*Continuation from yesterday's posting..*
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
ஆசார்யாரவர்கள்ஸாதாரணமாக துங்கா நதிக்குத் தென்புறமுள்ள நரஸிம்ஹவனம் ஆசிரமத்திலேயே வாஸம் செய்வது வழக்கம். வடகரையில் பழைய மடத்துக் கட்டிடங்களும், ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயமும், சிருங்கேரி ஊரும் இருந்து வருகின்றன. ஊர் மத்தியில் அக்கிரஹாரத்தில் ஸ்ரீமடம் அதிகாரிகள் வாஸம் செய்வார்கள். அதற்கும் ஆசார்யார் இருப்பிடத்திற்கும் சுமார் அரை மைல் இருக்கும். மத்தியில் நதியுமுண்டு. ஸ்ரீமத் ஆசார்யாரவர்கள் அந்தர்முகமாக இருந்த ஸமயம் ஒரு நாள் நடுராத்திரியில் தன்னிடமிருந்த வேலைக்காரனைக் கூப்பிட்டு "அக்கரையில் அக்ரஹாரத்தில் இன்னார் கீழே விழுந்து விட்டார், உடனே போய்ப் பார்த்துவா" என்று சொன்னார்கள். அர்த்தராத்திரியில் இவ்விதம் ஆக்ஞை கொடுத்ததினால் வேலைக்காரன் கொஞ்சம் தயங்கி நகர்ந்து நின்றுகொண்டான். சில க்ஷணங்கள் கழித்து அறையிலிருந்த படியே ஆசார்யாரவர்கள் "போனாயா?" என்று கேட்டார்கள். இனிமேல் அவர்களுடைய அதிருப்தியேற் படுமென்று பயந்த வேலைக்காரன் அவர்கள் குறிப்பிட்ட அதிகாரியின் வீடு வந்து சேர்ந்தான். வீட்டு வாசற்கதவு உள்தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. எல்லாம் நிச்சப்தமாக இருக்கக் கண்டான். ஆனால் திரும்பிப்போனால் அவ்வதிகாரியைப் பார்த்தாயாவென்று கேட்டால் என்ன பதில் சொல்லுகிறதென்று பயந்து கதவைத் தட்டினான். அவ்வதிகாரியே கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்து பார்க்க ஆசார்யாரின் வேலைக்காரன் நிற்பதைக் கண்டார். நிசிவேளையில் வந்ததால் ஆசார்யாருக்கு ஏதேனும் அஸௌகர்யமோவென்று கவலையுற்று வினவினார். அவன் நடந்ததைச் சொன்னான். அதன்பேரில் அவ்வதிகாரி "வாஸ்தவம். சில நிமிஷங்களுக்கு முன் ஜலமோசனத்திற்காக வாசல் பக்கம் வந்து கைகால் அலம்பிவிட்டுத் திரும்பும்போது கல் படியில் வழுக்கிக் கீழே விழுந்துவிட்டேன். இரண்டு நிமிஷம் பிரக்ஞையில்லாமலிருந்து மறுபடியும் தன் நினைவு வந்தவுடன் தெருவிலாவது வீட்டிலாவது யாருக்கும் தெரியவிடமின்றி ஓசைப்படாமல் வீட்டிற்குள் வந்து படுத்துக்கொண்டு விட்டேன். இதை ஆசார்யார் எப்படி அறிந்தார்களோ தெரியவில்லை. எப்படியும் அவர்கள் என் விஷயத்தில் வைத்திருக்கும் கருணைக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் ஸ்வஸ்தமாக இருப்பதாக அவர்களிடம் சொல்லிவிடு" என்று சொன்னார். இந்த ஸம்பவத்தைப் பற்றி அவ்வதிகாரி பின்னால் சொல்லும்போது " இந்தக் கடைசி வாக்கியம் நான் சொன்னவுடன் என் அசட்டுத்தனத்தை நானே உணர்ந்து கொண்டேன். நான் விழுந்ததை அறிந்த ஆசார்யாரவர்களுக்கு நான் எழுந்திருந்து ஸ்வஸ்தமாயிருக்கிறேனென்பது நான் சொல்லியா தெரிய வேண்டும்? " என்றார்.
*To be continued..*
No comments:
Post a Comment