தகம் {என்ற வாள்} மற்றும் இன்னும் பிற ஆயுதங்கள் அவனது பல்வேறு கரங்களில் பிரகாசத்துடனும், அடிப்பதற்கு உயர்த்திப் பிடித்த நிலையிலும் இருந்தன. அவனது கண்கள், மூக்கு {நாசி}, காதுகள் மற்றும் அவனது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் புகையுடன் கலந்த தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவனது உடலின் நுண்துளைகளில் {pores} இருந்து சூரியக் கதிர்களைப் போன்ற தீப்பொறிகள் வெளிப்பட்டன.
அந்த உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} பயங்கர வடிவத்தைக் {அண்டப்பெருவடிவைக்} கண்டு, துரோணர், பீஷ்மர், உயர்ந்த புத்திக்கூர்மை கொண்ட விதுரன், பெரும் நற்பேறுடைய சஞ்சயன் மற்றும் தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்கள் ஆகியோரைத் தவிர, (மற்ற) மன்னர்கள் அனைவரும் அச்சம் கொண்ட இதயத்தோடு தங்கள் கண்களை மூடிக் கொண்டனர். அச்சந்தர்ப்பத்தில் அந்தத் தெய்வீக ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அவர்களுக்கு தெய்வீகப் பார்வையை அளித்திருந்திருந்தான்.
(அவன் தெய்வீகப் பார்வை கொண்ட கண்களைத் திருதராஷ்டிரனுக்கு அளித்தான். அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன் அற்புதமான அந்த வடிவத்தைக் கண்டான். பிறகு தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், மஹோரகர்கள், பெரும்பேறு பெற்ற முனிவர்கள், லோகபாலர்கள், ஆகியோர் அந்தத் தலைவனைத் {கிருஷ்ணனைத்} தங்கள் தலையால் வணங்கி பணிவுடன் நின்று துதித்தார்கள்.)
அந்த உயர்ந்த அற்புதக் காட்சியை (குருக்களின்) அந்தச் சபையில் கண்டு, (வானத்தில்) தேவ துந்துபிகள் முழங்கின, (அவன் {கிருஷ்ணன்} மீது) பூமாரி பொழிந்தது.
பூமி முழுதும் நடுங்கியது. கடல்கள் கலங்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பூமியில் வசிப்போர் பெரும் ஆச்சரியத்தில் நிறைந்தனர். பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த மனிதர்களில் புலி {கிருஷ்ணன்}, தெய்வீகமானதும், உயர்ந்த அற்புதம் நிறைந்ததும், மிகவும் மாறுபட்டதுமான தனது மங்கல வடிவத்தை {விஸ்வரூபக் காட்சியை} விலக்கிக் கொண்டான்.
பிறகு சாத்யகியை ஒரு புறமும், ஹிருதிகனின் மகனை (கிருதவர்மனை) [1] மறுபுறமும், கரத்தோடு கரங்களாகக் கொண்டு, முனிவர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்} அங்கிருந்து வெளியேறினான். பிறகு அங்குப் பெரும் ஆரவாரம் ஏற்பட்டபோது, அந்த முனிவர்களும், நாரதரும், பிறரும் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் செல்ல {அங்கேயே} மறைந்து போனார்கள். மற்றும் ஓர் அற்புத நிகழ்ச்சியாக இதுவும் அங்கே நடந்தது.
அந்த மனிதர்களில் புலி {கிருஷ்ணன்} சபையை விட்டுச் செல்வதைக் கண்ட கௌரவர்களும், மன்னர்கள் அனைவரும், இந்திரனைப் பின்தொடர்ந்து செல்லும் தேவர்களைப் போல, அவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றார்கள். எனினும், அளக்கமுடியா ஆன்மா கொண்ட சௌரி {கிருஷ்ணன்}, தன்னைத் தொடர்ந்து வருவோரைக் குறித்து ஒரு சிந்தனையும் செய்யாமல், புகையுடன் கலந்த சுடர்மிகும் நெருப்பைப் போலச் சபையை விட்டு வெளியேறினான்.
{சபையின்} வாயிலில், கிண்கிணி ஒலியெழுப்பும் மணிகளின் வரிசையாலும், தங்க ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டதும், பெரும் வேகம் கொண்டதும், மேகங்கள் உருளும் ஒலியைப் போன்ற பெரும் சடசடப்பொலியை எழுப்பும் சக்கரங்களைக் கொண்டதும், வெள்ளைப் புலித் தோல்களால் முழுவதும் மூடப்பட்டதும், தனது {கிருஷ்ணனின்} குதிரைகளான சைவியம் (மற்றும் பிறவற்றால்) பூட்டப்பட்டதுமான தனது {கிருஷ்ணனின்} பெரிய வெண்தேரில், தனது தேரோட்டியான தாருகன் காத்திருப்பதைக் கண்டான். விருஷ்ணிகளுக்குப் பிடித்தமான வீரனும், ஹிருதிகனின் மகனும், வலிமைமிக்கத் தேரோட்டியுமான கிருதவர்மனும் தனது தேரில் அங்கே தோன்றினான்.
எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சௌரி {கிருஷ்ணன்}, தனது தேரைத் தயார் செய்து புறப்படும்போது, மன்னன் திருதராஷ்டிரன் மீண்டும் அவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! எதிரிகளை வாட்டுபவனே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மகன்கள் மீது நான் கொண்ட அதிகாரத்தை {சக்தியை} நீ கண்டாய். உண்மையில், இவை அனைத்தையும் நீ உனது கண்களாலேயே கண்டாய். இப்போது நீ அறியாதது எதுவுமில்லை. குருக்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நான் முயன்றதைக் கண்டு, (நான் இருக்கும்) எனது நிலையை அறிந்து, என் மீது நீ எந்தச் சந்தேகமும் கொள்ளாதிருப்பதே உனக்குத் தகும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நான் பாண்டவர்கள் மீது எந்தப் பாவம் நிறைந்த உணர்வுகளையும் கொள்ளாதவன். சுயோதனனிடம் {துரியோதனனிடம்} நான் பேசிய வார்த்தைகளை நீ அறிவாய். ஓ! மாதவா {கிருஷ்ணா}, சமாதானத்தை ஏற்படுத்த நான் செய்த அனைத்து முயற்சிகளையும் கௌரவர்களும், பூமியின் மன்னர்கள் அனைவரும் அறிவார்கள்" என்றான் {திருதராஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "திருதராஷ்டிரன், துரோணர், பெரும்பாட்டனான {பிதாமஹரான} பீஷ்மர், க்ஷத்ரி, பாஹ்லீகர், கிருபர் ஆகியோரிடம், வலிய கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, "குருக்களின் சபையில் நடந்த அனைத்தையும், கல்லாத இழிந்தவனைப் போல, கோபத்தில், தீயவனான துரியோதனன் எப்படிக் சபையை விட்டு வெளியேறினான் என்பதையும், தான் அதிகாரம் {சக்தி} அற்றவர் என்று மன்னன் திருதராஷ்டிரரே சொல்வதையும் நீங்கள் சாட்சியாகக் கண்டீர்கள். உங்கள் அனைவரின் அனுமதியின் பேரில் நான் இப்போது யுதிஷ்டிரனிடம் திரும்பப் போகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.
பிறகு அவர்களை வணங்கிய மனிதர்களில் காளையான சௌரி {கிருஷ்ணன்}, தனது தேரில் ஏறிப் புறப்பட்டான். பாரதர்களில் வீரக் காளைகளான பீஷ்மர், துரோணர், கிருபர், க்ஷத்ரி {விதுரன்}, அஸ்வத்தாமன், விகர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சு ஆகிய வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும் அவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தனர். குருக்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே, அவன் {கிருஷ்ணன்}, கிண்கிணி ஒலியெழுப்பும் மணிகளின் வரிசையால் அலங்கரிக்கப்பட்ட தனது பெரிய வெண்தேரில், தன் அத்தையின் (குந்தியின்) வசிப்பிடத்திற்குச் சென்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குந்தியின் வசிப்பிடம் சென்று அவளது பாதங்களை வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்}, குருக்களின் சபையில் நடந்தது அத்தனையும் அவளுக்குச் சுருக்கமாகச் சொன்னான். வாசுதேவன் {கிருஷ்ணன் - குந்தியிடம்}, "ஏற்கத்தகுந்ததும், காரணங்களுடன் கூடியதுமான பல்வேறு வார்த்தைகள், என்னாலும், முனிவர்களாலும் சொல்லப்பட்டும் துரியோதனன் அவற்றை ஏற்கவில்லை.
துரியோதனனையும் அவனது தொண்டர்களையும் பொறுத்தவரை, அவர்களது {அழிவு} நேரம் வந்துவிட்டது. உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு, நான் பாண்டவர்களிடம் விரைந்து செல்வேன். உனது செய்தியாக நான் அவர்களிடம் {பாண்டவர்களிடம்} என்ன சொல்ல வேண்டும்? ஓ! பெரும் அறிவு படைத்தவளே, நான் உனது வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.
குந்தி {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, நல்ல ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக, "ஓ மகனே {யுதிஷ்டிரா}, உனது அறம் வெகுவாகக் குறைந்து வருகிறது. வீண் செயல் புரியாதே. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வேதங்களின் உண்மைப் பொருளை உணரும் திறனற்றவன் அதைப் படித்தாலும் உண்மையில் கல்லாதவனே. அது போல, நீ வேதங்களில் அறம் சார்ந்த வார்த்தைகளை மட்டுமே புரிந்து கொள்கிறாய். படைப்பாளன் {பிரம்மன்} வகுத்துள்ள படி, உனது சொந்த வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளில் உனது கண்களைச் செலுத்துவாயாக. கொடூரச் செயல்கள் அத்தனைக்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், தன் கரங்களின் ஆற்றலையே நம்பியிருக்கும் க்ஷத்திரியன், அவனது (பிரம்மனின்) கரங்களில் இருந்தே உண்டாக்கப்பட்டான்.
இது தொடர்பாக, நான் முதியோரிடம் இருந்து கேட்டறிந்த ஒரு நிகழ்வைக் கேட்பாயாக. பழங்காலத்தில், அரசமுனியான முசுகுந்தனிடம் மனநிறைவு கொண்ட வைஸ்ரவணன் {குபேரன்}, இந்தப் பூமியைக் கொடையாக அவனுக்கு {முசுகுந்தனுக்கு} அளித்தான். பின்னவனோ {முசுகுந்தனோ} அந்தக் கொடையை ஏற்காமல், "எனது கரங்களின் ஆற்றலினால் வெல்லப்பட்ட அரசுரிமையையே நான் அனுபவிக்க விரும்புகிறேன்" என்றான். இதனால் பெரிதும் மகிழ்ந்த வைஸ்ரவணன் {குபேரன்}, ஆச்சரியத்தால் நிறைந்து போனான். க்ஷத்திரிய வகைக் கடமைகளை முழுமையாக நோற்ற மன்னன் முசுகுந்தன், தனது கரங்களின் ஆற்றலினால் இந்தப் பூமியை வென்று ஆட்சி செலுத்தினான்.
மன்னனால் நன்கு பாதுகாக்கப்பட்ட குடிமக்கள் பயிலும் அறத்தில் {தர்மத்தில்} ஆறில் ஒரு பங்கு மன்னனால் அடையப்படுகிறது. தானே பயிலும் அறத்தால் அந்த மன்னன் தெய்வத் தன்மையை அடைகிறான். அதே வேளையில் அவன் பாவத்தைச் {மறம்-அதர்மம்} செய்தால், அவன் நரகத்திற்குச் செல்கிறான்.
குற்றவியல் சட்டங்களை {தண்ட நீதியை} முறையாகப் பயன்படுத்தும் ஆட்சியாளன், நால்வகை மக்களையும் தங்கள் கடமைகளைச் செய்ய வைத்தால், அஃது (ஆட்சியாளன்) அறம் (பொருளையும், முக்தியையும்) ஈட்ட வழிவகுக்கிறது. குற்றவியல் சட்டத்தின் {தண்ட நீதியின்} ஒரு பகுதியின் ஓர் எழுத்தைக் கூட உயிரற்றதாக்கமல், ஒரு மன்னன் அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்தும்போது, காலங்களில் சிறந்த அந்தக் காலத்தில்தான் கிருதயுகம் ஏற்படுகிறது. காலம் மன்னனுக்குக் காரணமா? மன்னன் காலத்துக்குக் காரணமா? என்பதில் உனக்குச் சந்தேகம் வேண்டாம். மன்னனே காலத்திற்குக் காரணமாவான் (இதை உறுதியாக அறிந்து கொள்வாயாக).
கிருத, திரேத அல்லது துவாபர யுகங்களை மன்னனே உண்டாக்குகிறான். உண்மையில், நான்காவது யுகத்துக்கும் (கலியுகத்துக்கும்) மன்னனே காரணமாக இருக்கிறான். கிருத யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான் {அதாவது சொர்க்கத்தை முடிவின்றி அனுபவிக்கிறான்}. திரேதா யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் அதீதமாக அல்ல. {அதாவது சொர்க்கத்தை முடிவுள்ளதாகவே அனுபவிக்கிறான்}. துவாபர யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், தனக்கு உரியதை அனுபவிக்கிறான். எனினும் கலியுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன் பாவத்தை அதீதமாக ஈட்டுகிறான். அதன்பேரில், அந்த மன்னன் நரகத்தில் எண்ணற்ற வருடங்களுக்கு வசிக்கிறான். உண்மையில், மன்னனின் பாவங்கள் உலகை பாதிக்கச் செய்கின்றன, உலகின் பாவங்களும் அவனைப் பாதிக்கின்றன.
உனது குலமரபுக்குப் பொருத்தமான அரச கடமைகளை நீ நோற்பாயாக. நீ பின்பற்ற விரும்பும் நடத்தை ஓர் அரசமுனியினுடையது அல்ல. உண்மையில், பலவீனமான இதயத்தால் கறைபடிந்தவனும், இரக்கம் கொள்பவனும், நிலையற்றவனுமான ஒருவனால், தனது குடிமக்களை அன்புடன் பேணிக்காத்து தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியாது.
என்ன புரிதலில் நீ இப்போது செயல்பட்டுவருகிறாயோ, அதை {அந்தச் செயல்களை}, {உனது தந்தை} பாண்டுவோ, நானோ, உனது பாட்டனோ {பீஷ்மரோ} எப்போதும் விரும்பியதில்லை. நாங்கள் உனக்கு ஆசிகள் வழங்கிய போதெல்லாம், வேள்வி, கொடை, தகுதி {புண்ணியம்}, வீரம், குடிமக்கள், பிள்ளைகள், ஆன்ம பெருமை, பலம், சக்தி ஆகியவற்றை வேண்டியே உனக்கு ஆசி கூறினோம். நன்மை விரும்பும் அந்தணர்கள் {வேள்வியில்} தங்கள் சுவாகாக்களையும், சுவதாக்களையும் சேர்த்து, உனக்கு நீண்ட ஆயுள், செல்வம், பிள்ளைகள் ஆகியவை ஏற்பட தேவர்களையும், பித்ருக்களையும் மனநிறைவு கொள்ளச் செய்து, அவர்களை முறையாக வழிபட்டனர்.
தேவர்களைப் போலவே தாயும் தந்தையும் எப்போதும் தங்கள் பிள்ளைகளுக்காகத் தயாளம், கொடை, கல்வி, வேள்வி, குடிமக்களின் மீது ஆட்சி ஆகியவற்றையே எப்போதும் விரும்புகின்றனர். இவை நீதிமிக்கதோ {அறமோ}, நீதியற்றதோ {மறமோ}, எப்படிப்பட்டதாக இவை இருப்பினும், உனது பிறப்பின் விளைவால் நீ அதைப் {க்ஷத்ரியக் கடமைகளைப்} பயிலவே வேண்டும்.
(ஓ! கிருஷ்ணா, இவற்றையெல்லாம் {அவன்} செய்யும்படி பார்), உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும், ஆதரவுக்கான வழிமுறைகள் அற்றவர்களாக இருப்பவர்கள், துன்பத்தால் பாதிக்கப்படுகின்றனர். துணிச்சல் மிக்கவனும், தாராளமானவனுமான ஏகாதிபதி ஒருவனை அணுகும் பசி நிறைந்த மனிதர்கள், மனநிறைவடைந்து, அவனுக்குப் பக்கத்திலேயே வாழ்கிறார்கள். அதைக்காட்டிலும் மேன்மையான அறம் என்ன? அறம் சார்ந்த மனிதன் ஒருவன், நாட்டை அடைந்த பிறகு, கொடையால் சிலரையும் {தானத்தால்}, பலத்தால் சிலரையும் {தண்டத்தால்}, இனிய சொற்களால் {சாமத்தால்} சிலரையும் என உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும்.
அந்தணன் ஒருவன் பிச்சையெடுத்து வாழும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும்;
ஒரு க்ஷத்திரியன் (குடிமக்களைப்) பாதுகாக்க வேண்டும்;
ஒரு வைசியன் செல்வம் ஈட்ட வேண்டும்;
ஒரு சூத்திரன் மற்ற மூவருக்கும் சேவை செய்ய வேண்டும்.
எனவே, பிச்சை உனக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. உழவும் {விவசாயம்} உனக்குப் பொருத்தமானது இல்லை.
நீ ஒரு க்ஷத்திரியன். எனவே, துயரில் இருக்கும் அனைவரையும் நீ பாதுகாப்பவனாவாய். உனது கரங்களின் ஆற்றலைக் கொண்டே நீ வாழ வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ இழந்த உனது தந்தையின் பங்கை, சமரசப் பேச்சுவார்த்தை மூலமோ {சாமத்தாலோ}, எதிரிகளுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தியோ {பேதத்தாலோ}, பணத்தைக் கொடையாகக் கொடுத்தோ {தானத்தாலோ}, வன்முறையாலோ {தண்டத்தாலோ}, நன்கு இயக்கப்படும் கொள்கையினாலோ {நீதியினாலோ} மீட்டெடுப்பாயாக.
நண்பர்களின் இன்பங்களை அதிகரிப்பவனே {யுதிஷ்டிரா}, உன்னைப் பெற்ற பிறகும், நண்பர்களை இழந்த நான், பிறரால் தரப்படும் உணவில் வாழும் நிலை இருப்பதைவிட வேறு என்ன பெரிய துயரம் இருக்க முடியும்? மன்னர்களின் நடைமுறைப்படி போரிடுவாயாக. உனது மூதாதையர்களை (புகழ்க்கேட்டில்) ஆழ்த்தாதே. உனது தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்து, உனது தம்பிகளுடன், பாவம் நிறைந்த முடிவை {கதியை} அடையாதே" {என்று யுதிஷ்டிரனிடம் சொல்லும்படி கிருஷ்ணனிடம் சொன்னாள் குந்தி}.
குந்தி {கிருஷ்ணனிடம்} சொன்னாள், "ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, இது தொடர்பாகப் பழங்காலத்தில் விதுலைக்கும் அவளது மகனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் சொல்லப்படுகிறது. இதில் இருந்து சேகரிக்கப்படும் எதையும், அல்லது அதைவிடப் பயன்தரத்தக்க வேறு எதையும் நீ யுதிஷ்டிரனுக்குச் சொல்வதே தகும்.
உயர்ந்த குடியில் பிறந்தவளும், பெரும் முன்னறிதிறன் கொண்டவளுமான பெண் ஒருத்தி விதுலை என்ற பெயரில் இருந்தாள். புகழ்பெற்ற அவள், சிறிது கோபம் நிறைந்தவளாகவும், குறுக்கு மனம் கொண்டவளாகவும், க்ஷத்திரிய அறங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவளாகவும் இருந்தாள். நன்கு கல்வி பெற்றிருந்த அவள் {விதுலை} பூமியின் மன்னர்கள் அனைவராலும் அறியப்பட்டவளாக இருந்தாள். பெரும் கல்வியறிவு பெற்ற அவள், பல்வேறு விசாரணைகளை அறிந்தவளாகவும், உரைகளைக் கேட்டவளாகவும் இருந்தாள்.
இளவரசியான விதுலை, சிந்துக்களின் {சிந்து நாட்டு} மன்னனிடம் தோற்று, துயரத்தினால் சோர்வடைந்த இதயத்துடனும் படுத்துக் கிடந்த தனது சொந்த மகனைக் கண்டித்துக் கொண்டிருந்தாள். அவள் {விதுலை தன்மகனிடம்}, "ஓ! எதிரிகளின் மகிழ்ச்சியை மேம்படுத்துபவனே, நீ எனது மகன் இல்லை. நீ எனக்கும், உனது தந்தைக்கும் பிறக்கவில்லை! நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்? கோபமே இல்லாத உன்னை ஆண்மகனாக எண்ண முடியாது. உனது அம்சங்கள் உன்னை ஓர் அலி எனக் காட்டிக் கொடுக்கின்றன. நீ வாழும் காலம் வரை நீ துயரத்திலேயே மூழ்கப் போகிறாயா?
நீ உனது சொந்த நலனை விரும்புகிறாய் எனில், பாரத்தை (உன் விவகாரங்களை உன்தோளில்) சுமப்பாயாக. உனது ஆன்மாவை அவமதிக்காதே. அற்ப காரியங்களால் மனநிறைவு கொள்ளாதே. உனது நலனில் உனது இதயத்தை நிறுத்து. அஞ்சாதே. உனது அச்சங்களைக் கைவிடு. ஓ! பேடியே, எழுவாயாக. உனது தோல்விக்குப் பிறகு, எதிரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்து, நண்பர்களைத் துயரில் ஆழ்த்தி, மானம் அனைத்தையும் இழந்து இப்படிப் படுத்துக் கிடக்காதே.
சிறு ஓடைகள், சிறு அளவு நீரில் மட்டுமே நிரம்பிவிடுகின்றன. எலியின் உள்ளங்கைகள் சிறு அளவிலேயே நிரம்பிவிடுகின்றன. ஒரு கோழை சிறியவற்றை அடைந்ததுமே விரைவில் மனநிறைவு அடைந்துவிடுகிறான். நாயைப் போலப் பரிதாபமாக இறப்பதைவிட, ஒரு பாம்பின் விஷப்பல்லைப் பறித்து அழிந்து போகலாம். உன் உயிரையே பணயம் வைத்தாவது உனது ஆற்றலை வெளிப்படுத்து.
வானில் அச்சமற்று உலவும் பருந்தைப் போல, நீயும் அச்சமற்று உலவு அல்லது உனது ஆற்றலை வெளிப்படுத்து, அல்லது ஒரு சந்தர்ப்பத்திற்காக அமைதியாக எதிரியைக் கவனித்துவா. இடியால் தாக்ககுண்டவன் போலவோ, இறந்தவன் போலவோ ஏன் இப்படிக் கிடக்கிறாய்? எழுவாய் ஓ! கோழையே, எதிரியால் வீழ்த்தப்பட்ட பிறகு உறங்காதே. இப்படிப் பரிதாபமாக அனைவரின் பார்வையில் இருந்தும் மறைந்து போகாதே. உனது செயல்களால் உன்னை அறியப்படுத்துவாயாக {புகழடைவாயாக}.
நடுநிலையையோ, தாழ்ந்த நிலையையோ, தாழ்மையிலும் தாழ்ந்த நிலையையோ அடையாதே. (நன்கு ஊட்டப்பட்ட நெருப்பு போல) சுடர்விட்டு எரிவாயாக {பிரகாசிப்பாயாக}. திந்துக மரத்திலான கொள்ளையைப் போல, ஒருக்கணமாவது சுடர்விடுவாயாக. நெல் உமியின் சுடர்களற்ற நெருப்பு போல {உமிக்காந்தல் போல} ஆசையால் எப்போதும் புகையாதே. எப்போதும் புகைந்து கொண்டிருப்பதைவிட ஒருக்கணம் சுடர்விடுவதே சிறந்தது.
மிகக் கடுமையானவனாகவோ, மிக மென்மையானவனோக ஓர் அரச குலத்தில் எந்த மகனும் பிறக்காதிருக்கட்டும். போர்க்களத்திற்குச் சென்று, ஒரு மனிதனால் அடையத்தக்க பெரும் சாதனைகள் அனைத்தையும் அடையும் ஒரு வீர மனிதன் க்ஷத்திரிய வகைக்கான கடமைகளுக்குத் தான் பட்டிருக்கும் கடனில் இருந்து விடுபடுகிறான். அப்படிப்பட்ட ஒருவன் தன்னைத் தானே அவமதித்துக் கொள்வதில்லை. அவன் தனது நோக்கத்தை அடைகிறானோ இல்லையோ, புத்தியுள்ள எவனும் துக்கத்தில் ஈடுபடமாட்டான்.
மறுபுறம், அப்படிப்பட்ட ஒருவன், அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை, தனது உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் சாதிப்பான். எனவே, ஓ! மகனே, உனது வீரத்தை வெளிப்படுத்தி, அல்லது தவிர்க்க முடியாத முடிவை அடைவாயாக. உண்மையில் உனது வகைக்கான கடமைகளை அலட்சியம் செய்து நீ ஏன் உயிர்வாழ வேண்டும்? ஓ! பேடியே, உனது அறச்சடங்குகள் அனைத்தும், உனது சாதனைகள் அனைத்தும் போய்விட்டன. உனது இன்பங்களுக்கான வேர்கள் அனைத்தும் வெட்டப்பட்டுவிட்டன. அதன் பிறகு நீ ஏன் வாழ்கிறாய்?
ஒருவன் வீழ்ந்து மூழ்க வேண்டிய நிலைவந்தால், அவன் எதிரியின் இடுப்பைப் [1] பற்றிக் கொள்ள வேண்டும். (அதன்பிறகு எதிரியுடன் சேர்ந்து விழ வேண்டும்). ஒருவனது வேர்களே வெட்டப்பட்டுவிட்டாலும், அவன் துயரத்திற்கு ஆளாகக் கூடாது. உயர்ந்த சாதிக் குதிரைகள், பெரும் பாரங்களை இழுக்கவும் சுமக்கவும் தங்கள் ஆற்றல் அனைத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவற்றின் நடத்தையை நினைவுகூர்ந்து, உனது மானம் மற்றும் பலம் அனைத்தையும் திரட்டுவாயாக. எதில் ஆண்மை அடங்கியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்வாயாக. உன் விளைவாக மூழ்கியிருக்கும் உனது குலத்தை உனது உழைப்பால் {முயற்சியால்} உயர்த்துவாயாக.
[1] கணுக்கால்களில் பிடிக்க வேண்டும் என்று வேறு ஒரு பதிப்புச் சொல்கிறது.
மனிதர்களின் விவாதப் பொருளாக ஒரு பெரும் சாதனையையும் செய்யாதவன் மக்கள் தொகையை மட்டுமே அதிகரிக்கிறான். அவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. ஈகை, தவம், உண்மை {சத்தியம்}, கல்வி, செல்வமீட்டல் ஆகியவற்றால் புகழை அடையாதவன், தனது தாய் வெளியிட்ட மலம் மட்டுமே ஆவான். மறுபுறம், கல்வி, தவம், செல்வம், வீரம், செயல்கள் ஆகியவற்றில் பிறரை விஞ்சி நிற்கும் ஒருவனே (உண்மையில்) ஆணாவான் {ஆண்மையுள்ளவன் ஆவான்}. கோழைக்கு மட்டுமே தகுந்ததும், சோம்பல் நிறைந்ததும், இழிந்ததும், புகழற்றதும், மோசமானதுமான பிச்சையெடுக்கும் தொழிலைத் தேர்ந்தெடுப்பது உனக்குத் தகாது.
எவனைக் கண்டால் எதிரிகள் மகிழ்வார்களோ, எவனை ஆண்கள் வெறுத்து ஒதுக்குவார்களோ, எவன் இருக்கைகளும் ஆடைகளும் இல்லாமல் இருக்கிறானோ, அற்ப பொருட்களை அடைந்து எவன் மனநிறைவு கொள்கிறானோ, எவன் எதுவுமில்லாதிருக்கிறானோ, எவன் வீரமற்று இழிந்தவனாக இருக்கிறானோ அந்தப் பலவீனமான மனிதனை நண்பனாக அடைவதில் நண்பர்கள் எப்போதும் எந்த மகிழ்ச்சியையும் அடைவதில்லை. ஐயோ, நமது நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, வீட்டில் இருந்தும் துரத்தப்பட்டு, அனைத்துவகையான இன்பங்களையும் மகிழ்ச்சிகளையும் இழந்து, ஆதாரங்களை இழந்திருக்கும் நாம், வாழ்வாதாரம் இன்மையால் அழிய வேண்டியிருக்குமே.
நல்லோருக்கு மத்தியில் கெட்ட நடத்தை கொண்டவனும், உனது குலத்தையும் குடும்பத்தையும் அழிப்பவனுமான உன்னைப் பெற்றதன் மூலம், ஓ! சஞ்சயா, ஒரு மகனின் வடிவத்தால் நான் கலியைப் பெற்றுவிட்டேனே. ஓ! கோபமற்றவனும், உழைப்பற்றவனும் {முயற்சியற்றவனும்}, சக்தியற்றவனும், எதிரிகளுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனுமான உன்னைப் போன்ற ஒரு மகனை எந்தப் பெண்ணும் பெறாதிருக்கட்டும். புகையாதே. உனது வீரத்தை வெளிப்படுத்திச் சுடர்விட்டு எரிவாயாக. உனது எதிரிகளைக் கொல்வாயாக. ஒருக்கணமாயிருந்தாலும், குறுகிய காலமே இருந்தாலும், நீ உனது எதிரிகளின் தலையில் சுடர்விட்டு எரிவாயாக.
கோபம் கொள்பவனும், மன்னிக்காதவனுமே ஆண்மகனாவான். மறுபுறம், மன்னிக்கும் தன்மையுடன் கோபமில்லாதவன் ஆணும் அல்லாதவன், பெண்ணும் அல்லாதவனாவான். கருணை, இதயத்தில் மென்மை, முயற்சியின்மை {உழைப்பின்மை}, அச்சம் ஆகியவை செழிப்பை அழிப்பனவாகும். உழைப்பில்லாதவன் பெரியது எதையும் வெல்லமாட்டான். எனவே, ஓ! மகனே {சஞ்சயா}, உனது சொந்த முயற்சியால், தோல்விக்கும், வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் இவற்றில் இருந்து உன்னை நீயே விடுவித்துக் கொள்வாயாக. இதயத்தை உருக்காக்கிக் கொண்டு {இரும்பாக்கிக் கொண்டு} உனது சொந்த உடைமைகளை மீட்பாயாக.
(பறம் [பிறன்] param என்கிற} தன் எதிரிக்கு ஈடானதாக இருப்பதால் ஒரு மனிதன் புருஷன் {Purusha} என்று அழைக்கப்படுகிறான். எனவே, பெண்ணைப் போல வாழ்பவனுக்குப் புருஷன் (ஆண்மகன்) என்பது தவறான பெயராகும். சிங்கம் போல நடப்பவனான பெரும் பலமிக்க ஒரு வீர மன்னன் அனைத்துயிரும் போகும் பாதையில் சென்றாலும் {இறந்துவிட்டாலும்}, அவனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடிமக்கள் மகிழ்ச்சி அற்றவர்களாக ஆகமாட்டார்கள். தனது சொந்த மகிழ்ச்சியையும், இன்பங்களையும் அலட்சியம் செய்யும் ஒரு மன்னன், தனது நாட்டின் செழிப்புக்கு முயற்சி செய்து, தனது ஆலோசகர்களும், நண்பர்களும் மகிழும் வண்ணம் விரைவில் வெல்கிறான்" என்றாள் {விதுலை}.
{தாயின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "உன்னால் என்னைக் காண முடியவில்லை என்றால், இந்த உலகத்தால் உனக்கு என்ன பயன்? உனது ஆபரணங்களால் என்ன பயன்? அனைத்து வகை இன்பங்களாலும், ஏன் இந்த உயிரினாலும் கூட என்ன பயன்?" என்று கேட்டான்.
அதற்கு அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்}, "இழிந்தோருக்குச் சொந்தமான பகுதிகளை நமது எதிரிகள் அடையட்டும். மரியாதையுடன் கருதப்படும் மனிதர்களால் அடையத்தக்க பகுதிகளை நமது நண்பர்கள் அடையட்டும். பலமற்றோர், {தங்கள் கட்டளைகளை மேற்கொள்ள} சேவகர்கள் மற்றும் பணியாட்கள் அற்றோர், பிறரால் வழங்கப்படும் உணவில் வாழ்வோர் ஆகிய இழிந்த மனிதர்களின் வாழ்வுமுறையை நீ பின்பற்றாதே. மேகங்களை நம்பியிருக்கும் பூமியின் உயிரினங்களைப் போலவோ, இந்திரனை நம்பி இருக்கும் தேவர்களைப் போலவோ, வாழ்வாதாரத்திற்காக அந்தணர்களும் உனது நண்பர்கள் அனைவரும் உன்னை நம்பி இருக்கட்டும்.
ஓ! சஞ்சயா, பழுத்த கனிகள் நிறைந்த மரத்திற்குப் பறவைகள் வருவதைப் போல [2] வாழ்வாதாரத்திற்காக எவனை நம்பி அனைத்துயிரும் இருக்கின்றனவோ அவனது வாழ்வு வீணானது அல்ல. உண்மையில், சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலால் மகிழ்ச்சி அடையும் தேவர்களைப் போல, எவனது ஆற்றல் மூலம் நண்பர்கள் மகிழ்ச்சியை அடைவார்களோ, அந்த வீர ஆண்மகனின் வாழ்வு பெருமைமிக்கதாகும். தனது சொந்த கரங்களின் ஆற்றலை நம்பி பெருமையுடன் வாழும் ஒரு மனிதன், இவ்வுலகில் புகழை வென்ற நிலையையும், மறுஉலகில் அருள் நிலையையும் அடைகிறான்" என்றாள் {விதுலை}."
விதுலை {தன் மகன் சஞ்சயனிடம்} சொன்னாள், "இத்தகு துயரில் விழுந்து உனது ஆண்மையைக் கைவிட நீ விரும்புகிறாயெனில், தாழ்ந்தோரும், இழிந்தோரும் நடக்கும் பாதையில் நீ மிக விரைவில் நடப்பாய். உயிரின் மீது கொண்ட ஆசையால் தனது பலத்திலும், ஆற்றலிலும் சிறந்ததைப் பயன்படுத்தித் தனது சக்தியை வெளிப்படுத்தாத ஒரு க்ஷத்திரியன் திருடனாகக் கருதப்படுகிறான். ஐயோ, பயன் நிறைந்ததும், சரியானதும், காரணங்கள் கொண்டதுமான எனது வார்த்தைகள், சாகப் போகும் மனிதனுக்கு மருந்தைப் போல, உன்னில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தவில்லையே.
சிந்துக்களின் மன்னன் பல தொண்டர்களைக் கொண்டிருக்கிறான், என்பது உண்மையே! எனினும் அவர்கள் {அத்தொண்டர்கள்} அனைவரும் மகிழ்ச்சியை அடையாமல் தள்ளப்பட்டார்கள். {சிந்து மன்னனிடம் அவர்கள் அதனால் பகைமை கொண்டார்கள்}. பலவீனத்தாலும், முறையான வழிகளை அறியாததாலும், (தங்கள் முயற்சிகளால் விடுபடாத) அவர்கள் தனது தலைவனின் {சிந்துமன்னனின் அழிவிற்காக} துயருக்காகக் காத்திருக்கிறார்கள். பிறரைப் (அவனது {சிந்து மன்னனின்} வெளிப்படையான எதிரிகளைப்} பொறுத்தவரை, நீ உனது ஆற்றலை வெளிப்படுத்துவதை அவர்கள் கண்டால் தங்கள் உடைமைகளுடன் அவர்கள் உன்னைச் சேர்வார்கள். அவர்களுடன் சேர்ந்து, மலைகளையும், காடுகளையும் தஞ்சமாக அடைந்து, நீ எதிரியை வீழ்த்த தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பாயாக. ஏனெனில், அவனும் நோய் மற்றும் மரணத்தில் இருந்து விடுபட்டவன் அல்ல.
உனது பெயரால் நீ சஞ்சயனாவாய் {வெற்றியாளனாவாய்}. எனினும், அதற்கான குறிப்புகள் எதையும் நான் உன்னிடத்தில் காணவில்லை. உனது பெயருக்கு உண்மையுள்ளவனாக இருப்பாயாக. {உண்மையில்} எனது மகனாவாயாக. ஓ! உனது பெயர் பொய்யாகாதிருக்கட்டும். சிறுவனாக இருக்கும் உன்னைக் கண்டவரும், பெரும் முன்னறிதிறனும், ஞானமும் கொண்டவருமான அந்தணர் ஒருவர், "பெரும் துயரில் விழும் இவன், மீண்டும் பெரும் புகழை வெல்வான்" என்று சொன்னார். அவரது வார்த்தைகளை நினைவுகூரும் நான், உனது வெற்றியை நம்புகிறேன். அதன் காரணமாகவே, ஓ! மகனே {சஞ்சயா}, நான் உன்னிடம் இப்படிச் சொல்கிறேன். மேலும் மேலும் நான் உன்னிடம் அப்படியே சொல்வேன்.
கொள்கை வழிகளின்படி {நீதியின்படி} தனது நோக்கங்கள் கனியும் {பலிக்கும்} தருணத்தைத் தொடரும் {எதிர்நோக்கியிருக்கும்} ஒரு மனிதன், தனது நோக்கங்களுக்காக தன்னுடன் உழைக்கும் மக்களைப் பெற்றிருந்தால், அவன் வெற்றி அடைவது எப்போதும் நிச்சயமே. ஓ! சஞ்சயா, ஓ! கல்விமானே, போரில் இருந்து உன்னை விலக்கிக் கொள்ளாமல், 'நான் அடைந்திருப்பது வெற்றியோ, தோல்வியோ, நான் பின்வாங்க மாட்டேன்' என்ற தீர்மானத்துடன் போரிடுவாயாக.
"தினம் தினம் தனது உணவுக்காக ஒருவன் ஆவலாக இருக்கும் நிலையைவிடப் பரிதாபகரமான நிலை வேறு எதுவும் இல்லை" என்று சம்பரன் சொல்லியிருக்கிறான். ஒருத்தியின் கணவனும், மகன்களும் இறந்ததைவிட, அது போன்று இருப்பதே {உணவை எதிர்பார்த்து இருப்பதே} பெரும் துன்பமான நிலை எனச் சொல்லப்படுகிறது. ஏழ்மை என்று அழைக்கப்படும் நிலை மரணத்தின் வடிவமே ஆகும்.
என்னைப் பொறுத்தவரை, நான், உயர்ந்த ஒரு குலத்தில் பிறந்து, மற்றொரு உயர்ந்த குலத்தில் குடியேறியவள் ஆவேன். அனைத்து மங்கலப் பொருட்களையும் அடைந்து, எனது கணவனால் வழிபடப்பட்டு இருந்த எனது சக்தி அனைவர் மீதும் பரவியிருந்தது. நண்பர்களுக்கு மத்தியில் இருந்த என்னை, விலையுயர்ந்த மாலைகளோடும், ஆபரணங்களோடும், சுத்தமான உடலோடும், அற்புதமான ஆடைகளோடும், மிகவும் மகிழ்ச்சிகரமாகவும்தான் எப்போதும் நமது நண்பர்கள் கண்டிருக்கிறார்கள். (உணவில்லாமல்) நானும், உனது மனைவியும் பலவீனமாவதைக் காணும் நீ, ஓ! சஞ்சயா, உயிருடன் வாழ விரும்பமாட்டாய்.
நம்மிடம் பணி செய்த பணியாட்கள் அனைவரும், நமது ஆசான்களும், நமது இயல்பான {சாதாரண} மற்றும் இயல்புக்குமிக்க {அசாதாரண} புரோகிதர்களும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்மைவிட்டுச் செல்வதைக் காணும் உனக்கு வாழ்வதனால் என்ன பயன் ஏற்படும்? முன்பு போலவே மெச்சத்தகுந்த, புகழ்மிக்க உனது சாதனைகளில் நீ ஈடுபடுவதை இப்போது நான் காணவில்லை எனும் போது, எனது இதயம் எப்படி அமைதியை அடையும்?
அந்தணர் ஒருவருக்கு, "ஒன்றுமில்லை" என்று நான் சொல்ல வேண்டியிருந்தால், எனது இதயமே வெடித்துவிடும். இதற்கு முன் எனது கணவர் எந்த அந்தணருக்கும், "இல்லை" என்று சொன்னதே இல்லை. நாமே பிறரின் புகலிடம், நாம் என்றும் பிறரிடம் தஞ்சமடைந்ததில்லை. இப்படியிருக்கையில், அடுத்தவரைச் சார்ந்து எனது வாழ்வைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை எனக்கு இருந்தால், நிச்சயம் எனது உயிரை நான் விட்டுவிடுவேன். கடக்க முடியாத கடலைக் கடக்கும் வழிகளாக எங்களுக்கு நீ இருப்பாயாக. படகுகள் இல்லாத நிலையில், நீயே எங்களது படகாவாய். இடமில்லாத போது, நீயே எங்களுக்கு இடமாவாயாக. மாண்டு போன எங்களை மீட்டெடுப்பாயாக.
நீ உயிர் மீது கொண்டிருக்கும் ஆசையை விட்டாயானால், உனது எதிரிகள் அனைவரிடமும் போட்டியிடத் தகுந்தவனாவாய். ஆனால், அலிகளுக்குத் தகுந்த வாழ்முறையை நீ நோற்பாயானால், ஆன்மா நொந்து, துயர் நிறைந்த இதயத்துடன் அப்படி வாழ்வதைக் காட்டிலும், நீ உனது உயிரைத் தியாகம் செய்வதே சிறந்ததாகும். ஒரே எதிரியைக் கொன்றால் கூட ஒரு வீரமிக்க மனிதன் புகழை வெல்கிறான். விருத்திரனைக் கொன்ற இந்திரன் பெரும் இந்திரனாகி {மஹேந்திரன் ஆகி}, தேவர்களின் அரசுரிமையையும், சோமச்சாற்று குவளையையும் {மாஹேந்திரம் என்கிற சோமக்கிரகத்தையும்}, உலகங்கள் அனைத்தின் தலைமையையும் அடைந்தான். போர்க்களத்தில் தனது பெயரைச் சொல்லி, உருக்குக் கவசங்கள் அணிந்த தனது எதிரிகளை அறைகூவி அழைத்து, பகையணி வீரர்களில் முதன்மையானவர்களைக் கொன்றும் அடித்தும், நல்ல போரினால் எப்போது ஒரு வீரன் பரந்து விரிந்த புகழை அடைகிறானோ, அப்போது அவனது எதிரிகள் வலியை உணர்ந்து அவனை வணங்குவார்கள் {அடிபணிவார்கள்}.
கோழைகளோ தங்கள் சொந்த நடத்தையின் விளைவால் ஆதரவற்றவர்களாகி, திறன்மிக்கவர்களும், வீரர்களும், உயிரைத் துச்சமாக மதித்துப் போரிடுபவர்களுமாக இருப்பவர்களகுக்குத் தனது ஆசைப் பொருட்கள் அத்தனையும் தாரைவார்ப்பார்கள். நாடுகள் பெரும் அழிவை அடைந்தாலோ, உயிரே போய்விடக் கூடிய சூழ்நிலை இருந்தாலோ கூட, உன்னதமானவர்கள், தங்கள் அருகே இருக்கும் எதிரிகளைக் கொல்லாமல் ஓடிப் போவதில்லை. அரசுரிமை என்பது சொர்க்கத்தின் வாயிலோ, அமிர்தமோதான். இவற்றில் ஒன்றாக அதைக் {அரசுரிமையைக்} கருதி, நீ அறியாத அதையே மனதில் கொண்டு, எதிரிகளுக்கு மத்தியில் எரியும் கொள்ளியென விழுவாயாக.
ஓ! மன்னா {சஞ்சயா}, போரில் உனது எதிரிகளைக் கொல்வாயாக. உனது {க்ஷத்திரிய} வகைக்கான கடமைகளை நோற்பாயாக. ஓ! எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவனே {சஞ்சயா}, உற்சாகமிழந்தவனாக நான் உன்னைக் காணாதிருப்பேனாக. துயர் நிறைந்த நம்மவர்களால் சூழப்பட்டு, எதிரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்து, துயரத்தில் நிற்கும் உன்னை நான் காணாதிருப்பேனாக. ஓ! மகனே {சஞ்சயா}, செல்வத்தை அடைந்து, சௌவீரர்களின் மகள்களின் துணையோடு உன்னை நீ மகிழ்வித்துக் கொள்வாயாக. இதயத்தின் பலவீனத்தால் நீ சைந்தவர்களின் {சிந்துக்களின்} மகள்களால் ஆளப்படும் நிலையில் இருக்காதே.
`அழகிய மேனியும், கல்வியும், நற்குடி பிறப்பும், உலகம் பரந்த புகழும் கொண்ட உன்னைப் போன்ற இளைஞன் ஒருவன், சுமையைத் தாங்க வேண்டிய விஷயத்தில், அடங்காமல் இருக்கும் காளையைப் போலத் தகாத நிலையை அடைவது மரணத்துக்கு இணையானது' என்றே நான் நினைக்கிறேன். பிறரைப் புகழ்ந்தோ, அவர்களுக்குப் பின் (பணிவாக) நடந்தோ செல்லும் உன்னைக் காணும் எனது இதயம் எப்படி அமைதியை அடையும்?
ஓ...! இன்னொருவனுக்குப் பின்னால் நடந்து செல்லும் ஒருவன் நமது குலத்தில் பிறந்ததே இல்லையே. ஓ! மகனே {சஞ்சயா}, அடுத்தவனை நம்பி வாழும் வாழ்வு உனக்குத் தகாது. முன்னோர்களாலும், முன்னோர்களுக்கு முன்னோர்களாலும், அவர்களுக்குப் பின்வந்தவர்களாலும், அப்படிப் பின்வந்தவர்களுக்கும் பின் வந்தவர்களாலும் சொல்லப்பட்ட க்ஷத்திரிய அறங்களின் நித்தியமான சாறு என்ன என்பதை நான் அறிவேன். நித்தியமானதும், மாற்றமில்லாததுமான அது படைப்பாளனாலேயே {பிரம்மனாலேயே} விதிக்கப்பட்டதாகும். இவ்வுலகில் எந்த உயர்ந்த குலத்திலாவது க்ஷத்திரியனாகப் பிறந்து, அந்த வகையின் கடமைகளின் அறிவை அடைந்த ஒருவன், பயத்தாலோ, வாழ்வாதாரத்திற்காகவோ பூமியில் உள்ள எவனுக்கும் தலைவணங்க மாட்டான்.
உழைப்பே {முயற்சியே} ஆண்மை என்பதால், ஒருவன் வீரத்துடன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்; தலைவணங்கி நிற்கக்கூடாது. யாருக்கும் வளைந்து போவதைக் காட்டிலும் ஒருவன் கணுக்களில் உடைந்து போகலாம். உயர் ஆன்ம க்ஷத்திரியன் ஒருவன், எப்போதும் ஒரு மதங்கொண்ட யானை போல நடக்க வேண்டும். ஓ! சஞ்சயா, அறத்தின் நிமித்தமாக அந்தணர்களை மட்டுமே ஒருவன் வணங்க வேண்டும். தீமை செய்வோர் அனைவரையும் அழித்து, அனைத்துப் பிற வகைகளையும் அவன் ஆள வேண்டும். கூட்டாளிகளைக் கொண்டோ அல்லது அவர்கள் இல்லாமலோ, தான் வாழும் வரை ஒருவன் அப்படியே இருக்க வேண்டும்" என்றாள் {விதுலை}.
குந்தி {கிருஷ்ணனிடம்} சொன்னாள், "தனது தாயின் {தாய் விதுலையின்} வார்த்தைகளைக் கேட்ட மகன் {சஞ்சயன் விதுலையிடம்}, "ஓ! இரக்கமற்றவளும், கோபம் நிறைந்தவளுமான தாயே, ஓ! உலகியல் வீரத்தை உயர்வாக நினைப்பவளே, உனது இதயம் உருக்காலாகி {இரும்பாலாகி} வடிவம் பெற்றது என்பது உறுதி. க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ; அதன் காரணமாகத்தானே என்னை அந்நியனைப் போலக் கருதி, என்னை நீ போரிடத் தூண்டுகிறாய். அதன்காரணமாகத் தானே உனது ஒரே மகனான என்னிடம் இத்தகு வார்த்தைகளைப் பேசுகிறாய். உனது மகனான என்னைக் காணாமல், என்னிடம் இருந்து நீ பிரிந்துவிட்டால், இந்த முழு உலகத்தாலும் உனக்கு என்ன பயன்? உனது ஆபரணங்கள் அனைத்தாலும், மகிழ்ச்சிக்கான வழிகள் அனைத்தாலும் இந்த வாழ்வில் உனக்கு என்னதான் பயன் இருக்கும்?" என்று கேட்டான் {சஞ்சயன்}.
அதற்கு அந்தத் தாய் {விதுலை சஞ்சயனிடம்}, "ஓ! மகனே {சஞ்சயா}, அறிவுடையோர், தாங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தையும் அறம் மற்றும் பொருள் ஆகியவற்றின் காரணமாகவே செய்கின்றனர். அறம் மற்றும் பொருள் ஆகியவற்றை மட்டுமே கண்டு, ஓ! சஞ்சயா நான் உன்னைப் போரிடத் தூண்டுகிறேன். உனது ஆற்றலை வெளிப்படுத்தத் தக்க தருணம் வந்துவிட்டது. இத்தகு நேரத்தில் நீ செயல்படவில்லையெனில், மக்களால் அவமதிக்கப்பட்டு, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றையே நீ செய்பவனாவாய்.
ஓ! சஞ்சயா, புகழ்க்கேட்டால் கறைபடப்போகும் உன்னிடம் (பாசத்தால்) நான் எதையும் சொல்லவில்லையென்றால், பிறகு அந்தப் பாசம், பெண்கழுதை தன் குட்டியிடம் கொண்டதைப் போல மதிப்பற்றத்தாகவும், காரணமற்றதாகவும் ஆகும். அறிவுடையோரால் அங்கீகரிக்கப்படாததும், மூடர்களால் பின்பற்றப்படுவதுமான பாதையில் நீ நடக்காதே. இங்கே {மனிதர்களிடம்} இருக்கும் அறியாமை பெரியதாக இருக்கிறது. உலகின் எண்ணற்ற உயிரினங்கள் அதையே {அறியாமையையே} புகலிடமாகக் கொண்டிருக்கின்றன.
எது எப்படியிருப்பினும், நீ அறிவுடையோரின் நடத்தையைப் பின்பற்றினால், எனது அன்புக்குரியவனாக இருப்பாய். உண்மையில், அறம் மற்றும் பொருளை அறிந்து, கடவுளை மேலானவனாகக் கொண்டு, மனித உழைப்பை நம்பியவனாக, நல்லோரின் நடத்தையை பின்பற்றுபவனாக நீ இருந்தால், அதன் காரணமாகவே நீ எனது அன்புக்குரியவனாவாய்; மற்ற எந்த வழிகளிலும் அப்படி ஆக மாட்டாய். எவன் நன்கு அறிவுறுத்தப்பட்ட பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் கண்டு மகிழ்கிறானோ அவனே உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். மறுபுறம், எவன் முயற்சியற்ற, அடக்கமில்லாத, தீய மனம் கொண்ட மகனைக் கண்டு மகிழ்கிறானோ, அவன் ஒரு மகனால் எது அடையப்பட வேண்டும் என்று விரும்புவானோ, அந்த நோக்கத்தை அடையமாட்டான். சரியானதை எப்போதும் செய்யாமல், கண்டிக்கத்தக்கதையே எப்போதும் செய்பவன் இங்கேயும், இதன் பிறகும் {மறு உலகிலும்} இன்பத்தை அடைவதில்லை.
ஓ! சஞ்சயா, ஒரு க்ஷத்திரியன் போருக்காகவும், வெற்றிக்காகவுமே படைக்கப்பட்டிருக்கிறான். {போரில்} வென்றாலும், அழிந்தாலும் அவன் இந்திரலோகத்தை அடைகிறான். அடிபணியச் செய்து எதிரிகளைக் குறைக்கும் ஒரு க்ஷத்திரியன் அடையும் இன்பம், புனிதமான இந்திரலோகத்தில் உள்ள சொர்க்கத்தில் கூட இருக்காது. கோபத்தில் எரிந்து கொண்டிருப்பவனும், பெரும் சக்தி படைத்தவனுமான ஒரு க்ஷத்திரியன், பல முறை தோல்வியுற்றாலும், தனது எதிரிகளை வீழ்த்த விரும்பி அவன் காத்திருக்க வேண்டும். உயிரையும் விடாமல், எதிரிகளையும் கொல்லாமல் இருக்கும் ஒருவனால் எவ்வழியில்தான் மன அமைதியை அடைய முடியும்?
அறிவுடையவன் எவனும், சிறியது எதையும் ஏற்பில்லாதவையாகவே கருதுவான். சிறியது எதையும் ஏற்கும் ஒருவனுக்கு, அந்தச் சிறிய விவகாரமே வலியின் ஊற்றுக்கண்ணாக (முழுமையாக) ஆகும். விரும்பியதை அடையாத ஒருவன் விரைவில் இழிந்தவனாகிறான். உண்மையில், அவன் அனைத்துத் தேவைகளையும் உணர்ந்து கடலுக்குள் நுழையும் கங்கையாகக் காணாமல் போகிறான்" என்றாள் {விதுலை}.
அதற்கு அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "ஓ! தாயே, நீ உனது மகனின் முன்பு, இத்தகு கருத்துகளை வெளியிடக்கூடாது. அமைதியான ஊமை ஒருத்திபோல, அவனது பக்கத்தில் இருந்து, இப்போது அவனுக்குக் கருணை காட்டுவாயாக" என்றான்.
அதற்கு அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்}, "நீ இப்படிச் சொல்வதால் நான் பெரும் மனநிறைவு கொள்கிறேன். (எனது கடமை என்ன என்று உன்னால்) உந்தப்பட்டதால் தானோ என்னவோ, நான் உன்னை இப்படித் தூண்டுகிறேன். எனவே, (நீ எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய) நான் இன்னும் அதிகமாக உன்னைத் தூண்டுவேன். சைந்தவர்கள் {சிந்துக்கள்} அனைவரும் கொல்லப்பட்டு, முழுமையான வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உன்னைக் கண்ட பிறகே உண்மையில் நான் உன்னை மதிப்பேன்", என்றாள் {விதுலை}.
அதற்கு அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "செல்வம் இல்லாமல், கூட்டாளிகள் இல்லாமல், வெற்றி எப்படி எனதாகும்? மிகப் பரிதாபகரமான எனது நிலையை உணர்ந்தறிந்தே, சொர்க்கத்தின் மேல் உள்ள ஆசையைத் திருப்பிக் கொள்ளும் தீயவன் போல, நாட்டின் மீது கொண்ட எனது ஆசையை நானே திருப்பிக்கொண்டேன். எனவே, ஓ! முதிர்ந்த அறிவு கொண்டவளே, (இவை அனைத்தையும் இது நேர் செய்யும் என) எந்த வழிகளையாவது நீ கண்டால், அது குறித்து முழுமையாகச் சொல்வாயாக என நான் கேட்கிறேன். ஏனெனில், நீ எனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் நான் செய்வேன்" என்றான் {சஞ்சயன்}.
அதற்கு அந்தத் தாய் {விதுலை சஞ்சயனிடம்}, "ஓ! மகனே, தோல்வியை எதிர்பார்த்து, நீ உனது ஆன்மாவை அவமதிக்காதே {உன்னையே அவமதித்துக் கொள்ளாதே}. அடையப்படாத பொருட்கள் அடையப்பட்டிருக்கின்றன; அடையப்பட்டனவோ தொலைக்கப்பட்டுள்ளன. கோபத்தாலோ, மூடத்தனத்தாலோ பொருட்களின் சாதனையை முயற்சிக்கக்கூடாது. ஓ! மகனே {சஞ்சயா}, அனைத்து செயல்களிலும் வெற்றியை அடைவது என்பது உறுதியில்லாதது. வெற்றி உறுதியற்றது; சில வேளைகளில் வெல்லலாம், சில வேளைகளில் அது முடியாமல் போகலாம் என்று அறிந்தும் மக்கள் செயல்படுகிறார்கள். எனினும், செயலில் இருந்து விலகும் ஒருவன் வெற்றியை அடைவதே இல்லை. உழைப்பு {முயற்சி} இல்லை என்றால் ஒரே முடிவுதான், அது வெற்றி இல்லை என்பதாகும். எனினும், உழைப்பின் {முயற்சியின்} போது வெற்றியை அடைவது, அல்லது அதை அடையாதது என்ற இரு நிலைகள் எப்போதுமே உண்டு.
ஓ! இளவரசே {சஞ்சயா}, விளைவுகளைப் பொறுத்தவரை அனைத்துச் செயல்களிலும் அவை உறுதியற்றவைதான் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்பவன், வெற்றி மற்றும் செழிப்பு ஆகிய இரண்டையும் தான் அடையும்படி செய்கிறான். அப்படிப்பட்ட நம்பிக்கையுடன் ஒருவன், சோம்பல் அனைத்தையும் கைவிட்டு, முயற்சியுடன் எழுந்து, ஒவ்வொரு செயலையும் செய்கிறான். ஓ! மகனே {சஞ்சயா}, செயல்களில் ஈடுபடும் {கர்மாவைச் செய்யும்} அறிவுள்ள மன்னன் ஒருவன், தேவர்களையும், அந்தணர்களையும் தன் பக்கத்ததில் வைத்துக் கொண்டு, மங்கலச் சடங்குகள் அனைத்தையும் செய்து, விரைவில் வெற்றியை அடைகிறான். கிழக்கை வாரியணைக்கும் சூரியனைப் போல, செழிப்பின் தேவதை அவனை {செயல்படுபவனை} அரவணைப்பாள். {சுற்றிக் கொண்டு சூரியன் மீண்டும் கிழக்கு திசைக்கு வருவதைப் போல, சுற்றிக் கொண்டு லட்சுமி அவனை நோக்கி வருகிறாள்}.
நான் உனக்கு உரைத்த பல்வேறு பரிந்துரைகளுக்கும், வழிகளுக்கும், ஊக்கமூட்டும் உரைகளுக்கும் தகுந்தவனாகவே உன்னை நான் காண்கிறேன். (இப்போது) உனது ஆற்றலை வெளிப்படுத்து. அனைத்து முயற்சிகளையும் செய்து, உனது கருத்தில் கொண்டுள்ள பொருளை வெல்வதே உனக்குத் தகும். (உனது எதிரிகளிடம்) கோபத்தில் இருப்போரையும், பேராசை கொண்டோரையும், (உனது எதிரியால்) பலவீனமாக்கப்பட்டவர்களையும், (உனது எதிரிகளிடம்) பொறாமை கொண்டோரையும், (உனது எதிரிகளால்) அவமதிப்புக்கு உள்ளானவர்களையும், அதீத செருக்கின் காரணமாக (உனது எதிரிகளால்) எப்போதும் அறைகூவி அழைக்கப்படுபவர்களையும், இந்த வகைகளைச் சார்ந்த {எதிரியின் எதிரிகளான} அத்தனை பேரையும் உன் பக்கத்தில் ஒன்றாகச் சேர்ப்பாயாக.
இவ்வழிகளில் நீ மேகங்களைச் சிதறடிக்கும் வகையில், மூர்க்கமாகவும், கடுமையாகவும் எழும் சூறாவளியைப் போன்று, (உனது எதிரியின்) பலமிக்கப் படையை உன்னால் உடைக்க முடியும். அவர்களுக்கு (உனது கூட்டாளிகளாக இருப்போருக்கு), உரிய காலத்திற்கு முன்பே செல்வத்தையும் உணவையும் அளித்து, எப்போதும் அவர்களுக்காகச் செயல்பட்டு, அவர்கள் அனைவரிடமும் இனிமையாகப் பேசுவாயாக. பிறகு அவர்கள் உனக்கு நன்மையைச் செய்து, உன்னைத் தங்கள் தலையில் {முன்பு} வைப்பார்கள்.
தன் எதிரி உயிரைத் துச்சமாக நினைக்கிறான், என எப்போது உனது எதிரி அறிவானோ, அப்போது அவன் {அந்த எதிரி} தன் அறையிலேயே வாழும் பாம்பைப் போல அவனை {உன்னை} எண்ணி நடுங்குவானல்லவா? ஒருவனைப் பலம் நிறைந்தவனாக அறிந்து கொள்ளும் அவனது எதிரி, அவனை அடக்க முயற்சிக்க மாட்டான். சமரசக் கலைகள், கொடை மற்றும் விருப்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவனை {தன் எதிரியை} நண்பனாக்கவே முயற்சிப்பான். அதுவும் அவன் அடக்கப்பட்டதுக்கு ஒப்பானதே ஆகும்.
சமரசக் கலை மூலம் நிவாரணம் பெறுவதால், ஒருவன் தனது செல்வத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். ஒருவனது செல்வம் அதிகரித்தால், அவன் வழிபடப்பட்டு, தஞ்சமளிப்பவனாக அவனது நண்பர்களால் அவன் வேண்டப்படுவான். ஒருவன் செல்வத்தை இழந்தாலோ, அவன் நண்பர்களாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்டு, அதைவிட அதிகமாக அவநம்பிக்கையடைந்து, அவர்களால் வெறுக்கப்படும் நிலையும் உண்டாகும். தனது எதிரியிடமே சேர்ந்து நம்பிக்கையுடன் வாழ்பவனால், தனது நாட்டை மீண்டும் மீட்பது முற்றிலும் முடியாததாகும்" என்றாள் {விதுலை}."
அந்தத் தாய் {விதுலை மகன் சஞ்சயனிடம்} சொன்னாள், "ஒரு மன்னன் எந்தவிதமான ஆபத்தில் தோல்வியுற்றாலும், அவன் அதைக் காட்டிக் கொள்ளக்கூடாது {அதற்கு அஞ்சக்கூடாது}. அச்சத்தால் பாதிக்கப்படும் மன்னனைக் கண்டு, படை, ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மற்றும் முழு நாடும் அச்சம் அடைந்து, குடிமக்கள் அனைவரும் {கருத்தில்} ஒற்றுமையற்றவர்களாக ஆகிறார்கள். சிலர் சென்று எதிரியின் தரப்பை அரவணைப்பார்கள்; பிறரோ எளிதாக மன்னனைக் கைவிட்டுவிடுவார்கள்; ஏற்கனவே {மன்னனிடம்} அவமானத்தை அடைந்த மேலும் பிறர், தாக்குவதற்கே கூட முயல்வார்கள்.
எனினும், நெருக்கமான நண்பர்கள், அவனது தரப்பில் எப்போதும் காத்திருக்கிறார்கள். அவனது நன்மையை அவர்கள் விரும்பினாலும், எதையும் செய்ய இயலாமல், கட்டி வைக்கப்பட்டுள்ள கன்றுக்காகக் காத்திருக்கும் மாட்டைப் போல ஆதரவற்ற நிலையில் காத்திருக்கிறார்கள். துயரத்தில் மூழ்கியிருக்கும் நண்பர்களுக்காக வருந்தும் நண்பர்களைப் போல, துயரத்தில் மூழ்கி இருக்கும் தங்கள் தலைவனைக் கண்டு நலன்விரும்பிகளும் வருந்துவார்கள்.
முன்பு நீயும், உன்னால் வழிபடப்பட்ட பல நண்பர்களை கொண்டிருந்தாய். உனது நாட்டுக்காக உனது இதயத்தை உணர்பவர்களும், உனது துன்பங்களைத் தங்கள் துன்பமாகவே எடுத்துக் கொள்பவர்களுமான பல நண்பர்களை நீயும் கொண்டிருக்கிறாய். அந்த நண்பர்களை நீ அச்சுறுத்தாதே. நீ அச்சத்திலிருப்பதைக் கண்டு அவர்கள் உன்னைக் கைவிடும் நிலையை அனுபவிக்காதே.
உனது பலம், ஆண்மை, புரிதல் {புத்தி} ஆகியவற்றைச் சோதிப்பதற்காகவும், உனக்கு உற்சாகமூட்ட விரும்பியும், உனது சக்தியை அதிகரிக்கவுமே நான் இவை அனைத்தையும் உன்னிடம் சொல்கிறேன். நான் சொன்னது உனக்குப் புரிந்தால், நான் சொன்னது முறையானதாகவும், போதுமானதாகவும் உனக்குத் தோன்றினால், ஓ! சஞ்சயா, உனது பொறுமையைத் திரட்டி, வெற்றிக்காக உனது இடுப்புக் கச்சையை இறுகக் கட்டுவாயாக.
நீ அறியாதவையும், பெரும் எண்ணிக்கையும் கொண்ட, பல கருவூல வீடுகள் {பொக்கிஷ அறைகள்} நமக்குண்டு. அதன் இருப்பை வேறு யாரும் அறியமாட்டார்கள்; நான் மட்டுமே அறிவேன். அவை அனைத்தையும் நான் உனக்கு அளிக்கிறேன்.
ஓ! சஞ்சயா, உன் மகிழ்ச்சி மற்றும் துயரங்களில் உனக்கு ஆதரவாக இருப்பவர்களும், ஓ! வீரா {சஞ்சயா}, போர்க்களத்தில் இருந்து பின்வாங்காதவர்களுமான ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் உனக்கு உண்டு. ஓ! எதிரிகளை வாட்டுபவனே, இது போன்ற கூட்டாளிகள், தனது நன்மையை விரும்பி, தனக்கு ஏற்புடையதைச் செய்யும் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களாகத் தங்கள் பங்கை எப்போதும் சரியாகச் செய்வார்கள்" என்றாள் {விதுலை}."
குந்தி {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தாள், "அற்புதமான வார்த்தைகளும், அறிவும் நிரம்பிய தனது தாயின் {தாய் விதுலையின்} பேச்சைக் கேட்டதும், அந்த இளவரசன் சஞ்சயன், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவனாக இல்லாவிடினும், அவனது இதயத்தில் இருந்த துயரம் உடனே விலகியது. அந்த மகன் {சஞ்சயன் தாய் விதுலையிடம்}, "என் எதிர்கால நலனை கவனிக்கும் உன்னை எனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கும் நான், நிச்சயம் எனது தந்தைவழி நாட்டை மீட்பேன், அல்லது அந்த முயற்சியில் அழிந்து போவேன். உனது சொற்பொழிவின் போது நான் கிட்டத்தட்ட அமைதியாகக் கேட்பவனாகவே இருந்தேன். அக்காரியம் குறித்து நான் அதிகம் கேட்க வேண்டும் என்பதற்காகவும், {அது குறித்து} உன்னை மேலும் விரிவாகப் பேச வைப்பதற்காகவுமே அப்போதைக்கப்போது ஒரு வார்த்தையை இடையிடையில் நான் கேட்டேன் {பேசினேன்}. அமுதத்தைக் குடிப்பவன் போதும் என்று சொல்லாதது போல, உனது வார்த்தைகளும் எனக்குப் போதுமெனத் தோன்றவில்லை. எந்தக் கூட்டாளிகளிடமிருந்தாவது ஆதரவைப் பெற்று, எனது இடைக்கச்சைகளை இறுகக் கட்டிக் கொண்டு, எதிரிகளை ஒடுக்கி நான் வெற்றியடைவதைப் பார்" என்றான் {சஞ்சயன்}."
குந்தி {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தாள், "தனது தாயின் {தாய் விதுலையின்} வார்த்தை அம்புகளால் துளைக்கப்பட்ட மகன், பெருமைமிக்க இனத்தைச் சேர்ந்த குதிரையைப் போல எழுந்து, தனது தாய் சுட்டிக்காட்டியவை அனைத்தையும் சாதித்தான்.
சக்தியை மேம்படுத்தி, பலத்தை ஈர்க்கும் இந்த அற்புத வரலாற்றை, எதிரிகளால் பாதிப்படைந்து, துயரத்தில் மூழ்கியிருக்கும் தனது மன்னனை, அவனது அமைச்சர் ஒருவர் கேட்கச் செய்ய வேண்டும். உண்மையில், இந்த வரலாறு ஜெயம் என்று அழைக்கப்படுகிறது. இது வெற்றி விரும்பும் அனைவராலும் கேட்கப்பட வேண்டும்.
உண்மையில், இதைக் கேட்கும் ஒருவன், தனது எதிரிகளைக் கலக்கி இந்த முழு உலகையும் விரைவில் அடக்கி விடுவான். இந்த வரலாறு ஒரு பெண் வீரமகனை ஈன்றெடுக்கச் செய்யும். இதைத் திரும்பத் திரும்பக் கேட்ட ஒரு பெண், நிச்சயமாக ஒரு வீரனையே ஈன்றெடுப்பாள்.
இதைக் கேட்கும் {இந்த வரலாற்றைக் கேட்கும்} ஒரு க்ஷத்திரியப் பெண், தடுக்கமுடியா ஆற்றல் கொண்டவனாக, கல்வியில் முதன்மையானவனாக, தவத்துறவுகளில் முதன்மையானவனாக, தயாளத்தில் முதன்மையானவனாக, தவத்துக்குத் தன்னை அர்ப்பணிப்பவனாக, பிரம்ம அழகுடன் சுடர்விடுபவனாக, எண்ணற்ற நன்மைகள் கொண்டவனாக, பிரகாசத்தில் ஒளிர்பவனாக, பெரும் பலம் கொண்டவனாக, அருளப்பட்டவனாக, (போரில்) தாங்கிக்கொள்ளப்பட முடியாதவனாக, எப்போதும் வெல்பவனாக, ஒற்றப்பற்றவனாக, தீயவர்களைத் தண்டிப்பவனாக, அறம் பயில்வோர் அனைவரையும் பாதுகாப்பவனாக ஒரு மகனை ஈன்றெடுப்பாள்" என்றாள் {குந்தி}".
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment