மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-218
உத்யோக பர்வம்
..
சபையை அடைந்த கிருஷ்ணன்
..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் புத்திக்கூர்மை கொண்டவர்களும், புகழ்பெற்றவர்களுமான அந்த இரண்டு நபர்களுக்கு {கிருஷ்ணன், விதுரன் ஆகியோருக்கு} இடையில் நடைபெற்ற இத்தகு உரையாடலில், பிரகாசமான நட்சத்திரங்களால் ஆன அந்த இரவு கடந்து சென்றது.
உண்மையில், அறம், பொருள், இன்பம் ஆகியன நிறைந்தவையும், மகிழ்ச்சிகரமான வார்த்தைகள் மற்றும் ஏற்புடைய வகையைச் சார்ந்த எழுத்துகளைக் {சொற்களைக்} கொண்டவையுமான கிருஷ்ணனின் பல்வேறு உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஒப்பற்ற விதுரனின் விருப்பத்திற்கு எதிராகவே அந்த இரவு கடந்து சென்றது.
அளவிலா ஆற்றல் கொண்ட கிருஷ்ணனும் அதற்கு நிகரான பாணி மற்றும் எழுத்துகளைக் கொண்ட சொற்பொழிவுகளை {அன்று இரவு} கேட்டுக் கொண்டேயிருந்தான்.
பிறகு, அதிகாலையில், இனிய குரலைக் கொடையாகக் கொண்ட சூதர்களும், பாணர்களும், கேசவனை {கிருஷ்ணனை}, இனிய ஒலி கொண்ட சங்குகள் மற்றும் துந்துபி முழக்கங்களுடன் எழுப்பினர். படுக்கையில் இருந்து எழுந்த தாசார்ஹ குலத்தவனும், சாத்வதர்கள் அனைவரில் காளையுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, காலைக்குரிய அனைத்து வழக்கமான செயல்களையும் செய்தான். நீராடல் மூலம் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, புனித மந்திரங்களை ஓதி, தெளிந்த நெய்யிலானான நீர்க்காணிக்கைகளை வேள்வித்தீயில் ஊற்றினான். தன்னை அலங்கரித்துக் கொண்ட மாதவன் {கிருஷ்ணன்}, உதயசூரியனை வணங்கத் தொடங்கினான்.
தாசார்ஹ குலத்தின் வீழ்த்தப்படாத கிருஷ்ணன், தனது காலை துதியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, துரியோதனனும், சுபலனின் மகனான சகுனியும் அங்கே அவனிடம் {கிருஷ்ணனிடம்} வந்து, "பீஷ்மரின் தலைமையிலான அனைத்து குருக்களுடனும், பூமியின் அனைத்து மன்னர்களுடனும் திருதராஷ்டிரர் தனது அவையில் அமர்ந்திருக்கிறார். தெய்வலோகத்தில் சக்ரனின் {இந்திரனின்} இருப்பை விரும்பும் தேவர்களைப் போல, அவர்கள் அனைவரும் உனது இருப்பை வேண்டுகின்றனர்" என்றனர்.
இப்படிச் சொல்லப்பட்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, அவர்கள் இருவரையும் இனிமையாகவும் மரியாதையாகவும் விசாரித்தான். சூரியன் சிறிது உயர எழுந்த போது, எதிரிகளைத் தண்டிப்பவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, எண்ணற்ற அந்தணர்களை அழைத்து, அவர்களுக்கு, தங்கம், ஆடைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளைப் பரிசாகக் கொடுத்தான்.
அதிகச் செல்வத்தைத் தானமளித்த அவன் {கிருஷ்ணன்}, தனது இருக்கையில் வந்து அமர்ந்த பிறகு, அங்கே வந்த அவனது தேரோட்டி (தாருகன்), தாசார்ஹ குலத்தின் அந்த வீழாவீரனை {கிருஷ்ணனை} வணங்கினான். பிறகு, கிண்கிணி மணிகளால் வரிசையாக அலங்கரிக்கப்பட்டதும், சுடர்மிக்கதுமான தனது தலைவனின் {கிருஷ்ணனின்} பெரிய தேரில், அற்புதக் குதிரைகளைப் பூட்டி அங்கே விரைவாகத் திரும்பி வந்தான் தாருகன். தனது அழகிய தேர், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, பலமிக்க மேகத்திரளின் இரைச்சலைப் போல ஆழ்ந்த சடசடப்பொலியை எழுப்பத் தயாராக இருப்பதை உணர்ந்தவனும், யாதவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குபவனுமான உயர் ஆன்ம ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, புனித நெருப்பையும், அந்தணர்கள் குழுவையும் வலம் வந்து, கௌஸ்துப மணியைப் பூண்டு கொண்டு, அழகில் சுடர்விட்டபடி, குருக்களால் சூழப்பட்டு, விருஷ்ணிகளால் நன்கு பாதுகாக்கப்பட்டுத் தேரில் ஏறினான் {கிருஷ்ணன்}.
அறத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் அறிந்த விதுரன், உயிர்வாழும் அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவனும், அறிவைக் கொடையாகக் கொண்ட அனைத்து நபர்களில் முதல்வனுமான அந்தத் தாசார்ஹ குலத்துக் கொழுந்தை {கிருஷ்ணனை}, தனது சொந்தத் தேரில் பின்தொடர்ந்து சென்றான் {விதுரன்}. துரியோதனனும், சுபலனின் மகனான சகுனியும், எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணனை {வேறு} ஒரு தேரில் பின்தொடர்ந்து சென்றார்கள். சாத்யகி, கிருதவர்மன் மற்றும் பிற பலமிக்க விருஷ்ணி குலத்துத் தேர்வீரர்கள் ஆகிய அனைவரும் தேர்களிலும், குதிரைகளிலும், யானைகளிலும் கிருஷ்ணனுக்குப் பின்னால் சென்றனர்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், அற்புத குதிரைகளால் இழுக்கப்பட்டவையுமான அந்த வீரர்களின் அழகிய தேர்கள் ஒவ்வொன்றும் உரத்த சடசடப்பொலியை எழுப்பிபடியும், பிரகாசித்துக் கொண்டும் முன்னேறி நகர்ந்து சென்றன.
முன்கூட்டியே தூற்றப்பட்டு, நீர்தெளிக்கப்பட்டிருந்ததும், உயர்ந்த மன்னர்கள் மட்டுமே பயன்படுத்த தகுந்ததுமான அகலமான ஒரு தெருவுக்கு, அழகுடன் பெரும் புத்திக்கூர்மை கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} வந்தான். அந்தத் தாசார்ஹ குலத்துக் கொழுந்து {கிருஷ்ணன்} புறப்பட்டபோது, எக்கங்கள் {கைத்தாளங்கள் = ஜால்ரா போன்ற பெரிய இசைக்கருவி} இசைக்கப்பட்டன, சங்குகள் முழங்கத் தொடங்கின, இன்னும் பிற கருவிகள் தங்கள் இசையைப் பொழிந்தன.
வீரத்திற்காக இவ்வுலகில் முதன்மையானவர்களாக இருப்பவர்களும், சிங்கம்போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான இளமை நிறைந்த வீரர்கள், சௌரியின் {கிருஷ்ணனின்} தேரைச் சூழ்ந்து கொண்டு, பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்து சென்றனர். பல்வேறு நிறங்களில் உடுத்தியிருந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள், வாள்கள், ஈட்டிகள், போர்க்கோடரிகளுடன் கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு அணிவகுத்து சென்றனர். அந்த வீழ்த்தப்படமுடியாத தாசார்ஹ குலத்து வீரன் {கிருஷ்ணன்} முன்னேறிச் சென்று கொண்டிருந்த போது, ஐநூறு {500} யானைகளும், ஆயிரக்கணக்கான தேர்களும், அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றன.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, அனைத்து வயதிலான ஆண்களும் பெண்களுமான அந்தத் தலைநகரத்தின் {ஹஸ்தினாபுரத்தின்} குடிமக்கள் அனைவரும் ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} காண விரும்பி வெளியே தெருக்களுக்கு வந்தனர். வீடுகளின் மாடிகள் மற்றும் மேல்மாடங்களில் திரண்டிருந்த பெண்களின் பாரத்தைத் தாங்க முடியாமல், அவை {அந்த வீடுகள்} விழும் நிலையில் இருந்தன. குருக்களால் {கௌரவர்களால்} வழிபடப்பட்டு, பல்வேறு இனிய பேச்சுகளைக் கேட்டு, தகுந்தவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் திரும்பச் சொல்லி, அனைவரின் மீதும் கண்களைச் செலுத்தியபடியே கேசவன் {கிருஷ்ணன்} அந்தத் தெருவில் சென்று கொண்டிருந்தான்.
கடைசியாக, கேசவன் {கிருஷ்ணன்}, குருக்களின் சபையை அடைந்த போது, அவனது பணியாட்கள், தங்கள் சங்குகளையும், எக்காளங்களையும் உரக்க முழங்கி, ஆகாயத்தை அந்த முழக்கத்தால் நிறைத்தனர். அதன்பேரில், அளவிலா ஆற்றல் படைத்த மன்னர்களின் அந்தச் சபை, விரைவில் தங்கள் கண்களைக் கிருஷ்ணன் மீது செலுத்தப்போகும் எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியுடன் நடுங்கினர். மழைநிறைந்த மேகங்கள் உருள்வதைப் போன்ற சடசடப்பை எழுப்பிய தேரின் ஒலியைக் கேட்ட அந்த ஏகாதிபதிகள், கிருஷ்ணன் அருகில் வந்துவிட்டதை உணர்ந்து, மகிழ்ச்சியால் தங்கள் உடல்களின் மயிர்ச்சிலிர்த்து நின்றனர். அந்தச் சபையின் வாயிலை அடைந்த சாத்வதர்களில் காளையான சௌரி {கிருஷ்ணன்}, கயிலாய மலையைப் போன்ற தனது தேரில் இருந்து இறங்கி, புதிதாய் எழுந்த மேகத் திரள் போல இருப்பதும், அழகால் சுடர்விடுவதும், பெரும் இந்திரனின் வசிப்பிடத்தைப் பிரதிபலிப்பதுமான அந்தச் சபைக்குள் நுழைந்தான்.
இருபுறத்திலும் விதுரன் மற்றும் சாத்யகியைத் தோளோடு தோள் சேர்த்தபடியும், ஆகாயத்தில் இருக்கும் சிறு ஒளிகளின் பிரகாசத்தை மூழ்கடிக்கும் சூரியனைப் போல, குருக்கள் அனைவரின் பிரகாசத்தையும் தனது சொந்த பிரகாசத்தால் மூழ்கடித்தபடியும், அந்த ஒப்பற்ற வீரன் {கிருஷ்ணன்}, அந்தச் சபைக்குள் நுழைந்தான். வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு கர்ணனும், துரியோதனனும் அமர்ந்தனர், அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பின்பு, கிருதவர்மனோடு கூடிய விருஷ்ணிகள் அமர்ந்தனர்.
ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்தும் விதமாக, பீஷ்மர், துரோணர் மற்றும் திருதராஷ்டிரனோடு கூடிய பிறர் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுவதற்குத் தயார் நிலையில் இருந்தனர். உண்மையில், அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} வந்ததும், ஒப்பற்றவனும் பார்வையற்றவனுமான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, துரோணர், பீஷ்மர் மற்றும் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். வலிமைமிக்கவனும், மனிதர்களின் ஆட்சியாளனுமான மன்னன் திருதராஷ்டிரன் தனது இருக்கையில் இருந்து எழுந்ததும், அவனை {திருதராஷ்டிரனை} சுற்றி இருந்த ஆயிரக்கணக்கான மன்னர்களும் எழுந்தனர்.
திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுச் சுற்றிலும் அழகானதாக இருந்த ஓர் இருக்கை, கிருஷ்ணனுக்காக அங்கே வைக்கப்பட்டிருந்தது.
அந்த இருக்கையில் மாதவன் {கிருஷ்ணன்} அமர்ந்ததும், மன்னன் {திருதராஷ்டிரன்}, பீஷ்மர், துரோணர் மற்றும் பிற ஆட்சியாளர்கள் அனைவருக்கும், அவரவர் வயதுக்குத் தகுந்தபடி புன்னகையுடன் தனது வாழ்த்துகளை அவன் {கிருஷ்ணன்} தெரிவித்தான். அந்தச் சபைக்கு வந்த கேசவனைக் {கிருஷ்ணனைக்} கண்டதும், பூமியின் மன்னர்கள் அனைவரும் மற்றும் குருக்கள் அனைவரும் அவனை {கிருஷ்ணனை} முறையாக வழிபட்டனர்.
எதிரிகளைத் தண்டிப்பவனும், பகை நகரங்களை வீழ்த்துபவனுமான அந்தத் தாசார்ஹ குலத்து வீரன் {கிருஷ்ணன்} அங்கே அமர்ந்திருந்த போது, ஹஸ்தினாபுரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கையில் தான் கண்ட முனிவர்கள், ஆகாயத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். நாரதரின் தலைமையில் நின்று கொண்டிருந்த முனிவர்களைக் கண்ட அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சந்தனுவின் மகனான பீஷ்மரிடம் மெதுவாக, "ஓ! மன்னா {பீஷ்மரே}, நம்முடைய இந்தப் பூலோக சபையைக் {கூட்டத்தைக்} காண முனிவர்கள் வந்திருக்கின்றனர். இருக்கைகள் மற்றும் ஏராளமான மரியாதைகளுடன் அவர்களை அழைப்பீராக. ஏனெனில், அவர்கள் {அந்த முனிவர்கள்} அமராதாபோது, இங்கே யாரும் தன் இருக்கையில் அமரக்கூடாது. எனவே, தங்கள் ஆன்மாக்களை முறையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களுக்கு, முறையான வழிபாட்டை விரைந்து அளிப்பீராக" என்றான் {கிருஷ்ணன்}.
பிறகு அந்த முனிவர்களை அரண்மனையின் வாயிலில் கண்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அவர்களுக்கான {அந்த முனிவர்களுக்கான} இருக்கைகளை விரைந்து கொண்டுவருமாறு பணியாட்களுக்கு உத்தரவிட்டார். அவர்களும் விரைவில், தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அழகிய பெரிய இருக்கைகளை அங்கே கொண்டு வந்தனர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த முனிவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆர்க்கியாக்களை ஏற்றதும், கிருஷ்ணன் தனது இருக்கையில் அமர்ந்தான்; அவ்வாறே மன்னர்கள் அனைவரும் அமர்ந்தனர். சாத்யகிக்கு அருமையான ஓர் இருக்கையை துச்சாசனன் அளித்தான், அதே வேளையில், விவிம்சதி, தங்கத்தாலான இருக்கையைக் கிருதவர்மனுக்குக் கொடுத்தான்.
ஒப்பற்றவர்களும், கோபம் நிறைந்தவர்களுமான கர்ணனும் துரியோதனனும் கிருஷ்ணனுக்கு அருகிலேயே ஒரே இருக்கையில் இணைந்து அமர்ந்தனர். தன் நாட்டுத் தலைவர்கள் சூழ இருந்த காந்தார மன்னன் சகுனியும், ஓ மன்னா {ஜனமேஜயா}, தனது மகனுடன் சேர்ந்து அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அருகே அமர்ந்தான். உயர் ஆன்மா கொண்ட விதுரன், கிருஷ்ணனின் இருக்கையைத் தொட்டுக் கொண்டிருந்ததும், வெள்ளை மான்தோல் விரிக்கப்பட்டிருந்ததுமான மணிக்கல் பதித்த இருக்கையில் அமர்ந்தான்.
அந்தச்சபையின் மன்னர்கள் அனைவரும், தாசார்ஹ குலத்து ஜனார்த்தனையே {கிருஷ்ணனையே} நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அமிர்தத்தை அடுத்து அடுத்துக் குடித்தாலும், எப்போதும் மனநிறைவு கொள்ளாதவர்களைப் போல, நிறைவு காணவில்லை. காயாம்பூ {Atasi flower} நிறத்திலான மஞ்சள் ஆடைகளை உடுத்தியிருந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தங்கத்தில் பதிக்கப்பட்ட நீலக்கல் {Sapphire} போல, அந்தச் சபையின் மத்தியில் அமர்ந்திருந்தான். கோவிந்தன் {கிருஷ்ணன்} தனது இருக்கையில் அமர்ந்ததும், யாரும் ஒரு வார்த்தையும் பேசாததால் அங்கே முற்றான அமைதி நிலவியது" என்றார் {வைசம்பாயனர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னர்கள் அனைவரும் அமர்ந்து, முற்றான அமைதி நிலவியபோது, அழகிய பற்களைக் கொண்ட கிருஷ்ணன், துந்துபியைப் போன்ற ஆழ்ந்த குரலில் பேசத் தொடங்கினான். மாதவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரனிடம் பேசினாலும், மழைக்காலத்தில் மேகங்கள் உருள்வது போன்ற ஆழ்ந்த குரலில் முழுச் சபையும் கேட்கும் வண்ணம் பேசினான். அவன் {கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம்}, "ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீரர்கள் எவரும் கொல்லப்படாதிருக்கக் குருக்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் சமாதானத்தை நிறுவுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். இதுதவிர, ஓ! மன்னா, வேறு எந்த நன்மையான வார்த்தைகளும் என்னிடம் இல்லை. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் கற்கப்பட வேண்டியவை அனைத்தையும் நீர் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்'.
இந்த உமது {கௌரவ} குலம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் கல்விக்காகவும், அதன் நடத்தைக்காகவும், சாதித்த அனைத்திற்காகப் புகழப்படுவதாலும், எல்லா அரச குலங்களுக்கு மத்தியிலும் மிகவும் சிறப்புமிக்கதாய் இருக்கிறது. பிறரின் மகிழ்ச்சியில் இன்பம், பிற மனிதர்களின் துயரில் துன்பம், {பிறர்} துயரை நீக்க விருப்பம், ஊறிழையாமை, நேர்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உண்மை ஆகியவை குருக்களிடம் {கௌரவர்களிடம்} இருக்கின்றன. அப்படியிருக்கையில், உமது குலம் உன்னதமானதே. எனவே, அதற்குச் சொந்தமான யாருக்கும் முறையற்றது செய்யப்படுமானால் அது பரிதாபத்திற்குரியதாகும். அதுவும் உம்மால் அது செய்யப்படுமானால் அது மேலும் பரிதாபத்திற்குரியதாகும்.
ஓ! குருக்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, அந்நியர்களிடம், அல்லது அவர்களோடு கூடியவர்களிடம் குருக்கள் ஏமாற்றுகரமாக நடந்து கொண்டால், அவர்களை {கௌரவர்களைத்} தடுப்பவர்களில் நீரே முதல் நபராக இருக்க வேண்டும். ஓ! குரு குலத்தவரே, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் தலைமையிலான உமது தீய மகன்கள், அறம், பொருள் ஆகியவற்றைக் கைவிட்டு, அறநெறியை அலட்சியப்படுத்தி, பேராசையால் மதியிழந்து, தங்கள் உறவினர்களில் முதன்மையானோரிடமே மிகவும் நீதியற்ற வகையில் நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிவீராக. (அனைவரையும் அச்சுறுத்தும்) அந்தப் பயங்கர ஆபத்து, குருக்களின் நடத்தையிலேயே தனது ஊற்றுக்கண்ணைக் கொண்டுள்ளது. நீர் அதை அலட்சியப்படுத்தினால், உலகளாவிய படுகொலைக்கு அது வழிவகுக்கும்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் விரும்பினால், இப்போது கூட உம்மால் அந்த ஆபத்தை விலக்க முடியும். ஏனெனில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சமாதானம் என்பது அடைவதற்கரிதானது அல்ல. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சமாதானத்தை நிறுவதல் என்பது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உம்மையும் என்னையும் சார்ந்தே இருக்கிறது. ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களை நீர் நேராக்கும் {அடக்கும்}, நான் பாண்டவர்களை நேராக்குவேன் {தணிப்பேன்}. உமது கட்டளை எதுவாக இருப்பினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களும், அவர்தம் தொண்டர்களும் அதற்குக் கீழ்ப்படிவதே தகும். அவர்களால் உமக்குக் கீழ்ப்படிந்து வாழ முடியுமென்றால், அதுவே அவர்களுக்கு மிகச் சிறந்ததும் ஆகும். உமது மகன்களை அடக்கி, நீர் சமாதானத்திற்கு முயன்றால், அஃது உமக்கும் நன்மை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும் அது நன்மையைத் தரும். கவனமாகச் சிந்தித்த பிறகு, ஓ! மன்னா, செயல்படுவீராக. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பரதனின் அந்த மகன்கள் (பாண்டவர்கள்) உமது கூட்டாளிகளாகட்டும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களால் ஆதரிக்கப்பட்டு, அறம், பொருள் ஆகிய இரண்டையும் பெற முயல்வீராக. உமது சக்திக்குத் தக்க அனைத்து முயற்சியாலும் முயன்றாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களைப் போன்ற கூட்டாளிகள் கிடைக்க மாட்டார்கள்.
பாண்டுவின் ஒப்பற்ற மகன்களால் பாதுகாக்கப்பட்டால், இந்திரனின் தலைமையிலான தேவர்களே கூட உம்மை வீழ்த்த முடியாது. அப்படியிருக்கும்போது வெறும் பூவுலக மன்னர்களால் உமது ஆற்றலை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் விவிம்சதி, அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தன், பாஹ்லீகன், சிந்துக்களின் தலைவன் {ஜெயத்ரதன்}, கலிங்கர்களின் ஆட்சியாளன், கம்போஜர்களின் மன்னன் சுதக்ஷிணன் ஆகியோரோடு யுதிஷ்டிரன், பீமசேனன், சவ்யசச்சின் {அர்ஜுனன்}, இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, பெரும் சச்தி படைத்த சாத்யகி, பெரும் பலமிக்கத் தேர்வீரனான யுயுத்சு ஆகியோரும் இருந்தால், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, புத்திகெட்ட எவன்தான் அவர்களோடு போரிட வருவான்?
ஓ! எதிரிகளைக் கொல்பவரே {திருதராஷ்டிரரே}, உமக்குப் பின்னால் குருக்களையும் {கௌரவர்களையும்}, பாண்டவர்களையும் கொண்டிருந்தால், முழு உலகத்தின் ஆட்சியுரிமையும், எதிரிகள் அனைவருக்கும் எதிரான ஒப்பற்ற தன்மையும் உமதாகும். உமக்கு நிகராகவோ, மேன்மையாக இருக்கும் உலகத்தின் ஆட்சியாளர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உம்முடனான கூட்டணிக்கு முயற்சிப்பார்கள். மகன்கள், பேரன்கள், தந்தையர், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோரால் அனைத்துப் புறத்தில் பாதுகாக்கப்படும் போது, மிகுந்த மகிழ்ச்சியோடு நீர் வாழத் தகுந்தவராவீர். இவற்றை உமது முன்பு வைத்து, பழங்காலத்தைப் போல அவர்களை அன்பாக நடத்தினால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இந்த முழு உலகத்தின் அரசுரிமையையும் நீர் அனுபவிப்பீர்.
இந்த உமது ஆதரவாளர்களோடு, பாண்டுவின் மகன்களையும் உமது ஆதரவாளர்களாகக் கொண்டால், ஓ! பாரதரே {திருதராஷ்டரரே}, நீர் உமது எதிரிகள் அனைவரையும் வெல்ல முடியும். இதுவே உமக்குச் சாதகமானவற்றில் சிறந்ததாகும். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, நீர் உமது மகன்கள், உறவினர்கள் மற்றும் ஆலோசகர்களோடு ஒற்றுமையாக இருந்தால், அவர்களால் வெல்லப்படும் முழு உலகத்தின் ஆட்சி உரிமையை நீர் அனுபவிப்பீர். ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, போரென்றாலோ, மொத்த அழிவைத் தவிர வேறு எதுவும் காட்சியில் தெரியவில்லை. உண்மையில், இரு தரப்பின் அழிவிலும் என்ன தகுதியை {புண்ணியத்தை} நீர் காண்பீர்? போர்க்களத்தில் பாண்டவர்கள் கொல்லப்பட்டாலோ, பலமிக்க உமது மகன்கள் வீழ்ந்தாலோ, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அதில் என்ன இன்பத்தை நீர் அனுபவிக்க முடியும்? எனக்குச் சொல்வீராக.
அவர்களில் அனைவரும் வீரமிக்கவர்களாகவும், ஆயுதங்களில் திறம்படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய அவர்கள் அனைவரும் போருக்கு விரும்புகிறார்கள். ஓ!, அவர்களை அச்சுறுத்தும் இந்தப் பயங்கர ஆபத்தில் இருந்து அவர்களைக் காப்பீராக. போருக்குப் பிறகு நீர் குருக்களில் அனைவரையும், பாண்டவர்களில் அனைவரையும் காணமாட்டீர். தேர்வீரர்களால் தேர்வீரர்கள் கொல்லப்பட்டு, இரு தரப்பின் வீரர்களும் எண்ணிக்கையிலும், பலத்திலும் குறைந்திருப்பதை நீர் காண்பீர். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருக்கிறார்கள். கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் அவர்கள், நிச்சயம் உலகத்தின் மக்கள் தொகையை அழிப்பார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலகைக் காப்பீராக. உலகத்தின் மக்கள் தொகை அழியாதிருக்கட்டும்.
ஓ! குரு குலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, உமது இயல்பான மனநிலையை நீர் மீண்டும் பெற்றால், இந்தப் பூமி இப்போது போலவே மக்களுடன் இருக்கும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூட்டணி அல்லது உறவுமுறையால் ஒருவருடன் ஒருவர் பிணைந்திருப்பவர்களும், பக்தி, தயாளம், பணிவு ஆகியவற்றைக் கொண்டவர்களும், தூய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுமான இந்த ஏகாதிபதிகளை அச்சுறுத்தி வரும் பயங்கர ஆபத்தில் இருந்து இவர்களைக் காப்பீராக. கோபம் மற்றும் பகையைக் கைவிட்டு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, இந்த மன்னர்கள் அனைவரும் அமைதியுடன் ஒருவரை ஒருவர் தழுவி, ஒன்றாக உண்டு, குடித்து, அற்புத ஆடைகளாலும், மலர்மாலைகளாலும் அலங்கரித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி, தங்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லட்டும்.
பாண்டவர்களிடம் நீர் கொண்ட பாசம் உமது இதயத்தில் புத்துயிரூட்டட்டும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அதுவே சமாதானத்தை நிறுவ வழிவகுக்கட்டும். குழந்தைப்பருவத்தில் அவர்கள் தங்கள் தந்தையை இழந்திருந்தபோது, நீரே அவர்களை வளர்த்தீர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} உமது சொந்த மகன்களைப் போல நீர் அவர்களைப் பேணிக் காப்பீராக. அவர்களைக் காப்பது உமது கடமையே. அதிலும் குறிப்பாக, அவர்கள் துயரத்தில் இருக்கும் போது காப்பது உமது கடமையே.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் இழக்காதிருப்பீராக. உம்மை வணங்கி, அருள் கோரும் பாண்டவர்கள், "உமது கட்டளையின் பேரில், நாங்கள் எங்கள் தொண்டர்களுடன் பெரும் துன்பத்தை அனுபவித்திருக்கிறோம். பனிரெண்டு {12} வருடங்கள் காட்டில் வாழ்ந்திருக்கிறோம். பதிமூன்றாவது {13} வருடத்தை உலகத்தில் இதுவரை வசித்திராத பகுதியில் தலைமறைவாக வாழ்ந்திருக்கிறோம். எங்கள் தந்தையும் {தந்தையான திருதராஷ்டிரரும்} அவர் பங்குக்கு மீற மாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையில், நாங்கள் எங்கள் உறுதிமொழியை மீறவில்லை. எங்கள் வார்த்தைகளை நாங்கள் மீறவில்லை என்பது எங்களுடன் இருந்த அந்தணர்களுக்குத் தெரியும். ஓ! பாரதக் குலத்துக் காளையே {திருதராஷ்டிரரே}, நாங்கள் எங்கள் உறுதி மொழிக்கேற்றவாறு நடந்து கொண்டதால், நீரும் அதற்கேற்றவாறு நடந்து கொள்வீராக. நீண்ட காலம் பெரும் துன்பத்தை அனுபவித்துவிட்டோம். இப்போதாவது, எங்களுக்குரிய பங்கான நாட்டை நாங்கள் பெறச்செய்வீராக.
அறம், பொருள் ஆகியவற்றை முழுதாக அறிந்தவரான உமக்கு எங்களைக் காப்பதே தகும். உமக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அமைதியாகப் பெரும் துன்பத்தை அனுபவித்தோம். எனவே, எங்களிடம் ஒரு தகப்பனாகவோ, சகோதரனாகவோ நடந்து கொள்ளும். ஓர் ஆசான், தன் சீடர்களிடம் ஓர் ஆசானைப் போல நடந்து கொள்ள வேண்டும், சீடர்களாக நாங்களும், உம்மிடம் ஆசானிடம் நடந்து கொள்வது போல நடந்து கொள்கிறோம். எனவே, எங்களிடம் நீர் எங்கள் ஆசானாக நடந்து கொள்ளும். நாங்கள் தவறிழைத்தால், எங்களை நேராக்குவது எங்களது தந்தையான உமது கடமை. எனவே, {வழிதவறி இருக்கும்} எங்களைப் வழியில் நிறுத்தி, நேர்மையெனும் அற்புதப் பாதையில் நடந்து செல்வீராக" என்று உம்மிடம் {என் மூலமாகச்} சொல்கிறார்கள் {பாண்டவர்கள்}.
அந்த உமது மகன்கள் {பாண்டவர்கள்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சபையில் கூடியிருக்கும் இந்த மன்னர்களுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள். அவர்கள் {பாண்டவர்கள் சபையோரிடம்}, "ஒரு சபையின் உறுப்பினர்கள் அறநெறி அறிந்தவர்களாக இருப்பின், முறையற்றது எதையும் நடக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஒரு சபையில், அறம் சார்ந்த உறுப்பினர்கள் இருந்தும், நீதியை அநீதியும், உண்மையைப் பொய்மையும் வென்றால், அந்த உறுப்பினர்களே வீழ்த்தப்பட்டவர்களும் கொல்லப்பட்டவர்களும் ஆவர். அநீதியால் {அநீதியெனும் கணையால்} துளைக்கப்படும் நீதி, ஒரு சபையின் பாதுகாப்பை நாடினால், அந்தக் கணை எடுக்கப்படாதிருக்குமேயானால், அந்தச் சபையின் உறுப்பினர்களே அந்தக் கணையால் துளைக்கப்பட்டவர்கள் ஆவார்கள். உண்மையில், அவ்வழக்கில், கரையில் நிற்கும் மரங்களின் வேர்களை ஓர் ஆறு தின்றுவிடுவதைப் போல, அந்தச் சபையின் உறுப்பினர்களை நீதியே கொன்றுவிடும்" என்று {பாண்டவர்கள்} சொன்னார்கள்.
ஓ! பாரத் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இப்போது நியாயம் தீர்ப்பீராக. நீதியின் கண் இருக்கும் பாண்டவர்கள் அனைத்தையும் சிந்தித்து, அமைதியான அணுகுமுறையுடன் இருக்கிறார்கள். அவர் என்ன சொன்னார்களோ, அஃது, உண்மை, அறம் மற்றும் நீதிக்கு இசைவானதாக இருக்கிறது. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, அவர்களது நாட்டைத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறீர் என்பதைத் தவிர நீர் அவர்களுக்கு வேறு எதைச் சொல்ல முடியும்?
இங்கே அமர்ந்திருக்கும் இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் (என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதைச்} சொல்லட்டும்! அறத்திற்கு உண்மையாக இருக்கும்படி நன்கு ஆலோசித்த பிறகு இவை என்னால் சொல்லப்பட்டது என்று உமக்குத் தோன்றினால், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இந்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் மரணத்தின் வலைகளில் இருந்து காப்பீராக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} சமாதானத்திற்கு உடன்படுவீராக. கோபத்திற்கு வசப்படாதீர். நீதியின் படி அவர்களது தந்தை வழி பங்கான நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுத்து, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உனது மகன்களுடன், மகிழ்ச்சியாகவும், ஆடம்பரமாகவும், உமது விருப்பங்கள் எல்லாம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டும் இன்புற்றிருப்பீராக.
நீதிமிக்கவர்கள் நடந்த பாதையிலேயே எப்போதும் யுதிஷ்டிரர் நடக்கிறார் என்பதை அறிவீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மிடமும், உமது மகன்களிடமும் யுதிஷ்டிரர் எப்படி நடந்து கொண்டார் என்பதை நீர் அறிவீர். நீங்கள் அவரை {யுதிஷ்டிரரை- பாண்டவர்களை} உயிரோடு எரிக்க முற்பட்டீர்கள், மனித வசிப்பிடங்களில் இருந்து அவரைத் துரத்தினீர்கள். இருப்பினும், உம்மீது நம்பிக்கை கொண்டு மீண்டும் அவர் உம்மிடம் வந்தார். அதன்பிறகும், இந்த உமது மகன்களோடு கூடிய நீர் அவரை இந்திரப்பிரஸ்தத்துக்குத் துரத்தினீர்? அங்கே இருந்தபோது, அவர் பூமியின் மன்னர்கள் அனைவரையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தார். இருப்பினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மை அலட்சியம் செய்யத் துணியாத அவர் உம்மையே நாடி நின்றார். என்னதான் அவர் உம்மிடம் இவ்வழியில் நடந்து கொண்டாலும், அவரது {யுதிஷ்டிரனது} ஆட்சிப்பகுதிகளையும், செல்வத்தையும், உடைமைகளையும் திருட விரும்பிய சுபலனின் மகன் {சகுனி}, {உங்களுக்கு} மிகவும் பயன் அளிக்கக்கூடிய பகடை வழியைத் தேர்ந்தெடுத்தான். அந்நிலைக்குத் தாழ்த்தப்பட்டும், சபையில் கிருஷ்ணை {திரௌபதி} இழுத்துவரப்படுவதைக் கண்டும், அளவிலா ஆன்மாகக் கொண்ட யுதிஷ்டிரர், தனது க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து சற்றும் நிலைதடுமாறவில்லை.
என்னைப் பொறுத்தவரை, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது நன்மையையும், அதே அளவுக்கு அவர்களது நன்மையையும் நான் விரும்புகிறேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றுக்காகச் சமாதானத்துக்கு உடன்படுவீராக. தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் கருதி, பூமியின் மக்கள் படுகொலைக்குள்ளாவதை அனுமதியாதிருப்பீராக. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பேராசையின் காரணமாக வெகுதூரம் சென்று விட்ட உமது மகன்களைத் தடுப்பீராக. பிருதையின் {குந்தியின்} மகன்களைப் பொறுத்தவரை, கடமைநிறைந்த சேவையுணர்வுடன் உமக்குக் காத்திருக்கவோ, போரிடவோ இரண்டுக்கும் சமமாகத் தயார் நிலையிலும் இருக்கின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உமக்கு எது நன்மை என்று படுகிறதோ, அதைப் பின்பற்றுவீராக!" என்றான் {கிருஷ்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அங்கே இருந்த பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைத் தங்கள் இதயத்துக்குள் உயர்வாகப் புகழ்ந்தனர். ஆனால் எவரும், துரியோதனனின் முன்னிலையில் எதையும் சொல்லத் துணியவில்லை" என்றார் {வைசம்பாயனர்}.
{திருதராஷ்டிரன்}, பிறகு, கிருஷ்ணனிடம், "ஓ! கேசவா, சொர்க்கத்திற்கு வழிநடத்தவல்லதும், உலகத்திற்கு நன்மை செய்வதும், அறத்திற்கு இசைவானதும், பகுத்தறிவு நிறைந்ததுமான வார்த்தைகளை நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய். எனினும், ஓ! ஐயா, நான் சுதந்திரமானவன் இல்லை. எனக்கு ஏற்புடைய எதையும் துரியோதனன் செய்வதில்லை. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, எனது கட்டளைக்குக் கீழ்ப்படியாதவனும், மூடனும், தீயவனுமான எனது மகனைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்வாயாக.
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, காந்தாரி, விதுரன் மற்றும் பீஷ்மரின் தலைமையிலான பிற நண்பர்களின் நன்மை மிக்க வார்த்தைகளுக்கு இவன் {துரியோதனன்} செவி கொடுப்பதே இல்லை. எனவே, தீய மனநிலையும், பாவம் நிறைந்த இதயமும், கோணல் புத்தியும், அறிவிலாத் தன்மையும், தீய ஆன்மாவும் கொண்ட இந்த இளவரசனுக்கு {துரியோதனனுக்கு} நீயே ஆலோசனை வழங்குவாயாக. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இதைச் செய்வதால், ஒரு நண்பன் எப்போதும் செய்ய வேண்டிய உன்னதச் செயலைச் செய்தவனாவாய்" என்றான் {திருதராஷ்டிரன்}.
இப்படிச் சொல்லப்பட்டவனும், அறம் {தர்மம்} மற்றும் பொருள் {அர்த்தம்} குறித்த உண்மைகளை அறிந்தவனுமான விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்}, எப்போதும் கோபம் நிறைந்திருக்கும் துரியோதனனிடம் நெருங்கி, இனிய வார்த்தைகளால் அவனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, ஓ! குருக்களில் சிறந்தவனே, உனது நன்மைக்காகவும், உனது தொண்டர்களின் நன்மைக்காகவும் நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. பெரும் ஞானத்திற்காகத் தனித்துவமாக அறியப்படும் ஒரு குலத்தில் நீ பிறந்திருக்கிறாய். நான் குறிப்பிடுவது போல நீதியுடன் செயல்படுவதே உனக்குத் தகும். கல்வியும், அற்புதமான நடத்தையும் கொண்ட நீ, அற்புதப் பண்புகள் அனைத்தையும் கொண்டிருக்கிறாய்.
இழிவான குடும்பங்களில் பிறந்தவர்களோ, தீய ஆன்மா படைத்தவர்களோ, கொடூரர்களோ, வெட்கங்கெட்டவர்களோதான், ஓ! ஐயா {துரியோதனா}, உனக்கு ஏற்புடைய வழியில் செயல்படுவார்கள். இவ்வுலகில், நீதிமிக்கவர்களின் விருப்பங்கள் மட்டுமே, அறம் மற்றும் பொருளின் விதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றன. எனினும், நீதியற்றவர்களின் செயல்களோ விபரீதமாக {வக்கிரமாகத்} தெரிகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நீ மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் மனநிலை விபரீத {வக்கிர} வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. இது போன்ற செயல்களில் தொடர்வது, பாவம் நிறைந்ததும், அச்சம் நிறைந்ததும், மிகவும் பொல்லாததும், மரணத்திற்கே வழிவகுப்பதுமாகும். ஓ! பாரதா {துரியோதனா}, அது தவிர, இது காரணமற்றதாகவும், நீண்ட காலம் உன்னால் கடைப்பிடிக்க முடியாததாகவும் இருக்கிறது.
கேடு மட்டுமே விளைவிக்கக் கூடிய இதை நீ தவிர்த்தால், உனது சொந்த நன்மையை அடையலாம். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ உன் சகோதரர்கள், தொண்டர்கள் மற்றும் ஆலோசகர்கள் செய்யும் பாவம் நிறைந்த, மதிப்பில்லாத செயல்களில் இருந்து தப்புவாயானால், ஓ! மனிதர்களில் புலியே, ஓ! பாரதர்களில் காளையே {துரியோதனா}, பெரும் ஞானமும், பெரும் முயற்சியுடன் கூடிய பெரும் வீரமும், பெரும் கல்வியும், தங்கள் ஆன்மாக்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவர்களுமான பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ சமாதானம் செய்து கொள்வாயாக.
இத்தகு நடத்தையே பெரும் ஞானம் கொண்ட திருதராஷ்டிரருக்கும், பெரும்பாட்டனுக்கும் (பீஷ்மருக்கும்), துரோணருக்கும், உயர்ஆன்ம கிருபருக்கும், சோமதத்தனுக்கும், ஞானமுள்ள பாஹ்லீகனுக்கும், அஸ்வத்தாமனுக்கும், விகர்ணனுக்கும், சஞ்சயனுக்கும், விவிம்சதிக்கும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, உனது பல்வேறு உறவினர்களுக்கும், பல்வேறு நண்பர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும்.
ஓ! ஐயா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உனது தந்தை மற்றும் தாயின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. நல்ல மகன்கள் எப்போதும் தங்கள் தந்தையின் கட்டளைகளையே நன்மையானதாகக் கருதுவார்கள். உண்மையில், பேரிடர் ஏற்பட்டால், ஒவ்வொருவரும் தனது தந்தையின் தலையீடுகளையே நினைவுகூர்வார்கள். ஓ! ஐயா, உனது தந்தை {திருதராஷ்டிரர்} பாண்டவர்களுடன் சமாதானத்தையே விரும்புகிறார். எனவே, ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, உனது ஆலோசகர்களுடன் கூடிய நீயும் அதையே விரும்புவாயாக.
தனது நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பிறகும் ஒரு மனிதன் அதன்படி நடக்கவில்லையென்றால், அந்த அலட்சியத்தின் விளைவாக அவன் கிம்பகம் என்று அழைக்கப்படும் கனியை {எட்டிக் கொட்டையை} விழுங்கியவன் போல இறுதியில் எரிந்து போவான். மூடத்தனத்தால் நன்மையான ஆலோசனைகளை ஏற்காத ஒருவன், காலம் தாழ்த்துவதால் பதட்டமடைந்து, தனது நோக்கத்தை அடைய முடியாமல், இறுதியில் வருந்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான். மறுபுறம், நன்மையான ஆலோசனைகளைக் கேட்ட பிறகு, அதை உடனே ஏற்று, தனது கருத்தைக் கைவிடுபவன், எப்போதும் உலகில் மகிழ்ச்சியை அடைகிறான். நல்ல அறிவுடைய நண்பர்களின் வார்த்தைகளைப் புறந்தள்ளி, அவை தனக்கும், தனது விருப்பத்துக்கும் எதிரானவையெனக் கருதுபவன், தனக்கு எதிரான வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதால், விரைவில் தனது எதிரிகளால் அடக்கப்படுகிறான்.
நீதிமான்களின் கருத்துகளை அலட்சியம் செய்து, தீயோரின் கருத்துகளுக்குக் கீழ்ப்படிபவன், தான் துயரில் மூழ்குவதன் விளைவாக விரைவில் தனது நண்பர்களை அழச் செய்கிறான். மேன்மையான ஆலோசகர்களை விட்டு, தாழ்ந்தவர்களிடம் ஆலோசனை கோருபவன், விரைவில் பெரும் துயரத்தில் வீழ்ந்து, தன்னைக் காத்துக் கொள்வதில் வெல்ல முடியாமல் போகிறான். போலியாக நடந்து கொண்டு, நல்ல நண்பர்கள் பேசுவதைக் கேளாதவனும், அந்நியர்களை மதித்து, தனது சொந்தங்களை வெறுப்பவனுமான பாவிகளின் தோழன், ஓ! பாரதா {துரியோதனா}, விரைவில் இந்தப் பூமியால் தள்ளப்படுவான்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, (பாண்டுவின் மகன்களிடம்) சண்டையிட்டு வரும் நிலையில், நீ பாவம் நிறைந்தவர்கள், இயலாதவர்கள் மற்றும் மூடர்களான பிறரிடம் பாதுகாப்பை நாடுகிறாய். சக்ரனைப் {இந்திரனைப்} போன்றவர்களும், வலிமைமிக்கத் தேர் வீரர்களுமான உனது சொந்தங்கள் அனைவரையும் அவமதித்து, அந்நியர்களிடம் உதவியையும் பாதுகாப்பையும் நாடும் வேறெந்த மனிதன் உன்னைத் தவிர இருக்கிறான்? குந்தியின் மகன்களை நீ அவர்கள் பிறந்ததில் இருந்தே துன்புறுத்தி வந்திருக்கிறாய். அவர்கள் உன்னிடம் கோபமடையவில்லை. ஏனெனில், பாண்டுவின் மகன்கள் அனைவரும் உண்மையில் அறம்சார்ந்தவர்களாவர்.
அவர்களுடைய பிறப்பு முதலே நீ பாண்டவர்களிடம் வஞ்சகமாக நடந்து வந்திருந்தாலும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, அந்தப் புகழ்வாய்ந்தவர்கள் {பாண்டவர்கள்} உன்னிடம் தாராளமாகவே நடந்து வந்திருக்கிறார்கள். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த உனது முக்கிய உறவினர்களிடம், உனக்குச் சமமாக, பெருந்தன்மையுடன் நீ நடந்து கொள்வதே உனக்குத் தகும். கோபத்தின் ஆளுகைக்கு இடங்கொடுக்காதே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஞானமுள்ளோரின் முயற்சிகள் எப்போதும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கும்.
உண்மையில், இவை மூன்றையும் அடைய முடியவில்லை என்றாலும், மனிதர்கள் அறம் மற்றும் பொருளையாவது பின்தொடர்கிறார்கள். மேலும், இவை மூன்றும் தனித்தனியாகக் கடைப்பிடிக்கப்பட்டால், தங்கள் இதயத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் அறத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்; நல்லவர்களுமில்லாமல், கெட்டவர்களாகவும் இல்லாமல் நடுநிலையில் இருப்பவர்கள் எப்போதும் சர்ச்சைக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும்; அதே வேளையில் மூடர்கள் இன்பத்தைத் தணிப்பதையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது காணப்படுகிறது.
மயக்கத்தால் அறத்தைக் கைவிடும் மூடன், பொருளையும் இன்பத்தையும் நீதியற்ற வழிகளில் அடைந்து, விரைவில் தனது அறிவால் அழிவை அடைகிறான். பொருள் மற்றும் இன்பத்தைக் குறித்துப் பேசுபவர்கள், முதலில் அறத்தையே பயில வேண்டும். ஏனெனில், பொருளோ {அர்த்தமோ}, இன்பமோ {காமமோ} (உண்மையில்) அறத்தில் இருந்து விலகி இருப்பது இல்லை. ஓ! மன்னா {துரியோதனா}, அறம் மட்டுமே அந்த {அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய) மூன்றுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், மூன்றையும் அடைய முயல்பவன், அறத்தின் துணை கொண்டு மட்டுமே காய்ந்த புற்குவியலைப் பற்றும் நெருப்பு போல வளர்கிறான்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஓ! ஐயா, செழிப்பில் மலர்ச்சியடைந்திருப்பதும், பூமியின் ஏகாதிபதிகள் அனைவராலும் அறியப்பட்டதுமான பரந்த பேரரசை நீதியற்ற வழியில் அடைய நீ முயல்கிறாய். ஓ! மன்னா {துரியோதனா}, நீதிமிக்க நடத்தையுடன் வாழ்வோரிடம் போலியாக நடந்து கொண்டால், கோடரியைக் கொண்டு காட்டை அறுப்பதுபோல, நிச்சயம் நீயே உன்னை அறுத்துக் கொள்வாய். எவனுடைய வீழ்ச்சியை {அவமானத்தை} ஒருவன் விரும்பவில்லையோ, அவனுடைய புத்தியை அவன் கலங்கச் செய்யக்கூடாது. ஏனெனில், ஒருவனது புத்தி கலங்கடிக்கப்பட்டால், அவன் நன்மையானது எதுவோ அதில் தனது கவனத்தை அர்ப்பணிக்க முடியாது.
தனது ஆன்மாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன், மூவுலகங்களில் எவரையும் அவமதிக்க மாட்டான். சாதாரண உயிர்களைக் கூட ஒருவன் அவமதிக்கக் கூடாது எனும்போது, மனிதர்களில் காளையரான பாண்டுவின் மகன்களை அவமதிக்கவே கூடாது. கோபத்தின் ஆளுகைக்கு அடிபணிபவன், சரி தவறு என்பதில் தனது புத்தியை இழக்கிறான். படர்ந்து வளர்பவை எப்போதும் வெட்டப்பட வேண்டும். ஓ! பாரதா {துரியோதனா}, பார், இதுவே {பிரமாணமே} சாட்சியாகும். தற்போது, ஓ! ஐயா, தீயவர்களுடன் சேர்வதைவிட, பாண்டவர்களுடன் சேர்வதே உனக்குச் சிறந்தது. நீ அவர்களுடன் சாமாதானம் செய்து கொண்டால், உனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறிவன் ஆவாய்.
ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பாண்டவர்களால் தோற்றுவிக்கப்பட்ட பேரரசை அனுபவித்துக் கொண்டு, அந்தப் பாண்டவர்களையே அலட்சியம் செய்துவிட்டு, நீ பிறரிடம் பாதுகாப்பை நாடுகிறாய். ஓ! பாரதா {துரியோதனா}, துச்சாசனன், துர்விஷஹன், கர்ணன் மற்றும் சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} உனது மாநிலத்தின் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, உன் செழிப்புத் தொடரும் என்று நீ விரும்புகிறாய். எனினும், பாண்டவர்களின் அறிவுக்கும், அறத்திற்கும், செல்வத்தை அடையும் திறனுக்கும், ஆற்றலுக்கும் முன்னிலையில் இவர்கள் மிகச் சிறியவர்களாவர். உண்மையில், ஓ! பாரதா {துரியோதனா}, (நான் சொன்ன நால்வரையும் கூட விட்டு விடு. அவர்களைத் தவிர) உன்னைத் தலைமையாகக் கொண்ட இந்த மன்னர்கள் அனைவரும் போர்க்களத்தில் கோபத்துடன் இருக்கும் பீமனின் முகத்தைக் காணக்கூடத் திறனற்றவர்கள் ஆவர்.
ஓ! ஐயா, பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொண்ட இந்தப் படை, உண்மையில் உனது கையில் இருக்கின்றது. பீஷ்மர், துரோணர், இந்தக் கர்ணன், கிருபர், பூரிஸ்ரவஸ், சோமதத்தன், அஸ்வத்தாமன் மற்றும் ஜயத்ரதன் ஆகியோரும் அதில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கூடி வந்தால் கூட, இவர்களால் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகப் போரிடமுடியாது. உண்மையில், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள் என அனைவராலும் வீழ்த்தப்பட முடியாதவன் அர்ஜுனன் ஆவான். போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாதே. அர்ஜுனனுடன் போரிட்டு வீட்டுக்குப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் திரும்பிய ஒரு மனிதனை, இந்தப் பூமியின் அரச இனங்களில் எதிலும் நீ கண்டிருக்கிறாயா? ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உலகளாவிய படுகொலையால் கிடைக்கும் பலன்தான் என்ன?
யாரை வீழ்த்திவிட்டால் வெற்றி உனதாகுமோ அந்த அர்ஜுனனை வீழ்த்தவல்ல ஒரு தனி மனிதனைக் காட்டிவிடு பார்ப்போம்? கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரையும் காண்டவப் பிரஸ்தத்தில் வீழ்த்திய அந்தப் பாண்டுவின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போர்க்களத்தில் எவன் மோதுவான்? விராட நகரத்தில் ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த ஆச்சரியமிக்கப் போர் கேள்விப்படப்படுகிறது. இதுவே போதுமான சாட்சியில்லையா? தேவர்களுக்குத் தேவனான சிவனையே போரில் மனநிறைவு கொள்ளச் செய்த வீரனும், கோபம் தூண்டப்பட்டால் ஒப்பிலாதவனும், தடுக்கப்பட முடியாதவனும், எப்போதும் வெல்பவனும், அழிவடையாதவனுமான அர்ஜுனனை வீழ்த்திவிடலாம் என்று நீ நம்புகிறாயா?
என்னைத் துணையாகக் கொண்டு பிருதையின் மகன் {அர்ஜுனன்}, எதிரியை நோக்கிப் போர்க்களத்தில் முன்னேறும் போது, அவனுக்கு {அர்ஜுனனுக்கு} சவால் விடக்கூடிய அளவு தகுதிவாய்ந்தவன் எவன் இருக்கிறான்? புரந்தரனாலும் {இந்திரனாலும்} அவ்வாறு செய்ய இயலுமா? அர்ஜுனனைப் போரில் வீழ்த்தவல்லவன், தனது கரங்களால் பூமியைத் தாங்கவல்லவனாக இருப்பான், கோபத்தில் பூமியின் மொத்த மக்கள் தொகையையும் எரித்துவிடவல்லவனாக இருப்பான், சொர்க்கத்தில் இருந்து தேவர்களையே கூடத் தூக்கிவீசவல்லவனாக இருப்பான். உனது மகன்களையும், சகோதரர்களையும், சொந்தங்களையும், உறவினர்களையும் பார். உன் நிமித்தமாகப் பாரதக் குலத்தின் இந்தத் தலைவர்கள் அனைவரும் அழிவடைய வேண்டாம். கௌரவக் குலம் நிர்மூலமாக்கப்பட வேண்டாம்.
ஓ! மன்னா {துரியோதனா}, உனது குலத்தை அழித்தவன் என்றும், அதன் சாதனைகளை அழித்தவன் என்றும் மக்கள் உன்னைச் சொல்ல வேண்டாம். (சமாதானத்திற்கு உடன்பட்டால்) வலிய தேர்வீரர்களான அந்தப் பாண்டவர்கள் உன்னை யுவராஜாவாகவும் {Yuvaraja = பட்டத்து இளவரசனாகவும்}, மனிதர்களின் தலைவரான உனது தந்தை திருதராஷ்டிரரை, இந்தப் பரந்த பேரரசின் ஆட்சியாளராகவும் நிறுவுவார்கள். ஓ! ஐயா, நிச்சயமாகக் கிடைப்பதும், உனக்காகக் காத்திருப்பதுமான செழிப்பை அலட்சியம் செய்யாதே. பிருதையின் மகன்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} பாதி நாட்டை அளித்து, பெரும் செழிப்பை வெல்வாயாக. பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டு, உனது நண்பர்களின் ஆலோசனைப்படி செயல்பட்டு, அவர்களுடன் இன்புற்றிருக்கும் நீ, எப்போதும் நன்மையையே அடைந்திருப்பாய்" என்றான் {கிருஷ்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், பழியுணர்ச்சியுடைய துரியோதனனிடம், "சொந்தங்களுக்குள் சமாதானத்தைக் கொண்டு வரவே கிருஷ்ணன் உன்னிடம் பேசியிருக்கிறான். ஓ! ஐயா, அந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவாயாக, கோபத்தின் ஆளுகைக்கு ஆட்படாதே. ஓ! ஐயா, உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளின்படி நீ செயல்படவில்லை என்றால் உனக்கு நன்மையைக் கொடுக்கும் செழிப்பையோ, மகிழ்ச்சியையோ எப்போதும் நீ அடைய மாட்டாய். ஓ! ஐயா, அறம் மற்றும் பொருளுக்கு இசைவானதையே வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} உன்னிடம் சொன்னான். அந்த நோக்கத்தை நீ ஏற்பாயாக.
ஓ! மன்னா {துரியோதனா}, உலகத்தில் வாழும் மக்களை அழித்துவிடாதே. ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {துரியோதனா}, கேசவன் {கிருஷ்ணன்}, உனது தந்தை {திருதராஷ்டிரன்}, ஞானம் கொண்ட விதுரன் ஆகியோரால் சொல்லப்பட்டவையும், உனக்கு நன்மை நிறைந்தவையும், சத்தியத்துக்கு இசைவானவையுமான வார்த்தைகளை நீ மீறுவாயெனில், அந்த உனது துர்க்குணத்தால், பூமியின் மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் பிரகாசமாக இருக்கும் இந்தப் பாரதர்களின் செழிப்பை, திருதராஷ்டிரனின் வாழ்நாளிலேயே நீ அழித்துவிடுவாய். இந்த ஆணவ மனநிலையுடனேயே நீ இருந்தால், உனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்}, மகன்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் உயிரையும் நீ பறித்துவிடுவாய். உனது குலத்தை அழிப்பவனாக ஆகிவிடாதே! பொல்லாதவனாக இராதே; உனது இதயம் பாவம் நிறைந்ததாக இருக்க வேண்டாம்; நீதியற்றவர்களின் பாதையில் நடக்காதே. உனது தந்தை மற்றும் தாயைத் துன்பக்கடலில் மூழ்கச் செய்யாதே" என்றார் {பீஷ்மர்}.
பீஷ்மர் முடித்த பின்னர், துரோணரும், கோபம் நிறைந்து பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த துரியோதனனிடம், "ஓ! ஐயா, கேசவன் {கிருஷ்ணன்} உன்னிடம் சொன்ன வார்த்தைகள் அறம் மற்றும் பொருள் நிறைந்தவையாகும். சந்தனுவின் மகனான பீஷ்மரும் இதையேதான் சொன்னார். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அவ்வார்த்தைகளை ஏற்பாயாக.
அவர்கள் இருவரும் {கிருஷ்ணனும், பீஷ்மரும்} ஞானிகளும், பெரும் புத்திக்கூர்மையுள்ளவர்களும், ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், உனது நன்மைக்கானவற்றைச் செய்ய விரும்புபவர்களும், பெரும் கல்வி கற்றவர்களும் ஆவர். எது நன்மையோ அதையே அவர்கள் சொன்னார்கள். ஓ! மன்னா, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே {துரியோதனா}, கிருஷ்ணன், பீஷ்மர் ஆகிய இருவரின் வார்த்தைகளை ஏற்று, அவர்கள் சொன்னது போலச் செயல்படுவாயாக. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, புரிதலில் உண்டாகும் மாயையினால் மாதவனை {கிருஷ்ணனை} அலட்சியம் செய்யாதே.
உன்னை எப்போதும் ஊக்குவித்து வருபவர்கள், வெற்றியைக் கொடுக்கவல்லவர்களல்ல. போர்க்காலத்தில் அவர்கள் வெறுப்பின் சுமையைத் தூக்கி மற்றவர்கள் கழுத்தில் வீசுவார்கள் [1]. பூமியில் வாழும் மக்களைப் படுகொலை செய்யாதே. உனது மகன்களையும், சகோதரர்களையும் கொன்றுவிடாதே. வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் எந்தப் படைக்கு மத்தியில் இருக்கிறார்களோ, அந்தப் படையை யாராலும் வெல்ல முடியாது. ஓ! பாரதா {துரியோதனா}, உனது நண்பர்கள், கிருஷ்ணன் மற்றும் பீஷ்மர் ஆகியோரின் உண்மைநிறைந்த வார்த்தைகளை நீ ஏற்கவில்லையென்றால், ஓ! ஐயா, நீ நிச்சயம் வருந்த வேண்டியிருக்கும்.
[1] தாங்கள் செய்ய வேண்டியதைப் பிறர் செய்யும்படி விட்டுவிடுவார்கள்.
ஜமதக்னியின் மகன் {பரசுராமர்} சொன்னதைவிட அர்ஜுனன் இன்னும் பெரியவனாவான். தேவகியின் மகனான கிருஷ்ணனைப் பொறுத்தவரை, அவன் தேவர்களாலும் எதிர்க்க இயலாதவன் ஆவான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, இன்பத்தையும், நன்மையையும் உண்மையில் அளிப்பனவற்றை உனக்குச் சொல்வதால் என்ன பயன்? அனைத்தும் இப்போது உனக்குச் சொல்லப்பட்டுவிட்டது. நீ விரும்பியதைச் செய்வாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, மேலும் எதையும் உனக்குச் சொல்ல நான் விரும்பவில்லை" என்றார் {துரோணர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "துரோணர் நிறுத்தியதும், க்ஷத்ரி {க்ஷத்தா} என்றும் அழைக்கப்படும் விதுரன், துரியோதனன் மீது கண்களைச் செலுத்தி, பழியுணர்ச்சி கொண்ட அந்தத் திருதராஷ்டிரரின் மகனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, ஓ! பாரத்குலத்தின் காளையே, நான் உனக்காக வருந்தவில்லை. எனினும், காந்தாரி மற்றும் உனது தந்தை {திருதராஷ்டிரர்} ஆகிய இந்த முதிய இணைக்காக நான் வருந்துகிறேன். (யாரை விரைவில் இழக்கப் போகிறார்களோ, அந்தத்) தீய ஆன்மா கொண்ட உன்னைத் தங்கள் பாதுகாவலனாகக் கொண்ட அவர்கள் {காந்தாரியும் திருதராஷ்டிரரும்}, தங்கள் நண்பர்களையும் ஆலோசகர்களையும் இழந்து, சிறகிழந்த பறவை இணை ஒன்றைப் போலத் தங்களைப் பார்த்துக்கொள்ள எவனுடனும் திரிவார்களே. தன் குலத்தை அழித்துக் கொள்பவனான தீய மகனைப் பெற்றதால், ஐயோ, இவர்கள் இருவரும் கவலையுடன் பூமியெங்கும் பிச்சைக்காரர்களாகத் திரியப் போகிறார்களே" என்றான் {விதுரன்}.
அதன்பிறகு, மன்னர்கள் சூழ தனது தம்பிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்த துரியோதனனிடம் பேசிய மன்னன் திருதராஷ்டிரன், "ஓ! துரியோதனா, உயர் ஆன்ம சௌரி {கிருஷ்ணன்} சொன்னவற்றைக் கேள். நித்தியமானவையும், மிகுந்த பயனுள்ளவையும், உயர்ந்த நன்மைக்கு உகந்தவையுமான அந்த வார்த்தைகளை ஏற்பாயாக. களங்கமற்ற செயல்களையுடைய கிருஷ்ணனின் துணையுடன், மன்னர்கள் அனைவரின் மத்தியிலும், நாம் அனைவரும் நமது நோக்கங்கள் நிறைவேறியவர்கள் ஆவோம்.
ஓ! ஐயா, கேசவன் {கிருஷ்ணன்} மூலமாக உறுதியாக இணைந்து யுதிஷ்டிரனிடம் சமரசம் செய்து கொள்வாயாக. அமைதிக்கான ஆடி விழாவைப் போல { like unto an august ceremony of propitiation = மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய பிரம்மாண்டமான நிவர்த்தி [சமாதான] விழாவைப் போலப்} பாரதர்களுக்கான பெரும் நன்மையை நாடுவாயாக. வாசுதேவனை {கிருஷ்ணனை} உபாயமாகக் கொண்டு பாண்டவர்களுடன் நெருக்கமாகப் பிணைவாயாக. அதற்கான நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாதே. எனினும், நன்மையை அடைய வேண்டிய உன்னிடம் சமாதானத்தை வேண்டும் கேசவனை {கிருஷ்ணனை} நீ அலட்சியம் செய்வாயெனில், எப்போதுமே வெற்றி உனதாகாது." என்றான் {திருதராஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்டு, அந்த முதிய மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} பரிவு கொண்ட பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும், கீழ்ப்படியாதவனான துரியோதனனிடம் மீண்டும், "இரண்டு கிருஷ்ணன்களும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} கவசம் தரிக்காத போதே, காண்டீவம் செயல்படாமல் ஓய்வெடுக்கும்போதே, போர் நெருப்பில் நீர்க்காணிக்கைகளை ஊற்றி எதிரிகளின் பலத்தைத் தௌமியர் எரிக்காத போதே, பணிவைத் தனது ஆபரணமாகக் கொண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான யுதிஷ்டிரன் உனது துருப்புகளின் மீது தனது கோபப் பார்வையைச் செலுத்தாதபோதே பகைமை தணிந்து போகட்டும்.
வலிமைமிக்க வில்லாளியும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பீமசேனன் தனது பிரிவின் நடுவே நிற்காதபோதே பகைமை தணிந்து போகட்டும். கையில் கதாயுதத்துடன், போர்களத்தின் மத்தியில் திரிந்து (பகைப்) பிரிவுகளைப் பீமசேனன் அடிக்காத போதே, பாண்டவர்களுடன் சமாதானம் ஏற்படட்டும். வீரர்களைக் கொல்லும் கதாயுதத்தால், தங்கள் பருவகாலத்தில் பழுத்த பனம்பழங்களைப் போல, யானைகளின் முதுகில் இருந்து போரிடும் வீரர்களின் தலைகளைப் போர்க்களத்தில் பீமன் உருளச் செய்யாத போதே பகைமை தணிந்து போகட்டும்.
ஆயுதங்களை நன்கு அறிந்த நகுலனும், சகாதேவனும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும், விராடனும், சிகண்டியும், சிசுபாலனின் மகனும் {திருஷ்டகேதுவும்} கவசம் தரித்து, பெரும் முதலைகள் ஆழ்ந்து போவது போல, உனது படையணிகளுக்குள் ஊடுருவித் தங்கள் கணைகளை மழையாகப் பொழியாத போதே பகைமை தணிந்து போகட்டும்.
கூடியிருக்கும் மன்னர்களின் மென்மையான உடல்களின் மேல் கடும் சிறகுகள் கொண்ட கணைகள் விழாத போதே பகைமை தணிந்து போகட்டும். ஆயுதங்களில் நற்திறன் வாய்ந்தவர்களும், வேகமான கரங்களைக் கொண்டவர்களும், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அடிக்க வல்லவர்களுமான வலிமைமிக்க வில்லாளிகளால் இரும்பாலும், உருக்காலும் ஆன ஆயுதங்கள் குறிதவறாமல் அடிக்கப்பட்டு, சந்தனமும், நறுமணத் தைலங்களும் பூசப்பட்டவையும், தங்க மாலைகளாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையுமான வீரர்களின் மார்பைத் துளைக்காத போதே பகைமை தணிந்து போகட்டும்.
தலைவணங்கும் உன்னை, மன்னர்களில் யானையும், நீதிமானுமான யுதிஷ்டிரன் ஆரத்தழுவி வரவேற்கட்டும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, வேள்விக் கொடைகளின் ஈகையால் தனித்துவம் கொண்ட அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, கொடி {துவஜம்} மற்றும் அங்குசம் ஆகிய குறிகளால் அடையாளம் காணப்படும் உள்ளங்கையைக் கொண்ட தனது வலது கையை உனது தோளில் வைக்கட்டும். நீ அமர்ந்திருக்கும்போது, சிவந்திருப்பதும், ரத்தினங்களால் குறிக்கப்பட்டதும், விரல்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது கைகளால் உனது முதுகை அவன் {யுதிஷ்டிரன்} தட்டிக் கொடுக்கட்டும்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, ஆச்சா {சால} மரத்தைப் போன்ற தோள்களையுடையவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்} உன்னை ஆரத்தழுவியபடி சமாதானத்திற்காக உன்னிடம் மென்மையாகப் பேசட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, அர்ஜுனன் மற்றும் இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகிய மூவராலும் மரியாதையாக வணங்கப்பட்டு, அவர்களது தலையை நீ முகர்ந்து, பாசத்துடன் அவர்களிடம் உரையாடுவாயாக.
உனது வீரச் சகோதரர்களான பாண்டுவின் மகன்களுடன் இணைந்திருக்கும் உன்னைக் கொண்டு இந்த ஏகாதிபதிகள் அனைவரும் ஆனந்தக் கண்ணீர் சிந்தட்டும். உங்கள் நட்பிணைப்பின் செய்தி, இந்த மன்னர்கள் அனைவரின் நகரங்களிலும் பிரகடனம் செய்யப்படட்டும். (உனது இதயத்தில்) சகோதரப் பாசத்துடன் கூடிய உணர்வுகளோடு இந்தப் பூமி உன்னால் ஆளப்படட்டும். (பொறாமை மற்றும் கோபம்) எனும் நோயில் இருந்து உனது இதயம் விடுபடட்டும்" என்றனர்.
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment