Saturday, December 30, 2023

Mahabharatam in tamil

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-216
உத்யோக பர்வம்
..
"கிருஷ்ணனைச் சிறைபிடிப்பேன்!" என்ற துரியோதனன்
..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! எதிரிகளை அடிப்பவனே {ஜனமேஜயா}, வலிய கரங்களைக் கொண்ட அந்தத் தேவகியின் மகன் {கிருஷ்ணன்} (ஹஸ்தினாபுரத்திற்குப்) புறப்பட்டபோது, எதிரி வீரர்களைக் கொல்லவல்லவர்களும் பலமிக்கவர்களுமான பத்துத் தேர்வீரர்கள் அவனை {கிருஷ்ணனைத்} தொடர்ந்து சென்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஆயிரம் {1000} காலாட்படை வீரர்களும், ஆயிரம் {1000} குதிரைவீரர்களும், நூற்றுக்கணக்கான பணியாட்களும் அபரிமிதமான உணவுப்பொருட்களுடன் அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "தாசார்ஹ குலத்தவனான அந்த ஒப்பற்ற மதுவைக்கொன்றவன் {மதுசூதனன்}, தனது பயணத்தை எப்படிச் செய்தான்? அந்த வீரன் {கிருஷ்ணன்} புறப்பட்ட போது என்னென்ன சகுனங்கள் காணப்பட்டன?" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.



வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அந்த ஒப்பற்ற கிருஷ்ணன் (ஹஸ்தினாபுரத்திற்குக்) கிளம்பியபோது காணப்பட்ட இயல்பான மற்றும் இயல்புக்கு மாறான சகுனங்களை நான் உரைக்கும்போதே கேட்பாயாக. வானம் மேகமற்று இருந்தாலும், மின்னல்கீற்றுகளுடன் கூடிய இடி உருளும் ஒலி கேட்டது. தெளிந்த வானில் {கண்களுக்குத் தெரியாதபடி} வரிசையாக வந்த மேகங்கள் இடைவிடாமல் பின்புறத்தில் மழையைப் பொழிந்து கொண்டிருந்தன. கிழக்கு நோக்கிப் பாயும் சிந்து நதி உட்பட்ட ஏழு பெரிய ஆறுகள் எதிர் திசை {மேற்கு} நோக்கிப் பாய்ந்தன. எதையும் வேறுபடுத்திப் பார்க்க இயலாவண்ணம் எல்லாத் திசைகளும் எதிர்மறையானதைப் போலத் தோன்றின.


ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா} எங்கும் நெருப்புகள் சுடர்விட்டு எழுந்தன, பூமி மீண்டும் மீண்டும் நடுங்கியது. நூற்றுக்கணக்கான கிணறுகள் மற்றும் நீர் பாத்திரங்கள் {நீர்} பெருகி வழிந்தோடின. மொத்த அண்டமே இருளில் மூழ்கியது. புழுதி நிறைந்த சுற்றுச்சூழலில், அடிவானத்தின் திக்குகளையும், மூலத்திசைகளையும் வேறுபடுத்திப் பார்க்க இயலவில்லை. வானத்தில் இருந்து பெரும் கர்ஜனைகள் கேட்கப்பட்டன, ஆனால் எந்த உருவமும் தென்படவில்லை.


ஓ! மன்னா {ஜனமேஜயா} அற்புதம் நிறைந்த இந்த நிகழ்வு நாடு முழுவதும் காணப்பட்டது. கடுமையான இடியைப் போன்ற ஒலியுடன் வீசிய தெற்மேற்கு காற்று, ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்து, ஹஸ்தினாபுர நகரத்தை நசுக்கியது.

எனினும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்} கடந்த சென்ற இடங்களில் இனிமையான தென்றல் வீசியது, அனைத்தும் மங்கலகரமாக ஆனது. தாமரைகள் மற்றும் நறுமணமிக்க மலர்கள் அங்கே பொழிந்தன. கூரிய புற்களும் முட்களும் அற்றிருந்த அந்தச் சாலை இனிமையானதாக இருந்தது. அவன் {கிருஷ்ணன்} தங்கிய இடங்களில் எல்லாம், ஆயிரக்கணக்கான பிராமணர்கள் வந்து செல்வத்தைத் தானமளிக்கும் அவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்து, தயிர், நெய், தேன் போன்ற உணவுகள் மற்றும் செல்வங்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவனை {கிருஷ்ணனை} வழிபட்டனர்.


பெண்களே கூட, வெளியே சாலைக்கு வந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்கும் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த ஒப்பற்ற வீரனின் {கிருஷ்ணனின்} மேனியில் நறுமணமிக்கக் காட்டு மலர்களைத் தூவினர். பிறகு அவன், இதயத்துக்கு இனிமையைத் தரவல்லவையும், கண்களுக்கு இனிய காட்சிகளைக் கொண்டவையும், வண்டுகள் நிறைந்தவையுமான பல்வேறு கிராமங்களைக் கடந்தும், பல்வேறு நாடுகள் மற்றும் அரசுகளைக் கடந்தும், புனிதமானதும், அழகுள்ளதும், அனைத்து வகைப் பயிர்கள் நிரம்பியதும், இனிமையானதுமான சாலிபவனம் என்கிற இடத்தை அடைந்தான்.

எப்போதும் உற்சாகம் கொண்டவர்களும், நல்ல இதயம் படைத்தவர்களும், பாரதர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டவர்களும், அதன்காரணமாகப் படையெடுப்பாளர்கள் குறித்த அச்சங்களில் இருந்து விடுபட்டவர்களும், எந்தவித துயரத்தையும் அறியாதவர்களுமான உபப்லாவ்யத்துக் குடிமக்களில் பலர், தங்கள் நகரத்தை விட்டு வெளியே வந்து, கிருஷ்ணனைக் காணும் விருப்பத்தில் ஒன்றிணைந்து {அங்கே சாலிபவனத்தின் சாலை} வழியில் நின்றார்கள். சுடர்மிக்க நெருப்பைப் போன்ற அந்த ஒப்பற்றவன் {கிருஷ்ணன்} அந்த இடத்திற்கு {சாலிபவனத்திற்கு} வந்ததைக் கண்டதும், தங்கள் வழிபாட்டுக்குகந்த அவனை {கிருஷ்ணனை}, தங்கள் இல்லத்திற்கு வந்த ஒரு விருந்தினரை உபசரிப்பதைப் போல மரியாதையுடன் வழிபட்டார்கள்.


கடைசியாக அந்த எதிரிவீரர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, விருகஸ்தலத்தை அடைந்த போது, இங்குமங்குமாய்ச் பிரிந்த சூரியக்கதிர்கள் வானத்தைச் சிவப்பாக்கியதாகத் தோன்றியது. தனது தேரில் இருந்து இறங்கிய அவன் {கிருஷ்ணன்}, தான் வழக்கமாகச் செய்யும் சுத்திகரிப்புச் சடங்குகளை முறையாகச் செய்து, குதிரைகளுக்குச் சேணம் அகற்றச் சொல்லி உத்தரவிட்டு, தனது மாலைநேரத் துதிகளைச் சொல்ல தன்னைத் தயாரித்துக் கொண்டான். {தேரோட்டி} தாருகனும், குதிரைகளை விடுவித்து, குதிரை அறிவியல் விதிகளின்படி அவற்றை மேய்த்து, நுகங்களையும், தடயங்களையும் அகற்றி அவற்றுக்கு விடுதலை கொடுத்தான். இது செய்து முடிக்கப்பட்டதும் மதுவைக் கொன்றவன் {மதுசூதனன்}, "யுதிஷ்டிரரின் தூதுக்காக நாம் இந்த இரவை இங்கே கழிக்க வேண்டும்" என்றான். அவனது {கிருஷ்ணனின்} நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்ட அவனது பணியாட்கள், விரைவாக ஒரு தற்காலிகக் குடிலை அமைத்து, அருமையான உணவையும் பானங்களையும் விரைந்து தயாரித்தனர்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கிராமத்தில் வசித்த பிராமணர்களில் உன்னதமானவர்கள், உயர்ந்த வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், பணிவானவர்கள், வேதங்களின் கூற்றுக்குக் கீழ்ப்படிந்து தங்கள் நடத்தையை அமைத்துக் கொண்டவர்கள் ஆகியோர், எதிரிகளைத் தண்டிப்பவர்களில் ஒப்பற்றவனான ரிஷிகேசனை {கிருஷ்ணனை} அணுகி, தங்கள் அருளாசிகள் மற்றும் மங்கலகரமான பேச்சுகளால் அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்தினார்கள். அனைவரின் மரியாதைக்கும் தகுதிவாய்ந்த அந்தத் தாசார்ஹ குலத்தவனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்திய பிறகு, செல்வங்கள் நிறைந்த தங்கள் இல்லங்களை, அந்த ஒப்பற்ற மனிதனின் {கிருஷ்ணனின்} ஆளுகைக்குள் வைத்தனர்.


அவர்களிடம் "போதும்" என்று சொன்ன அந்த ஒப்பற்ற கிருஷ்ணன், அவர்களுக்கு, அவரவர் தகுதிக்கேற்ப முறையான மரியாதையைச் செலுத்தி, அவரவர் வீடுகளுக்கு அவரவர்களுடன் சென்று, பிறகு அவர்களின் துணையுடனே தனது கூடாரத்திற்குத் திரும்பினான். அந்தணர்கள் அனைவருக்கும் இனிய இறைச்சியை உண்ணக் கொடுத்து, அவர்களுடன் சேர்ந்து தனது உணவை எடுத்துக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, அந்த இரவை மகிழ்ச்சியாக அங்கே கழித்தான்" என்றார் {வைசம்பாயனர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதேவேளையில், மதுசூதனன் {கிருஷ்ணன்} புறப்பட்டதைத் தனது ஒற்றர்கள் மூலம் அறிந்த திருதராஷ்டிரன், தன் மயிர் சிலிர்க்க, வலிய கரங்கள் கொண்ட பீஷ்மர், துரோணர், சஞ்சயன், ஒப்பற்ற விதுரன் ஆகியோரிடம் {இதுகுறித்து} புகழ்ந்து பேசியபிறகு, துரியோதனனிடமும் அவனது ஆலோசகர்களிடமும், "ஓ! குருகுலத்தின் கொழுந்தே {துரியோதனா}, நாம் கேள்விப்படும் செய்தி விசித்திரமானதாகவும், அற்புதமானதாகவும் இருக்கிறது. பிறர் அது குறித்துப் புகழ்ந்து பேசுகின்றனர், இன்னும் பிறர் தங்கள் இல்லங்களிலும், திறந்த வெளிகளிலும் கூடி இது குறித்து விவாதிக்கின்றனர்.


பெரும் ஆற்றல்படைத்த அந்தத் தாசார்ஹன் {கிருஷ்ணன்},, பாண்டவர்கள் சார்பாக இங்கு வருவதாக அனைவரும் சொல்கிறார்கள். அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்} எல்லாவகையிலும் நம் கையாலான மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் தகுந்தவனாவான். அனைத்து உயிரினங்களுக்கும் தலைவன் அவன் {கிருஷ்ணன்}. இந்த அண்டத்தில் உள்ள அனைத்தின் வழிகளும் அவனிலேயே நிலைத்திருக்கின்றன. உண்மையில், புத்திக்கூர்மை, ஆற்றல், அறிவு, சக்தி ஆகிய அனைத்தும் மாதவனிலேயே {கிருஷ்ணனிலேயே} வசிக்கின்றன. நீதிமான்கள் அனைவராலும் வழிபடத்தக்க அவன் {கிருஷ்ணன} மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான். உண்மையில் அவனே நிலைத்த அறமுமாவான்.


வழிபடும்போது மகிழ்ச்சியை நிச்சயம் அளிப்பவன் அவன்; அவனை வழிபடவில்லை என்றாலோ, இழிவும் துயரமும் ஏற்படுவது நிச்சயம். நமது காணிக்கைகளால், அந்த எதிரிகளை அடிப்பவனான தாசார்ஹன் {கிருஷ்ணன்} மனநிறைவு கொள்ளச் செய்யப்பட்டால், அவனது {கிருஷ்ணனது} அருளால் மன்னர்களுக்கு மத்தியில் நாம் நமது அனைத்து விருப்பங்களையும் அடையலாம். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, தாமதிக்காமல் அவனை {கிருஷ்ணனை} வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வாயாக. இன்பத்திற்குகந்த அனைத்து பொருட்களும் நிறைந்த அரங்குகள் சாலையில் அமைக்கப்படட்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்ட காந்தாரியின் மகனே {துரியோதனா}, அவன் உன்னிடம் மனநிறைவு கொள்ளும்படியான ஏற்பாடுகளைச் செய்வாயாக. இக்காரியத்தில் பீஷ்மர் என்ன நினைக்கிறார்?" என்றான் {திருதராஷ்டிரன்}.


பீஷ்மரும் மற்றும் பிறரும் என அனைவரும் மன்னன் திருதராஷ்டிரனின் அவ்வார்த்தைகளை மெச்சி, "சாலச் சிறந்தது" என்றனர். அவர்களது விருப்பங்களைப் புரிந்து கொண்ட துரியோதனன், அரங்குகளை அமைப்பதற்கான இனிமையான இடங்களைத் தேர்ந்தெடுக்கக் கட்டளையிட்டான். இதன் காரணமாக, சரியான இடைவெளிகளுடன் கூடிய இனிமையான இடங்களில், அனைத்து வகை ரத்தினங்களும் நிறைந்த பல அரங்குகள் கட்டப்பட்டன. சிறந்த தரம் கொண்ட அருமையான இருக்கைகள், அழகிய பெண்கள், நறுமணப் பொருட்கள், ஆபரணங்கள், அருமையான ஆடைகள், பல்வேறு வகைகளிலான சிறந்த உணவு மற்றும் பானங்கள் மற்றும் பலவகைகளிலான நறுமணமிக்க மாலைகளையும் அங்கே மன்னன் {துரியோதனன்} அனுப்பி வைத்தான்.


மன்னன் {துரியோதனன்}, கிருஷ்ணனை வரவேற்பதற்காக, விலைமதிப்பற்ற ரத்தினங்கள் நிறைந்த உயர்ந்த அழகுடைய அரங்கொன்றை, சிறப்புக் கவனத்துடன் விருகஸ்தலத்தில் நிறுவினான். தேவர்கள் அனுபவிப்பதைப் போன்றதும், மனித தகுதிக்கு மேலானதுமான இந்த ஏற்பாடுகளைச் செய்த மன்னன் துரியோதனன், இது குறித்துத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்தான். எனினும், தாசார்ஹ குலத்தைச் சேர்ந்த கேசவன் {கிருஷ்ணன்}, பல்வேறு வகைகளிலான ரத்தினங்களுடன் கூடிய அந்த அரங்குகள் அனைத்திலும் ஒரு பார்வையைக்கூடச் செலுத்தாமல், குருக்களின் தலைநகரை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்தான்.

திருதராஷ்டிரன் {விதுரனிடம்} சொன்னான், "ஓ! விதுரா, உபப்லாவ்யத்தில் இருந்து ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புறப்பட்டுவிட்டான். அவன் {கிருஷ்ணன்} இப்போது விருகஸ்தலத்தில் தங்கியிருக்கிறான். நாளை இங்கே வருவான். ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஆஹுகர்களின் தலைவனாவன். அவன் {கிருஷ்ணன்}, சாத்வத குல உறுப்பினர்கள் அனைவரிலும் முதன்மையான நபரும், உயர் ஆன்மா, பெரும் சக்தி மற்றும் பலத்தைக் கொண்டவனுமாவான். உண்மையில், விருஷ்ணிகளின் செழிப்புமிக்க நாட்டுக்கு மாதவனே {கிருஷ்ணனே} காப்பாளனாகவும் பாதுகாவலனாகவும் இருக்கிறான். அவனே மூவுலகங்களுக்கும் ஒப்பற்ற பெரும்பாட்டனாக இருக்கிறான். ஆதித்தியர்கள், வசுக்கள் மற்றும் ருத்திரர்கள் ஆகியோர் ஞானம் கொண்ட பிருஹஸ்பதியைப் புகழ்வதைப் போல, விருஷ்ணி குலத்தவர், புத்திசாலியான கிருஷ்ணனின் அறிவைப் புகழ்கிறார்கள்.


ஓ! அறம்சார்ந்தவனே {விதுரா}, நான் உனது முன்னிலையில், அந்த ஒப்பற்ற தாசார்ஹ குலக் கொழுந்துக்கு {கிருஷ்ணனுக்கு} வழிபாட்டைக் காணிக்கையாக்குவேன். அந்த வழிபாட்டைக் குறித்து நான் சொல்வதைக் கேள். நான் அவனுக்கு {கிருஷ்ணனுக்குத்} தங்கத்தாலான பதினாறு {16} தேர்களைக் கொடுப்பேன். ஒரே நிறம் கொண்டவையும், பாஹ்லீக இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையுமான சிறந்த நான்கு குதிரைகளால் அவை ஒவ்வொன்றும் {அந்த ஒவ்வொரு தேரும்} இழுக்கப்படும்.


ஓ! கௌரவா {விதுரா}, எப்போதும் மதநீர் ஒழுகுபவையும், பகைவீரர்களை அடிப்பதற்கேற்ற வகையில், கலப்பையின் தண்டுகளைப் போன்ற பெரிய தந்தங்களைக் கொண்டவையுமான எட்டு {8} யானைகளை நான் அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} கொடுப்பேன். அவை ஒவ்வொன்றும் {ஒவ்வொரு யானைக்கும்} எட்டு {8 மனிதப்} பணியாட்கள் இருப்பார்கள். தங்க நிறத்திலான நூறு {100} அழகிய கன்னிப் பெண்களை நான் அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பணியாட்களாகக் கொடுப்பேன். அதே போலப் பல ஆண் பணியாட்களையும் நான் அவனுக்குக் கொடுப்பேன்.


மலைவாழ் மனிதர்களால் நமக்குக் கொடுக்கப்பட்டவையும், தொடுவதற்கு மென்மையானவையுமான பதினெட்டாயிரம் {18,000} கம்பளிப் போர்வைகளை நான் அவனுக்குக் கொடுப்பேன். சீனத்தில் இருந்து பெறப்பட்ட ஆயிரம் {1000} மான் தோல்களையும், கேசவனுக்குத் {கிருஷ்ணனுக்குத்} தகுந்த அந்த வகையான பல பொருட்களையும் நான் அவனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} கொடுப்பேன். பகலும், இரவும் மின்னும் தூய கதிர்களைக் கொண்ட ரத்தினங்களையும் நான் அவனுக்குக் கொடுப்பேன். ஏனெனில், கேசவன் {கிருஷ்ணன்} மட்டுமே அதற்குத் தகுதியுடையவன் ஆவான்.


சுற்றிலும் ஒரு நாளைக்குப் பதினான்கு {14} யோஜனைகள் செல்லவல்லதும், கோவேறு கழுதைகள் பூட்டியதுமான இந்த எனது தேரையும் நான் அவனுக்குக் கொடுப்பேன். அவனைத் தொடர்ந்து வந்துள்ள பணியாட்களுக்கும் விலங்குகளுக்கும் தேவையான தினப்படி உணவைக் காட்டிலும் எட்டுமடங்கிலானவற்றை நான் அவனது முன்னிலையில் வைப்பேன். துரியோதனனைத் தவிர, எனது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, அவரவர் தேர்களில் சென்று அவனை {கிருஷ்ணனை} வரவேற்பார்கள்.

அருள் நிறைந்தவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் {1000} ஆடல் மகளிரும், ஒப்பற்ற கேசவனை {கிருஷ்ணனை} வரவேற்க கால்நடையாகச் செல்வார்கள். ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வரவேற்பதற்காக நகரத்தை விட்டுச் செல்லும் அழகிய மங்கையர் முகத்திரை விலக்கி வெளிப்படையாகவே வெளியே செல்வார்கள். மனைவியர் மற்றும் பிள்ளைகளுடன் கூடிய குடிமக்கள் ஒப்பற்ற மதுசூதனனைக் {கிருஷ்ணனைக்} காணச் செல்லும்போது, காலை கதிரவனிடம் தங்கள் கண்களைச் செலுத்துபவர்களைப் போலவே மரியாதையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தட்டும். எனது கட்டளையின் பேரில், சுற்றிலும் உள்ள கவிகைகள் {விதானங்கள்} அனைத்தும், பதக்கங்களாலும், கொடிகளாலும் நிறைக்கப்படட்டும். கேசவன் {கிருஷ்ணன்} வரும் சாலை, நன்கு நீர் தெளிக்கப்பட்டு, புழுதி நீக்கப்படட்டும்.


துரியோதனனுடையதைவிடச் சிறந்ததான துச்சாசனனின் வசிப்பிடம் தூய்மையாக்கப்பட்டு, தாமதமில்லாமல் நன்கு அலங்கரிக்கப்படட்டும். பல அழகிய கட்டடங்களைக் கொண்ட அந்த மாளிகையே, இனிமையானதும், இன்பம் நிறைந்ததும், அனைத்து காலங்களுக்கும் ஏற்ற செல்வங்களை அபரிமிதமாகக் கொண்டதுமாகும். அந்த வசிப்பிடத்தில்தான் எனது மற்றும் துரியோதனனின் செல்வமனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த விருஷ்ணி குலத்துக்கொழுந்து {கிருஷ்ணன்} எவை எவற்றுக்குத் தகுதியானவனோ அவை அனைத்தும் அவனுக்குக் கொடுக்கப்படட்டும்" என்றான் {திருதராஷ்டிரன்

விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, மூவுலகத்தாலும் நீர் மதிக்கப்படுகிறீர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் அனைவராலும் விரும்பப்பட்டு மதிக்கப்படுகிறீர். முதிர்ந்தவரான நீர் இந்த வயதில் சொல்வது எதுவும் சாத்திர விதிகளுக்கும், நன்கு செலுத்தப்பட்ட அறிவின் முடிவுக்கும் முரணாக இருக்க இயலாது. ஏனெனில் உமது மனம் எப்போதும் அமைதியாகவே இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்லில் உள்ள எழுத்துகள், சூரியனின் ஒளி, பெருங்கடலின் அலை ஆகியவை போல உம்முள் அறம் நிரந்தரமாகவே வசிக்கிறது.


ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது எண்ணிலடங்கா அறங்களின் விளைவாக அனைவரும் மதிக்கப்பட்டு, மகிழ்ச்சியூட்டப்படுகிறார்கள். எனவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய நீர் உமது அறங்களைத் தக்கவைத்துக் கொள்ள முயல்வீராக. உமக்கு அன்பான உறவினர்கள், நண்பர்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உமது மகன்களின் மொத்த அழிவுக்கு மூடத்தனத்தால் நீரே காரணமாகாதீர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருந்தினனாக வரும் கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} நீர் அதிகமாகவே கொடுக்க விரும்புகிறீர். எனினும், கேசவன் {கிருஷ்ணன்} இதைவிட எல்லாம் இன்னும் இன்னும் அதிகமாகப் பெறத் தகுந்தவன், ஏன் மொத்த உலகத்தையுமே கூடப் பெறத் தகுந்தவனே.


உண்மையாக எனது ஆத்மாவின் {உயிரின்} மேல் ஆணையாக நான் சொல்கிறேன், இவை யாவையும், அறநோக்கத்தாலோ, அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்புடையதைச் செய்யும் நோக்கத்தாலோ நீர் கிருஷ்ணனுக்குக் கொடுக்கவில்லை. ஓ! பெரும் செல்வத்தைக் கொடுப்பவரே {திருதராஷ்டிரரே}, இவை யாவும் மோசடி, பொய் மற்றும் நேர்மையற்ற {உமது} தன்மையையே காட்டுகிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வெளிப்புறச் செயல்களால் {மறைக்கப்பட்ட} உமது கமுக்கமான {இரகசிய} காரியங்களை நான் அறிவேன்.


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஐந்து பாண்டவர்களும் ஐந்து கிராமங்களை மட்டுமே விரும்புகின்றனர். எனினும், நீர் அவற்றைக்கூட அவர்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை. ஆகவே, நீர் {அவர்களுடனான} சமாதானத்துக்கு உடன்பட விரும்பவில்லை. வலிய கரங்களைக் கொண்ட அந்த விருஷ்ணி குலத்து வீரனை {கிருஷ்ணனை}, உமது செல்வத்தைக் கொண்டு உமதாக்க முயல்கிறீர்; ஆனால் அடியிலோ, இதன் மூலம் பாண்டவர்களிடம் இருந்து கேசவனை {கிருஷ்ணனை} நீர் பிரிக்க முயல்கிறீர்.


எனினும், செல்வத்தாலோ, கவனிப்பாலோ, வழிபாட்டாலோ தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து கிருஷ்ணனை உம்மால் பிரிக்க இயலாது என நான் உமக்குச் சொல்கிறேன். கிருஷ்ணனின் பெருமையை நான் அறிவேன்; அர்ஜுனனிடம் அவன் {கிருஷ்ணன்} கொண்டிருக்கும் உறுதியான அர்ப்பணிப்பை நான் அறிவேன்; கேசவனின் {கிருஷ்ணனின்} உயிரான தனஞ்சயனை {அர்ஜுனனை} கிருஷ்ணனால் விட முடியாது என்பதையும் நான் அறிவேன். நீர்ப்பாத்திரத்தால் தனது காலைக் கழுவுவதைத் தவிர, (வழக்கமான} நலன் விசாரிப்புகளைத் தவிர, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} வேறு எந்த விருந்தோம்பலையும் ஏற்கவோ, வேறு பொருளின் மீது தனது கண்களை நிலைக்க வைக்கவோ {செலுத்தவோ} மாட்டன்.

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து மரியாதைகளுக்கும் தகுதி வாய்ந்த அந்த ஒப்பற்றவனுக்கு {கிருஷ்ணனுக்கு} மிகவும் ஏற்புடைய விருந்தோம்பலைக் கொடுப்பீராக. ஏனெனில், ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} கொடுக்கக்கூடாத எந்த மரியாதையும் கிடையாது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இருதரப்புக்கும் நன்மை விளைவிக்கும் நோக்கத்துடன் அவன் {கிருஷ்ணன்} குருக்களிடம் வருகிறான். அவன் எதிர்பார்க்கும் அந்த நோக்கத்துக்கு உகந்தவற்றை அந்தக் கேசவனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} கொடுப்பீராக. துரியோதனனை ஒருபுறத்திலும், பாண்டவர்களை மறுபுறத்திலும் கொண்டு உங்களுக்குள் சமாதானத்தை நிறுவவே கேசவன் {கிருஷ்ணன்} விரும்புகிறான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனது ஆலோசனைகளைப் பின்பற்றுவீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் அவர்களுக்குத் தந்தையும்; பாண்டவர்கள் உமக்கு மகன்களுமாவர். நீர் முதிர்ந்தவர், அவர்களோ வயதால் உமக்குச் சிறுபிள்ளைகளே. பிள்ளைகளின் மனநிலையில் இருந்து உம்மை மதிக்கும் அவர்களிடம் தந்தையாக நடந்து கொள்ளும்" என்றான் {விதுரன்}.

துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}சொன்னான், "உண்மையில் கிருஷ்ணனைக் குறித்து விதுரர் சொன்னது அனைத்தும் உண்மையாகவே சொல்லப்பட்டிருக்கிறது; ஏனெனில் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} பாண்டவர்களிடம் பெரும் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவும் இருக்கிறான். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} அளிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்ட பல்வேறு வகையான செல்வங்களில் ஒன்றையும் அவனுக்குக் கொடுக்கக்கூடாது. நிச்சயமாக, கேசவன் {கிருஷ்ணன்} நமது வழிபாட்டுக்குத் தகுந்தவனே, ஆனால் காலமும் இடமும் அதற்கு எதிராக இருக்கின்றன. ஏனெனில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {கிருஷ்ணன்} நமது வழிபாட்டைப் பெற்றால், அவன் {கிருஷ்ணன்} மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நாம் அவனை வழிபடுகிறோம் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அறிவார்ந்த ஒரு க்ஷத்திரியன் தனக்கு அவமானத்தைத் தரக்கூடிய ஒரு காரியத்தைச் செய்யக்கூடாது, என்பதே எனது உறுதியான நம்பிக்கை. மூவுலகங்களிலும் உள்ள மிகுந்த மரியாதைக்குரிய வழிபாட்டுக்கும் தகுந்தவனே நீண்ட கண் கொண்ட கிருஷ்ணன் என்பதை நான் நன்கறிவேன். எனவே, ஓ! ஒப்பற்ற மன்னா {திருதராஷ்டிரரே}, இப்போது நாம் அவனுக்கு எதையும் கொடுப்பதற்கு எந்த இடமும் இல்லை. ஏனெனில் போர் என்பது தீர்மானிக்கப்பட்ட பிறகு, அது விருந்தோம்பலால் தள்ளிப்போகக்கூடாது" என்றான் {துரியோதனன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவனது {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட குருக்களின் பாட்டன் {பீஷ்மர்}, விசித்திரவீரியனின் அரச மகனிடம் {திருதராஷ்டிரனிடம்}, "வழிபடப்பட்டாலோ, வழிபடப்படாவிட்டலோ ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} கோபமடைய மாட்டான். எனினும், யாரும் அவனை அவமதிக்க முடியாது. ஏனெனில, கேசவன் அலட்சியப்படுத்தத்தக்கவன் அல்ல. ஓ! வலிமைவாய்ந்தவனே {திருதராஷ்டிரா}, அவன் {கிருஷ்ணன்} என்ன செய்ய நோக்குகிறானோ, அதை, எவராலும், தனது அதிகாரம் அனைத்தினாலும், எந்த வகையிலும் தடுக்க முடியாது. வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணன் சொல்வதைத் தயங்காமல் செய்வாயாக. வாசுதேவனை {கிருஷ்ணனை} வழியாகக் கொண்டு பாண்டவர்களிடம் சமாதானம் கொள்வாயாக. உண்மையில், அறம் சார்ந்த ஆன்மா கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அறம் மற்றும் பொருளுக்கு உகந்ததையே சொல்வான். எனவே, உனது நண்பர்கள் அனைவருடனும் கூடிய நீ, அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்புடையதை மட்டும் சொல்வதே உனக்குத் தகும்" என்றார் {பீஷ்மர்}.


துரியோதனன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா {பிதாமஹரே, பீஷ்மரே}, நான் எந்த வகையிலும், இந்த எனது பெருகும் செழிப்பைப் {செழிப்பு நிறைந்த நாட்டைப்} பாண்டவர்களுடன் பகிர்ந்து கொண்டு வாழ முடியாது. உண்மையில், நான் இப்போது எட்டியிருக்கும் இந்தத் தீர்மானம் பெரியதாகும். அதைக் கேளும். பாண்டவர்களுக்குப் புகலிடமாய் இருக்கும் ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} நான் சிறை பிடிப்பேன். நாளை காலை அவன் {கிருஷ்ணன்} இங்கே வருவான்; அவன் {கிருஷ்ணன்} இங்கு அடைபட்டிருக்கும்போது, விருஷ்ணிகளும், பாண்டவர்களும், ஏன் இந்த முழு உலகமும் எனக்கு அடிபணியும். ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} நமது நோக்கத்தை யூகிக்க முடியாதபடி அதை நிறைவேற்றவும், அதன் காரணமாக நமக்கு எந்த ஆபத்தும் நேராமல் இருக்கவும் உள்ள வழிமுறைகள் என்ன என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான் {துரியோதனன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கிருஷ்ணனைச் சிறைபிடிக்கப் போவதாக, தனது மகன் {துரியோதனன்} சொன்ன அச்சம் தரும் வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், தனது ஆலோசகர்களுடன் சேர்ந்து மிகவும் துன்புற்று ஆழமாகக் காயமடைந்தான். பிறகு மன்னன் திருதராஷ்டிரன் துரியோதனனிடம், "ஓ! மனிதர்களில் ஆள்பவனே {துரியோதனா}, மீண்டும் இதை ஒருபோதும் சொல்லாதே. இது பழங்கால வழக்கமல்ல. ரிஷிகேசன் {கிருஷ்ணன்} இங்கே தூதனாக வருகிறான். அஃது ஒருபுறமிருக்க, அவன் {கிருஷ்ணன்} நமது உறவினனும், நமது அன்புக்குரியவனும் ஆவான். அவன் நமக்கு எந்தத் தவறையும் செய்யவில்லை; பிறகு எப்படி அவன் சிறையிலடைக்கப்படத் தகுந்தவனாவான்?" என்றான் {திருதராஷ்டிரன்}.

பீஷ்மர் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! திருதராஷ்டிரா, இந்த உனது தீய மகனுக்கான {துரியோதனனுக்கான} காலம் வந்துவிட்டது. தனது நலன் விரும்பிகளால் வேண்டப்பட்டாலும், நன்மையையல்லாமல் அவன் தீமையையே தேர்ந்தெடுக்கிறான். தன் நலன் விரும்பிகளின் வார்த்தைகளைக் கேட்காமல், முள் நிறைந்த பாதையில் நடந்து பாவச் சூழலைக் கொண்ட இந்த இழிந்த தீயவனையே {துரியோதனனையே} நீயும் தொடர்ந்து பின்பற்றிச் செல்கிறாய். கறைபடியா செயல்களைக் கொண்ட கிருஷ்ணனின் தொடர்பு ஏற்படும்போது {கிருஷ்ணனை துரியோதனன் சந்திக்கும்போது}, தனது ஆலோசகர்களுடன் கூடிய இந்த உனது மிகத் தீய மகன் {துரியோதனன்}, அந்தக் கணத்திலேயே அழிக்கப்படுவான். அறம் அனைத்தையும் கைவிட்டிருக்கும் இழிந்தவனும், தீயவனுமான இந்தப் பாவம் நிறைந்தவனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்கத் துணிய மாட்டேன்" என்றார் {பீஷ்மர்}.


கலங்கடிக்கப்படமுடியா ஆற்றல் கொண்டவரும், பாரதக் குலத்தின் முதிர்ந்த தலைவருமான அந்தப் பீஷ்மர், இதைச் சொல்லிவிட்டு, கோபத்தால் தூண்டப்பட்டு, எழுந்து, அந்த இடத்தைவிட்டு அகன்றார்" என்றார் {வைசம்பாயனர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(தனது படுக்கையில் இருந்து) அதிகாலையில் எழுந்த கிருஷ்ணன், தனது காலைச் சடங்குகளைச் செய்து, பாரதர்களிடம் இருந்து விடைபெற்று, (குருக்களின்} நகரத்திற்குப் {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான். விருகஸ்தலத்தில் வசிப்போர் அனைவரும் அந்த நீண்ட கரங்களைக் கொண்ட வலியவனுக்கு {கிருஷ்ணனுக்கு} விடை கொடுத்து, அவன் புறப்பட்டதும், தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். துரியோதனனைத் தவிர மற்ற தார்தராஷ்டிரர்கள் அனைவரும் சிறந்த ஆடைகளை உடுத்தி, பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் பிறருடன் அவனைச் {கிருஷ்ணனைச்} சந்திக்க வெளியே சென்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பல்வேறு வகைகளிலான தேர்களில் ஆயிரக்கணக்கான குடிமக்களும், கால்நடையாகப் பலரும் அந்த ரிஷிகேசனைக் {கிருஷ்சனைக்} காண வெளியே வந்தனர்.


களங்கமற்ற செயல்களைக் கொண்ட பீஷ்மர், துரோணர் மற்றும் திருதராஷ்டிரர் மகன்கள் ஆகியோரை வழியிலேயே சந்தித்த அவன் {கிருஷ்ணன்}, அவர்கள் அனைவரும் சூழ நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான். கிருஷ்ணனை மதிக்கும் வகையில் அந்நகர் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. முக்கியமான தெருக்கள் பல்வேறு வகையான ரத்தினங்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அச்சந்தர்ப்பத்தில், ஆண்களோ, பெண்களோ, குழந்தைகளோ எவரும் வீடுகளுக்குள் இல்லை. வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} காண குடிமக்களிடம் அவ்வளவு ஆவல் இருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, ரிஷிகேசன் {கிருஷ்ணன்} நகருக்குள் நுழைந்து, அதன் வழியே கடந்து சென்ற போது, குடிமக்கள் அனைவரும் வெளியே வந்து, தெருக்களில் வரிசையாக நின்று தங்கள் சிரங்களைத் தரைவரை தாழ்த்தி அவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்து பாடினர்.


உயர்குலப் பெண்கள் நிறைந்திருந்த பெரிய மாளிகைகள், ஒருகட்டத்தில், அவர்களது {அந்தப் பெண்களின்} பாரம் தாங்க முடியாமல் தரையில் விழுந்துவிடுவது போலத் தோன்றின. வாசுதேவனின் குதிரைகள் பெரும் வேகம் கொண்டவை என்றாலும், மனிதர்களின் அடர்த்தியினூடே மிகவும் மெதுவாகவே சென்றது. எதிரிகளைக் கலங்கடிப்பவனான அந்தத் தாமரைக்கண்ணன் {கிருஷ்ணன்}, எண்ணிலடங்கா கட்டடங்கள் நிறைந்த திருதராஷ்டிரனின் சாம்பல் நிற [1] அரண்மனைக்குள் நுழைந்தான். அந்த அரண்மனையின் முதல் மூன்று அறைகளைக் கடந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, விசித்திரவீரியனின் அரச மகனைச் {திருதராஷ்டிரனைச்} சந்தித்தான்.


[1] வெண்மையான அரண்மனை என்று வேறு ஒரு பதிப்பில் இருக்கிறது.

அந்தத் தாசார்ஹ குலத்தின் மகன் {கிருஷ்ணன்}, தனது முன்னிலையை அணுகியதும், பெரும் புகழையுடைய அந்தப் பார்வையற்ற ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, துரோணர், பீஷ்மர், கிருபர், சோமதத்தன், மன்னன் பாஹ்லீகன் ஆகியோரோடு எழுந்து நின்றான். ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} மதிக்கும் வண்ணம் அங்கே இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அந்த விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்}, பெரும் புகழைப் படைத்த மன்னன் திருதராஷ்டிரனை அணுகியதும், நேரம் எதையும் வீணடிக்காமல், அவனையும் {திருதராஷ்டிரனையும்}, பீஷ்மரையும் முறையான வார்த்தைகளால் வழிபட்டான்.


நிறுவப்பட்ட பயன்பாடுகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு வழிபாட்டை வழங்கிய பின்னர், அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, பிற மன்னர்களை வயது மூப்பின் அடிப்படையில் வணங்கவும் வாழ்த்தவும் செய்தான். பிறகு அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஒப்பற்ற துரோணரையும், அவரது மகனையும் {அஸ்வத்தாமனையும்}, பாஹ்லீகனையும், கிருபரையும், சோமதத்தனையும் அணுகினான். அந்த அறையில், அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய தங்கத்தாலான இருக்கை ஒன்று ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு ஓரிடத்தில் இருந்தது. திருராஷ்டிரனின் வேண்டுகோளுக்கிணங்க, அச்யுதன் {கிருஷ்ணன்} அந்த இருக்கையில் அமர்ந்தான். திருதராஷ்டிரனின் புரோகிதர்கள் ஒரு மாடு, தேன், தயிர்க்கடைசல் மற்றும் நீரை ஜனார்த்தனனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} காணிக்கையாக வழங்கினர். [2]

[2] மாடு, மதுபர்க்கம், நீர் ஆகியவற்றை வழங்கியதாக ஒரு பதிப்பு சொல்கிறது. மதுபர்க்கம் = தேன், பால் மற்றும் பழம் கலந்த உணவு.


விருந்தோம்பல் சடங்குகள் முடிந்த பிறகு, ஒவ்வொருவர் உறவுமுறைக்கேற்ப அவர்களுடன் கேலி செய்து கொண்டும், சிரித்துக் கொண்டும் சிறிது நேரம் கோவிந்தன் {கிருஷ்ணன்} குருக்கள் சூழ அங்கே இருந்தான். திருதராஷ்டிரனால் வழிபடப்பட்டு, மதிக்கப்பட்ட அந்த எதிரிகளைக் கலங்கடிக்கும் ஒப்பற்றவன் {கிருஷ்ணன்}, மன்னனின் {திருதராஷ்டிரனின்} அனுமதியுடன் வெளியே வந்தான். குருக்கள் அனைவரையும் அவர்களது சபையில் முறையாக வணங்கிய மாதவன் {கிருஷ்ணன்}, விதுரனின் இனிமையான இல்லத்திற்குச் சென்றான்; தனது இல்லத்திற்கு வந்த தாசார்ஹ குலத்து ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} அணுகி, அனைத்து மங்கலகரமான மற்றும் விரும்பத்தக்க காணிக்கைகளாலும் அவனை {கிருஷ்ணனை} விதுரன் வழிபட்டான்.

அவன் {விதுரன் கிருஷ்ணனிடம்}, "ஓ! தாமரைக்கண்ணா {கிருஷ்ணா}, உடல் கொண்ட அனைத்து உயிரினங்களுக்கும் நீயே உள்ளுறையும் ஆன்மாவாக இருப்பதால், உனது வருகையால் நான் உணர்ந்த மகிழ்ச்சியை உனக்குச் சொல்லி என்ன பயன்?" என்றான். உபசரிப்பும், வரவேற்பும் முடிந்த பிறகு, அறநெறியின் அனைத்துக் கொள்கைகளையும் அறிந்த விதுரன், மதுசூதனனான கோவிந்தனிடம் பாண்டவர்களின் நலன் குறித்து விசாரித்தான்.


கடந்த காலமும், வருங்காலமும், எவனிடம் நிகழ்காலமாக இருக்கிறதோ, அந்தத் தாசார்ஹ குலத்துக் கொழுந்து, அந்த விருஷ்ணிகள் தலைவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களால் விரும்பப்படுபவனாக, அவர்களிடம் நட்புணர்வோடு இருப்பவனாக, கல்விமானாக, அறநெறியில் உறுதியுள்ளவனாக, நேர்மையாளனாக, (பாண்டவர்களுக்கு எதிராக) எந்தக் கோபத்தையும் அடையாதவனாக, அறிவுள்ளவனாக விதுரனை அறிந்து, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} செயல்பாடுகள் அனைத்தையும் விரிவாக அவனிடம் {விதுரனிடம்} சொல்ல ஆரம்பித்தான்" என்றார் {வைசம்பாயனர்}.
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment