Wednesday, February 10, 2021

Bhagavad Gita adhyaya 2 sloka 18,19 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramnujam

கீதாம்ருதம் -அத்தியாயம் 2

18.அந்தவந்த இமே தேஹா: நித்யஸ்ய உக்தா: சரீரிண:
அனாசின: அப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத

அனாசின:- அழிவற்ற, அப்ரமேயஸ்ய-விளக்கமுடியாத , நித்யஸ்ய- நித்தியமான, சரீரிண: - ஜீவாத்மாவினுடைய இமே தேஹா: இந்த உடல்கள், அந்தவந்த: உகதா:-அழியக்கூடியவை எனக் கூறப்படுகிறது. அதனால் பரதக் குலத்தோன்றலே நீ போர் புரிவாயாக.

இதன் பொருள் என்னவென்றால் பீஷ்மர் துரோணர் என்னும் உணர்வு அவர்கள் தேகத்தைப் பற்றியதல்ல, அதற்குள் இருக்கும் அவர்களின் ஆத்மாவேயாகும். ஆதலால் அவர்கள் உடல் அழிந்தாலும் அவர்கள் அழிவதில்லை. ஆத்மாவுக்கு அழிவில்லை.

அப்படியானால் ஏன் நம்மால் அதை உணரமுடிவதில்லை என்றால் ஆத்மா என்பது இந்த்ரியங்களாலோ, புத்தியினாலோ அறிய முடியாதது. இவைகளுக்கு உணரும் சக்தி வருவதே ஆத்மாவினால்தான்.

இதை நாம் சுலபமாக உணரலாம். ஒருவர் உயிரோடு இருக்கையில் அவர் இன்னார் என்று அறிகிறோம். ஆனால் உயிர் போனபிறகு அவருடைய தேகம் பிரேதம் எனக் கூறப்படுகிறது. உடலே நாம் ஆனால் உடல் தான் இருக்கிறதே. அதனால் நாம் என்பது உடலைத் தாண்டிய ஒரு அடையாளம். சாதாரண வழக்கில் உயிர் என்கிறோம் ஆனால் அதையும் தாண்டியது ஆத்மா.

பானை இருந்தாலும் உடைந்தாலும் அதனுள் இருக்கும் மண் அழிவதில்லை அல்லவா? அதுபோல ஆத்மா என்பது எல்லா தேகங்களிலும் உள்ளது,.சரீரத்தில் உள்ள ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான். கனவில் தோன்றும் பற்பல வடிவங்கள் விழித்ததும் மறைந்து விடுகின்றன, ஆனால் கனவு காண்பவனும் கனவில் தோன்றுபவனும் ஒருவனே. அதை எப்படி அறிவது ? பிரம்மஞானத்தின் மூலம்தான் என்பதைத்தான் கீதை மூலம் அறிகிறோம். 
.
19.ய ஏனம் வேத்தி ஹந்தாரம் ய: ச ஏநம் மந்யதே ஹதம் 
உபௌ தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹன்யதே

ய: -எவன், ஏனம்-இந்த ஆத்மாவை , ஹந்தாரம்- கொல்பவனாகவோ, ய: ச- அல்லது எவன், ஏனம் –இந்த ஆத்மாவை , ஹதம் – கொல்லப்படுபவனாகவோ , வேத்தி- அறிகிறானோ , உபௌ தௌ- அவர்கள் இருவருமே , ந விஜாநீத: - அறியாதவர்களாவர். ஏனென்றால், அயம்- இந்த ஆத்மா ,ந ஹந்தி- கொல்வதில்லை, ந ஹன்யதே- கொல்லப்படுவதும் இல்லை

அதாவது கொல்வதும் கொல்லப்படுவதும் தேகங்களே. ஏனென்றால் ஆத்மாவிற்கு எந்த கர்மமும் இல்லை. எல்லா செய்கைகளும் உடல், மனம் புத்தி சம்பந்தப்பட்டவையே.

  

No comments:

Post a Comment