மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-213
உத்யோக பர்வம்
..
செல்வமற்றவன் இறந்தவனே" யுதிஷ்டிரன்!
..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, பெரும் அழகும் பிரகாசமும் கொண்ட உடலைப் படைத்தவனும், முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளைப் பிரகாசிக்கச் செய்பவனும், பாரதர்களால் மரியாதையாகக் கேட்கத்தக்கதும், ஸ்ருஞ்சயர்களுக்கு மங்கலகரமானதும், செழிப்பை விரும்புகிறவர்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கதும், அனைத்து வகையிலும் குறைகளற்றதும், மரணமடைய விதிக்கப்பட்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததுமான வார்த்தைகளைச் சொல்பவனும், உயர்ந்த தீர்மானங்களை நிறைவாகக் கொண்டவனும், நித்தியமானவனும், ஒப்பற்ற வீரம் படைத்தவனும், யாதவர்களில் காளையும், {யாதவர்களுக்குத்} தலைவனும், பகைவரைக் கொல்பவனும், அவர்களுக்குப் பிரமிப்பையும் ஊக்கத்தையும் அளிப்பவனும், பகைவர்கள் அனைவரின் புகழை அழிப்பவனுமான வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தங்கள் முன்னால் காண்பதற்குப் பார்வையைக் கொடையாகக் கொண்டவர்களைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன்.
உயர்ந்த ஆன்மா கொண்டவனும், வணங்கத்தக்கவனும், எதிரிகளைக் கொல்பவனும், விருஷ்ணிகளின் தலைவனும், அன்பு நிறைந்த வார்த்தைகளைப் பேசுபவனும், என் தரப்பில் உள்ளோரை கவர்பவனுமான {மயங்கச் செய்பவனுமான} அவனை {கிருஷ்ணனை} இங்கே கூடியிருக்கும் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரும் காண்பார்கள்.
தன்னறிவு கொண்ட {சுயத்தை அறிந்த} முனிவனும், சொல் திறனின் கடல் ஆனவனும், துறவிகளால் எளிதாக அடையப்படக்கூடியவனும், அழகிய சிறகுகள் கொண்ட அரிஷ்டா {கருடன்} என்றழைக்கப்படும் பறவையானவனும், உயிரினங்களை அழிப்பவனும், அண்டத்தின் புகலிடமானவனும், ஆயிரம் தலைகளைக் கொண்டவனும், அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவனும், புராதானமானவனும், தொடக்கமும், நடுவும், முடிவும் அற்றவனும், முடிவிலா சாதனைகள் கொண்டவனும், முதன்மை வித்துக்குக் காரணமானவனும், பிறப்பற்றவனும், நித்தியத்தைச் சுயமாகக் கொண்டவனும், உயர்ந்தவற்றில் எல்லாம் உயர்ந்தவனும், மூவுலகங்களையும் படைத்தவனும், தேவர்கள், அசுரர்கள், நாகர்கள், ராட்சசர்கள், கல்விமான்களில் முதன்மையானவர்கள் அனைவர், மனிதர்களின் ஆட்சியாளர்கள் ஆகியோருக்கு ஆசிரியனும், இந்திரனின் தம்பியுமான அந்த நித்தியமானவனின் {கிருஷ்ணனின்} கைகளில் நான் என்னைக் கொடுக்கிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}.
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "(பாண்டவர் இடத்தை விட்டு அகன்ற) நல்ல சஞ்சயன் குருக்களிடம் {கௌரவர்களிடம்} சென்ற போது, எனது பாட்டன்களான பாண்டுவின் மகன்கள் என்ன செய்தார்கள்? ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, இவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். எனவே, இவற்றை எனக்குச் சொல்வீராக" என்றான் {ஜனமேஜயன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சஞ்சயன் சென்ற பிறகு, நீதிமானான யுதிஷ்டிரன், சாத்வதர்கள் அனைவரின் தலைவனும், தாசார்ஹ குலத்தவனுமான கிருஷ்ணனிடம், "ஓ! நண்பர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனே {கிருஷ்ணா}, நண்பர்கள் தங்கள் நட்பைக் காட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தத் துயர் நிறைந்த காலத்தில் எங்களைக் காப்பதற்கு உன்னைத் தவிர வேறு எவரையும் நான் காணவில்லை. ஓ! மாதவா {கிருஷ்ணா}, அளவற்ற கர்வத்தால் நிறைந்திருக்கும் துரியோதனன் மற்றும் அவனது ஆலோசகர்களிடம் எங்களுக்குரிய பங்கை உன்னை நம்பியே நாங்கள் அச்சமற்றுத் திரும்பக் கேட்டிருக்கிருக்கிறோம். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, விருஷ்ணிகளின் துயரங்கள் அனைத்திலும் நீயே அவர்களைக் காக்கிறாய். இப்போது பெரும் ஆபத்தில் இருக்கும் பாண்டவர்களையும் காப்பாயாக. அவர்களும் {பாண்டவர்களும்} உனது பாதுகாப்பைப் பெறத் தகுந்தவர்களே" என்றான் {யுதிஷ்டிரன்}.
தெய்வீகமான கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, இதோ நான் இருக்கிறேன். நீர் சொல்ல விரும்புவதை என்னிடம் சொல்லும். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, நீர் எதையெல்லாம் சொல்வீரோ அவற்றை நான் செய்வேன்" என்றான்.
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "திருதராஷ்டிரர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் நோக்கம் என்ன என்பதை நீ கேட்டாய். ஓ! கிருஷ்ணா, சஞ்சயன் சொன்ன யாவும், திருதராஷ்டிரரின் வார்த்தைகள் என்பது உறுதி. திருதராஷ்டிரரின் ஆன்மா போன்ற சஞ்சயன், அவரது {திருதராஷ்டிரரின்} மனதில் இருப்பதையே பேசினார். தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளையே ஒரு தூதன் பேச முடியும், ஏனெனில் மாறாகப் பேசினால் அவன் கொல்லப்படத் தகுந்தவனாகிவிடுவான். தன்னுடையவை அனைத்தையும் சமமாகப் பாராமல், பேராசையால் உந்தப்பட்ட தீய இதயம் கொண்ட திருதராஷ்டிரர், எங்கள் நாட்டைத் திரும்பக் கொடுக்காமலேயே எங்களிடம் சமாதானம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்.
உண்மையில், திருதராஷ்டிரர் கட்டளையின் பேரில் நாங்கள் காட்டில் பன்னிரெண்டு {12} வருடங்களையும், மேலும் ஒரு வருடத்தைத் தலைமறைவாகவும், ஓ! தலைவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் எங்கள் உறுதிமொழியில் உறுதியாக இருப்பார் என்ற நம்பிக்கையிலேயே கழித்தோம். எங்களது உறுதிமொழியில் இருந்து நாங்கள் பிறழவில்லை என்பதை எங்களோடு இருந்த அந்தணர்கள் நன்கு அறிவார்கள்.
பேராசை கொண்ட மன்னர் திருதராஷ்டிரர் க்ஷத்திரிய அறங்களை நோற்க இப்போது விரும்பவில்லை. தன் மகன் {துரியோதனன்} மீது கொண்ட பாசத்தின் காரணமாக, அவர் தீய மனிதர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். சுயோதனனின் {துரியோதனனின்} ஆலோசனைகளுக்குக் கட்டுப்படும் மன்னர் {திருதராஷ்டிரர்}, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பேராசையால் இயக்கப்பட்டு, தனது நன்மையை மட்டும் நாடி, எங்களிடம் உண்மையற்று நடந்து கொள்கிறார்.
ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது தாயையும், நண்பர்களையும் பராமரிக்க இயலாதவனாக நான் இருப்பதைவிட எது துயர்நிறைந்ததாக இருக்க முடியும்?
ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, காசி, பாஞ்சாலம், சேதி, மத்ஸ்ய நாட்டவர்களை எனது கூட்டாளிகளாகவும், {கிருஷ்ணனான} உன்னை எனது பாதுகாவலனாகவும் கொண்டிருக்கும் நான், அவிஸ்தலம், விருகஸ்தலம், மாகந்தீ, வாரணாவதம், மேலும் ஏதாவது ஒன்றை ஐந்தாவதாகவும் என ஐந்து கிராமங்களை மட்டுமே வேண்டினேன். "ஓ! ஐயா, நாங்கள் பாரதர்களின் அழிவை விரும்பவில்லை. நாங்கள் ஒற்றுமையாக வசிக்கத்தக்க வகையில் எங்களுக்கு ஐந்து கிராமங்களையாவது நகரங்களையாவது கொடும்" என்றே கேட்டேன். எனினும், தீய மனம் படைத்த திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, உலகத்தின் தலைமைத்தன்மையைக் கருதி அதைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். இதை விட வேறு எது துயர் நிறைந்ததாக இருக்கக்கூடும்?
ஒரு மதிப்புமிக்கக் குடும்பத்தில் பிறந்து, அங்கேயே வளர்க்கப்பட்ட ஒரு மனிதன், பிறரின் உடைமைகளைக் கவர்ந்தால், அந்தப் பேராசையே அவனது புத்திக்கூர்மையை அழிக்கும்; புத்திக்கூர்மை அழிந்தால், நாணம் தொலைந்து போகும்; வெட்கமற்றுப் போனால் அறம் குறைய வழிவகுக்கும்; அறத்தின் இழப்பு, செழிப்பின் இழப்பைக் கொண்டுவரும்; செல்வத்தின் அழிவு ஒரு மனிதனை நிர்மூலமாக்கும். ஏனெனில், வறுமையே ஒரு மனிதனின் மரணமாகும். மலர்களோ, கனிகளோ அற்ற மரத்தைப் பறவைகள் தவிர்ப்பது போல, உறவினர்களும், நண்பர்களும், அந்தணர்களும் ஒரு ஏழையைத் தவிர்க்கிறார்கள்.
இறந்த உடலைவிட்டு விலகும் உயிர்மூச்சைப் போல, என்னை விழுந்தவனாகக் கருதி இப்படி உறவினர்கள் என்னை ஒதுக்குவதும் என்னுடைய மரணத்தைப் போன்றதே. "இன்று எனக்கு இறைச்சி இல்லை, நாளை எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற எண்ணத்துடனேயே எப்போதும் துயர்த்தில் இருக்கும் ஒருவனின் வாழ்நிலையைவிடத் துயர்மிகுந்தது எதுவும் இல்லை என்று சம்பரன் சொன்னான். செல்வமே உயர்ந்த அறம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அனைத்தும் செல்வத்தைச் சார்ந்தே உள்ளது. செல்வமுள்ளவரே உயிரோடு இருப்பவராவர். அதேவேளையில் செல்வமற்றவர்களோ உயிரோடிருப்பினும் இறந்தவர்களே ஆவர்" என்றான் {யுதிஷ்டிரன்}.
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தான், "வன்முறையுடன் ஒரு மனிதனின் செல்வத்தைத் திருடுபவர்கள், அவனைத் திருடுவது மட்டுமல்ல, அவனது அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றையும் அழிக்கின்றனர். வறுமையால் பீடிக்கப்படும் சில மனிதர்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; பிறர் நகரங்களை விட்டு விலகி கிராமங்களுக்குச் செல்கின்றனர், பிறரோ காட்டுக்கே சென்றுவிடுகிறார்கள்; மேலும் சிலரோ தங்கள் வாழ்வை அழித்துக் கொண்டு பிச்சைக்காரர்களாகிவிடுகிறார்கள் {they become religious mendicants}. சிலர் {பறிபோன} அந்தச் செல்வத்தின் காரணமாகப் பைத்தியக்காரர்களாகி விடுகிறார்கள்; பிறர் செல்வத்திற்காகப் பகைவர்களுக்கு அடங்கி அவர்களின் கீழ் வாழ்கிறார்கள்; மேலும் பலர், பிறருக்குத் தங்களை அடிமையாக்கிக் கொள்கிறார்கள்.
ஒரு மனிதனின் வறுமை, மரணத்தைவிடத் துயர்நிறைந்ததாகும். ஏனெனில், அறத்திற்கும், இன்பத்திற்கும் காரணமாக இருப்பது அந்தச் செல்வமே. ஒரு நபரின் இயற்கை மரணம் பெரிதாக மதிக்கப்படுவதில்லை. ஏனெனில், அதுவே அனைத்து உயிர்களின் நிலையான பாதையாகும். உண்மையில், படைக்கப்பட்ட உயிரினங்களில் எதுவும் இதை மீற முடியாது. ஓ! கிருஷ்ணா, முன்பொரு சமயம் பெரும் செழிப்போடு இருந்து, ஆடம்பரமாக வளர்க்கப்பட்டு, அந்தச் செழிப்பை இழந்தவன் அடையும் துன்பத்தைப் போலப் பிறப்பில் இருந்தே ஏழையாக இருக்கும் ஒரு மனிதன் பெரிதான துன்பத்தை அடைவதில்லை. தனது சொந்த தவறால் துயரில் விழுந்த ஒரு மனிதன் இந்திரனோடு சேர்ந்த தேவர்களையும் தன்னையும் பழித்துக் கொள்கிறான். [1]
[1] தேவர்களைப் பழிக்கிறான். தன்னைப் பழித்துக் கொள்வதில்லை என்பதே இங்குச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அப்படித்தான் வேறு பதிப்புகளில் இருக்கின்றன. ஆனால் இங்கே "Having through his own fault fallen into distress, such a person blameth the very gods with Indra and his own self. " என்றே கங்குலி சொல்கிறார்.
உண்மையில், முழுமையான சாத்திரங்களின் அறிவுகூட அவனது வலிகளைத் தணிக்க இயலாமல் தோல்வியுறுகின்றன. சில நேரங்களில் அவன் தனது பணியாட்களிடம் கோபம் கொள்கிறான். சில நேரங்களிலோ அவன் தனது நலன் விரும்பிகளுக்குக் கூடத் தீமை செய்துவிடுகிறான். தொடர்ச்சியாகக் கோபத்துக்குள்ளாகி, தனது புலனறிவை இழந்து, அறிவு மறைக்கப்பட்டுத் தீச்செயல்களைப் புரிகிறான். தனது பாவம் நிறைந்த தன்மையால், அத்தகு மனிதன், சங்கரத்துக்குப் {சாதிக் கலப்புக்குப்} பங்களிக்கிறான். சங்கரம் என்பது நரகத்திற்கு இட்டுச் செல்வதாகும். அதுவே {சாதிக் கலப்பே} பாவம் நிறைந்த செயல்களில் முதன்மையானதுமாகும்.
காலத்தில் அவன் விழிப்படையச் செய்யப்படவில்லையெனில், ஓ! கிருஷ்ணா, அவன் நரகத்திற்குச் செல்வது நிச்சயம். உண்மையில், ஞானம் மட்டுமே அவனை விழிப்படையச் செய்யவல்லது. ஞானக்கண்ணை மீண்டும் பெற்றால், அவன் காக்கப்படுவான். ஞானம் மீட்கப்பட்டால், அவன் சாத்திரங்களில் தனது கவனத்தைச் செலுத்துவான். சாத்திரங்களின் கவனிப்பு, அவனது அறத்திற்கு உதவுகிறது. பிறகு, நாணமே அவனது சிறந்த ஆபரணமாகிறது. நாணமுடையவன் பாவத்திற்கு எதிராக ஒரு வெறுப்பை அடைகிறான். அவனது செழிப்பு அதிகரிக்கிறது; செழிப்பை அடைந்தவன் உண்மையில் மனிதனாகிறான்.
எப்போதும் அறத்திற்கு அர்ப்பணிப்போடு இருந்து, மனதைத் தனது கட்டுக்குள் வைத்து, சிந்தித்த பிறகு செயல்படும் ஒருவன், அறமற்றதை {மறத்தை} ஒருபோதும் செய்வதில்லை. மேலும் அவன் எந்தவித பாவகரச் செயலிலும் ஒருபோதும் ஈடுபடுவதில்லை. நாணமும் அறிவும் அற்ற ஒருவன் ஆணுமல்லாமல் பெண்ணுமல்லாதவனாக இருக்கிறான். சூத்திரனைப் போல, அவன் அறத்தகுதியை ஈட்ட இயலாதவனாக இருக்கிறான். நாணமுடையவன், தேவர்களையும், பித்ருக்களையும், ஏன் தனது சுயத்தையும் கூட நிறைவுகொள்ளச் செய்கிறான். இதனால் அவன் மோட்சத்தை அடைகிறான். உண்மையில், இதுவே நல்ல மனிதர்கள் அனைவரின் உயர்ந்த குறிக்கோளுமாகும்.
ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, இவை அனைத்தையும் என்னிடம் உனது கண்களாலேயே கண்டிருக்கிறாய். நாட்டை இழந்து நாங்கள் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தது நீ அறியாததல்ல. (எங்களுடையதாயிருந்த) செழிப்பை {செல்வங்களை} நியாயப்படி நாங்கள் கைவிட முடியாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, நாங்களும் கௌரவர்களும் சமாதானத்துடன் ஒன்றுபட்டு, எங்கள் செழிப்பை அமைதியாக அனுபவிப்பதே எங்கள் முதல் முயற்சியாக இருக்கும்.
இல்லையென்றால், ஓ! கிருஷ்ணா, எங்களுடன் உறவு கொண்ட இழிவான எதிரிகளை இரத்தம் சிந்த வைத்து அழித்து வெல்வது என்பது கடுமையான செயல்களிலும் மோசமானது என்றாலும், கௌரவர்களில் இழிந்தவர்களைக் கொன்று, அந்தப் பகுதிகளை மீட்க வேண்டியிருக்கும். எண்ணற்ற உறவினர்களையும், எண்ணற்ற மரியாதைக்குரிய மூத்தவர்களையும் இத்தரப்பிலோ, அத்தரப்பிலோ நாங்கள் கொண்டிருக்கிறோம். இவர்களையெல்லாம் கொல்வது பெரும் பாவமே ஆகும். எனவே, போரில் என்ன நன்மை இருக்கிறது?
ஐயோ, அத்தகு பாவகரச் செயல்கள் க்ஷத்திரிய வகையின் கடமைகளாக இருக்கின்றனவே! இந்த இழிந்த {க்ஷத்திரிய} வகையிலல்லவா நாங்கள் எங்கள் பிறப்பை அடைந்திருக்கிறோம். அச்செயல்கள் பாவகரமாக இருந்தாலும், அறம்சார்ந்ததாக இருந்தாலும், ஆயுதமேந்தும் தொழிலைத் தவிர வேறு தொழில் எங்களுக்கு நிந்திக்கத்தக்கதே. ஒரு சூத்திரன் பணி செய்கிறான்; ஒரு வைசியன் வணிகத்தால் வாழ்கிறான்; பிராமணன் (பிச்சை எடுப்பதற்காக) மரப்பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறான், நாங்களோ {க்ஷத்திரியர்களோ} படுகொலையால் வாழ்கிறோம்!
மீனானது {மற்றொரு} மீனை உண்டு வாழ்கிறது; ஒரு நாய் {மற்றொரு} நாயை இரையாகக் கொள்கிறது; அதே போல ஒரு க்ஷத்திரியன் {மற்றொரு} க்ஷத்திரியனைக் கொல்கிறான்! ஓ! தாசார்ஹ குலத்தவனே {கிருஷ்ணா}, ஒவ்வொருவரும் தனது வினோதமான அறத்தை எப்படிப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பார். ஓ! கிருஷ்ணா, போர்க்களங்களில் கலி எப்போதும் இருக்கிறான்; சுற்றிலும் உயிர்கள் கொல்லப்படுகின்றன. கொள்கை மூலம் கட்டுப்படுத்தப்படும் பலம் தூண்டப்படுகிறது என்பது உண்மையே; இருப்பினும் வெற்றியும் தோல்வியும் போட்டியாளர்களின் விருப்பங்களால் ஆவதில்லையே.
உயிரினங்களின் உயிர்களும் அவற்றின் விருப்பங்களைச் சாராமலே இருக்கின்றன. ஓ! யது குலத்தில் சிறந்தவனே {கிருஷ்ணா}, அதுஅதற்கான நேரம் அமையவில்லையெனில், இன்பமோ, துன்பமோ ஒருவனைச் சாராது. சில நேரங்களில் ஒரு மனிதன் பலரைக் கொல்கிறான், சில நேரங்களில் பலர் ஒன்றாகக் கூடி ஒருவனைக் கொல்கின்றனர். ஒரு கோழை, ஒரு வீரனைக் கொல்லலாம், புகழற்ற ஒருவனும் கூடப் புகழ்வாய்ந்த ஒரு வீரனைக் கொன்றுவிடலாம். இருதரப்பும் வெல்ல முடியாது. அதே போல, இரண்டும் தோற்கவும் முடியாது. எனினும், இருதரப்பின் இழப்பும் சமமாக இருக்கலாம்.
புறமுதுகிட்டு ஓடுபவன், தனது உயிர் மற்றும் புகழ் ஆகிய இரண்டையும் இழக்கிறான். எனினும், அனைத்துச் சூழ்நிலைகளிலும், போர் என்பது பாவமே. அடுத்தவனை அடிக்கும் எவன் தானே அடிபடாமல் இருக்கிறான்? ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அடிப்பட்ட மனிதனைப் பொறுத்தவரை, வெற்றியும் தோல்வியும் சமமானதே. தோல்வி என்பது மரணத்தைக் காட்டிலும் வேறில்லை. ஆனால், ஓ! கிருஷ்ணா, தோற்றவனின் இழப்பைவிட வென்றவனின் இழப்பு குறைந்ததில்லை. தானே கொல்லப்படவில்லை ஆயினும், தனது அன்பிற்குரிய ஒருவனையோ, வேறு ஒருவனையோ அவனது பகைவர்கள் கொல்ல நேரிடும். ஓ ஐயா {கிருஷ்ணா}, அதனால், அந்த மனிதன் தனது பலத்தை இழந்து, தனது மகன்களையும், சகோதரர்களையும் தன் முன்னிலையில் காணாத அவன், ஓ! கிருஷ்ணா, தன் வாழ்வையே வெறுக்கிறான்.
அமைதியாக, பணிவாக, அறம்சார்ந்தவனாக, கருணையுள்ளவனாக இருப்பவர்களே, போர்க்களங்களில் பொதுவாகக் கொல்லப்படுகிறார்கள். அதேவேளையில், தீயவர்களோ தப்பிவிடுகிறார்கள். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, ஒருவன் தனது எதிரிகளைக் கொன்ற பிறகும் கூட, வருத்தம் அவனது இதயத்தைப் பீடிக்கிறது. எதிரிகளில் பிழைப்பவன் தொல்லை கொடுக்கிறான். ஏனெனில், அப்படிப் பிழைத்திருப்பவன், ஒரு படையைத் திரட்டி, பிழைத்திருக்கும் வெற்றியாளனை அழிக்கை முயல்கிறான். சச்சரவை முடிக்கும் நம்பிக்கையில் ஒருவன் தனது எதிரியை அழிக்க அடிக்கடி முயல்கிறான். இப்படியே வெற்றி பகையை உண்டாக்கிறது. தோற்றவனோ சோகத்துடன் வாழ்கிறான்" என்றான் {யுதிஷ்டிரன்}.
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} தொடர்ந்தான், "அமைதி நிறைந்தவன், வெற்றி மற்றும் தோல்வி குறித்த எண்ணங்களையெல்லாம் துறந்து மகிழ்ச்சியாக உறங்குகிறான். அதேவேளையில், பகையால் தூண்டப்பட்டவனோ, பாம்புடன் ஒரே அறையில் உறங்குவதைப் போல, கவலை நிறைந்த இதயத்துடன் எப்போதும் துக்கத்துடனேயே உறங்குகிறான். அழிப்பவன் மிக அரிதாகவே புகழை வெல்கிறான். மறுபுறம், அத்தகு மனிதன், அனைவரின் மதிப்பீட்டின்படி நிலைத்த புகழ் கேட்டை {அபகீர்த்தியை} அடைகிறான். நீண்டகாலம் பாராட்டப்படும் பகைமை ஒழிவதில்லை; ஏனெனில், எதிரியின் குடும்பத்தில் ஒருவன் உயிரோடு இருந்தாலும், அவனுக்குக் கடந்த காலத்தை விவரிக்க உரை நிகழ்த்துபவர்கள் {கதைசொல்லிகள்} எப்போதும் தேவையில்லை.
ஓ! கேசவா {கிருஷ்ணா}, பகையைப் பகையால் சமன் செய்ய எப்போதும் முடியாது; மறுபுறம், தெளிந்த நெய்யால் தூண்டப்படும் நெருப்பு போல, பகை தூண்டிவிடப்படுகிறது. எனவே, ஒரு தரப்பு நிர்மூலமடையாமல் சமாதானத்தை எட்ட முடியாது {அமைதி ஏற்படாது}. ஏனெனில், ஒரு தரப்பு மற்றொரு தரப்பின் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கான {அந்த மற்றொரு தரப்பின்} குறைகளை எப்போதும் கண்டுபிடிக்கும். குறைகாண்பதில் ஈடுபடுபவர்கள் இந்தத் தீயொழுக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். {குறை காண்பது தீயொழுக்கமே}.
தன் சொந்த ஆற்றல் குறித்த ஒருவனின் தன்னம்பிக்கை அவனது இதயத்தின் ஆழத்தில் குணப்படுத்த முடியாத நோயாக இருந்து தொல்லை கொடுக்கிறது. அதை உடனே கைவிடவில்லை என்றாலோ, {அம்மனிதனுக்கு} மரணம் ஏற்படவில்லை என்றாலோ, அங்கே அமைதி ஏற்பட முடியாது.
ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பகைவரை அவர்களது வேர் வரை அழிப்பது, பெரும் செழிப்பெனும் வடிவில் நல்ல விளைவுக்கு வழிவகுத்தாலும், அத்தகு செயல் மிகவும் கொடூரமானதே. நாங்கள் நாட்டைத் துறப்பதால் அடையப்படும் அமைதி, மரணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எதிரியின் வடிவமைப்பு மற்றும் எங்களது அப்பட்டமான அழிவு ஆகியவற்றின் விளைவால் ஏற்படும் அந்த நாடு இழப்பு, எங்கள் மரணத்தையே குறிக்கிறது. நாங்கள் எங்கள் நாட்டையும் கொடுக்க விருப்பவில்லை, எங்கள் குலம் அழிவதைக் காணவும் விரும்பவில்லை.
எனவே, இந்தச் சூழ்நிலையில், அவமானத்தின் மூலம் கூட முன்னதாகவே பெறப்படும் சமாதானம் சிறந்ததாகவே இருக்கும். போரை விரும்பாமல், அனைத்து வழிகளிலும் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளும் இவர்களின் சமரசங்கள் தோல்வியில் முடிந்தால், போர் தவிர்க்க முடியாததாக ஆகும். அதன் பிறகு வீரத்தை வெளிப்படுத்தும் நேரம் வரும். உண்மையில், சமரசம் தோற்றால், பயங்கர விளைவுகளே பின்தொடரும்.
கற்றோர், இவையனைத்தையும் நாய்ச்சண்டையில் கவனித்திருக்கின்றனர். முதலில், வாலாட்டுதல், பிறகு குரைத்தல், பிறகு பதிலுக்குக் குரைத்தல், பிறகு வலம் வருதல், பிறகு பற்களைக் காட்டுதல், பிறகு திரும்பத் திரும்ப உறுமுதல், கடைசியாகச் சண்டையிடுதல். ஓ! கிருஷ்ணா, அத்தகு சண்டையில், தனது எதிரியை வீழ்த்தும் வலிய நாய், பின்னதன் {வீழ்ந்த நாயின்} இறைச்சியை எடுத்துக் கொள்ளும். சரியாக மனிதர்களின் வழக்கிலும் இதே தான் நடக்கிறது. எந்தவித வித்தியாசமும் இல்லை. சக்திவாய்ந்தவர்கள், எப்போதும் பணிந்து நிற்கும் பலவீனர்களிடம் சச்சரவுகளைத் தவிர்த்து, அவற்றை அலட்சியம் செய்ய வேண்டும். தந்தை, மன்னன், வயது முதிர்ச்சியால் மதிக்கத்தக்கவர்கள் ஆகியோர் எப்போதும் மரியாதைக்குகந்தவர்கள் ஆவர். எனவே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர், எங்கள் மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் தகுந்தவரே. ஆனால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, திருதராஷ்டிரர் தனது மகன் மீது கொண்ட பாசம் பெரிதாக இருக்கிறது. தனது மகனுக்குக் {துரியோதனனுக்குக்} கீழ்ப்படியும் அவர் {திருதராஷ்டிரர்}, நமது வணக்கத்தை மறுதலிப்பார். ஓ! கிருஷ்ணா, இச்சந்தர்ப்பத்தில் எது சிறந்ததென நீ நினைக்கிறாய்?
ஓ! மாதவா, எங்கள் பொருள் மற்றும் அறம் ஆகிய இரண்டையும் நாங்கள் எவ்வாறு பாதுகாக்க முடியும்? ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, மனிதர்களில் முதன்மையானவனே, இக்கடினமான விவகாரத்தை உன்னைத் தவிர வேறு யாருடன் நாங்கள் ஆலோசிக்க முடியும்? ஓ! கிருஷ்ணா, எங்களிடம் அன்பாகவும், எங்கள் நன்மைக்கு முயல்பவனாகவும், அனைத்து செயல்படுவழிகளையும் அறிந்தவனாகவும், உண்மையை {சத்தியத்தை} நன்கு அறிந்தவனாகவும் உன்னைப்போல வேறு எந்த நண்பன் எங்களுக்கு இருக்கிறான்?" என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, நீதிமானான யுதிஷ்டிரனிடம், "உங்கள் இருவருக்காகவும் {பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்காவும்}, நான் குருக்களின் {கௌரவர்களின்} சபைக்குச் செல்வேன். உங்கள் விருப்பங்களைத் தியாகம் செய்யாமல் என்னால் அமைதியை எட்ட முடியுமென்றால், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் பலன்களைத் தரவல்ல தகுதியுடைய ஒரு பெரும் அறச்செயல் எனதாகும். குருக்கள் {கௌரவர்கள்}, கோபத்தால் எரிந்து கொண்டிருக்கும் ஸ்ருஞ்சயர்கள், பாண்டவர்கள், திருதராஷ்டிரர்கள், ஏன், உண்மையில் இந்த முழு உலகையும் கூட மரண வலையில் இருந்து காத்தவனாவேன்" என்று பதிலுரைத்தான் {கிருஷ்ணன்}.
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "நீ துரியோதனனுக்கு நல்லதை அறிவுறுத்தினாலும், உனது வார்த்தைகளுக்கு ஏற்ப அவன் செயல்படவே மாட்டான். குருக்களிடம் {கௌரவர்களிடம்} நீ செல்வதை நான் விரும்பவில்லை. துரியோதனனின் ஆணைக்குக் கீழ்ப்படியும் இவ்வுலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவரும் அங்கே கூடியிருக்கிறார்கள். ஓ! கிருஷ்ணா, நீ அவர்களுக்கு மத்தியில் செல்வதை நான் விரும்பவில்லை. உனக்கு ஏதாவது குறைவு {அங்கே} உண்டாகுமானால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, இன்பம் என்ன? அதன்மூலமாகக் {உனக்கு ஏற்படும் குறைவால் எங்களுக்குக்} கிடைக்கும் தெய்வீகத்தன்மையும், தேவர்களின் அரசுரிமையும் கூட எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது" என்றான் {யுதிஷ்டிரன்}.
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} பாவம் நிறைந்த தன்மையை நான் அறிவேன். ஆனால், அங்கே செல்வதால், பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரின் பழிச்சொல்லிலிருந்தும் நாம் தப்புவோம். சிங்கத்தின் முன்னிலையில் பிற விலங்குகளைப் போல, பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரும் கூடி வந்தாலும் கூட, கோபத்தில் இருக்கும் என்னிடம் போரில் நிலைத்து நிற்க முடியாது. அவர்கள் எனக்கு ஏதாவது தீங்கைச் செய்தார்களெனில், நான் குருக்கள் அனைவரையும் எரித்துவிடுவேன். இதுவே எனது நோக்கம். ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, அங்கே நான் செல்வது கனியற்றதாகாது. ஏனெனில், நமது நோக்கம் நிறைவேறவில்லை என்றாலும் கூட, நாம் அனைத்துப் பழிகளில் இருந்தும் தப்பலாம்" என்றான் {கிருஷ்ணன்}.
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! கிருஷ்ணா, நீ விரும்புவதைச் செய். நீ அருளப்பட்டிரு. குருக்களிடம் {கௌரவர்களிடம்} செல். வெற்றியோடும், செழிப்போடும் நீ திரும்பவதைக் காண்பேன் என நான் நம்புகிறேன். ஓ! தலைவா {கிருஷ்ணா}, பரதனின் மகன்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடனும், மனநிறைவுடனும் ஒன்றாகச் சேர்ந்து வாழும்படிக்குக் குருக்களிடம் சென்று அமைதியை நிலைநாட்டுவாயாக. நீ எங்களுக்குச் சகோதரனும், நண்பனுமாவாய். பீபத்சுவைப் {அர்ஜுனனைப்} போல, நீ எனது அன்புக்குரியவனுமாவாய். உன்னிடம் இருக்கும் எங்களுக்கான ஆர்வத்தைப் புறக்கணிக்க மாட்டோம். உன்னிடம் நாங்கள் அவ்வளவு நெருக்கத்தைக் கொண்டுள்ளோம்.
நீ எங்களையும் அறிவாய், எங்கள் பகைவரையும் அறிவாய். எங்கள் காரியங்கள் என்ன என்பதை நீ அறிவாய், என்ன பேச வேண்டும் என்பதையும் நீ அறிவாய். ஓ! கிருஷ்ணா, எங்களுக்கு நன்மை தரக்கூடிய வார்த்தைகளை நீ சுயோதனனிடம் {துரியோதனனிடம்} பேசுவாயாக. (வெளிப்படையான) பாவத்தாலோ, வேறு எந்தப் பிற வழிகளிலோ அமைதி நிறுவப்பட்டாலும், ஓ! கேசவா {கிருஷ்ணா}, நமது நன்மைக்கு வழிகோலும் வார்த்தைகளையே பேசுவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "நான் சஞ்சயரின் வார்த்தைகளைக் கேட்டேன். இப்போது உம்முடையவற்றையும் கேட்டேன். அவரது {சஞ்சயரின்} நோக்கங்களையும் உம்முடையவற்றையும் குறித்த அனைத்தையும் நான் அறிவேன். உமது இதயம் அறத்தை நோக்குகிறது, அதே வேளையில் அவர்களது {கௌரவர்களது} இதயமோ பகைமையை நோக்கி இருக்கிறது. போரில்லாமல் கிடைக்கும் எதுவும் உமக்கு மதிப்பு மிக்கதே.
ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, நீண்ட நாள் பிரம்மச்சாரியாக இருப்பது க்ஷத்திரியனின் கடமையாகாது. உண்மையில், க்ஷத்திரியர்கள் பிச்சையால் தங்களைத் தாங்கிக் கொள்ளக்கூடாது என்றே நான்கு வகைகளைச் சேர்ந்த மனிதர்களும் சொல்லியிருக்கின்றனர். போர்க்களத்தில் வெற்றி அல்லது மரணம் என்பது படைப்பாளனால் நிலையானதாக விதிக்கப்பட்டுள்ளது; அதுவே க்ஷத்திரியனின் கடமையும் கூட. (க்ஷத்திரியரில்) கோழைத்தனம் மெச்சத்தகுந்ததல்ல. ஓ! யுதிஷ்டிரரே, ஓ! வலிய கரங்கள் கொண்டவரே, கோழைத்தனத்தால் வாழ்வாதாரம் சாத்தியமல்ல. உமது வீரத்தை வெளிப்படுத்தி, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, உமது எதிரிகளை வீழ்த்துவீராக.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, திருதராஷ்டிரரின் பேராசை கொண்ட மகன் {துரியோதனன்}, (பல மன்னர்களுடன்) நீண்ட காலம் வாழ்ந்ததால், {அவர்களுடன் ஏற்பட்ட} பாசத்தாலும் நட்பாலும் மிகுந்த பலவானாகி விட்டான். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உம்முடன் அவன் {துரியோதனன்} சமாதானம் கொள்வான் என்பதில் {எனக்கு} நம்பிக்கையே இல்லை. பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் பிறர் தங்களோடு இருப்பதால், அவர்கள் {கௌரவர்கள்} தங்களைப் பலவான்களாகக் கருதுகிறார்கள்.
ஓ! மன்னா, ஓ! எதிரிகளை வாட்டுபவரே {யுதிஷ்டிரரே}, நீர் எவ்வளவு காலம் அவர்களோடு மென்மையாகப் பழகுகிறீரோ, அவ்வளவு காலம் உமது நாட்டை அவர்களே வைத்துக் கொள்வர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, {நீர் காட்டும்} கருணையாலோ, மென்மையாலோ, நீதியுணர்வின் காரணத்தாலோ, திருதராஷ்டிரர் மகன்கள் உமது விருப்பங்களை நிறைவேற்ற மாட்டார்கள்.
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அவர்கள் உம்மோடு சமாதானம் செய்ய மாட்டார்கள் என்பதற்கு இது மற்றுமொரு சாட்சியாகும். உம்மைக் கோவணத்துடன் {Kaupina} தள்ளி, உமக்கு ஆழ்ந்த வலியை உண்டாக்கிய அவர்கள் {கௌரவர்கள்}, அதற்காக வருத்தமடையவில்லை. ஈகை, மென்மை, சுயக்கட்டுபாடு, அறம், கடும் நோன்புகள் ஆகியவற்றைக் கொண்ட உம்மை, பாட்டன் {பீஷ்மர்}, துரோணர், ஞானியான விதுரர், மற்றும் பல புனிதமான அந்தணர்கள், மன்னன் {திருதராஷ்டிரர்}, குடிமக்கள் மற்றும் கௌரவர்களில் முக்கியத் தலைவர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஏமாற்றுகரமாகப் பகடையில் வீழ்த்திய கொடூரனான துரியோதனன், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} தனது அந்தத் தீயச் செயலுக்காக வெட்கப்படவில்லையே.
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இத்தகு மனநிலை கொண்ட அந்த இழிந்தவனுக்கு {துரியோதனனுக்கு} நீர் எந்த இரக்கத்தையும் காட்டாதீர். அனைவரின் கைகளாலும் மரணத்தைப் பெற அவர்கள் தகுந்தவர்களே எனும்போது, ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, உம்மால் கொல்லப்பட அவர்கள் எவ்வளவு தகுந்தவர்கள்? ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, மகிழ்ச்சியுடன் பல தற்பெருமைப் பேச்சுகளில் ஈடுபட்டவனும், தனது தம்பிகளுடன் கூடியவனுமான துரியோதனன், எப்படிப்பட்ட முறையற்ற பேச்சுகளால் உம்மையும் உமது தம்பிகளையும் துன்புறுத்தினான்?
அவன் {துரியோதனன்}, "இந்தப் பரந்த பூமியில் இப்போது பாண்டவர்கள் தங்களுக்கென்று எதையும் கொண்டிருக்கவில்லை. அவர்களது {பாண்டவர்களது} குலமும் பெயர்களும் கூட அழிந்து போகும். முடிவிலா காலத்தில், தோல்வி மட்டுமே அவர்களுடையதாகும். அவர்களது அறங்கள் அனைத்தும் என்னில் கலந்து, ஐம்பூதங்களாக அவர்கள் குறைக்கப்பட்டுவிட்டனர்." என்று சொன்னான்.
பகடையாட்டம் நடந்து கொண்டிருந்த போது, பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரின் முன்னிலையில், தீய ஆன்மா கொண்ட இழிந்தவனான துச்சாசனன், பாதுகாப்பற்ற ஒருத்தியைப் போல, அழுது கொண்டிருக்கும் மங்கையான திரௌபதியின் கூந்தலைப் பற்றி மன்னர்களின் சபைக்கு இழுத்து வந்து, மீண்டும் மீண்டும் அவளை {திரௌபதியை} "மாடே, மாடே" என்று அழைத்தான். பயங்கர ஆற்றல்படைத்த உமது சகோதரர்கள், உம்மால் தடுக்கப்பட்டு, அறத்தின் கட்டுகளுக்குக் கட்டுப்பட்டு, பழிதீர்க்க எதுவும் செய்யவில்லை; அதன் பிறகு, நீங்கள் காட்டிற்கு நாடுகடத்தப்பட்ட பிறகும், தனது உறவினர்களுக்கு மத்தியில் இத்தகு வார்த்தைகளையும், மேலும் கொடும் வார்த்தைகளைச் சொல்லி, துரியோதனன் தற்பெருமை பேசினான்.
நீர் {குற்றமற்ற) அப்பாவி என்பதை அறிந்தும், அங்கே கூடியிருந்தவர்கள் அந்தச் சபாமண்டபத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு அடைபட்ட குரலுடன் அழுது கொண்டிருந்தார்கள். அந்தணர்களோடு அங்கே கூடியிருந்த மன்னர்கள் இதற்காக அவனை {துரியோதனனை} மெச்சவில்லை. உண்மையில், அங்கே இருந்த சபை உறுப்பினர்கள் அனைவரும் அவனை {துரியோதனனை} நிந்திக்கவே செய்தனர்.
ஓ! எதிரிகளை வாட்டுபவரே {யுதிஷ்டிரரே}, நற்குலத்தில் பிறந்தவனுக்கு நிந்தனையே கூட மரணமாகும். பழி நிறைந்த வாழ்வை வாழ்வதை விட மரணமே பல மடங்கு சிறந்ததாகும். பூமியின் மன்னர்கள் அனைவராலும் நிந்திக்கப்பட்டும், வெட்கமடையாத அவன் {துரியோதனன்}, அப்போதே இறந்துவிட்டான். தனது குணத்தை இவ்வளவு அருவருக்கத்தக்கதாக அமைத்துக் கொண்ட ஒருவன், ஒரே பலவீனமான வேரில் நிமிர்ந்து நிற்கும் வேரற்ற மரத்தைப் போல எளிதில் அழிவடைவான். பாவம் நிறைந்த, தீய மனம் படைத்த துரியோதனன், பாம்பைப் போல அனைவர் கையாலும் சாகத் தகுந்தவனாவான். எனவே, எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அவனை {துரியோதனனைக்} கொன்றுவிடும். சற்றும் தயங்காதீர்.
ஓ! பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, உமது தந்தையான திருதராஷ்டிரருக்கும், பீஷ்மருக்கும் நீர் மரியாதை செலுத்துவதை நானும் விரும்புகிறேன், உமக்கும் அது தகும். துரியோதனனின் தீமைகளைக் குறித்து முடிவெடுக்க முடியாமல் இருக்கும் மனிதர்களின் சந்தேகங்கள் அனைத்தையும் நான் அங்கே {ஹஸ்தினாபுரம்} சென்று நீக்கிவிடுவேன். அங்கே, நான், மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும், அனைத்து மனிதர்களிடமும் காண முடியாதவையும், உம்மில் இருப்பவையுமான அறங்கள் அனைத்தையும், மேலும், துரியோதனனின் தீமைகள் அனைத்தையும் பட்டியலிடுவேன்.
அறம் மற்றும் பொருள் நிறைந்த நல்ல வார்த்தைகளை நான் பேசுவதைக் கேட்கும் பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்கள், {யுதிஷ்டிரனாகிய} உம்மை, அறம்சார்ந்த ஆன்மா கொண்டவராகவும், உண்மையைப் பேசுபவராகவும் கருதுவார்கள். அதே வேளையில், துரியோதனன் எவ்வளவு பேராசை கொண்டவன் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். அங்கே கூடியிருக்கும் குடிமக்கள் மற்றும் அந்த நாட்டில் வசிப்பவர்கள் ஆகிய இருவரிடமும், இளையவர் மற்றும் முதியவர் ஆகிய இருவரிடமும், நால் வகை மக்கள் அனைவரிடமும், துரியோதனனின் தீமைகளை எடுத்துச் சொல்வேன்.
நீர் சமாதானத்தைக் கேட்பதால் யாரும் உம்மைப் பாவம் நிறைந்தவன் என்று குற்றஞ்சாட்டமாட்டார்கள். அதே வேளையில், பூமியின் தலைவர்கள் அனைவரும் குருக்களையும் {கௌரவர்களையும்}, திருதராஷ்டிரரையும் நிந்திப்பார்கள். மனிதர்கள் அனைவராலும் கைவிடப்பட்டதன் விளைவால் துரியோதனன் கொல்லப்பட்டால், மேற்கொண்டு செய்வதற்கு எதுவும் இருக்காது. எனவே, செய்ய வேண்டியதை இப்போதே செய்வீராக.
குருக்களிடம் {கௌரவர்களிடம்} சென்று, உங்கள் விருப்பங்களைத் தியாகம் செய்யாமல் அமைதியேற்படுத்த முயன்று, அவர்களது போர் எண்ணத்தையும், அவர்களது ஏற்பாடுகளையும் குறித்துக் கொண்டு, ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, உமது வெற்றிக்காக நான் விரைந்து வருவேன். எதிரியிடம் போர் நிச்சயம் என்றே நான் நினைக்கிறேன். நான் காணும் சகுனங்கள் அனைத்தும் அதையே குறிக்கின்றன. முன்னிரவு நேரத்தில், பறவைகளும், விலங்குகளும் பயங்கமாக அலறுகின்றன. யானைகள் மற்றும் குதிரைகளில் முதன்மையாவை கொடூர உருவங்களைக் கொள்கின்றன. நெருப்பே கூடப் பல்வேறு வகைகளில் பயங்கர வண்ணங்களை வெளிப்பட்டுத்துகின்றன! உலகத்தை அழிக்கப்போகும் பேரழிவு நமக்கு மத்தியில் வந்திருப்பதாலேயே வழக்கத்திற்கு மாறான இவற்றை நாம் காண்கிறோம்.
ஆயுதங்கள், பொறிகள், கவசங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைத் தயார் செய்தபடி உமது வீரர்கள் அனைவரும் போருக்குத் தயாராக இருக்கட்டும். அவர்கள், தங்கள் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களைக் கவனித்துக் கொள்ளட்டும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, வரப்போகும் போரில் உமக்குத் தேவையான அனைத்தையும் சேகரித்துக் கொள்ளும். துரியோதனன் எவ்வளவு காலம் வாழ்கிறானோ, அவ்வளவு காலம் அவனால் உமக்கு எவ்வழியிலும் {நாட்டைத்} திருப்பிக் கொடுக்க இயலாது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, செழிப்பு மிகுந்த உமது நாட்டை அவன் {துரியோதனன்} பகடை கொண்டு உம்மிடம் கைப்பற்றினான்" என்றான் {கிருஷ்ணன்}.
பீமன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, குருக்களிடம் அமைதியை ஏற்படுத்தும் அழுத்தத்துடன் பேசுவாயாக. போரைக் காட்டி அவர்களை அச்சுறுத்த வேண்டாம். தனது சொந்த நன்மைக்கு எதிராகவும், திமிருடனும், கோபத்தால் தூண்டப்பட்டும் அனைத்திலும் கோபம் காட்டும் துரியோதனனிடம் கடுமையாகப் பேச வேண்டாம். அவனிடம் நீ மென்மையாக நடந்து கொள்வாயாக. செழுமையின் செருக்கால் போதையுண்டிருக்கும் துரியோதனன், ஒரு திருடனைப் போல, இயல்பிலேயே பாவம் நிறைந்த இதயம் படைத்தவனும், பாண்டவர்களிடம் பகை கொண்டிருப்பவனும் ஆவான். தொலைநோக்குப் பார்வையின்றி, கொடும்பேச்சும், எப்போதும் பிறரை நிந்திக்கும் மனநிலையும், தீய ஆற்றலும், எளிதில் தணிக்கமுடியாத கோபமும் கொண்டவனாக, எளிதில் கற்பிக்கப்பட இயலாதவனாக, தீய ஆன்மாவும், ஏமாற்றுகர நடத்தையும் கொண்டவனாவான். அவன் {துரியோதனன்}, தனது கருத்தைக் கைவிடவோ, உடைக்கவோ விடாமல், அதற்காகத் {பிடிவாதமாக} தனது உயிரையே விடக்கூடியவனாவான்.
ஓ! கிருஷ்ணா, அப்படிப்பட்ட ஒருவனிடம் சமாதானம் பேசுவது மிகக் கடினமானது என நான் கருதுகிறேன். அவனின் {துரியோதனனின்} நலன்விரும்பிகளின் வார்த்தைகளைக்கூட மதிக்காமல், அறமற்று, பொய்மையை விரும்பும் அவன் {துரியோதனன்}, தனது ஆலோசகர்களின் வார்த்தைகளுக்கு எதிராகவே எப்போதும் செயல்பட்டு, அவர்களது இதயங்களைக் காயப்படுத்தி வருகிறான். புற்களுக்குள் மறைந்திருக்கும் பாம்பைப் போல, தனது சொந்த மனநிலையை ஒட்டியும், கோபத்தின் உந்துவிசைக்குக் கீழ்ப்படிந்தும், இயல்பாகவே பாவம்நிறைந்த செயல்களையே அவன் {துரியோதனன்} செய்கிறான். துரியோதனன் என்ன படையைக் கொண்டிருக்கிறான்? அவனது நடத்தை என்ன? அவனது இயல்பு என்ன? அவனது வலிமை என்ன? அவனது ஆற்றல் என்ன? ஆகிய அனைத்தையும் நீ நன்கு அறிவாய்.
இதற்கு முன்பு, கௌரவர்கள் தங்கள் மகனுடன் தங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தினார்கள். நாங்களும், எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இந்திரனின் தம்பி {விஷ்ணு}, இந்திரனோடு மகிழ்ந்திருந்ததைப் போன்று இருந்தோம். ஐயோ, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பனிக்காலத்தின் இறுதியில் நெருப்பால் எரிக்கப்படும் காடு போல, துரியோதனனின் கோபத்தால், பாரதர்கள் அனைவரும் எரிக்கப்படுவார்களே. உறவினர்களையும், நண்பர்களையும், சொந்தங்களையும் அழித்த பதினெட்டு மன்னர்களும் நன்கு அறியப்பட்டவர்களே ஆவர்.
தர்மம் {அறம்} அரிதானபோது, செழுமையில் பிரகாசித்து, சக்தியில் சுடர்விட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் குலத்தில் கலி பிறந்ததைப் போலவே, ஹைஹயர்களில் உதாவர்தனும், நீபர்களில் ஜனமேஜயனும், தாலஜங்களர்களில் பஹூளனும், கிரிமிகளில் செருக்கு நிறைந்த வசுவும், சூவீரர்களில் அஜபிந்துவும், சூராஷ்டிரர்களில் ருஷர்ததிகனும், பலீஹர்களில் அர்க்கஜனும், சீனர்களில் தௌதமூலகனும், விதேகர்களில் ஹயக்ரீவனும், மஹௌஜஸாக்களில் வரயுவும், சுந்தரர்களில் பாஹுவும், தீப்தாக்ஷர்களில் புரூரவனும், சேதி மற்றும் மத்ஸ்யர்களில் ஸஹஜனும், பிரவீரர்களில் விருஷத்வஜனும், சந்திர-வத்ஸ்யர்களில் தாரணனும், முகுடர்களில் வீகாஹனனும், நந்திவேகர்களில் சமனும் பிறந்தார்கள்.
ஓ! கிருஷ்ணா, இந்தத் தீய நபர்கள் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் தங்களுக்குரிய குலங்களில், தங்கள் உறவினர்களின் அழிவுக்காகவே பிறக்கிறார்கள். அதே போலவே, பாவத்தின் உருவமும், தனது குலத்தின் அவமானமுமான துரியோதனன், யுகத்தின் முடிவில் குருக்களான எங்கள் மத்தியில் பிறந்திருக்கிறான்.
எனவே, ஓ! கடும் ஆற்றல் கொண்டவனே {கிருஷ்ணா}, நீ அவனிடம் மெதுவாகவும், மென்மையாகவும் பேசுவாயாக. அறமும் பொருளும் நிறைந்த கசப்பில்லாத இனிய வார்த்தைகளால், அவனது இதயத்தைக் கவரும் வகையில் பேசுவாயாக. ஓ! கிருஷ்ணா, அவமதிக்கப்பட்டவர்களாகி, பணிந்த நிலையில் நாங்கள் துரியோதனனைப் பின்பற்றியே கூட நடந்து கொள்கிறோம், ஆனால் பாரதர்கள் அழிக்கப்பட வேண்டாமே.
ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, நாங்கள் குருக்களுக்கு அந்நியர்களாகவே வாழ நேர்ந்தாலும் கூட, முழுக் குலத்தையும் அழித்த பாவம் அவர்களைத் {கௌரவர்களைத்} தொடாதிருக்கட்டும். ஓ! கிருஷ்ணா, சகோதரர்களுக்கிடையில் சகோதர உணர்வுகளைக் கொண்டு வரவும், திருதராஷ்டிரர் மகனைத் {துரியோதனனை} தணிக்கவும் முதியவரான பாட்டனும் {பீஷ்மரும்}, குருக்களின் {கௌரவர்களின்} பிற ஆலோசகர்களும் கேட்டுக்கொள்ளப்படட்டும். இதுவே நான் சொல்வதாகும். மன்னன் யுதிஷ்டிரரும் இதை அங்கீகரிக்கிறார், அர்ஜுனனுன் போருக்கு எதிராகவே இருக்கிறான். ஏனெனில் அவனிடம் பெரும் கருணை இருக்கிறது" என்றான் {பீமன்}.
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment