Friday, December 29, 2023

Mahabharatam in tamil 215

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-215
உத்யோக பர்வம்
..
"இந்தக் கூந்தலை நினைப்பாயாக!" என்ற திரௌபதி
...
நகுலன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! மாதவா {கிருஷ்ணரே}, அறநெறிகள் அறிந்தவரும், ஈகை குணம் கொண்டவரும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரரால் நிறையச் சொல்லப்பட்டது. பல்குனர் {அர்ஜுனர்} என்ன சொன்னார் என்பதை நீர் கேட்டீர். ஓ! வீரரே {கிருஷ்ணரே}, என் கருத்தை நீரே பலமுறை வெளிப்படுத்திவிட்டீர். இவை யாவற்றையும் அலட்சியம் செய்து, எதிரியின் விருப்பங்களை முதலில் கேட்டு, சந்தர்ப்பத்திற்கு எது தகுந்ததென நீர் கருதுகிறீரோ அதைச் செய்யும்.


ஓ! கேசவரே {கிருஷ்ணரே}, பல்வேறு விவகாரங்களுக்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் பல்வேறு வகையிலேயே இருக்கின்றன. எனினும், ஓ !எதிரிகளைத் தண்டிப்பவரே {கிருஷ்ணரே}, சந்தர்ப்பத்தை நோக்கில் கொண்டு ஒரு மனிதன் செயல்படும்போதே, வெற்றி வெல்லப்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பொருள் ஒரு வகையில் தீர்க்கப்பட்டால், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அது தகாததாகி வேறுபடுகிறது.


எனவே, ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {கிருஷ்ணரே}, இவ்வுலகத்தின் மனிதர்கள் எவரும் ஒரே கருத்துடன் தொடர்ந்து இருக்க முடியாது. நாங்கள் காட்டில் வாழ்ந்த போது, எங்கள் இதயங்கள் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்ய விரும்பியது. நாங்கள் தலைமறைவாக இருந்த போதோ, அது {வேறு} ஒரு வகையில் இருந்தது. இப்போதோ, ஓ! கிருஷ்ணரே, இனியும் தலைமறைவு வாழ்வு தேவைப்படாதபோது, எங்கள் விருப்பங்கள் வேறுவிதமாக மாறியிருக்கின்றன.


ஓ! விருஷ்ணி குலத்தவரே {கிருஷ்ணரே}, நாங்கள் காட்டில் உலவி கொண்டிருந்த போது, நாட்டின் மீதான பற்று எங்களுக்கு இப்போதைய அளவுக்குப் பெரியதாக இல்லை. ஓ! வீரரே {கிருஷ்ணரே} எங்கள் வனவாச காலம் முடிந்து திரும்பிவிட்டோம் என்பதைக் கேட்டதும், ஓ! ஜனார்த்தரரே {கிருஷ்ணரே}, உமது அருளால் இங்கே ஏழு {7} அக்ஷொஹிணிகள் எண்ணிக்கையில் படை திரண்டுள்ளது.

நினைத்துப் பார்க்க முடியாத அளவு வலிமையும் ஆற்றலும் கொண்ட இந்த மனிதர்களில் புலிகள் ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக நிற்பதைக் காணும் எந்த மனிதன் தான் அச்சத்தால் பீடிக்கப்பட மாட்டான்? எனவே, குருக்கள் மத்தியில் சென்றதும், முதலில் மென்மை நிறைந்த வார்த்தைகளையும், பிறகு அச்சுறுத்துவனவற்றையும் பேசி அந்தத் தீய துரியோதனனை அச்சத்தால் நீர் பதைபதைக்க வைப்பீராக.


ஓ! கேசவரே {கிருஷ்ணரே}, யுதிஷ்டிரர், பீமசேனர், ஒப்பற்ற பீபத்சு, சகாதேவன், நான், நீர், ராமர் {பலராமர்}, பெரும் வலிமையும் சக்தியும் கொண்ட சாத்யகி, தனது மகன்களோடு கூடிய விராடர், தனது கூட்டாளிகள் மற்றும் திருஷ்டத்யும்னனோடு கூடிய துருபதர், பெரும் ஆற்றல்படைத்த காசியின் ஆட்சியாளர், சேதிகளின் தலைவனான திருஷ்டகேது ஆகியோரோடு சதையும், இரத்தமும் கொண்ட எந்த மனிதனால் போரில் மோத முடியும்?

ஓ! வலிய கரங்கள் கொண்டவரே {கிருஷ்ணரே}, நீர் அங்குச் சென்றதுமே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரர் விரும்பிய நோக்கத்தைச் சாதிப்பீர், என்பதில் ஐயமில்லை. ஓ! பாவமற்றவரே {கிருஷ்ணரே}, விதுரர், பீஷ்மர், துரோணர், பாஹ்லீகர் ஆகியோர் நீர் சொல்லும் ஞானமொழிகளைப் புரிந்து கொள்வர். அந்த அறிவுரைக்கேற்ப நடக்குமாறு மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரரையும், பாவம் நிறைந்த மனநிலை கொண்டவனான சுயோதனனையும் {துரியோதனனையும்} அவர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஓ! ஜனார்த்தனரே {கிருஷ்ணரே}, நீர் பேச்சாளராகவும், விதுரர் கேட்பவராகவும் இருக்கும்போது, மென்மையாகவும், சாதாரணமாகவும் எந்தக் காரியத்தைத்தான் விளக்க முடியாது?" என்றான் {நகுலன்}.


சகாதேவன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், " உண்மையில், மன்னன் {யுதிஷ்டிரர்} சொன்னது நிலைத்த அறமாகும். ஆனால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {கிருஷ்ணரே}, போர் நிச்சயம் நடக்கும்வண்ணம் நீர் செயல்பட வேண்டும். கௌரவர்களே பாண்டவர்களிடம் சமாதானம் கொள்ள விரும்பினாலும், ஓ! தாசார்ஹ குலத்தவரே {கிருஷ்ணரே}, அவர்களுடன் போர் ஏற்படும்படி அவர்களைத் தூண்டுவீராக.


ஓ! கிருஷ்ணரே, சபைக்கு மத்தியில் பாஞ்சால இளவரசி {திரௌபதி} அந்த அவல நிலையில் கொண்டுவரப்பட்டதைக் கண்ட பிறகும், சுயோதனன் {துரியோதனன்} கொல்லப்பட்டாமல் எனது கோபம் எப்படித் தணியும்? ஒ கிருஷ்ணா, பீமர், அர்ஜுனர், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரர் ஆகியோர் அறம் சார்ந்த மன நிலையைக் கொள்வதாக இருந்தாலும், அறத்தைத் துறக்கும் நான், போர்க்களத்தில் துரியோதனனுடன் மோத விரும்புகிறேன்" என்றான் {சகாதேவன்}.


அப்போது சாத்யகி {கிருஷ்ணனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {கிருஷ்ணரே}, உயர் ஆன்மா கொண்ட சகாதேவர் உண்மையையே பேசியிருக்கிறார். நான் துரியோதனனிடம் கொண்டுள்ள கோபம், அவனது மரணத்தால் மட்டுமே தணியும். கந்தலுடையும், மான் தோலும் உடுத்தி, பாண்டவர்கள் துயர்நிறைந்த நிலையில் காட்டில் இருப்பதைக் கண்டபோது நீரும் சினம் கொண்டீர், என்பது உமக்கு நினைவில்லையா? எனவே, ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {கிருஷ்ணரே}, போரில் கடுமையானவரான மாத்ரியின் வீர மகன் {சகாதேவர்} சொன்னதே இங்குக் கூடியிருக்கும் வீரர்கள் அனைவரின் ஒருமனதான கொள்கையாக இருக்கிறது" என்றான் {சாத்யகி}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்ம யுயுதனனின் {Yuyudhana} இவ்வார்த்தைகளால், அங்கே கூடியிருக்கும் வீரர்கள் அனைவரும் சிங்கம் போலக் கர்ஜித்தனர். மேலும் அந்த வீரர்கள் அனைவரும் சாத்யகியின் வார்த்தைகளை உயர்வாக மெச்சி, அவனை {சாத்யகியை} புகழ்ந்து "அருமை! அருமை!" என்றனர். போரிடும் ஆவலால் அவர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தொடங்கினர்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அறமும் பொருளும் நிறைந்த மன்னரின் {யுதிஷ்டிரரின்} அமைதிநிறைந்த வார்த்தைகளைக் கேட்டவளும், பெரும் துயரத்தில் இருந்தவளும், நீண்ட கூந்தலுடையவளும், மன்னன் துருபதனின் மகளுமான கிருஷ்ணை {திரௌபதி}, சகாதேவனையும், வலிமைமிக்கத் தேர் வீரனான சாத்யகியையும் புகழ்ந்தபடி, சாத்யகியின் அருகில் அமர்ந்திருந்த மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினாள்.


பீமசேனன் சமாதானம் அறிவிப்பதைக் கண்ட அந்தப் புத்திசாலிப் பெண் {திரௌபதி}, துயரம் மேலிட, கண்கள் குளமாக, "ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, ஓ! நீதிமானே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தனது ஆலோசகர்களுடன் கூடிய திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பாண்டவர்களின் மகிழ்ச்சியை எப்படி ஏமாற்றுகரமாகத் திருடினான் என்பதை நீ அறிவாய். ஓ! தாசார்ஹ குலத்தவனே {கிருஷ்ணா}, தனிப்பட்ட முறையில் மன்னரால் {திருதராஷ்டிரரால்} சஞ்சயனுக்குச் சொல்லப்பட்ட செய்தியை நீ அறிவாய்.



பதிலுக்குச் சஞ்சயனிடம் சொல்லப்பட்ட அனைத்தையும் நீ கேட்டாய். ஓ! பெரும் பிரகாசம் உடையவனே {கிருஷ்ணா}, "அவிஸ்தலம், விருகஸ்தலம், மாகந்தி, வாரணாவதம் மற்றும் ஐந்தாவதாக ஏதாவது ஒன்று என ஐந்து கிராமங்கள் மட்டும் எங்களுக்குக் கொடுக்கப்படட்டும்" என்ற வார்த்தைகளே சொல்லப்பட்டன. ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, ஓ! கேசவா {கிருஷ்ணா}, துரியோதனனுக்கும், அவனது ஆலோசகர்களுக்கும் உன்னால் சொல்லப்பட வேண்டியது என்று முன்னர்ச் சொல்லப்பட்ட செய்தி இதுவே.


ஆனால், ஓ! கிருஷ்ணா, ஓ! தாசார்ஹ குலத்தவனே, அடக்கமும், அமைதிக்கான ஆவலும் உடைய யுதிஷ்டிரரின் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி சுயோதனன் {துரியோதனன்} நடக்கமாட்டான். ஓ! கிருஷ்ணா, நாட்டைக் கொடுக்காமல் சமாதானத்தை அடைய துரியோதனன் விரும்பினால், அத்தகு சமாதானத்தைச் செய்து கொள்ள அங்குச் செல்ல வேண்டிய தேவையே இல்லை. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, கோபத்துடன் இருக்கும் திருதராஷ்டிரரின் படையை எதிர்கொள்ளச் சிருஞ்சயர்களுடன் கூடிய பாண்டவர்கள் இயன்றவர்களே. அவர்கள் {கௌரவர்கள்} சமரசக் கலைகளுள் எதற்கும் உடன்படாமல் இருக்கிறார்கள் என்றால், இனியும் அவர்களுக்கு நீ கருணை காட்டுவது முறையாகாது.


ஓ! கிருஷ்ணா, தன் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் ஒருவன், சமரசத்தின் மூலமாகவோ, கொடைகளின் மூலமாகவோ சமாதானத்துக்கு உடன்படாத தன் எதிரிகளைக் கடுமையாக நடத்த வேண்டும். எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்ட அச்யுதா {கிருஷ்ணா}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் உதவியைப் பெற்ற நீ, கடுமையான தண்டனைக்குத் தகுந்த அவர்களை விரைவாகத் தண்டிக்க வேண்டும். உண்மையில், அது பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {யுதிஷ்டிரருக்கு} நன்மை செய்ததாகவே ஆகும். உனக்கும் அது புகழைக் கொடுக்கும். ஓ! கிருஷ்ணா, சாதிக்கப்பட்டால், அதுவே க்ஷத்திரிய குலம் முழுமைக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கும்.

பேராசை கொண்டிருப்பவன் க்ஷத்திரியனாக இருப்பினும், பிராமணனைத் தவிர வேறு எந்த வகையைச் சார்ந்தவனாக இருப்பினும், பாவம் நிறைந்த அவன், க்ஷத்திரிய வகைக்கான கடமைகளில் உண்மையாக இருக்கும் ஒருவனால் நிச்சயம் கொல்லத்தக்கவனே ஆவான். ஓ! ஐயா, பிற வகையைச் சேர்ந்த அனைவருக்கும் பிராமணர்களே ஆசான்களாக இருப்பதாலும், அனைத்தையும் பகிர்ந்து கொள்வதில் முதலாக இருப்பதாலும் பிராமணர்கள் இதில் தவிர்க்கப்படலாம்.


ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சாத்திரங்கள் அறிந்த நபர்கள், கொல்லத்தகாதவர்களைக் கொல்வது பாவம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். எனவே, கொல்லத்தக்கவர்களைக் கொல்லாதிருப்பதும் அதற்கு நிகரான பாவமே.

ஆகவே, ஓ! கிருஷ்ணா, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் படைகளோடு சேர்ந்து, உன்னைப் பாவம் அண்டாதவாறு செயல்படுவாயாக. உன் மீதுள்ள அதீத நம்பிக்கையாலேயே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சொன்னதையே நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, என்னைப் போன்ற பெண் இந்தப் பூமியில் வேறு எவள் இருக்கிறாள்? வேள்விப் பீடத்தில் உதித்தவள் நான், மன்னன் துருபதரின் மகள் நான். ஓ! கிருஷ்ணா, உனது அன்பிற்குரிய நண்பனான திருஷ்டத்யும்னனின் தங்கை நான். திருமணத்தின் மூலமாக அஜமீட குலத்துப் பெண்ணாகவும், ஒப்பற்ற பாண்டுவின் மருமகளாகவும் ஆனவள் நான். காந்தியில் ஐந்து இந்திரர்களுக்கு ஒப்பான பாண்டு மகன்களின் ராணி நான். இந்த ஐந்து வீரர்களால் {பாண்டவர்களால்}, ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்கத் தேர்வீரர்களான ஐந்து மகன்களைப் பெற்றேன். அபிமன்யுவைப் போன்றே அவர்களும் உனக்குத் தார்மீக அடிப்படையில் கட்டுண்டவர்களே.


இப்படிப்பபட்ட நான், ஓ! கிருஷ்ணா, நீ வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, தலைமுடியைப் பற்றிச் சபைக்கு இழுத்து வரப்பட்டு, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} கண் முன்பாகவே அவமதிக்கப்பட்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டு மகன்களும், பாஞ்சாலர்களும், விருஷ்ணிகளும் உயிரோடு இருக்கும்போதே, அந்த இழிந்தவர்களால் சபையின் பார்வைக்கு வெளிப்படுத்தப்பட்டு, அடிமையைப் போல நடத்தப்பட்டேன். இதைக் கண்டும் பாண்டவர்கள் அனைவரும் கோபப்படாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். அப்போதே நான் உன்னை என் இதயத்தால் {மனதால்} அழைத்தேன்.

ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, "என்னைக் காப்பாற்று, ஓ! என்னைக் காப்பாற்று" என்று சொல்லி {உன்னை} அழைத்தேன். பிறகு ஒப்பற்ற மன்னரும், எனது மாமனாருமான திருதராஷ்டிரர், என்னிடம், "ஓ! பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, ஏதாவது வரம் கேள். நீ எனது கையால் வரங்களையும், ஏன் மரியாதையையும் கூடப் பெறத் தகுந்தவளாவாய்" என்றார். இப்படிச் சொல்லப்பட்ட நான், "தேர்கள் மற்றும் ஆயுதங்களுடன் பாண்டவர்கள் விடுதலை பெற்றவர்களாகட்டும்" என்று கேட்டேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அதனால் பாண்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், காட்டுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது இந்தச் சோகங்கள் அனைத்தையும் நீ அறிவாய். ஓ! தாமரை போன்ற கண்களை உடையவனே {கிருஷ்ணா}, இந்தத் துயரில் இருந்து எனது கணவர்கள், உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய என்னைக் காப்பாயாக. ஓ! கிருஷ்ணா, தார்மீக அடிப்படையில் நான் பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரர் ஆகிய இருவருக்கும் மருமகளாவேன். அப்படியிருந்தும், நான் வலுக்கட்டாயமாக அடிமையாக்கப்பட்டேன். ஓ! கிருஷ்ணா, அந்தத் துரியோதனன் இந்தக் கணம் வரை உயிரோடு இருக்கிறான், பார்த்தரின் {அர்ஜுனரின்} விற்திறத்திற்கு ஐயோ, பீமசேனரின் பலத்திற்கு ஐயோ. உனது கைகளாலான எந்த உதவிக்காவது நான் தகுந்தவளென்றால், உனக்கு என் மீது ஏதாவது கருணை இருந்தால், ஓ! கிருஷ்ணா, உனது கோபம் திருதராஷ்டிரர் மகன்கள் மீது திரும்பட்டும்" என்றாள் {திரௌபதி}

திரௌபதி துகிலுரித்தல் சம்பவம் குறித்து இங்கே ஏதும் குறிப்பில்லை.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்னதும், தாமரை இதழ்களைப் போன்ற பெரியதும் கருமையானதுமான கண்களைக் கொண்ட அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, கண்ணீரால் குளித்தாள். சுருள் முனை கொண்டதும், அடர்நீல நிறம் கொண்டதும், அனைத்து நறுமணப் பொருட்களால் நறுமணமூட்டப்பட்டதும், அனைத்து மங்கலக்குறிகளைக் கொண்டதும், பின்னலாகக் கட்டப்பட்டிருந்தாலும், பெரும்பாம்பு போலப் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருந்ததுமான தனது கூந்தலைத் தன் இடது கையில் பற்றிக் கொண்டு, பெண் யானையைப் போல நடந்து, தாமரைக் கண் கிருஷ்ணனை அணுகி, "எதிரியுடன் சமாதானம் கொள்ள ஆவலாய் இருக்கும் தாமரைக் கண் கொண்டவனே {கிருஷ்ணா}, நீ எந்தச் செயலைச் செய்தாலும், துச்சாசனனின் முரட்டுக் கைகளால் பற்றப்பட்ட இந்தக் கூந்தலை நினைத்துச் செயல்படுவாயாக!

ஓ! கிருஷ்ணா, பீமரும், அர்ஜுனரும் சமாதானத்திற்கு ஏங்கும் அளவிற்குத் தாழ்ந்தவர்கள் ஆனார்கள் என்றால், போர்க்குணமிக்கத் தனது மகன்களுடன் வயது முதிர்ந்த எனது தந்தை {துருபதர்} எனக்காகப் போர்க்களத்தில் பழி தீர்ப்பார். ஓ! மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பெரும் சக்தி கொண்ட எனது ஐந்து மகன்களும் அபிமன்யுவைத் தங்கள் தலைமையில் கொண்டு, கௌரவர்களுடன் போரிடுவார்கள். துச்சாசனின் கரிய கைகள் அவனது உடலில் இருந்து அறுக்கப்பட்டு, அணுக்களாக நொறுங்காமல் என்னுடைய இதயத்துக்கு என்ன அமைதி கிடைக்கும்?


எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் போன்ற எனது கோபத்தை என் இதயத்தில் மறைத்துக் கொண்டு, நல்ல காலங்களை எதிர்பார்த்து, நீண்ட பதிமூன்று {13} வருடங்களை நான் கழித்திருக்கிறேன். இப்போதோ பீமரின் சொற்களெனும் கணைகளால் துளைக்கப்பட்ட எனது இதயம் உடையும் நிலையில் இருக்கிறது. ஏனெனில், பீமர் இப்போது அறநெறியின் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார்" என்றாள் {திரௌபதி}. கண்ணீரால் தடைபட்ட குரலுடன் இவ்வார்த்தைகளைச் சொன்ன நீண்ட கண்களையுடைய கிருஷ்ணை {திரௌபதி}, அதிரவைக்கும் விம்மல்களோடும், கண்ணத்தில் உருண்டோடும் கண்ணீரோடும் உரக்க அழத்தொடங்கினாள். திரண்டு உருண்ட இடையைக் கொண்ட அந்த மங்கை {திரௌபதி}, நெருப்பு நீர் போலச் சூடாகச் சிந்திய கண்ணீரால் தனது நெருக்கமான ஆழமான மார்பகத்தை நனைக்கத் தொடங்கினாள்.

வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, அவளுக்கு {திரௌபதிக்கு} ஆறுதல் தரும் வார்த்தைகளில் பேசினான். "ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, பாரதக் குலத்தின் மங்கையர், நீ அழுவதைப் போலவே அழுவதை, நீ விரைவில் காண்பாய். ஓ! மருட்சியுடையவளே {திரௌபதி}, உறவினர்களும், நண்பர்களும் கொல்லப்பட்ட நிலையில் அவர்கள் உன்னைப் போலவே அழுவார்கள். ஓ! மங்கையே {திரௌபதி}, நீ யாரிடம் கோபம் கொண்டிருக்கிறாயோ, அவர்களின் உறவினர்களும் வீரர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள் {என்று நினைத்துக் கொள்}. யுதிஷ்டிரரின் கட்டளையின் பேரிலும், பீமர், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்களுடனும், விதிக்கு ஏற்புடைய வகையில், படைப்பாளனால் விதிக்கப்பட்ட அனைத்தையும் நான் சாதிப்பேன்.

அவர்களுக்கான நேரம் வந்துவிட்டது. திருதராஷ்டிரரின் மகன்கள் எனது வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கவில்லையெனில், நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவாகும்படி, கீழே பூமியில் அவர்கள் விழுவது நிச்சயம். இமய மலைகள் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்ளலாம், பூமியானவள் தன்னை நூறு துண்டுகளாகப் பிளந்து கொள்ளலாம். கோடிக்கணக்கான நட்சத்திரங்களுடன் கூடிய வானம் விழுந்து போகலாம், ஆனால் எனது வார்த்தைகள் பொய்க்காது. உனது கண்ணீரை நிறுத்து. ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, தங்கள் எதிரிகளைக் கொன்று, செழிப்பால் மகுடம் சூட்டப்பட்டவர்களாக நீ உனது கணவர்களை விரைவில் காண்பாய் என்று நான் உனக்கு உறுதியளிக்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ இப்போது அனைத்து குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} சிறந்த நண்பனாக இருக்கிறாய். இரு தரப்பிடமும் உறவுமுறை கொண்ட நீ, இருவருக்கும் அன்பிற்குரிய நண்பனாகவே இருக்கிறாய். பாண்டவர்களுக்கும் திருதராஷ்டிரர் மகன்களுக்கும் இடையில் சமாதானத்தைக் கொண்டு வருவதே உனக்குத் தகும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ திறமையானவன், எனவே, சமரசத்தைக் கொண்டு வருவதே உனக்குத் தகும். ஓ! தாமரைக் கண் கொண்டவனே {கிருஷ்ணா}, இங்கிருந்து சமாதானத்துக்காகச் சென்று, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, எப்போதும் கோபத்துடன் இருக்கும் எங்கள் சகோதரன் சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, உண்மையில் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல். அறம் பொருள் ஆகியவை நிறைந்ததும், மங்கலகரமானதும், நன்மை விளைவிக்கக்கூடியதுமான உனது ஆலோசனைகளை மூடனான துரியோதனன் ஏற்கவில்லையெனில், அவன் விதிக்குப் பலியாகப் போகிறவன் ஆவான்" என்றான் {அர்ஜுனன்}.


அதற்கு அந்தப் புனிதமானவன், "நீதிக்கு இசைவானதையும், நமக்கும், குருக்களுக்கும் நன்மையானதையும் சாதிக்க விரும்பியே நான் மன்னன் திருதராஷ்டிரரிடம் செல்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இரவு கடந்து, ஒளிரும் சூரியன் கிழக்கில் உதித்தான். மைத்திரம் என்ற நேரம் {முகூர்த்தம்} நடந்து கொண்டிருந்தது. சூரியனின் கதிர்கள் இன்னும் மென்மையாகவே இருந்தன. அந்த மாதமானது (கௌமுத கார்த்திகை = கார்த்திகை மாதம்} ரேவதி நட்சத்திரத்தின் கீழ் இருந்தது. {கார்த்திகை மாதத்தின் ரேவதி நட்சத்திர நாளில் கிருஷ்ணன் புறப்பட்டான்}. இலையுதிர் காலம் விடுபட்ட பனிக்காலமாகவும் அஃது இருந்தது. பூமியில் சுற்றிலும் அபரிமிதமான பயிர்கள் நிறைந்திருந்தன {விளைந்திருந்தன}. அத்தகு நேரத்தில் தான், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், அருமையான உடல்நிலையைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, (தெய்வீக) முனிவர்களின் துதிகளைக் கேட்கும் வாசவனைப் {இந்திரனைப்} போல, மங்கலகரமானதும், புனித ஒலியுடையதுமான அந்தணர்களின் இனிமையான வார்த்தைகளைக் கேட்டு, காலையில் வழக்கமாகச் செய்யும் செயல்களையும் சடங்குகளையும் செய்து, குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தைலங்களாலும், ஆபரணங்களாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு சூரியன் அக்னி ஆகிய இருவரையும் வழிபட்டான்.


காளையின் வாலைத் தொட்டு, அந்தணர்களை மரியாதையுடன் வணங்கி, புனித நெருப்பை வலம் வந்து, பார்வையில் பட்ட (வழக்கமான) மங்கலப் பொருட்களில் தனது கண்களைச் செலுத்தி, யுதிஷ்டிரனின் வார்த்தையை நினைத்துப் பார்த்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் அருகே அமர்ந்திருந்த சினியின் பேரனான சாத்யகியிடம், "எனது தேர் தயார் செய்யப்படட்டும், எனது சங்கும், கதாயுதத்துடன் கூடிய எனது சக்கரமும், அம்பறாத்தூணிகளும், கணைகளும், தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் பயன்படும் அனைத்து வகையான ஆயுதங்களும் அதில் {அந்தத் தேரில்} இருக்கட்டும். ஏனெனில், துரியோதனன், கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் தீய ஆன்மா கொண்டவர்களாவர். ஒருவன் வலிமைமிக்கவனாகவே இருந்தாலும், பலத்தில் சிறிய எதிரிகளைக் கூட அவன் அலட்சியப்படுத்தக்கூடாது" என்றான் {கிருஷ்ணன்}.


சக்கரம் மற்றும் காதாயுதத்தைத் தாங்குபவனான கேசவனின் {கிருஷ்ணனின்} விருப்பங்களைப் புரிந்து கொண்ட அவனது பணியாட்கள் {தேருக்கு முன் செல்லும் பரிஜனங்கள்}, அவனது தேரைப் பூட்டச் செய்தனர்.

அண்ட அழிவு நேரத்தில் வெளிப்படும் நெருப்பின் பிரகாசம் கொண்ட அந்தத் தேர் அதே நெருப்பைப் போன்ற வேகமும் கொண்டதாக இருந்தது. அதன் இரண்டு சக்கரங்களும் பிரகாசத்தில் சூரியனையும் சந்திரனையும் ஒத்திருந்தன. பிறை மற்றும் முழு நிலவுகள், மீன்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் ஒப்பனைகளைத் தன்னில் கொண்டு, பல்வேறு வகை மலர்கள், முத்துகள் மற்றும் பல்வேறு வகையான ரத்தினங்களாலான மாலைகளால் அது {அந்தத் தேர்} சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. உதயச் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டிருந்த அது {தேர்}, பெரியதாகவும் அழகாகவும் இருந்தது. பலவண்ண ரத்தினங்களையும் தங்கத்தையும் கொண்டிருந்த அஃது, அழகிய கொடிகளுடன் கூடிய அற்புதமான கொடிக் கம்பங்களைக் கொண்டிருந்தது. தேவையான அனைத்துப் பொருட்களும் நன்கு வழங்கப்பட்டு, எதிரிகளால் தடுக்க இயலாத வகையில் இருந்த அது, புலித் தோல்களால் மூடப்பட்டிருந்தது. ஒவ்வொரு எதிரியின் புகழையும் கவரவல்லதும், யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கவல்லதுமாக அது {அந்தத் தேர்} இருந்தது. சைப்யம், சுக்ரீவம், மேகபுஷ்பம், வலாஹகம் என்ற பெயர்களைக் கொண்ட அற்புத குதிரைகளை நன்கு குளிப்பாட்டி, அழகிய சேணங்களை அவற்றுக்கு உடுத்தி அந்தத் தேரில் பூட்டினர்.


கிருஷ்ணனின் மதிப்பை மேலும் உயர்த்தும்படி, இறகு கொண்ட பிறவிகளுக்குத் {பறவைகளுக்குத்} தலைவனான கருடன் அங்கே வந்து, பயங்கரச் சடசடப்பொலியை எழுப்பும் அந்தத் தேரின் கொடிக்கம்பத்தில் அமர்ந்தான்.

மேருவின் சிகரம் போன்று உயர்ந்ததும், பேரிகைக் கொண்ட மேகங்களைப் போன்ற ஆழ்ந்த உரத்த சடசடப்பொலியை எழுப்பக்கூடியதும், இயக்குபவரின் விருப்பத்திற்கேற்ப செல்லும் தெய்வீகத் தேரை ஒத்திருப்பதுமான அந்தத் தேரில் சௌரி {கிருஷ்ணன்} ஏறினான். சாத்யகியையும் அதில் உடன் ஏற்றிக் கொண்ட அந்த மனிதர்களில் சிறந்தவன் {கிருஷ்ணன்}, தனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியையும் வானத்தையும் நிறைத்தபடி கிளம்பினான்.

வானம் மேகமற்று இருந்தது, மங்கலகரமான காற்று சுற்றிலும் வீசத் தொடங்கியது, தூசியில் இருந்து விடுபெற்ற சுற்றுச்சூழல் தூய்மையானது. உண்மையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} அப்படிக் கிளம்பிய போது, மங்கலகரமான விலங்குகளும், பறவைகளும் வலமாகச் சுற்றி அவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றன. கொக்குகள், மயில்கள், அன்னஙகள் ஆகியன நல்ல சகுனங்களைக் கொண்ட ஒலிகளை வெளியிட்டபடியே அந்த மதுவைக் கொன்றவனைத் {மதுசூதனனைத்} தொடர்ந்து சென்றன. மந்திரங்களின் துணையோடு கூடிய ஹோம நீர்க்காணிக்கைகளால் ஊட்டப்பட்ட நெருப்பே கூட, புகையில் இருந்து விடுபட்டு உற்சாகமாகச் சுடர்விட்டு எரிந்து, தனது தழல்களை வலப்புறமாக வெளியிட்டது.


வசிஷ்டர், வாமதேவர், பூரித்யும்னர், கயர், கிரதர், சுக்கிரர், குசிகர், பிருகு மற்றும் பிற பிரம்ம முனிவர்களும் தெய்வீக முனிவர்களும் {நாரதர், வால்மீகர், மருத்தர்} ஒன்றிணைந்து, யாதவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவனும், வாசவனுக்கு {இந்திரனுக்கு} இளைய தம்பியுமான கிருஷ்ணனின் வலப்புறமாக நின்றனர். இப்படி அந்த முனிவர்களாலும், ஒப்பற்ற பிற முனிவர்களாலும், புனிதமானவர்களாலும் வழிபடப்பட்ட கிருஷ்ணன், குருக்களின் வசிப்பிடம் நோக்கிக் கிளம்பினான்" என்றார் {வைசம்பாயனர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அப்படிக் கிருஷ்ணன் சென்றபோது, குந்தியின் மகனான யுதிஷ்டிரரும், பீமன், அர்ஜுனன், மாத்ரியின் இரட்டை மகன்களான   அந்த மற்ற பாண்டவர்களும் {நகுல சகாதேவர்களும்} அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றனர். வீரமிக்கச் சேகிதானன், சேதிகளின் ஆட்சியாளனான திருஷ்டகேது, துருபதன், காசி மன்னன், பெரும் வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், தனது மகன்களோடு கூடிய விராடன், கேகய இளவரசர்கள் ஆகிய இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும். அவனை {கிருஷ்ணனை} மதிக்கும் வகையில், அந்த க்ஷத்திரியக் குலத்துக் காளையைப் {யுதிஷ்டிரனைப்} பின் தொடர்ந்து சென்றார்கள்.


ஒப்பற்ற மன்னனும் நீதிமானுமான யுதிஷ்டிரன், சிறிது தூரத்திற்குக் கோவிந்தனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்று, அந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் பேசினான். ஆசையினாலோ, கோபத்தினாலோ, அச்சத்தினாலோ, லாப நோக்கத்தாலோ சிறிய தவறைக் கூட இழைக்காதவனும், என்றும் உறுதியான மனம் படைத்தவனும், பேராசைக்கு அந்நியனும், அறநெறிகளை அறிந்தவனும், பெரும் புத்திக்கூர்மை மற்றும் ஞானத்தைக் கொண்டவனும், அனைத்து உயிரினங்களின் இதயங்களையும் அறிந்தவனும், அனைவருக்கும் தலைவனும், தேவர்களுக்குத் தேவனும், நித்தியமாக நிலைத்திருப்பவனும், அனைத்து அறங்களைக் கொண்டவனும், தனது மார்பில் மங்கலக்குறியைக் கொண்டவனுமான அந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனை {கிருஷ்ணனை} குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அணைத்துக் கொண்டான். அவனை {கிருஷ்ணனை} அணைத்தவாறே, அவன் {கிருஷ்ணன்} என்ன செய்ய வேண்டும் என்பதை மன்னன் {யுதிஷ்டிரன்} குறிப்பிடத் தொடங்கினான்.


யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "குழந்தையாக இருந்ததில் இருந்து எங்களை வளர்த்தவளும்; உண்மைகளிலும், துறவு நோன்புகளிலும், தீயனத் தணிக்கும் சடங்குகளிலும் எப்போதும் ஈடுபடுபவளும்; தேவர்களையும், விருந்தினர்களையும் வணங்குவதில் அர்ப்பணிப்பு கொண்டவளும்; தனது மகன்களிடம் அன்போடிருக்கும் பெரியவர்களுக்காக எப்போதும் காத்திருப்பவளும்; தனது மகன்களிடம் எல்லையில்லா பாசம் கொண்டவளும், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எங்களால் எப்போதும் அன்போடு விரும்பப்படுபவளும்; ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே {கிருஷ்ணா}, உடைந்த கப்பலில் இருக்கும் பயணிகளைப் பயங்கரக் கடலில் இருந்து காக்கும் படகைப் போல, துரியோதனனின் வலைகளில் இருந்து எங்களை எப்போதும் காத்தவளும், ஓ! மாதவா {கிருஷ்ணா}, துன்புறத்தகாதவளும், எங்களின் நிமித்தமாக எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தவளுமான அந்த மங்கையிடம் {குந்தியாகிய எங்கள் தாயிடம்} நலன்விசாரித்து, அவளை {குந்தியை} வணங்கித் தழுவி கொண்டு, மகன்களின் நிமித்தமான அவளது துயரத்தில் இருந்து அவளுக்கு ஆறுதல் அளிப்பதற்காகப் பாண்டவர்களைக் குறித்து மீண்டும் மீண்டும் அவளிடம் {குந்தியிடம்} பேசுவாயாக.


என்னதான் அவள் {குந்தி} துன்ப துயரத்தை அடையத் தகாதவள் என்றாலும், தனக்குத் திருமணம் ஆனது முதலே, தனது மாமனாரின் நடத்தையால் {griefs due to the conduct of her father-in-law} {மாமனார் விசித்திரவீரியன் வீட்டில்} அவற்றுக்குப் {துன்ப துயரங்களுக்குப்} பலியாகி வருகிறாள். பாடு என்பதே  {கஷ்டப்படுதலே} அவளது நிலையாக இருக்கிறது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, எனது துயரங்கள் அனைத்தும் தீர்ந்து, துன்பமிக்க என் தாயை மகிழ்வுறச் செய்யும் நேரத்தை நான் காண்பேனா? {காண மாட்டேனா?} நாங்கள் நாடுகடத்தப்பட்ட போது {வனவாசம் அனுப்பப்பட்ட போது}, தன் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தால் கசந்து அழுது, துயரத்தால் எங்கள் பின்னே ஓடி வந்தாள். ஆனால், அவளை {குந்தியை} விட்டுவிட்டு, நாங்கள் காட்டுக்குச் சென்றோம். துயரம் அவளைக் கொன்றிருக்காது {என நம்புகிறேன்}. எனவே, தன் மகன்களின் நிமித்தமாகத் துயரத்தில் இருந்தாலும், ஆனர்த்தர்களால் உற்சாகப்படுத்தப்படும் அவள் உயிரோடு இருக்கச் சாத்தியம் இருக்கிறது.


ஓ! மகிமைமிக்கக் கிருஷ்ணா, அவளையும் {குந்தியையும்}, மன்னன் திருதராஷ்டிரரையும், எங்கள் வயதைவிட முதிர்ந்த ஏகாதிபதிகள் அனைவரையும், பீஷ்மர், துரோணர், கிருபர், மன்னன் பாஹ்லீகர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, சோமதத்தர், உண்மையில் பாரதக் குலத்தவர் அனைவரையும், குருக்களின் ஆலோசகரும் {அமைச்சரும்}, ஆழ்ந்த அறிவு கொண்டவரும், அறநெறிகளை நுண்மையாக அறிந்தவரும், பெரும் ஞானம் கொண்டவருமான விதுரரையும் என்சார்பாக நீ வணங்கி, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா} அவர்கள் அனைவரையும் தழுவுவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.

மன்னர்களின் முன்னிலையில் இந்த வார்த்தைகளைக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்ன யுதிஷ்டிரன், கிருஷ்ணனின் அனுமதியுடன், அவனை {கிருஷ்ணனை} வலம் வந்து திரும்பினான். பிறகு, சில எட்டுகளை எடுத்து வைத்த அர்ஜுனன், தனது நண்பனும், மனிதர்களில் காளையும், எதிரி வீரர்களைக் கொல்பவனும், தாசார்ஹ குலத்தின் ஒப்பற்ற வீரனுமானவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஒப்பற்ற கோவிந்தா {கிருஷ்ணா}, ஆலோசனையின் போது, எங்கள் நாடு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்க்கப்பட்டதை மன்னர்கள் அனைவரும் அறிவார்கள். எங்களை அவமதிக்காமல், உன்னை மதித்து, நாங்கள் கோருவதை, நேர்மையாக அவர்கள் {கௌரவர்கள்} கொடுத்தார்களானால், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, எனக்கு மனநிறைவைக் கொடுத்து, பயங்கர ஆபத்தில் இருந்து அவர்கள் தப்புவார்கள். எனினும், எப்போதும் முறையற்ற வழிகளையே பின்பற்றும் திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்}, வேறுவிதமாக நடந்து கொண்டானேயானால், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பின்பு நான் க்ஷத்தரிய குலத்தையே அழிப்பேன் என்பது நிச்சயம்" என்றான் {அர்ஜுனன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அர்ஜுனன் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, விருகோதரன் {பீமன்} மகிழ்ச்சியால் நிறைந்தான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தொடர்ந்து கோபத்தால் நடுங்கினான், மேலும் மேலும் அவன் கோபத்தால் நடுங்கிக் கொண்டிருந்தாலும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வார்த்தைகள், தனது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பியதால் பயங்கரமாகக் கர்ஜனை செய்தான். அவனது கர்ஜனையைக் கேட்ட வில்லாளிகள் அனைவரும் அச்சத்தால் நடுங்கினர். குதிரைகளும், யானைகளும் மலமும் சிறுநீரும் கழித்தன.

கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} தனது தீர்மானத்தைக் குறித்துச் சொன்ன பிறகு, ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} தழுவி கொண்ட அர்ஜுனன், அவனது {கிருஷ்ணனின்} அனுமதியின் பேரில் திரும்பினான். மன்னர்கள் அனைவரும் அவனைத் {கிருஷ்ணனைத்} தொடர்வதை நிறுத்திய பின், சைப்யம், சுக்ரீவம் மற்றும் பிறவற்றால் இழுக்கப்பட்ட தேரில், உற்சாகம் நிறைந்த இதயத்துடன் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புறப்பட்டான். {கிருஷ்ணனின் தேரோட்டியான} தாருகனால் உந்தப்பட்ட வாசுதேவனின் அந்தக் குதிரைகள், வானத்தை விழுங்கி, சாலையைக்  குடித்தபடி தொடர்ந்து சென்றன.{And those steeds of Vasudeva, urged by Daruka, coursed onwards, devouring the sky and drinking the road.}


அப்படி வலிமை நிறைந்த கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} சென்று கொண்டிருந்த வழியில், சாலையின் இரு மருங்கிலும் அந்தணக் காந்தியுடன் சுடர்விட்டுக் கொண்டிருந்த முனிவர்களைக் கண்டான். விரைந்து தனது தேரைவிட்டு இறங்கிய ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அவர்களை மரியாதையுடன் வணங்கினான். அவர்களை முறையாக வழிபட்ட அவன் {கிருஷ்ணன்}, அவர்களிடம் {பிராமணர்களிடம்}, "உலகம் அனைத்திலும் அமைதி இருக்கிறதா? அறம் முறையாகப் பயிலப்படுகிறதா? பிற மூவகையினரும் அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்களா?" என்று கேட்டான். பிறகு அவர்களை முறையாக வழிபட்ட அந்த மதுவைக் கொன்றவன் {மதுசூதனன்}, மீண்டும் அவர்களிடம் {பிராமணர்களிடம்}, "வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டீர்களா? எங்கே எந்த நோக்கத்திற்காகச் செல்கிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? எது உங்களைப் பூமிக்குக் கொண்டு வந்தது?" என்று கேட்டான் {கிருஷ்ணன்}.

இப்படிச் சொல்லப்பட்டவரும், ஜமதக்னியின் மகனும், தேவர்கள் மற்றும் அசுரர்களுக்குத் தலைவனுமான பிரம்மனின் நண்பர் {பரசுராமர்}, மதுவைக் கொன்றவனான கோவிந்தரை அணுகி, அவனைத் தழுவி கொண்டு, "தேவர்கள் மற்றும் அசுரர்களின் முந்தைய செயல்களை அறிந்தவர்களான நற்செயல்கள் புரியும் தெய்வீக முனிவர்களும், சாத்திரங்களைப் பரந்த அளவில் அறிந்த அந்தணர்களும், அரச முனிவர்களும் [1], ஓ! தாசர்ஹா, ஓ! ஒப்பற்றவனே, அனைத்துப் புறங்களில் இருந்தும் ஓரிடத்தில் கூடும் பூமியின் க்ஷத்திரியர்களையும், சபையில் அமர்ந்திருக்கும் ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்}, மன்னர்களையும், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உண்மையின் உருவமான உன்னையும் காண விரும்புகிறார்கள். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அந்தப் பிரம்மாண்ட காட்சியைக் காண நாங்கள் அங்கே வருவோம்.


[1] இந்த முனிவர்கள் கூட்டத்தில், அதஸ்சிரஸ், சர்ப்பமாலீ, பெரும் முனிவரான தேவலர், அர்வாவசு, சுஜானு, மைத்திரேயர், சனகர், பலி, பகர், தாலப்யர், ஸ்தூலசிரஸ், கிருஷ்ணத்வைபாயனர் {வியாசர்}, ஆபோத்தௌமியர், தௌமியர், ஆணிமாண்டவ்யர், கௌசிகர் {விஸ்வாமித்ரர்}, தர்மோஷணீஷர், பர்ணாதர், கடஜானுகர், மௌஞ்சாயனர், வாயுபக்ஷர், பாராசர்யர், சாலிகர், சீலவான், அசனி, தாதா, சூனியபாலர், அக்ருதவரணர், ஸ்வேதகேது, கஹோளர், பரசுராமர், நாரதர் ஆகியோர் இருந்ததாக ஒரு பதிப்பில் இருக்கிறது.

ஓ! மாதவா, மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும், குருக்களிடம் நீ பேசப் போகும் அறம் மற்றும் பொருள் நிறைந்த பேச்சைக் கேட்க நாங்கள் ஆவலாக உள்ளோம். உண்மையில், பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரோடு ஒப்பற்ற விதுரன், மற்றும் யாதவர்களில் புலியான நீ ஆகிய அனைவரும் ஒன்றாகச் சபையில் கூடப் போகிறீர்கள். ஓ! மாதவா {கிருஷ்ணா}, கேட்பதற்கு அருமையானதும், உண்மை நிறைந்ததும் நன்மைக்கு வழிவகுப்பதுமான உனது பேச்சையும், ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அவர்கள் பேசும் பேச்சையும் கேட்க நாங்கள் விரும்புகிறோம். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, எங்கள் நோக்கத்தை இப்போது உன்னிடம் தெரிவித்து விட்டோம். உன்னை நாங்கள் மீண்டும் சந்திக்கிறோம். ஓ! வீரா {கிருஷ்ணா}, நீ அங்கே பாதுகாப்பாகச் செல்வாயாக. உனது ஆற்றல், வலிமை ஆகியவற்றைச் சேகரித்து, சபைக்கு மத்தியில் அற்புதமான இருக்கையில் அமர்ந்திருக்கும் உன்னைக் காண்போம் என நாங்கள் நம்புகிறோம்" என்றார் {பரசுராமர்}.
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment