மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-298
துரோண பர்வம்
….
கிருதவர்மனைக் கடக்க முடியாத பாண்டவர்கள்
....
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "முழுப் பாசத்தைக் கொண்டதும், ஏற்புடையதும், இனியவொலிகளால் நிரம்பியதும், மனத்திற்கு உகந்ததும், மகிழ்ச்சிகராமனதும், நியாயமானதுமான இவ்வார்தைகளை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் சொன்னதும், ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மறுமொழியாக, சிநிக்களில் காளையான அந்தச் சாத்யகி, "ஓ! மங்கா மகிமை கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நீதி நிறைந்ததும் {நியாயமானதும்}, மகிழ்ச்சிகரமானதும், பல்குனரின் {அர்ஜுனரின்} புகழுக்கு ஏற்றதுமான நீர் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் கேட்டேன். உண்மையில் இத்தகு நேரத்தில், ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, (உமக்கு) அர்ப்பணிப்புள்ள என்னைப் போன்ற ஒருவனைக் காண்கையில், பார்த்தருக்கு நீர் கட்டளையிடுவதைப் போலவே அவனுக்கும் கட்டளையிடுவதே உமக்குத் தகும். என்னைப் பொறுத்தவரை, தனஞ்சயருக்காக {அர்ஜுனருக்காக} என் உயிரையும் விட நான் தயாராக இருக்கிறேன். மேலும், நீர் கட்டளையிட்டால், இந்தப் போரில் எந்தக் காரியைத்தைத் தான் நான் செய்யமாட்டேன்? இந்தப் பலவீனமான (திருதராஷ்டிரப்) படையைக் குறித்து நான் என்ன சொல்வேன்? ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் தூண்டப்பட்டால், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மூன்று உலகங்களோடும் போரிட நான் தயாராக இருக்கிறேன்.
இன்று நான் சுயோதனனின் மொத்தப் படையுடனும் போரிட்டுப் போரில் அதை வெல்வேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். பாதுகாப்புடன் இருக்கும் தனஞ்சயரை {அர்ஜுனரை}, பாதுகாப்பாக அடையும் நான், ஓ! மன்னா, ஜெயத்ரதன் கொல்லப்பட்ட பிறகே உமது முன்னிலைக்குத் திரும்புவேன். எனினும், ஓ! மன்னா, வாசுதேவர் {கிருஷ்ணர்} மற்றும் புத்திசாலியான அர்ஜுனர் ஆகியோர் சொன்ன வார்த்தைகளைக் குறித்து நான் உமக்குச் சொல்ல வேண்டும். நமது போர்வீரர்கள் அனைவரின் மத்தியிலும், வாசுதேவர் {கிருஷ்ணர்} கேட்டுக் கொண்டிருக்கும்போது, அர்ஜுனர் என்னை உறுதியுடன் (உறுதிமிக்க இவ்வார்த்தைகளால்) மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டோர்.
{அர்ஜுனர்}, "ஓ! மாதவா {சாத்யகி}, இன்று நான் ஜெயத்ரதனைக் கொல்லும் வரை, போரில் மேன்மையான தீர்மானத்துடன் மன்னரை {யுதிஷ்டிரரைக்} கவனமாகப் பாதுகாப்பாயாக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {சாத்யகி}, உன்னிடமோ, பெரும் தேர்வீரனான பிரத்யும்னனிடமோ ஏகாதிபதியை {யுதிஷ்டிரரின் பாதுகாப்பை} ஒப்படைத்தால், கவலையற்ற இதயத்துடன் ஜெயத்ரதனை நோக்கிச் செல்வேன். குருக்களில் முதன்மையானவராகக் கருதப்படும் போர்வீரரானத் துரோணர் எவ்வாறு போரிடுவார் என்பதை நீ அறிவாய். ஓ! தலைவா {சாத்யகி}, அனைவருக்கு முன்னிலையிலும் அவர் ஏற்ற உறுதிமொழியையும் நீ அறிவாய். அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, மன்னரை {யுதிஷ்டிரரைக்} கைப்பற்ற எப்போதும் ஆவலாக இருக்கிறார். போரில் அவர் {துரோணர்}, மன்னர் யுதிஷ்டிரரைப் பீடிக்கத் தகுந்தவராவார்.
மனிதர்களில் சிறந்தவரும், நீதிமானுமான மன்னர் யுதிஷ்டிரரின் பாதுகாப்பில் உன்னை நியமித்துவிட்டு, நான் இன்று ஜெயத்ரதனை அழிக்கச் செல்வேன். ஓ! மாதவா {சாத்யகி}, ஜெயத்ரதனைக் கொன்றுவிட்டு நான் விரைவில் திரும்புவேன். நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரைப் பலவந்தமாகக் கைப்பற்றுவதில் துரோணர் வெல்லாதவாறு நீ பார்த்துக் கொள்வாயாக. ஓ! மாதவா, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} யுதிஷ்டிரர் கைப்பற்றப்பட்டால், ஜெயத்ரதனைக் கொல்வதில் என்னால் வெல்ல முடியாது, என் துயரமும் அதிகமாகும். மனிதர்களில் சிறந்தவரும், பாண்டுவின் உண்மை நிறைந்த மகனுமான அவர் {யுதிஷ்டிரர்} கைப்பற்றப்பட்டால், நான் மீண்டும் காட்டுக்கே செல்வேன் என்பது தெளிவானதாகும் {நிச்சயமாகும்}. எனவே, சினத்தால் தூண்டப்பட்ட துரோணர், போரில் யுதிஷ்டிரரைப் பிடிப்பதில் வென்றுவிட்டால், ஜெயத்ரதனை நான் வென்றாலும், அஃது எந்தப் பலனையும் உண்டாக்காது என்பது வெளிப்படையானது. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மாதவா {சாத்யகி}, எனவே, எனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகவும், எனது வெற்றி மற்றும் புகழுக்காவும், போரில் மன்னரை {யுதிஷ்டிரரைக்} காப்பாயாக" என்றார் {அர்ஜுனர்}.
எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பரத்வாஜர் மகன் {துரோணர்} மூலம் தொடரும் அச்சத்தின் விளைவாக, சவ்யசச்சின் {அர்ஜுனர்} உம்மை {பாதுகாப்பதை} என்னிடம் நம்பிக்கையின் பேரில் ஒப்படைத்தார். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, ருக்மினியின் மகனை (பிரத்யும்னனைத்) தவிரப் போரில் துரோணருக்குப் பொருத்தமான வேறு எவனும் இல்லை என்பதை நானே தினமும் பார்க்கிறேன். புத்திசாலியான பரத்வாஜரின் மகனுக்குப் போரில் நானும் பொருத்தமானவனாகவே கருதப்படுகிறேன். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என் மதிப்பை நானே பொய்த்துக் கொள்வதோ, எனது ஆசான் (அர்ஜுனரின்) கட்டளைகளை அலட்சியம் செய்வதோ, உம்மை விட்டு அகல்வதோ கூடாது என்பது தெளிவாகிறது. ஊடுருவமுடியாத கவசம்பூண்டிருக்கும் ஆசான் (துரோணர்), தன் கரநளினத்தின் விளைவால் போரில் உம்மை அடைந்து, சிறு பறவையுடன் {விளையாடும்} சிறுவனைப் போல உம்முடன் விளையாடுவார்.
மகரக் கொடி தாங்கிய கிருஷ்ணரின் மகன் {பிரத்யும்னன்} இங்கே இருந்தால், அர்ஜுனரைப் போலவே அவன் உம்மைப் பாதுகாப்பான் என்பதால், அவனிடம் {உம்மை பாதுகாக்கும் பணியை} ஒப்படைத்திருக்க முடியும். {ஆனால் இப்போதோ}, நீரே உம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கும். நான் சென்றுவிட்டால், உம்மைப் பாதுகாப்பது யார்? நான் அர்ஜுனரிடம் செல்லும்போது, துரோணரை எதிர்த்துச் செல்லக்கூடியவர் யார்? ஓ! மன்னா, அர்ஜுனனைக் குறித்த அச்சமேதும் இன்று உமதாக வேண்டாம். எந்தச் சுமை எவ்வளவு கனமானதாக இருந்தாலும் அவர் ஒருபோதும் {அர்ஜுனர்} உற்சாகமிழப்பதில்லை.
அவருக்கு {அர்ஜுனருக்கு} எதிரான போர்வீரர்களான சௌவீரகர்கள், சிந்தவப் பௌரவர்கள், வடக்கத்தியர், தெற்கத்தியர், கர்ணனின் தலைமையிலானோர் ஆகியோரின் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும் அர்ஜுனருக்குப் பதினாறில் ஒரு பங்குக்கும் அவர்கள் ஈடாகமாட்டார்கள். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், அனைத்து ராட்சச இனங்கள், கின்னரர்கள், பெரும்பாம்புகள், உண்மையில் அசைவன, அசையாதன ஆகிய அனைத்தையும் கொண்ட மொத்த உலகமும் அவருக்கு எதிராக ஒன்றாகத் திரண்டு எழுந்தாலும், போரில் அர்ஜுனருக்கு அவர்கள் ஈடாகமாட்டார்கள். ஓ! மன்னா, இஃதை அறிந்து கொண்டு தனஞ்சயர் நிமித்தமான உமது அச்சத்தை விலக்குவீராக. கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளுமான வீரக் கிருஷ்ணர்கள் {வீர கருப்பர்கள்} இருவரும் எங்கிருக்கிறார்களோ, அங்கே அவர்களது நோக்கத்திற்குச் சிறு தடங்கலும் ஏற்பட முடியாது.
உமது தம்பியின் {அர்ஜுனரின்} தெய்வீக வலிமை, ஆயுதங்களில் சாதனை, வளம், போரில் கோபம், நன்றியுணர்வு மற்றும் கருணையை நினைத்துப் பாரும். ஓ! மன்னா, அர்ஜுனரிடம் செல்வதற்காக நான் இந்த இடத்தைவிட்டு அகன்றால், போரில் துரோணர் வெளிக்காட்டப் போகும் ஆயுதங்களின் அற்புத அறிவையும் நினைத்துப் பாரும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஆசான் {துரோணர்} உம்மைக் கைப்பற்றுவதில் பேராவல் கொண்டிருக்கிறார். மேலும், ஓ! மன்னா, ஓ! பாரதரே, தன் உறுதிமொழிக்கு நன்மை செய்வதையும் ஆவலுடன் விரும்புகிறார். ஓ! மன்னா, உமது பாதுகாப்பில் கவனமாக இருப்பீராக. நான் சென்ற பிறகு உம்மைப் பாதுகாப்பவர் யார்? யாரிடம் நம்பிக்கை வைத்து, பிருதையின் மகனான பல்குனரை {குந்தியின் மகன் அர்ஜுனரை} நோக்கி நான் செல்வது? {அந்த நம்பிக்கைக்குரிய} அவர் யார்? ஓ! பெரும் மன்னா, ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும்போரில் உம்மை எவரிடமாவது ஒப்படைக்காமல், நிச்சயம் நான் அர்ஜுனரிடம் செல்ல மாட்டேன் என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! புத்திசாலி மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஓ! மன்னா, உமது நுண்ணறிவின் துணை கொண்டு, அனைத்துக் கண்ணோட்டங்களில் இருந்தும் சிந்தித்து, உயர்ந்த நன்மையைத் தரவல்லது எது என்பதை உறுதி செய்த பிறகு எனக்குக் கட்டளையிடுவீராக" என்றான் {சாத்யகி}.
இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {சாத்யகியிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மாதவா, நீ சொன்னது போலவே தான் இருக்கிறது. எனினும், ஓ! ஐயா, இவையனைத்தாலும் கூட, என் இதயம் அர்ஜுனன் நிமித்தமாக அமைதியை அடையவில்லை. என்னைப் பாதுகாத்துக் கொள்வதில் பெரும் முன்னெச்சரிக்கைகளை நான் எடுத்துக் கொள்வேன். என்னால் ஆணையிடப்படும் நீ தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கே சென்றானோ அங்கே செல்வாயாக. போரில், என் பாதுகாப்புடன், அர்ஜுனனை நோக்கி நீ செல்ல வேண்டிய அவசியத்தை {ஒப்பிட்டு} என் புத்தியால் ஆராய்ந்தால் பின்னதே எனக்கு விரும்பத்தக்கதாக இருக்கிறது. எனவே, தனஞ்சயன் எங்குச் சென்றானோ அங்கே செல்ல நீ தயாராவாயாக.
வலிமைமிக்கப் பீமன் என்னைப் பாதுகாப்பான். தன் உடன் பிறந்த தம்பிகளுடன் கூடிய பிருஷதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, வலிமைமிக்க மன்னர்கள் அனைவரும், திரௌபதியின் மகன்களும் என்னைப் பாதுகாப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஓ! ஐயா, கேகயச் சகோதரர்கள் ஐவர், ராட்சசன் கடோத்கசன், விராடன், துருபதன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, பெரும் பலத்தைக் கொண்ட திருஷ்டகேது, குந்திபோஜன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகிய இவர்கள் அனைவரும் என்னை மிகக் கவனமாகப் பாதுகாப்பார்கள் என்பதிலும் ஐயமில்லை. தன் துருப்புகளுக்குத் தலைமையில் இருக்கும் துரோணராலும், கிருதவர்மனாலும் கூட, போரில் நம்மைத் தாக்குவதிலோ, என்னைப் பீடிப்பதிலோ வெல்ல முடியாது.
எதிரிகளை எரிப்பவனான திருஷ்டத்யும்னன், தன் ஆற்றலை வெளிப்படுத்தி, கடலைத் தடுக்கும் கரையைப் போலக் கோபக்காரத் துரோணரைத் தடுப்பான். பகைவர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் எங்கிருக்கிறானோ, அங்கே துரோணரால் நமது துருப்புகளைப் பலவந்தமாக மீறிச் செல்ல முடியாது. இந்தத் திருஷ்டத்யும்னன், கவசம் பூண்டவரும், வில், கணைகள், வாள் ஆகியவற்றைத் தரித்தவரும், விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவருமான துரோணரின் அழிவுக்காகவே நெருப்பில் இருந்து உதித்தவனாவான். ஓ! சிநியின் பேரனே {சாத்யகி}, என்னைக் குறித்து வருத்தப்படாமல், கவலையற்ற இதயத்துடன் செல்வாயாக. போரில் திருஷ்டத்யுமனன், கோபக்காரத் துரோணரைத் தடுப்பான்" {என்றான் சஞ்சயன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, மன்னனை {யுதிஷ்டிரனை} விட்டு தான் நீங்கிச் சென்றால் அர்ஜுனன் செய்யப்போகும் கண்டனத்திற்கு அஞ்சினான். எனினும், (யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படியாவிட்டால்) மக்கள் நிச்சயம் அதைக் கோழைத்தனமெனச் சுட்டிக்காட்டுவார்கள், என்பதைக் கண்ட அவன் {சாத்யகி}, தனக்குள்ளேயே, "அர்ஜுனரிடம் செல்வதற்கு நான் அஞ்சுகிறேன் என மக்கள் சொல்ல வேண்டாம்" என்று சொன்னான்.
இதைக் குறித்து மீண்டும் மீண்டும் சிந்தித்தவனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், மனிதர்களில் காளையுமான அந்தச் சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, உமது பாதுகாப்பிற்கு இவ்வேற்பாடுகள் போதுமானது எனத் தாம் கருதினால், உமது உத்தரவை ஏற்று நான் பீபத்சுவிடம் {அர்ஜுனரிடம்} செல்வேன். ஓ! மன்னா, எனக்குப் பல்குனரை {அர்ஜுனரை} விட அன்புக்குரிய வேறு எவரும் இந்த மூன்று உலகத்தில் இல்லை என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! மதிப்பு அளிப்பவரே, {உமது} உத்தரவின் பேரில், நான் அவரது பாதையைத் தொடர்ந்து செல்வேன். உமக்காக என்னால் செய்யத்தகாதது என்று எதுவுமில்லை. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் ஆசானின் {அர்ஜுனரின்} கட்டளைகள் எனக்கு எப்போதும் கனமானதே.
ஆனால், ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, உமது கட்டளைகளோ, எனக்கு அதைவிடக் கனமாதே {மேன்மையானதே}. உமது சகோதரர்களான [1] கிருஷ்ணரும், தனஞ்சயரும் {அர்ஜுனரும்}, உமக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்கின்றனர். ஓ! தலைவா, அர்ஜுனருக்காக உமது உத்தரவுகளை என் சிரம் மேல் கொண்டு, ஓ! மனிதர்களில் காளையே, ஊடுருவமுடியாத இந்தப் படையை நான் பிளந்து செல்வேன். கடலுக்குள் உலாவும் மீனைப் போல, துரோணரின் இந்தப் படைக்குள் கோபத்துடன் உலவும் நான், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன் மற்றும் கிருபர் ஆகிய முதன்மையான தேர்வீரர்களால் பாதுகாக்கப்பட்டு, தன் துருப்புகளை நம்பிக்கொண்டு, பாண்டுவின் மகன் {அர்ஜுனர்} மீது கொண்ட அச்சத்துடன் ஜெயத்ரதன் எங்கே நிற்கிறானோ அங்கே நான் செல்வேன்.
[1] மைத்துனன் ஆனதால், கிருஷ்ணனும் யுதிஷ்டிரனுக்குச் சகோதரனைப் போன்றவனே.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்கிருந்து செல்லும் தொலைவு மூன்று யோஜனைகளாகும் [2]. பார்த்தர் {அர்ஜுனர்}, ஜெயத்ரதனைக் கொல்லத் தயாராக இருக்கும் அந்த இடத்தை நினைத்துப் பார்க்கிறேன். பார்த்தர் மூன்று யோஜனைகள் தொலைவில் இருந்தாலும், அவரது பாதையை நான் நெஞ்சுரத்துடன் தொடர்ந்து சென்று, ஜெயத்ரதன் கொல்லப்படும் வரை அவருடனேயே {அர்ஜுனருடனேயே} இருப்பேன். மூத்தவர்களின் கட்டளைகள் இல்லாமல் போரிடச் செல்பவன் எவன் இருக்கிறான்? மேலும் உம்மால் கட்டளையிடப்பட்டதைப் போலக் கட்டளையிடப்பட்டும், போரிடமால் இருக்க என்னைப் போன்ற ஒருவனால் எப்படி முடியும்?
[2] ஒரு யோஜனை என்பது 8 கி.மீ. அளவுக்கு இணையானது என்பது ஆர்யபட்டரின் குறிப்பு. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 13 கி.மீக்கு இணையானது என்கிறார். The Ancient Geography of Indiaவில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் {Alexander Cunningham) 13.2 கி.மீ. என்கிறார். ஒரு யோஜனை என்பது 1.6 கி.மீ. தான் என்று சிலர் வாதிடுகின்றனர். தகவல்: https://en.wikipedia.org/wiki/Yojana. ஆக இந்தத் தொலைவு 24 கி.மீ. - 40 கி.மீ. இருக்கலாம்.
ஓ! தலைவா, நான் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நான் அறிவேன். பெருங்கடலைப் போன்றதும், கலப்பைகள், ஈட்டிகள், கதாயுதங்கள், பராசங்கள், கேடயங்கள், வாள்கள், ரிஷ்டிகள், வேல்கள், முதன்மையான கணைகள் ஆகியவற்றால் நிறைந்த இந்தப் படை எனும் பெருங்கடலை நான் இன்று கலங்கடிப்பேன். இதோ நீர் காணும் இந்த யானைப்படை, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அஞ்சனம் என்ற இனப்பெயரைக் கொண்டவையும், பெரும் ஆற்றலைக் கொண்டவையும், பெரும் எண்ணிக்கையிலான மிலேச்சர்களால் நடத்தப்படுபவையும் {மிலேச்ச பாகர்களைக் கொண்டவையும்}, தாக்குவதில் சிறந்தவையும், போரில் மகிழ்ச்சி கொள்பவையும், மேகங்களில் இருந்து பொழியும் மழையைப் போலத் தங்கள் மதநீரை பெருக்குபவையும், தங்கள் முதுகில் இருப்போரால் தூண்டப்பட்டாலும் எப்போதும் பின்வாங்காதவையுமான ஆயிரம் யானைகளைக் கொண்டதாகும். ஓ! மன்னா, கொல்லப்படாமல் இவற்றை வெல்ல முடியாது.
மேலும், இதோ நீர் காணும் ஆயிரக்கணக்கான தேர் வீரர்கள் அனைவரும், அரசப் பரம்பரையில் பிறந்தவர்களும், மகாரதர்களுமாவர். இவர்கள் ருக்மரதர்கள் [3] என்று அழைக்கப்படுகிறார்கள். ஓ! ஏகாதிபதி, ஆயுதங்களிலும், தேரில் இருந்து போரிடுவதிலும், யானைகளின் முதுகில் இருந்து போரிடுவதிலும் இவர்கள் சாதித்தவர்களாவர். ஆயுத அறிவியலில் மேன்மையான தேர்ச்சி பெற்ற இவர்கள், தங்கள் முஷ்டிகளால் போரிடுவதிலும் சாதித்தவர்களாவர். கதாயுதம் கொண்டு போரிடுவதில் திறம்பெற்ற இவர்கள், கைச்சண்டைக் கலையிலும் மேன்மையான தேர்ச்சி பெற்றவர்களாவர். மேலும் இவர்கள் கத்தியைக் கொண்டு தாக்குவதிலும், வாள் மற்றும் கேடயத்தோடு எதிரியின் மீது பாய்வதிலும் இணையான சாதுர்யம் கொண்டவர்களாவர்.
[3] தங்கத் தேர்களைக் கொண்டவர்கள் என்பது பொருள் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
துணிச்சலும், கல்வியும் கொண்ட இவர்கள் பகைமையால் தூண்டப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஓ! மன்னா, ஒவ்வொரு நாளும் இவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களைப் போரில் வெல்கின்றனர். கர்ணனால் ஆணையிடப்படும் இவர்கள், துச்சாசனனுக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். வாசுதேவரே {கிருஷ்ணரே} கூட இவர்களைப் பெரும் தேர்வீரர்களென மெச்சுகிறார். எப்போதும் கர்ணனின் நன்மையை வேண்டும் இவர்கள், அவனுக்குக் {கர்ணனுக்குக்} கீழ்ப்படிந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஓ! மன்னா, கர்ணனின் உத்தரவின் பேரால், அர்ஜுனருடன் போரிடுவதில் இருந்து இவர்கள் திரும்பியிருப்பதால், களைப்பில்லாதவர்களாக, சிரமத்தை அடையாதவர்களாக, ஊடுருவ முடியாத கவசங்களைப் பூண்டு, வலுவான விற்களைத் தரித்துக் கொண்டு, துரியோதனனாலும் ஆணையிடப்பட்டு வந்திருக்கும் இந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், நிச்சயம் எனக்காகவே காத்திருக்கிறார்கள். ஓ! கௌரவரே, உமது நன்மைக்காக இவர்களை நொறுக்கிய பிறகு, சவ்யசச்சினுடைய {அர்ஜுனருடைய} பாதையை நான் பின்தொடர்ந்து செல்வேன்.
கவசம்பூண்டவையும், கிராதர்களால் செலுத்தப்படுபவையும், ஆபரணங்கள் பூண்டவையுமாக அதோ நீர் காணும் எழுநூறு {700} பிற யானைகளும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முன்பொரு சமயம், தன் உயிரை விரும்பிய கிராதர்களின் மன்னனால் {சுமணனால்} [4], பல வேலைக்காரர்களையும் அவற்றின் வரிசையில் சேர்த்துச் சவ்யசச்சினிடம் {அர்ஜுனனிடம்} கொடுக்கப்பட்டவையாகும். ஓ! மன்னா, முன்னர் இவை உமது பணியில் ஈடுபட நியமிக்கப்படிருந்தன. உமக்கு எதிராக இவை இப்போது போரிடுவதால், காலம் கொண்டுவரும் ஏற்றத்தாழ்வுகளைக் காண்பீராக. போரில் வீழ்த்துவதற்குக் கடினமான கிராதர்களால் இந்த யானைகள் செலுத்தப்படுகின்றன. அக்னி குலத்தில் உதித்த இவர்கள் அனைவரும் யானைகளில் இருந்து போரிடுவதில் சாதித்தவர்களாவர். முன்னர் இவர்கள் அனைவரும் போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெல்லப்பட்டவர்களுமாவர். இப்போது அவர்கள், துரியோதனனின் உத்தரவுகளின் பேரில் எனக்காகக் கவனமாகக் காத்திருக்கின்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போரில் வீழ்த்தக் கடினமான இந்தக் கிராதர்களை என் கணைகளால் கொன்ற பிறகு, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லும் நோக்கோடு உள்ள அர்ஜுனரின் பாதையை நான் பின்தொடர்ந்து செல்வேன்.
[4] சபாபர்வம் பகுதி 4ல் யுதிஷ்டிரனின் அவையில் வீற்றிருந்த கிராதர்களின் மன்னனாகச் சுமணன் என்பான் குறிப்பிடப்படுகிறான். அதற்கு முன்பு புளிந்தன் என்பவனும் குறிக்கப்படுகிறான். மேலும் சபாபர்வம் பகுதி 29ல் கிராதர்களில் ஏழு மன்னர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
அஞ்சனம் [5] என்ற குலத்தில் உதித்தவையும், ஊடுருவ முடியாத தோலைக் கொண்டவையும், நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையும், அலங்கரிக்கப்பட்டவையும், வாயில் மத நீர் ஒழுகுபவையும், முழுதாகத் தங்கக்கவசத்தால் நன்கு அலங்கரிக்கப்பட்டவையும், ஐராவதத்திற்கே ஒப்பானவையுமான அந்தப் பெரும் யானைகள் (வேறு யானைகள்), போரில் பெரும் வல்லமைமிக்கவையாகும். வடக்கு மலைகளில் இருந்து வந்திருக்கும் இவை, உறுதியான அங்கங்களைக் கொண்டவர்களும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களும், எஃகு கவசங்களை அணிந்தவர்களும், சீற்றமிக்கவர்களுமான கள்வர்களால் செலுத்தப்படுகின்றன. அங்கே அவர்களில், பசுவுக்குப் பிறந்தவர்களும், குரங்குக்குப் பிறந்தவர்களும், பல்வேறு பிற உயிரினங்களுக்குப் பிறந்தவர்களும், மனிதர்களுக்குப் பிறந்தவர்களும் இருக்கின்றனர். பாவம்நிறைந்தவர்களான மிலேச்சர்களாலான அந்தப் படைப்பிரிவு, புகையின் நிறத்தைக் கொண்டதாகத் தூரத்தில் தெரிகிறது.
[5] கங்குலியின் பதிப்பில் இவ்வினம் {sprung from the race of Arjuna} அர்ஜுனம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும், இந்த யானைகளில் இனமும் அஞ்சனம் என்றே குறிக்கப்படுகிறது. ஒருவேளை கங்குலியின் பதிப்பில் தட்டச்சுப்பிழையாக ஏற்பட்டிருக்க வேண்டும்.
இவர்களையும், எண்ணிலடங்கா க்ஷத்திரியர்களையும், கிருபரையும், தேர்வீரர்களில் முதன்மையான துரோணரையும், சிந்துக்களின் ஆட்சியாளனையும் {ஜெயத்ரதனையும்}, கர்ணனையும் அடைந்த அவன் {துரியோதனன்}, பாண்டவர்களை மிக எளிதாக நினைக்கிறான். விதியால் உந்தப்பட்ட அவன் {துரியோதனன்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக {கிருதார்த்தனாகத்} தன்னைக் கருதிக் கொள்கிறான். எனினும், என்னால் பெயர் குறிப்பிட்ட இவர்கள் அனைவரும் இன்று எனது கணைகள் அடையும் தொலைவிலேயே இருப்பார்கள். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, அவர்கள் மனோவேகம் கொண்டவர்களாகவே இருந்தாலும் என்னிடம் இருந்து அவர்கள் தப்ப மாட்டார்கள். பிறரின் ஆற்றலைச் சார்ந்தே இருக்கும் இளவரசனான அந்தத் துரியோதனனால் எப்போதும் மதிக்கப்படும் இந்த வீரர்கள், என் கணை மேகங்களால் பீடிக்கப்பட்டு அழிவைச் சந்திப்பார்கள்.
ஓ! மன்னா, தங்கக் கொடிமரங்களைக் கொண்டவர்களாக, தடுப்பதற்குக் கடினமானவர்களாக அதோ நீர் காணும் அந்தத் தேர்வீரர்கள் பிறர் காம்போஜர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள், துணிச்சல்மிக்கவர்களாகவும், சாதித்தவர்களாகவும், ஆயுதங்களின் அறிவியலில் உறுதியான அர்ப்பணிப்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நன்மையை விரும்பும் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் உறுதியுடனும் இருக்கிறார்கள். ஓ! பாரதரே, முழுமையாக ஓர் அக்ஷௌஹிணி அளவுக்கு இருக்கும் அந்தக் கோபக்காரப் போர்வீரர்கள், குருவீரர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டு, எனக்காகவே கவனமாக நிற்கின்றனர் {காத்திருக்கின்றனர்}. ஓ! மன்னா, அவர்கள் தங்கள் கண்களை என்மேல் கொண்டு விழிப்புடனே இருக்கின்றனர். வைக்கோல் குவியலை அழிக்கும் நெருப்பைப் போலவே அவர்கள் அனைவரையும் நான் நிச்சயம் அழிப்பேன்.
எனவே, ஓ! மன்னா, தேர்களைத் தயார் செய்வோர், என் தேரில் உரிய இடங்களில் அம்பறாத்தூணிகளையும், தேவையான அனைத்தையும் வைப்பார்களாக. உண்மையில், இத்தகு பயங்கரப் போரில் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை நிச்சயம் எடுத்துச் செல்ல வேண்டும். கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான காம்போஜர்களுடன் நான் மோதப் போவதால், படை அறிவியலின் பேராசிரியர்கள் அறிவுறுத்துவதை விட ஐந்து மடங்கு அளவுக்கு (தேவையான ஆயுதங்களால்) தேர் நிரப்பப்பட வேண்டும். போர்க்கலையின் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டவர்களும், கடும் நஞ்சுக்கு ஒப்பானவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களும், துரியோதனனால் எப்போதும் நன்கு நடத்தப்படுபவர்களும், துரியோதனனின் நன்மையையே நோக்கமாகக் கொண்டவர்களுமான கிராதர்களுடன் நான் மோத வேண்டும். சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவர்களும், நெருப்பைப் போன்ற கொடூரம் கொண்டவர்களும் சுடர்மிக்கக் காட்டுநெருப்பைப் போல அணைப்பதற்குக் கடினமானவர்களுமான சகர்களோடும் நான் மோத வேண்டும். உண்மையில், தடுப்பதற்குக் கடினமான பல போர்வீரர்களுடன் இந்தப் போரில் நான் மோத வேண்டும். இதனால், நல்ல இனத்தைச் சேர்ந்தவையும், மங்கலக் குறிகளைக் கொண்டவையும், நன்கு அறியப்பட்டவையுமான குதிரைகள், அவற்றின் தாகம் தணிக்கப்பட்டு, முறையாகச் சீரமைக்கப்பட்ட பிறகு என் தேரில் பூட்டப்பட வேண்டும்" என்றான் {சாத்யகி}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இதன் பிறகு யுதிஷ்டிரன், கணைகளாலும், பல்வேறு வகையான ஆயுதங்களாலும் நிறைந்த அம்பறாத்தூணிகளையும், உண்மையில், தேவையான அனைத்தையும், சாத்யகியின் தேரில் இடம்பெறச் செய்தான். பிறகு, நன்கு சேணம்பூட்டப்பட்ட அவனது சிறந்த குதிரைகள் நான்கையும், நுகத்தில் இருந்து விடுவித்த மனிதர்கள், தங்க நிறம் கொண்டவையும், நன்கு பயிற்சி அளிக்கப்பட்டவையும், பெரும் வேகம் கொண்டவையும், உற்சாகமானவையும், நன்கு அடிபணிபவையுமான அவ்விலங்குகளைக் {நீர்} குடிக்கவும், நடக்கவும், குளிக்கவும், உண்ணவும் செய்து, தங்க ஆரங்களால் அவற்றை அலங்கரித்து, அவற்றின் {உடல்களிலிருந்த} கணைகளைப் பிடுங்கி மீண்டும் அவனது தேரின் நுகத்தில் முறையாகப் பூட்டினர். அந்தத் தேரில் தங்கப் பிடரிமயிர்களைக் கொண்ட சிங்கம் பொறிக்கப்பட்ட ஒரு நெடிய கொடிமரம் நிறுவப்பட்டது. ஆயுதங்களின் அதிக எடையைத் தாங்கிக் கொண்டிருந்த அந்த வாகனத்தில் அந்தக் கொடிமரத்தைச் சுற்றி வெண்மேகங்களைப் போன்ற நிறத்தில் கொடிகளும் பொருத்தப்பட்டன. தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் குதிரைகளை அந்தத் தேரின் நுகத்தில் பூட்டிய பிறகு, தேரோட்டியும், சாத்யகியின் அன்புக்குரிய {உயிர்} நண்பனுமான தாருகன் தம்பி {முகுந்தன்} [6] வந்து, வாசவனிடம் {இந்திரன்} தேர் தயாராக இருப்பதாகச் சொல்லவந்த மாதலி போலப் பின்னவனிடம் {சாத்யகியிடம்} தேர் தயாராக இருப்பதாகச் சொன்னான்.
[6] கிருஷ்ணனின் தேரோட்டியான தாருகனுக்கு முகுந்தன் என்ற ஒரு தம்பி உண்டு. தகவல்: http://www.jatland.com/home/Daruka
பிறகு நீராடி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, மங்கலச் சடங்குகள் அனைத்தையும் செய்த சாத்யகி, தனக்கு ஆசிகள் கூறிய ஸ்நாதகப் பிராமணர்கள் ஆயிரம்பேருக்கு தங்க நிஷ்கங்களைக் கொடுத்தான். அந்த ஆசிகளால் அருளப்பட்டவனும், அழகர்களில் முதன்மையானவனும், வழிபடத்தகுந்த வீரனுமான அந்தச் சாத்யகி, கைராதம் {கைராதகம்} [7] மற்றும் தேனைக் குடித்து, போதையால் சிவந்த கண்கள் உருளப் பிரகாசமாக ஒளிர்ந்தான். பிறகு, வெண்கலக் கண்ணாடியை [8] தொட்டு, பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து, தன் சக்தி இரட்டிப்படைந்தவனான அவன் {சாத்யகி} சுடர்மிக்க நெருப்பாகத் தெரிந்தான். தன் தோள்களில் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்ட அந்த முதன்மையான தேர்வீரன் {சாத்யகி}, கவசம்பூண்டு, ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, மறுபிறப்பாளர்களைக் {பிராமணர்களைக்} கொண்டு நிவர்த்திச் சடங்குகளையும் செய்து கொண்டான். அழகான கன்னியர் அவன் {சாத்யகி} மீது பொரிகளையும் நறுமணப் பொருட்களையும், மலர் மாலைகளையும் பொழிந்து அவனைக் கௌரவித்தனர். பிறகு அந்த வீரன், தன் கரங்களைக் கூப்பி யுதிஷ்டிரனின் பாதங்களை வணங்கினான், பின்னவனும் {யுதிஷ்டிரனும்} அவனை உச்சி முகர்ந்தான். இந்த முறைமைகள் அனைத்தையும் செய்த அவன் {சாத்யகி} தன் முதன்மையான தேரில் ஏறினான்.
[7] வேறொரு பதிப்பில் இது கைராதக மது என்று குறிப்பிடப்படுகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இது Kailataka honey கைலாதகத் தேன் என்று சொல்லப்படுகிறது.
[8] கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இது Brazen Mirror என்றிருக்கிறது. வேறொரு பதிப்பில் இது வீராகாம்ஸ்யம் என்றிருக்கிறது. காம்ஸ்யம் என்பது வெண்கலம் என்ற பொருளைத் தருவதால் நான் வெண்கலக் கண்ணாடி என்று மொழிபெயர்த்திருக்கிறேன். உண்மையில் இது முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற ஏதாவது வெண்கலப் பொருளாக இருந்திருக்க வேண்டும்.
அப்போது, உற்சாகமானவையும், வலுவானவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், வெல்லப்பட முடியாதவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகள், அவனை {சாத்யகியை} அந்த வெற்றித் தேரில் சுமந்து சென்றன. அதேபோலப் பீமசேனனும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் கௌரவிக்கப்பட்டு, அந்த ஏகாதிபதியை {யுதிஷ்டிரனை} மரியாதையாக வணங்கிய பிறகு சாத்யகியுடன் புறப்பட்டான். எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும் உமது படைக்குள் ஊடுருவப் போகும் வேளையில், அவர்களது எதிரிகளான உமது துருப்புகள், துரோணரைத் தங்கள் தலைமையில் கொண்டு அசையாதிருந்தன.
அப்போது சாத்யகி, கவசம்பூண்டு தன்னைப் பின்தொடர்ந்து வரும் பீமனைக் கண்டு, அந்த வீரனை {பீமனை} வணங்கி, அவனிடம் இந்த இனிமையான வார்த்தைகளைப் பேசினான். உண்மையில், வீரச் சாத்யகி ஒவ்வொரு அங்கத்திலும் இன்பத்தால் நிறைந்து பீமனிடம், "ஓ! பீமரே, மன்னரை நீர் பாதுகாக்க வேண்டும். அனைத்தையும் விட இதுவே உமது மேலான கடமையாகும். காலம் வந்துவிட்ட படையான இதை {இந்த எதிரிப் படையை} நான் பிளந்து செல்லப் போகிறேன். இப்போதும், எப்போதும் மன்னரின் பாதுகாப்பே உமது மேலான கடமையாகும். ஓ! பீமரே, நீர் எனது ஆற்றலை அறிவீர், {எனவே} எனது நன்மையை விரும்பித் திரும்புவீராக" என்றான் {சாத்யகி}. சாத்யகி இப்படிச் சொன்னதைக் கேட்ட பீமன், "{அப்படியெனில்} உன் நோக்கத்தின் வெற்றிக்காக நீ செல்வாயாக. ஓ! மனிதர்களில் சிறந்தவனே {சாத்யகியே}, நான் மன்னரைப் பாதுகாப்பேன்" என்று மறுமொழி கூறினான். இப்படிச் சொல்லப்பட்ட அந்த மதுகுலத்தோன் {சாத்யகி}, பீமனிடம், "ஓ! பிருதையின் மகனே {பீமரே}, திரும்பிச் செல்வீராக. இப்படி என் தகுதிகளால் {புண்ணியங்களால்} வெல்லப்பட்ட நீர் இன்று என் விருப்பங்களுக்குக் கீழ்ப்படிவதால் எனது வெற்றி உறுதியானதாகும். உண்மையில், ஓ! பீமரே, இந்த மங்கலச் சகுனங்கள் அனைத்தும் என் வெற்றியை உறுதி செய்கின்றன. பாண்டுவின் உயர் ஆன்ம மகனால் {அர்ஜுனரால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்ட பிறகு நான் அற ஆன்மா கொண்ட மன்னர் யுதிஷ்டிரரைத் தழுவுவேன்" என்று பதில் கூறினான் {சாத்யகி}.
பீமனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, அந்தச் சிறந்த போர்வீரனைத் தழுவி விடைபெற்றுக் கொண்ட அவன் {சாத்யகி}, மான்கூட்டத்தைக் காணும் ஒரு புலியைப் போல உமது துருப்புகளின் மேல் கண்களைச் செலுத்தினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையை இப்படிப் பார்த்த அவனைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் மலைப்படைந்து, பயங்கரமாக நடுங்கத் தொடங்கின. பிறகு, ஓ! மன்னா, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் ஆணைக்கிணங்க அர்ஜுனனைக் காண விரும்பிய சாத்யகி, தீடீரென உமது துருப்புகளை எதிர்த்து மோதினான்" {என்றான் சஞ்சயன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யுயுதானன் {சாத்யகி}, போரிடும் விருப்பத்தால் உமது துருப்புகளை எதிர்த்துச் சென்றபோது, மன்னன் யுதிஷ்டிரன், துரோணரின் தேரை அடைவதற்காக, யுயுதானனைத் தன் படை சூழப் பின்தொடர்ந்து சென்றான். பிறகு, பாஞ்சலர்களின் மன்னனுடைய மகனும் வெல்லப்பட முடியாத வீரனுமான திருஷ்டத்யும்னனும், மன்னன் வசுதானனும் [1], பாண்டவப் படையிடம் பேரொலியுடன், "போரில் வெல்லப்பட முடியாத வீரனான சாத்யகி (கௌரவப் படையின் ஊடாக) எளிமையாகக் கடந்து செல்வதற்கு ஏதுவாக {உதவிட} வாருங்கள், விரைவாகத் தாக்குங்கள், எதிரியை எதிர்த்து விரையுங்கள். வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் அவனை வெல்லப் போராடுவார்கள்" என்று சொன்னார்கள். இதைச் சொன்ன (பாண்டவப் படையின்) பெரும் தேர்வீரர்கள், தங்கள் எதிரிகளின் மீது மூர்க்கமாகப் பாய்ந்தனர். உண்மையில் அவர்கள் அனைவரும், "சாத்யகியை வெல்ல முயல்வோரை நாங்கள் வெல்வோம்" என்று சொல்லிக் கொண்டே விரைந்தனர்.
[1] இவன் பாம்சு நாட்டைச் சேர்ந்தவன் எனச் சபாபர்வம் பகுதி 51ல் குறிப்பு இருக்கிறது. உத்யோக பர்வம் பகுதி 4லும் பாம்சு நாட்டு ஆட்சியாளனைப் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. துரோண பர்வம் பகுதி 190ல் இவன் துரோணரால் கொல்லப்படுகிறான்.
அப்போது சாத்யகியின் தேரருகே உரத்த ஆரவாரம் கேட்டது. எனினும், உமது மகனின் {துரியோதனனின்} படையானது சாத்யகியின் கணைகளால் மறைக்கப்பட்டுத் தப்பி ஓடியது. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்வத குலத்தோனால் {சாத்யகியால்} அந்தப் படை, போராடும் நூறு குழுக்களாகப் பிளக்கப்பட்டது. அந்தப் படை அப்படிப் பிளந்த போது, வலிமைமிக்கத் தேர்வீரனான சிநி (சிநியின் பேரன் {சாத்யகி}), எதிரியின் படைப்பிரிவின் முகப்பில் இருந்த வீரமிக்கப் பெரும் வில்லாளிகள் எழுவரை நொறுக்கினான். மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்விடும் நெருப்பின் தழல்களுக்கு ஒப்பான தன் கணைகளால் அவன் {சாத்யகி} பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மன்னர்களையும், பிற வீரர்கள் பலரையும் யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான். சிலநேரங்களில் அவன் {சாத்யகி}, ஒரே கணையால் நூறு வீரர்களையும், சில நேரங்களில் நூறு கணைகளால் ஒரே ஒரு வீரனையும் துளைத்தான்.
உயிரினங்களை அழிக்கும் பெரும் ருத்ரனைப் போல அவன் {சாத்யகி} யானைப் பாகர்களையும், குதிரைகள் மற்றும் தேரோட்டிகளுடன் கூடிய தேர்வீரர்களையும் கொன்றான். இத்தகு கரநளினத்தை வெளிக்காட்டி, இத்தகு கணை மேகங்களைப் பொழிந்த சாத்யகியை எதிர்த்துச் செல்ல உமது துருப்புகளில் எவரும் துணியவில்லை. நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரனால் {சாத்யகியால்} தரையில் நசுக்கப்பட்டுப் பீதியடைந்திருந்த அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் அனைவரும், செருக்கு மிக்க அந்த வீரன் {சாத்யகி} பார்த்துக் கொண்டிருக்கும்போதே களத்தைவிட்டுச் சென்றனர். அவன் {சாத்யகி} தனி ஒருவனாக இருந்தாலும், பலராகக் கண்ட அவர்கள், அவனது சக்தியால் மலைப்படைந்தனர்.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் பரவிக்கிடந்தவையான நொறுங்கிய தேர்கள், உடைந்த நீடங்கள் [2] மற்றும் சக்கரங்கள், விழுந்த குடைகள், கொடிமரங்கள், இருசுக்கட்டைகள், கொடிகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகள், தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்தனம் பூசப்பட்டவையுமான கரங்கள், ஓ! மன்னா, யானையின் துதிக்கைக்கு ஒப்பானவையும், பாம்புகளின் ஒடுங்கிய உடலைப் போன்றவையுமான மனிதத் தொடைகள், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அகன்ற பெரிய கண்களையும் சந்திரனுக்கு ஒப்பான அழகையும் கொண்ட வீரர்களின் முகங்கள் ஆகியவற்றால் பூமி மிக அழகாகத் தெரிந்தது. பல்வேறு முறைகளில் அறுக்கப்பட்டு விழுந்து கிடக்கும் பெரும் உடல் கொண்ட யானைகளுடன், மலைகளால் பரவியிருக்கும் ஒரு பெரிய சமவெளியைப் போன்று அந்தத் தரையானது மிக அழகாகத் தெரிந்தது. நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரனால் {சாத்யகியால்} நொறுக்கப்பட்டு, கொல்லப்பட்டு, தரையில் விழுந்து கிடக்கும் குதிரைகள், தங்கத்தால் மெருகூட்டப்பட்டவையும், முத்துக்களின் வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் அழகிய கடிவாளங்களோடும், அழகிய வடிவம் மற்றும் அமைப்புடன் கூடிய தங்கள் கவசங்களோடும் மிக அழகாகத் தெரிந்தன. பல்வேறு வகைகளிலான உமது துருப்பினரைக் கொன்ற அந்தச் சாத்வத குலத்தோன் {சாத்யகி}, உமது படையைக் கலங்கடித்து முறியடித்த படியே உமது படைக்குள் நுழைந்தான்.
[2] நீடம் என்பது, தேர்வீரன் ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏதுவாகத் தேரில் ஏற்படுத்தப்பட்ட ஓர் இடமாகும்.
சாத்யகி, முன்பு தனஞ்சயன் {அர்ஜுனன்} சென்ற அதே வழியில் தானும் செல்ல விரும்பினான். அப்போது துரோணர் வந்து அவனைத் {சாத்யகியைத்} தடுத்தார். பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்} மோதிய யுயுதானன் {சாத்யகி}, சினத்தால் நிறைந்து, கரையில் மோதியும் நிற்காத பெரும் வெள்ளமென நிற்காமல் சென்றான். எனினும் துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானனை அந்தப் போரில் தடுத்து, உயிர் நிலைகளையே ஊடுருவவல்ல ஐந்து கூரிய கணைகளால் அவனைத் துளைத்தார். இருப்பினும், அந்தப் போரில் சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்டவையும், கங்கம் மற்றும் மயிலின் இறகுகளைக் கொண்டவையும், தங்கச் சிறகுகளைத் தரித்தவையுமான ஏழு கணைகளால் துரோணரைத் துளைத்தான். பிறகு துரோணர், சாத்யகியையும், அவனது குதிரைகளையும், தேரோட்டிகளையும் ஆறு கணைகளால் பீடித்தார்.
வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானனால் துரோணரின் அந்தச் சாதனையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சிங்க முழக்கமிட்ட அவன் {சாத்யகி}, பத்துக் கணைகளாலும், பிறகு ஆறாலும், பிறகும் வேறு எட்டு கணைகளாலும் துரோணரைத் துளைத்தான். மேலும் யுயுதானன், மீண்டும் துரோணரைப் பத்துக் கணைகளாலும், அவரது தேரோட்டியை ஒன்றாலும், அவரது நான்கு குதிரைகளை நான்கு கணைகளாலும் துளைத்தான். மேலும் சாத்யகி, மற்றுமொரு கணையால், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணரின் கொடிமரத்தையும் தாக்கினான். பிறகு துரோணர், வேகமாகச் செல்பவையும், விட்டில் பூச்சிகளைப் போல எண்ணிக்கையில் கணக்கற்றவையுமான கணைகளால் சாத்யகியையும், அவனது தேர், குதிரைகள், தேரோட்டி, கொடிமரம் ஆகியவற்றையும் விரைவாக மறைத்தார். அதே போல யுயுதானனும், பெரும் வேகம் கொண்ட கணக்கற்ற கணைகளால் அச்சமற்ற வகையில் துரோணரை மறைத்தான்.
அப்போது துரோணர், யுயுதானனிடம், "உன் ஆசான் (அர்ஜுனன்), அவனுடன் போரிட்டுக் கொண்டிருந்த என்னைத் தவிர்த்துவிட்டு, என் பக்கவாட்டின் வழியாக ஒரு கோழையைப் [3] போலப் போரை விட்டுச் சென்றுவிட்டான். ஓ! மது குலத்தோனே {சாத்யகி}, உன் ஆசானைப் போலவே நீயும் இந்தப் போரில் என்னை விரைவாகத் தவிர்க்கவில்லையெனில், என்னுடன் போரிடும் நீ இன்று உயிருடன் தப்ப முடியாது" என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட சாத்யகி {துரோணரிடம்}, "நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் உத்தரவின் பேரில் தனஞ்சயரின் பாதையை நான் பின்தொடர்ந்து செல்கிறேன். ஓ! பிராமணரே, நீர் அருளப்பட்டிருப்பீராக, (நான் உம்முடன் போரிட்டால்) நான் நேரத்தை இழக்க நேரிடும். ஒரு சீடனானவன் தன் ஆசான் நடந்த வழியிலேயே எப்போதும் நடக்க வேண்டும். எனவே, நான் என் ஆசான் நடந்த பாதையையே பின்பற்றிச் செல்வேன்" என்றான்.
[3] வேறொரு பதிப்பில் அற்ப மனிதனைப் போல என்று சொல்லப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே கோழை என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இவ்வளவே சொன்ன அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா, ஆசானை {துரோணரைத்} தவிர்த்துவிட்டுத் திடீரென முன்னேறிச் சென்றான். அவன் {சாத்யகி} தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, துரோணர் அனைத்து வகைகளிலும் எனது முன்னேற்றத்தைத் தடுக்கவே முனைவார். ஓ! சூதா, இந்த என் முக்கியமான வார்த்தைகளைக் கேட்டுப் போரில் கவனமாகச் செல்வாயாக. அங்கே பெரும் காந்திமிக்க அவந்திகளின் படை தெரிகிறது. அதற்கு அடுத்ததாகத் தெற்கத்தியரின் வலிமைமிக்கப் படை இருக்கிறது. அதற்கு அடுத்து, பாஹ்லீகர்களின் பெரும்படை இருக்கிறது. பாஹ்லீகர்களுக்குப் பக்கத்தில், கர்ணனின் உத்தரவின் பேரில் போரிடும் தீர்மானத்துடன் இருக்கும் வலிமைமிக்கப் படை இருக்கிறது.
ஓ! தேரோட்டியே இந்தப் படைகள் அனைத்தும் தங்களுக்குள் ஒவ்வொரு வகையில் வேறுபாடுகளைக் கொண்டவை, ஆனால் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் அவை போர்க்களத்தில் ஒன்றையொன்று காத்துக் கொள்ளவும் செய்கின்றன. இந்தப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை அடைந்து குதிரைகளை உற்சாகமாகச் செலுத்துவாயாக. உண்மையில், குதிரைகள் சகித்துக்கொள்ளக்கூடிய வேகத்தில் அவற்றைச் செலுத்தி, ஓ! தேரோட்டியே, ஆயுதங்களை உயர்த்திய கரங்களுடன் கூடிய பாஹ்லீகர்களும், பலவேறு நாடுகளைச் சேர்ந்த காலாட்படை வீரர்கள், வரிசையாக நிற்கும் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களுடன் கூடிய படைப்பிரிவுகளுடன், சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையில் நிற்கும் எண்ணற்ற தெற்கத்தியர்களும் எங்கே இருக்கிறார்களோ, அங்கே என்னைக் கொண்டு செல்வாயாக" என்றான் {சாத்யகி}.
தன் தேரோட்டியிடம் இவ்வளவே சொல்லி, அந்தப் பிராமணரை (துரோணரைத்) தவிர்த்துவிட்டுச் சென்ற அவன் {சாத்யகி}, கடுமையானதும், வலிமையானதுமான கர்ணனின் இரு படைப்பிரிவுகளுக்கு ஊடான திறந்தவெளியின் வழியே கடந்து செல்லும்படி தன் தேரோட்டியிடம் சொன்னான். எனினும் கோபத்தால் தூண்டப்பட்ட துரோணர், எண்ணற்ற கணைகளை அவன் {சாத்யகி} மீது ஏவிபடியே பின்னால் இருந்து அவனைத் தொடர்ந்து சென்றார். உண்மையில் அந்த ஆசான் {துரோணர்}, திரும்பிப் பார்க்கும் விருப்பம் ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருந்தவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனுமான யுயுதானனை நெருக்கமாகவே பின்தொடர்ந்தார்.
கர்ணனின் பெரும்படையைத் தன் கூரிய கணைகளால் தாக்கிய சாத்யகி, அளவில்லாததும், பரந்திருந்ததுமான பாரதர்களின் படைக்குள் ஊடுருவினான். எனினும் யுயுதானன் {சாத்யகி}, அந்தப் படைக்குள் நுழைந்த போது (அவனை எதிர்த்து நின்ற) துருப்புகள் தப்பி ஓடின. இதன்காரணமாகக் கோபம் நிறைந்த கிருதவர்மன், சாத்யகியைத் தடுப்பதற்காக முன்வந்தான். முன்னேறிவரும் கிருதவர்மனை ஆறு கணைகளால் தாக்கிய வீரச் சாத்யகி, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் விரைவாகக் கொன்றான் [4]. மீண்டும் அவன் {சாத்யகி}, வேறு நான்கு கணைகளால் கிருதவர்மனின் நடுமார்பைத் துளைத்தான். அவன், பெரும் வேகம் கொண்ட, நேரான பதினாறு கணைகளால் மீண்டும் கிருதவர்மனின் நடுமார்பைத் துளைத்தான்.
[4] வேறொரு பதிப்பில் குதிரைகளை அடித்தான் என்றிருக்கிறது.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரர்ரே}, இப்படி அந்தச் சாத்வத குலத்தோனின் {சாத்யகியின்} கடும் சக்தி கொண்ட பல கணைகளால் மோதப்பட்ட கிருதவர்மனால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், காற்றின் வேகத்தைக் கொண்டதுமான வத்ஸதந்தத்தை {கன்றின் பல்லுக்கு ஒப்பான முனை கொண்ட கணையைக்} குறி பார்த்த அவன் {கிருதவர்மன்}, தன் வில்லின் நாணைத் தன் காது வரை இழுத்து சாத்யகியின் மார்பைத் துளைத்தான். அழகிய சிறகுகளைக் கொண்ட அந்தக் கணை, அவனது கவசத்தையும், உடலையும் ஊடுருவிச் சென்று இரத்தக் கறையுடன் பூமிக்குள் நுழைந்தது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரர்ரே}, உயர்ந்த ஆயுதங்களைக் கொண்ட வீரனான அந்தக் கிருதவர்மன், கணைகள் பலவற்றை ஏவி, கணைகள் பொருத்தப்பட்ட சாத்யகியின் வில்லை அறுத்தான். அந்தப் போரில், சினத்தால் நிறைந்த அவன் {கிருதவர்மன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் கூர்மையைக் கொண்ட பத்து கணைகளால் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியின் நடுமார்பைத் துளைத்தான்.
தன் வில் உடைந்த காரணத்தால், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான சாத்யகி, கிருதவர்மனின் வலது கை மீது ஓர் ஈட்டியை ஏவினான். வலுவான {வேறொரு} வில்லொன்றை எடுத்து வளைத்த யுயுதானன், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளைத் தன் எதிரியின் மீது விரைவாக ஏவி, அந்தக் கணை மழையால் கிருதவர்மனையும், அவனது தேரையும் முழுமையாக மறைத்தான். இப்படி ஹிருதிகனின் மகனை {கிருதவர்மனை} மறைத்த சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒரு பல்லத்தால் எதிரியின் தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான். இப்படிக் கொல்லப்பட்ட அந்த ஹிருதிகன் மகனுடைய தேரோட்டி அந்தப் பெரும் தேரில் இருந்து கீழே விழுந்தான். இதன் காரணமாக, தேரோட்டியை இழந்த கிருதவர்மனின் குதிரைகள் [5] பெரும் வேகத்துடன் தப்பி ஓடின.
[5] மேலே கிருதவர்மனின் நான்கு குதிரைகள் கொல்லப்பட்டதாகக் குறிப்பு இருக்கிறது. ஒருவேளை கிருதவர்மன் நான்குக்கும் மேற்பட்ட குதிரைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் இங்கே ஊகிக்கலாம். அல்லது மேலே அடிக்குறிப்பு [4]ல் சுட்டப்பட்டுள்ளதைப் போல அங்கே அந்த இடத்தில் குதிரைகள் "கொல்லப்பட்டன" என்பதற்குப் பதில் "தாக்கப்பட்டன" என்பதே பொருந்தும்.
பெரும் கலக்கமடைந்த அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்} தானே அக்குதிரைகளைத் தடுத்தான். வீரம் கொண்ட அந்தப் போர்வீரன் {கிருதவர்மன்}, கையில் வில்லுடன் தன் தேரில் (போருக்குத் தயாராக) நின்றான். இந்தச் சாதனையைக் கண்ட அவனது {கிருதவர்மனது} துருப்புகள் அஃதை உயர்வாகப் பாராட்டின. குறுகிய காலத்திற்கு ஓய்ந்திருந்த கிருதவர்மன், பிறகு தன் நல்ல குதிரைகளைத் தூண்டினான். அச்சமற்ற அவன் {கிருதவர்மன்}, தன் எதிரிகளைப் பெரும் அச்சங்கொள்ளச் செய்தான். எனினும், அந்நேரத்தில் சாத்யகி அவனைத் தாண்டிச் சென்றுவிட்டான். எனவே இப்போது கிருதவர்மன், சாத்யகியைத் தொடர்ந்து செல்லாமல் பீமசேனனை எதிர்த்து விரைந்தான்.
இப்படியே போஜர்களின் படைப்பிரிவை விட்டு வெளியேறிய சாத்யகி, காம்போஜர்களின் வலிமைமிக்கப் படைப்பிரிவை நோக்கிப் பெரும் வேகத்தோடு சென்றான். அங்கே துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான அந்தத் தேர்வீரர்களால் தடுக்கப்பட்டவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான யுயுதானனால் ஓர் அடியும் நகர முடியவில்லை. அதேவேளையில், தன் துருப்புகளை உரிய இடங்களில் நிறுத்திய துரோணர், அவர்களைப் பாதுகாக்கும் சுமையைப் போஜர்களின் ஆட்சியாளனிடம் {கிருதவர்மனிடம்} ஒப்படைத்துவிட்டு, போரிடும் ஆசையால் உறுதியான தீர்மானத்தைச் செய்து கொண்டு, யுயுதானனை நோக்கி பெரும் வேகத்துடன் விரைந்தார்.
இப்படித் யுயுதானனைப் பின்னாலிருந்து தொடர்ந்து செல்லும் துரோணரைக் கண்ட பாண்டவப் படையின் முதன்மையான வீரர்கள் உற்சாகத்துடன் அவரைத் தடுக்கத் தொடங்கினர். எனினும் பீமசேனனின் தலைமையிலான பாஞ்சாலர்கள் அனைவரும், தேர்வீரர்களில் முதன்மையான ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} அணுகி மகிழ்ச்சியற்றவர்களாக ஆனார்கள். ஓ! மன்னா, தன் ஆற்றலை வெளிப்படுத்திய வீரக் கிருதவர்மன், சிறிது உற்சாகமற்றவர்களாக இருந்தாலும், பெரும் வீரியத்துடனேயே போரிட்டு வந்த அந்த வீரர்கள் அனைவரையும் தடுத்தான். அச்சமற்ற அவன் {கிருதவர்மன்}, தன் கணைமழையின் மூலம் தன் எதிரிகளின் விலங்குகளைப் பலவீனமடையச் செய்தான். எனினும், (பாண்டவப் படையின்) துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், போஜர்களின் ஆட்சியாளனால் {கிருதவர்மனால்} இப்படிப் பீடிக்கப்பட்டாலும், பெரும்புகழுக்காகப் போராடும் உயர் பிறப்புக் கொண்ட படைவீரர்களைப் போல அந்தப் போஜப்படையை எதிர்த்துப் போரிடத் தீர்மானித்தனர்" {என்றான் சஞ்சயன்}.
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment