Tuesday, February 9, 2021

Andaal and her brilliance

ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🏽🙏🏽 - 7
_________________________


குமைச்சல்களிடையே வளர்ந்தால் தான் தெங்கானது நல்ல சுவையான இளநீர் தரும்.

இது இறைவனுக்குத் தெரியும்.

கோதையின் தமிழ்ப்பாவெனும் நல்லிளநீர் கிடைக்க வேண்டுமானால் அவளை குமைச்சலில் வைத்திருப்பது நலம்.


"கோதாய் நீயழைத்து வாராதிருக்க முடியுமா ?! 

என்னைத்தவிர நீ வேறு யாரையும் எப்படி நினைக்கலாம் என்று உன்னோடு சண்டை பிடிக்கும் சாக்கில் உன் பளபளக்கும் கண்களை ஒருமுறை பார்த்துவிட்டு போகவே வந்தேன்.

உனக்கென்ன....
தமிழிடம் தஞ்சம் அடைந்து விடுவாய்.. 
நான் என்ன செய்ய ??

உனக்காத் தவிப்பதை எப்படி சரியாக்கட்டும் உன்னைப் பார்ப்பதல்லாமல் ??!!

பார்த்து விட்டேன்... கிளம்புகிறேன்."..

குழைந்து பேசினான் குழகன்.

என்றாலும்

கண்ணோரம் ஏக்கம் வழிந்ததைக் கண்டுவிட்டாள் கோதை.
துடித்தே விட்டாள்.

"பாலகன் அழைத்ததும் யானை அழைத்ததும் படுத்திருந்த நீரிலிருந்து எழுந்து வந்த என் கண்ணா !!

நீ அடியவர்க்கெளியவன்.

நானழைத்ததும் எனக்கு அருள் பொழியாமல் இருக்க உன்னால் முடியாதபடி உன் கருணை பொங்குவது எனக்குத் தெரியும்.

என்றாலும் உனக்காக வந்ததாகச் சொல்லிக் கொள்கிறாய்.

காலம் கனியவில்வை என்று நீ சொல்வதால் கடலிலேயே போய் படுத்துக்கொள்.

நேரம் வரும்வரை நான் அழைத்தாலும் என் தவிப்பை அதிகரிக்கும் வகையில் நீ வந்திருக்க வேண்டாம் ஐயனே.

உன் கடைக்கண் என்னை மிகவும் துன்புறுத்துகின்றனவே.
எனவே இப்படி எதிரில் வந்து  சிற்றில் கட்டி நொந்து போன வளைக்கைகளை இதமாகப் பிடிக்க முடியாத பட்சத்தில் இச்சிற்றிலை சிதைக்கவும் வேண்டாம்.


*குண்டு நீருறைக் கோளரி !!மதயானைக் கோள் விடுத்தாய்*

*உன்னைக் கண்டு மால்உறுவோங்களை கடைக்கண்களால் இட்டு வாதியேல்*

*வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக்கைகளால் சிரமப்பட்டோம்*

*தெண்திரைக்கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே*
(நாச்.தி.516)

(கோளரீ... நரசிம்மமான கண்ணன்...
கோளரீ என்று அழைத்ததன் மூலம் பாலகன் அழைத்ததும் உடனே ஓடிவந்ததை குறிப்பிடுகிறாள்.
குண்டு நீர்....ஆழமான நீர்.)


இப்பொழுது கண்ணன் பதிலேதும் பேசவில்லை.

அதிகமாக அவள் தவிக்க வேண்டும் என்பது தானே அவன் திட்டம் !!!


கோதை மேலும் சொல்வாள்...

"வீடு என்பது மோக்ஷம்.
பேரின்ப வீடு. பெரிய வீடு.
பெரிய இல் அது.
அந்த மோக்ஷத்துக்கு சாதனமாக விளங்குவது இப்பிறவி.

*சிறிய வீடு. சிற்றில் !!*
*உன்னை அடையும் மோக்ஷத்திற்கு நாங்கள் செய்ய வேண்டியதை இச்சரீரம் என்ற சிற்றில்லில் இருந்து தானே செய்ய வேண்டும் ?!*

நீ இப்படி எதிரில் வந்து மயக்கும் முகம் காட்டி மையல் விழி காட்டி பிரேமை மொழி பேசி நின்று மயக்கினால் ?!
மயங்கி மயங்கி உன்னில் நான் கரைந்தே போய்விடுவேன்.

பின் இச்சிற்றில் ஏற்று அடியாள் பூவுலகம் வந்து செய்கிறேன் என்று ஏற்ற காரியங்கள் செய்ய முடியாமலே போய்விடும்.

எனவே என்னுடைய இப்பிறவியெனும் இந்த சிற்றில்லைச் சிதைக்காதே.

நீ விதித்தபடி என் கடமையைச் செய்ய விடு ..

மக்களோடு சேர்ந்து உன்னை வேண்டுகிறேன்.

*நாங்கள் எல்லோரும் உன்னை அடைவதற்கான மார்க்கத்தை இப்பிறவியில் செய்ய விடு.*

வெறுமனே போக்குக் காட்ட வந்திருக்கிறாய் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

உன்னை போய்விடு என்று கோபித்துச் சொல்வதைப் பார்த்து எங்களை மூடர்கள் அறிவில்லாதவர் என்று மற்றவர்கள் சொல்லி விடும் துன்பம் வேறு எதிர்கொள்ள வேண்டும்.

எங்கள் வாயால் அங்ஙனம் சொல்ல வைக்காதே
இந்த தாமரைக் கண்களால் மயக்காதே என்று கெஞ்சினாள்.


*பெய்யுமா முகில் போல் வண்ணா*

*உந்தன் பேச்சும் செய்கையும் எங்களை* 

*மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாயமந்திரம் தான் கொலோ?*

*நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்*

*செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே*
(நாச்.தி..517)

கோதை மனமுருகி கெஞ்சினாள்.

"கோதாய் நீ சொல்வது சரிதான்.... நான் உன்னை வதைப்பது உண்மைதான்.

*சற்று கோபித்துக் கொள்ளேன்*

அப்பொழுது தான் நானும் சற்று ரோஷத்தோடு காலம் வரும் வரை இந்த பக்கம் தலைகாட்டாமல் இருக்க முடியும்..."


அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் அன்பின் வலிமையான கட்டாலும் அடியார் பால் அதைவிட வலிமையான கருணைக் கட்டாலும் பாவம் அல்லாடுகிறான் நமக்காக !!

அவளோ அதற்கும் மேலாக உன் கண்களைப் பார்த்தால் எங்கே கோபம் வரும் எனக்கு !! 

உள்ளம் உருகுவதைத்தவிர எதுவும் நடக்காது.

நீ எத்தனை சிற்றில் அழித்தாலும் உன் முகத்தில் கள்ளச்சிரிப்பு பொங்கும் விழிகளைக் கண்டால் கோபப்பட முடியுமா"


*வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்* 

*தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும்* 
*உன்தன் மேல்*

*உள்ளம் ஓடி உருகலல்லால் உரோடம் ஒன்றும் இல்லோம்*
*கண்டாய்* 

*கள்ளமாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே!*
(நாச்.தி..518)
உரோடம்....ரோஷம்.
என்ன அழகான பாடல் இது.!!

உன் கண்களை பார்த்தால் ரோஷம் வேறு எப்படியடா வரும்... அறிந்து கொண்டே கள்ளத்தனமாக கேட்கிறாயே...

அடி அம்மா கோதை!!!எப்படித்தாயே இத்தனை காதலை விட்டு எமக்காக பிரிந்து வந்தாய்!!!
எத்தனை உருக்கம்!!

கோதை உருகிப் பாடினாள்...

உலக நன்மை என்ற கருணைத்திறமல்லவோ என்னை திடப்படுத்தி கொண்டு இருக்கிறது !!!

கண்ணன் குறுநகை புரிந்தான்.

"இல்லையே சென்றமுறை நீ சிறுமியாய் சிற்றில் கட்டிய போது அதை நான் சிதைத்த போது .... அம்மம்மா எத்தனை கோபம் வந்தது.

வெட்டுவெட்டென்று எத்தனை கேள்விகள்.

என்னையே நான்தான்னு தரவுசான்று காட்டச் சொல்லி அதட்டினாயே...

பொல்லாத குட்டியாய் பேசிய கோதைக்கு இன்று கோபம் எங்கே போனது ??


கண்ணனுக்குள் அன்றைய நிகழ்வு நிழலாடியது.

கோதை வெட்கி நாணி கன்னம் சிவந்து தலை குனிந்தாள்.

"ஆம் கண்ணா... 
அன்று நான் பாடியது நினைவிருக்கிறதா.. 
அன்று நாங்கள் சிறுபிள்ளைகள்.

உன்னை நன்றாகக் கற்றிருக்கவில்லை.
அதனால் தான்..
நீ மட்டும் சேது கட்டினாயே நாங்கள் சிற்றில் கட்டக்கூடாதோ என்று சிறுபிள்ளை மொழியாய் பேசிவிட்டேன்.


ஆனால் இன்று அதையே சொல்கிறேன்...

சீதையாய் பிறந்த என்னை அடைய நீ பெரிய சேதுபந்தனமே செய்தாய் !!!

நான் உன்னை சேர இச்சிறு சிற்றில் தானே கட்டினேன்...
அழித்து வதைக்கிறாயே..."

கோதை அன்று பாடியதை மீண்டும் பாடினாள்


*முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலோமை நாள்தொறும்*

*சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண் என நாம் அது*

*கற்றிலோம் கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும்*

*செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய சேவகா*
*எம்மை வாதியேல்*
(நாச்.தி519)

அன்று நாங்கள் சிறியவர்கள் உன்னை சரியாக அறிந்திருக்கவில்லை என்று பாடுகிறாள்.

(தொடரும்)

No comments:

Post a Comment