Sunday, January 14, 2024

Mahabharatam in tamil307

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-307
துரோண பர்வம்
….
பூரிஸ்ரவஸின் கரத்தைத் துண்டித்த அர்ஜுனன்! 
பூரிஸ்ரவஸைக் கொன்ற சாத்யகி
-
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போரில் வெல்லப்பட முடியாத அந்தச் சாத்வதன் {சாத்யகி} (அர்ஜுனனை நோக்கி) வருவதைக் கண்டவனும், சினமடைந்தவனுமான பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென அவனை {சாத்யகியை} நோக்கிச் சென்றான்.(1) பிறகு அந்தக் குரு குலத்தோன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சிநி குலத்துக் காளையிடம் {சாத்யகியிடம்}, "நற்பேறின் நிமித்தமாகவே இன்று நீ என் பார்வை அடையும் தொலைவுக்குள் வந்திருக்கிறாய்.(2) எப்போதும் என் மனதில் கொண்டிருந்த விருப்பத்தை இந்தப் போரில் நான் இன்று அடையப் போகிறேன். நீ போரில் இருந்து ஓடாமலிருந்தால், நீ உயிருடன் தப்ப மாட்டாய்.(3) {நீ கொண்ட} வீரத்தில் எப்போதும் செருக்குடையவனான உன்னை இன்று போரில் கொன்று, ஓ! தாசார்ஹ குலத்தோனே {சாத்யகி}, குரு மன்னன் சுயோதனனை {துரியோதனனை} நான் மகிழச் செய்யப் போகிறேன்.(4)


என் கணைகளால் எரிக்கப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கும் உன்னை வீரர்களான கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் இன்று சேர்ந்திருந்து காண்பார்கள்.(5) உன்னை இந்தப் படைக்குள் ஊடுருவச் செய்தவனான தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, என்னால் நீ கொல்லப்பட்டதைக் கேட்டு, வெட்கத்தில் மூழ்கப் போகிறான்.(6) இன்று நீ கொல்லப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டு, பூமியில் கிடப்பதைப் பார்க்கையில், பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, என் ஆற்றலை அறிந்து கொள்வான்.(7) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில், சக்ரன் மற்றும் பலியின் மோதலைப் போலவே உன்னுடன் {இப்போது} நேரப்போகும் இந்த மோதலை எப்போதுமே நான் விரும்பி வந்தேன்.(8) ஓ! சாத்வதா {சாத்யகி} இன்று நான் உனக்குப் பயங்கரப் போரைத் தருவேன். அப்போதுதான், உண்மையில் என் சக்தி, வலிமை மற்றும் ஆண்மை ஆகியவற்றை நீ புரிந்து கொள்வாய்.(9)

போரில் என்னால் கொல்லப்படும் நீ, ராமனின் தம்பியான லட்சுமணனால் கொல்லப்பட்ட ராவணனின் மகனை (இந்திரஜித்தைப்) போல இன்று யமனுலகை அடையப் போகிறாய்.(10) இன்று உன் கொலையைப் பார்க்கும் கிருஷ்ணன், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர், ஓ! மது குலத்தோனே {சாத்யகி}, மனத்தளர்ச்சியடைந்து போரைக் கைவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.(11) கூரிய கணைகளால் இன்று உனக்கு மரணத்தை ஏற்படுத்தி, ஓ! மாதவா {சாத்யகி}, போரில் உன்னால் கொல்லப்பட்டோர் அனைவரின் மனைவிமாரையும் மகிழச் செய்யப் போகிறேன்.(12) என் பார்வையின் இலக்குக்குள் வந்த நீ, சிங்கத்தின் பார்வை தொலைவுக்குள் வந்த சிறு மானைப் போல என்னிடம் இருந்து தப்ப மாட்டாய்" என்றான் {பூரிஸ்ரவஸ்}.(13)

அவனது {பூரிஸ்ரவஸ்ஸின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே அவனுக்குப் {பூரிஸ்ரவஸ்ஸுக்குப்} பதிலளிக்கும் வகையில், "ஓ! குரு குலத்தோனே {பூரிஸ்ரவஸ்ஸே}, போரில் நான் எப்போதும் அச்சங்கொண்டதில்லை.(14) உன் வார்த்தைகளால் மட்டுமே என்னை அச்சுறுத்துவதில் உன்னால் வெல்ல முடியாது. எவன் என்னை ஆயுதங்களை இழக்கச் செய்வதில் வெல்வானோ, அவனாலேயே போரில் என்னைக் கொல்ல முடியும்.(15) எவன் போரில் என்னைக் கொல்வானோ, அவன் இனி வரப்போகும் காலம் முழுவதும் (எதிரிகளைக்) கொன்று கொண்டிருப்பான் [1]. வீணான வார்த்தைகளைக் கொண்டு நீண்ட மூச்சுடன் தற்பெருமை பேசுபவது எதற்குப் பயன்படும்? நீ சொல்வதைச் செயலில் சாதிப்பாயாக.(16) கூதிர்காலத்துக் கார்முகில்களின் கர்ஜனையைப் போலவே உன் சொற்களும் கனியற்றவையாகவே தெரிகின்றன. ஓ! வீரா {பூரிஸ்ரவஸ்}, உன் முழக்கங்களைக் கேட்டு, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.(17) ஓ குரு குலத்தோனே {பூரிஸ்ரவஸ்} நீண்ட நாட்களாக உன்னால் விரும்பப்பட்ட அந்த மோதல் இன்று நடக்கட்டும். ஓ! ஐயா {பூரிஸ்ரவஸ்} உன்னுடனான மோதலை விரும்பும் என் இதயத்தால், தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(18) ஓ! இழிந்தவனே, உன்னைக் கொல்லாமல் நான் போரில் இருந்து திரும்பேன்" என்றான் {சாத்யகி}. இத்தகு வார்த்தைகளால் ஒருவரையொருவர் நிந்தித்துக் கொண்ட மனிதர்களில் காளையரான அவ்விருவரும், பெருங்கோபத்தால் தூண்டப்பட்டு, ஒருவரின் உயிரை மற்றவர் எடுக்க விரும்பி, ஒருவரையொருவர் போரில் தாக்கிக் கொண்டனர்.(19)

[1] "எவன் என்னைக் கொல்வானோ அவன் போரில் எப்போதும் வெற்றியாளனாக இருந்து, போரில் ஈடுபடும் போர் வீரர்களை எப்போதும் கொல்வான். எப்போதும் தோல்வி அவனுடையதாகாது" என்பதே இங்குப் பொருள் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

பெரும் வலிமை கொண்ட அந்தப் பெரும் வில்லாளிகள் இருவரும், ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, பருவ காலத்தில் உள்ள பெண்யானைக்காக மதங்கொண்ட இரண்டு கோபக்கார யானைகள் மோதுவதைப் போலப் போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(20) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பூரிஸ்ரவஸ் மற்றும் சாத்யகி ஆகிய இருவரும், மேகத்திரள்கள் இரண்டைப் போல ஒருவர் மீதொருவர் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தனர்.(21) அப்போது, அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, வேகமாகச் செல்லும் கணைகளால் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்து, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பின்னவனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தால் மீண்டும் அவனைப் {சாத்யகியைப்} பல கணைகளால் துளைத்தான்.(22)

பத்து கணைகளால் சாத்யகியைத் துளைத்த அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, அந்தச் சிநிக்களின் காளைக்கு {சாத்யகிக்கு} அழிவை ஏற்படுத்தும் விருப்பத்தால் அவன் மீது கூரிய கணைகள் பலவற்றை ஏவினான். எனினும் சாத்யகி, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களின் சக்தியால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில் பூரிஸ்ரவஸின் கணைகளில் எவையும் தன்னை அடையும் முன்பே அவை அனைத்தையும் ஆகாயத்திலேயே அறுத்தான். நற்குலத்தில் பிறந்தவர்களும், முறையே குருக்கள் மற்றும் விருஷ்ணிகள் ஆகியோரின் புகழை அதிகரித்தவர்களுமான அவ்விரு போர்வீரர்களும் இப்படியே ஒருவர் மீதொருவர் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர். தங்கள் நகங்களைக் கொண்டு போரிடும் இரு புலிகள், அல்லது தங்கள் தந்தங்களைக் கொண்டு போரிடும் இரு பெரும் யானைகளைப் போன்றே அவர்கள், தேர்வீரர்கள் பயன்படுத்துபவையான கணைகளாலும், ஈட்டிகளாலும் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(23-26) ஒருவரையொருவர் அங்கங்களைச் சிதைத்துக் கொண்டு, தங்கள் காயங்களில் குருதிப் பெருக்கெடுத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் உயிரையே பணயம் வைத்து சூதாடி, ஒருவரையொருவர் தடுத்துக் கொண்டும், ஒருவரையொருவர் குழப்பிக் கொண்டும் இருந்தனர்.(27) 

சிறந்த சாதனைகளைக் கொண்டவர்களும், முறையாகக் குருக்கள் மற்றும் விருஷ்ணிகளின் புகழை அதிகரிப்பவர்களுமான அந்த வீரர்கள், யானைக் கூட்டங்களின் தலைமையானைகளில் இரண்டைப் போல இப்படியே ஒருவருடனொருவர் போரிட்டனர்.(28) உண்மையில், உயர்ந்த உலகங்களை அடைய ஆசைப்பட்ட போர்வீரர்களான அவ்விருவரும், பிரம்ம லோகத்தை விரைவில் அடைய விரும்பி ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கினர். உண்மையில் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த சாத்யகியும், சோமதத்தன் மகனும் {பூரிஸ்ரவஸும்}, திருதராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தங்கள் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைக்கத் தொடங்கினர். அங்கே இருந்த மக்கள், அவ்விரு போர்வீரர்களுக்கு இடையில் நடந்த அந்த மோதல், பருவ காலத்தில் உள்ள பெண் யானைக்காக இரு தலைமை யானைகள் போரிடுவதைப் போலவே இருப்பதைக் கண்டனர் [2].(29-31)

[2] வேறொரு பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகமாக இருக்கிறது. அது பின்வருமாறு, "அரசரே, கோபமிகுந்தவர்களான அவ்விருவரும் அடிக்கடி அம்புகளால் அடித்துக் கொண்டு காட்டில் இரண்டு சிங்கங்கள் சண்டையிடுவது போலப் பெரிதான யுத்தரங்கத்தில் சண்டை செய்தார்கள். மர்மஸ்தானத்தையறிந்தவர்களும், மிகுந்த கோபத்துடன் வதஞ்செய்யக் கருதியவர்களுமான அவ்விருவரும், பலனும் வஜ்ரதரனான இந்திரனும் போல ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு கர்ஜித்தார்கள். பிறகு, ஒருவரையொருவர் எதிர்த்து வருகின்ற அவ்விருவரும் படிந்த கணுக்களுள்ள அம்புகளாலே அந்யோன்யம் கொடிகளையும், ரதத்திலுள்ள எல்லா உபகரணங்களையும் நன்றாக அறுத்தார்கள். பின்னும் அவ்விருவரும் அம்பு மழைகளால் ஒருவரையொருவர் வர்ஷித்துக் கொண்டு விரைவாக ஒருவர் மற்றவருடைய சாரதிகளைக் கொன்றார்கள்" என்றிருக்கிறது. இதன்பின்னர் பின்வருவதைப் போலவே தொடர்கிறது. மேற்கண்ட நிகழ்வுகள் கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ இல்லை.

பிறகு அந்தத் தேரற்ற போராளிகள் ஒவ்வொருவரும் மற்றவரின் குதிரைகளைக் கொன்று, மற்றவரின் விற்களை அறுத்த பிறகு, வாள்களைக் கொண்டு அந்தப் பயங்கரப்போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(32) அவர்கள், அழகியவையும், பெரியவையும், பிரகாசமானவையும், காளையின் தோலால் செய்யப்பட்டவையுமான இரண்டு அழகிய கேடயங்களை எடுத்துக் கொண்டும், உறையிலிருந்து இரு வாள்களை உருவிக் கொண்டும் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(33) எதிரிகளைக் கலங்கடிப்பவர்களும், சினத்தால் தூண்டப்பட்டவர்களுமான அவர்கள், மண்டலகதிகளைப் பின்பற்றியும், பிறவகைகளிலான முறையான நகர்வுகளைச் செய்தும், தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(34) வாள்களை ஏந்தி, பிரகாசமான கவசம் பூண்டு, மார்புக்கவசங்கள் மற்றும் அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களான புகழ்பெற்ற அந்தப் போர்வீரர்கள் இருவரும், பல்வேறு வகைகளிலான நகர்வுகளை வெளிப்படுத்தினர்.(35) அவர்கள் சக்கரமாகச் சுழன்று, உயரக் குதித்து, பக்கவாட்டில் உந்தித் தள்ளி, முந்தித் தாவி, முன்னோக்கியும் மேல்நோக்கியும் விரைந்தனர் [3].(36) எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள், தங்கள் வாள்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொரும் மற்றவனின் தவறுகளுக்காக ஆவலாகக் காத்திருந்தனர். அழகாகத் தாவிய அவ்வீரர்கள் இருவரும், தங்கள் பயிற்சி, நகர்வு நளினம் மற்றும் திறம் ஆகியவற்றை வெளிக்காட்டினர்.(37) போர்வீரர்களில் முதன்மையான அவர்கள், அந்தப் போரில் திறம்பட ஒருவரையொருவர் குத்தத் தொடங்கினர்.(38) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒருக்கணம் ஓய்வெடுத்தனர்.(39)

[3] வேறொரு பதிப்பில், "கீர்த்திமான்களான அவ்விரு வீரர்களும், ப்ராந்தம், உத்பிராந்தம், ஆவித்தம், ஆப்லுதம், விப்லுதம், ஸ்ருதம், ஸம்பாதம், ஸமுதீர்ணம் எனும் கத்தி சுழற்றும் வகைகளைக் காண்பித்துக் கொண்டும், கத்திகளால் பரஸ்பரம் வெட்டிக் கொண்டும் ஆச்சரியகரமாக ஸஞ்சாரஞ்செய்தார்கள். யுத்தஞ்செய்கிறவர்களுள் சிறந்தவர்களான அவ்விருவரும் யுத்தரங்கத்தில் சிக்ஷையையும் லாகவத்தையும் அவ்வாறே தேர்ச்சியையும் காண்பித்துக் கொண்டு ஒருவரையொருவர் குத்திக் கொண்டனர்" என்றிருக்கிறது.

அந்த மனிதர்களில் புலிகளான இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் ஒவ்வொருவரின் கேடயங்களையும் தங்கள் வாள்களால் துண்டு துண்டாக வெட்டி மற்போரில் ஈடுபட்டனர்.(40) அகன்ற மார்புகள் மற்றும் நீண்ட கரங்களைக் கொண்டவர்களும், மற்போரில் திறம் கொண்டவர்களுமான அவர்கள் இருவரும், பரிகாயுதங்களுக்கு ஒப்பான இரும்பு போன்ற தங்கள் கரங்களைக் கொண்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(41) தங்கள் கரங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், தங்கள் ஒவ்வொருவரின் கரங்களைப் பற்றிக் கொண்டும் இருந்த அவர்கள் தங்கள் கரங்களால் மற்றவரின் கழுத்தையும் பிடித்தனர்.(42) அப்படி அந்த வீரர்கள் போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலைச்சாரலில் விழும் இடிக்கு ஒப்பாக அந்தப் போரில் அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒலி பயங்கரமான பேரொலியாக இருந்தது.(43)

முறைப்படி குருக்கள் மற்றும் சாத்வத குலங்களின் போர்வீரர்களில் முதன்மையானவர்களும், சிறப்புமிக்கவர்களுமான அவ்விருவரும், தங்கள் தந்தங்களின் முனைகளைக் கொண்டு ஒன்றோடொன்று மோதும் இரு யானைகள், அல்லது தங்கள் கொம்புகளைக் கொண்டு மோதும் இரு காளைகளைப் போலவே, சில நேரங்களில் ஒருவரையொருவர் கரங்களால் கட்டியும், சில நேரங்களில் தங்கள் தலைகளால் ஒருவரையொருவர் தாக்கியும், சில நேரங்களில் தங்கள் கால்களால் ஒருவரையொருவர் பின்னியும், சில நேங்களில் தங்கள் நகங்களால் ஒருவரையொருவர் கிள்ளியும், சில நேரங்களில் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டியும், சில நேரங்களில் தங்கள் கால்களால் மற்றவரின் இடுப்பைச் சுற்றிப் பின்னியும், சில நேரங்களில் தரையில் உருண்டும், சில நேரங்களில் முன்னேறியும், சில நேரங்களில் பின்வாங்கியும், சிலநேரங்களில் ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தும், சில நேரங்களில் ஒருவரையொருவர் கீழே தூக்கி வீசியும், சில நேரங்களில் எழுந்து கொண்டும், சில நேரங்களில் உயரத் தாவிக் கொண்டும் இருந்தனர்.(44-46) உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கப் போராளிகளான அவ்விருவரும் அவ்வகை மோதல்களின் இயல்புக்குத் தகுந்த முப்பத்திரண்டு விதமான தனிப்பட்ட திறன்கள் மற்றும் செயல்கள் ஆகிய {செயல்திறன்கள்} அனைத்தையும் அந்தப் போரில் வெளிக்காட்டினர்.(47)

பூரிஸ்ரவஸுடனான மோதலில் அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} ஆயுதங்கள் தீர்ந்து போன போது, அர்ஜுனனிடம் வாசுதேவன் {கிருஷ்ணன்}, "வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், தேரை இழந்தவனுமான சாத்யகி போரில் ஈடுபடுவதைப் பார்.(48) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அவன் {சாத்யகி}, உன்னைத் தேடியே பாரதப் படைகளைப் பிளந்து அதற்குள் நுழைந்தான். பெரும் சக்தி கொண்ட பாரத வீரர்கள் அனைவருடனும் அவன் போரிட்டான்.(49) வேள்விக்கொடைகளைப் பெருமளவில் அளிப்பவனான பூரிஸ்ரவஸ், அந்தப் போர்வீரர்களில் முதன்மையானவன் {சாத்யகி} சோர்வும், களைப்பும் அடைந்திருக்கும்போது மோதுகிறான். போரிடும் விருப்பம் கொண்ட பூரிஸ்ரவஸ், முன்னேறி வரும் சாத்யகியோடு [4] மோதப் போகிறான் {பீமனோடும் என்றிருக்கிறது}. ஓ! அர்ஜுனா, இம்மோதல் சமமற்றதாவே {நியாயமற்றதாகவே} இருக்கும்" என்றான் {கிருஷ்ணன்}.(50)

[4] வேறொரு பதிப்பில், "அர்ஜுனா, சாத்யகி களைத்துப் போனதைப் பார். இவனை நீ காப்பாற்ற வேண்டும். பாண்டவா, இவன் பாரதச் சேனையை உடைத்துக் கொண்டு உன் பின்புறத்திலே நுழைந்துவிட்டான். பாரத! மிக்க வீர்யமுடையவர்களான எல்லாப் பாரதர்களாலும் போர்புரியும்படி செய்யப்பட்டான். கௌரவச் சேனையில் முக்கியர்களும், தலைமையானவர்களுமான மகாரதர்கள் நூறு நூறாகவும், ஆயிரமாயிரமாகவும் (இந்த) விருஷ்ணி வீரனால் கொல்லப்பட்டார்கள். அர்ஜுன, யுத்தஞ்செய்கிறவர்களுள் சிறந்தவனும், களைப்படைந்தவனும் இங்கு வருகின்றனவருமான இந்தச் சாத்யகியை மிக்கத் தக்ஷிணை கொடுப்பவனான பூரிஸ்ரவஸ் யுத்தத்தில் விருப்பமுள்ளவனாக எதிர்த்தான். இது சமமானதன்று" என்று இருக்கிறது. இதிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் பீமனைப் பற்றிய குறிப்பு இல்லை.

அப்போது போரில் வெல்லப்பட முடியாத போர்வீரனான பூரிஸ்ரவஸ், சினத்தால் தூண்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட எதிராளியைத் தாக்கும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போலச் சாத்யகியை மூர்க்கமாகத் தாக்கினான் [5].(51) கோபத்தால் தூண்டப்பட்டுத் தங்கள் தேர்களிலிருந்த அந்த முதன்மையான தேர்வீரர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் தங்கள் மோதலைக் கண்டு கொண்டிருந்த போதே போரிட்டனர் [6].(52)

[5] மன்மதநாத தத்தரின் பதிப்பில் 51வது ஸ்லோகம், "அப்போது கட்டுக்கடங்காத பூரிஸ்ரவஸ், சினத்தால் தூண்டப்பட்டு, தன் வாளை உயர்த்தி, மதங்கொண்ட யானையொன்று அதே நிலையிலுள்ள மற்றொன்றைத் தாக்குவதைப் போலச் சாத்யகியைத் தாக்கினான்" என்றிருக்கிறது. பூரிஸ்ரவஸ் சாத்யகியைக் கத்தியால் தாக்கினான் என்பது கங்குலியிலும், வேறொரு பதிப்பிலும் இல்லை.

[6] இப்படியே மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இருக்கிறது. ஆனால் வேறொரு பதிப்பிலோ, "யுத்தத்தில் கோபங்கொண்டவர்களும், வீரர்களுள் தலைவர்களும், ரதத்தில் வீற்றிருப்பவர்களுமான கேசவரும், அர்ஜுனனும் யுத்தகளத்தில் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே புஜபலமுள்ளவனான பூரிஸ்ரவஸ் சாத்யகியைத் தூக்கிப் பூமியில் அடித்தமையால் பக்கத்ததிலுள்ள சைனிகளர்களுக்கும் மேகத்தின் இடிமுழக்கம் போன்ற பெரிதான ஆரவாரம் உண்டாயிற்று" என்றிருக்கிறது. பூரிஸ்ரவசும், சாத்யகியும் தங்கள் தேர்களில் இருந்து போரிட்டனர் என்பது இல்லாமல், கிருஷ்ணனும், அர்ஜுனனும் தேரில் இருந்து கண்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், அர்ஜுனனிடம், "விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் புலியானவன் {சாத்யகி}, சோமதத்தன் மகனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு} அடங்குவதைப் பார்.(53) மிகக் கடினமான சாதனைகளை அடைந்த அவன் {சாத்யகி}, முயற்சியால் களைத்துப்போய்த் தன் தேரை இழந்தான். ஓ! அர்ஜுனா, உன் வீரச் சீடன் சாத்யகியைக் காப்பாயாக.(54) ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, மனிதர்களில் முதன்மையான அவன் {சாத்யகி}, வேள்விகளில் அர்ப்பணிப்புள்ள பூரிஸ்ரவஸுக்கு உன் நிமித்தமாக அடிபணியாதிருக்கும்படி பார்த்துக் கொள்வாயாக. ஓ !பலம் வாய்ந்தவனே {அர்ஜுனா}, தேவையானதை விரைந்து செய்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(55)

தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, "காட்டில் மதங்கொண்ட யானையொன்று வலிமைமிக்கச் சிங்கத்துடன் விளையாடுவதைப் போல அந்தக் குருக்களில் காளையும் {பூரிஸ்ரவஸும்}, அந்த விருஷ்ணிகளில் முதன்மையானவனும் {சாத்யகியும்} ஒருவருடனொருவர் விளையாடுவதைப் பார்" என்றான்.(56) பாண்டுவின் மகனான தனஞ்சயன் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போதே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பூரிஸ்ரவஸ் தீவிரமாக முயன்று, சாத்யகியைத் தாக்கி, அவனைத் தரையில் கிடத்தியதால், துருப்புகளுக்கு மத்தியில் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் கூச்சல்கள் எழுந்தன.(57,58) யானையை இழுத்துச் செல்லும் சிங்கத்தைப் போல, குரு குலத்தில் முதன்மையானவனும், வேள்விகளில் அபரிமிதமாகக் கொடையளிப்பவனுமான அந்தப் பூரிஸ்ரவஸ், அந்தச் சாத்வதர்களில் முதன்மையானவனை {சாத்யகியை} இழுத்துச் சென்ற போது, அந்தப் போரில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(59)

பிறகு அம்மோதலில் தன் உறையில் இருந்து வாளை உருவிய பூரிஸ்ரவஸ், சாத்யகியின் தலைமுடியைப் பிடித்திழுத்து, தன் காலால் அவனது மார்பைத் தாக்கினான்.(60) பிறகு பூரிஸ்ரவஸ், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சாத்யகியின் தலையை அவனது உடலில் இருந்து துண்டிக்க எத்தனித்தான். அப்போது அந்தச் சாத்வத வீரனின் {சாத்யகியின்} தலையானது, அதன் முடியை {குடுமியைப்} பிடித்திருந்த பூரிஸ்ரவஸின் கரத்தோடு சேர்ந்து கழியைச் சுற்றும் குயவனின் {மண் பாண்டம் செய்பவரின்} சக்கரம் போலச் சிறிது நேரம் வேகமாகச் சுழன்றது.(61,62)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சாத்வதன் {சாத்யகி}, போரில் பூரிஸ்ரவஸால் இப்படி இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} மீண்டும் அர்ஜுனனிடம், "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் புலியும், உன் சீடனும், வில்லாளித்தன்மையில் {விற்திறமையில்} உனக்குச் சற்றும் குறைவில்லாதவனுமான அவன் {சாத்யகி}, சோமதத்தன் மகனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு} அடங்கிவிட்டான்.(64) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இந்தப் பூரிஸ்ரவஸ், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட விருஷ்ணி வீரன் சாத்யகியை இப்படி மீறியிருப்பதால், பின்னவனின் {சாத்யகியின்} பெயரே பொய்யாகப் போகிறது [7]" என்றான் {கிருஷ்ணன்}.(65)

[7] "65ம் சுலோகத்தை நான் சரியாக வழங்கவில்லை. "சத்யவிகர்மன்" என்று சாத்யகி அழைக்கப்படுகிறான், அஃதாவது "உண்மையான ஆற்றல் கொண்டவன்", அல்லது "கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவன்" என்பது அதன் பொருள். இவன் இன்று பூரிஸ்ரவஸிடம் தோல்வியை அடைந்தால், அவனது அந்தப் பட்டப் பெயர் பொய்யாகிவிடும். இதையே கிருஷ்ணன் சொல்ல வருகிறான்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் பூரிஸ்ரவஸை மனதினால் வழிபட்டான்.(66) அவன் {அர்ஜுனன்} "குருக்களின் புகழை அதிகரிப்பவனான பூரிஸ்ரவஸ், விளையாட்டில் இழுப்பதைப் போலப் போரில் சாத்யகியை இழுக்கிறான் என்பதில் நான் மகிழ்கிறேன்.(67) விருஷ்ணி குல வீரர்களில் முதன்மையானவனான சாத்யகியைக் கொல்லாமல், பெரும் யானையை இழுத்துச் செல்லும் வலிமைமிக்கச் சிங்கத்தைப் போல இந்தக் குரு போர்வீரன் {பூரிஸ்ரவஸ்} அவனை {சாத்யகியை} இழுத்துச்செல்ல மட்டுமே செய்கிறான்" என்று நினைத்தான் {அர்ஜுனன்}.(68)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருதையின் {குந்தியின்} மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அர்ஜுனன், அந்தக் குரு {கௌரவப்} போர்வீரனை {பூரிஸ்ரவஸை} இப்படியே மனதால் பாராட்டிவிட்டு, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}(69), "ஓ! மாதவா {கிருஷ்ணா}, என் கண்கள் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மீது நிலைத்திருந்ததால், என்னால் சாத்யகியைக் காண முடியவில்லை. எனினும், அந்த யாதவப் போர்வீரனுக்காக {சாத்யகிக்காக} நான் மிகக் கடினமான சாதனையையும் செய்வேன்" என்று மறுமொழி கூறினான்.(70)

வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பணிந்து இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய க்ஷுரப்ரம் {கத்தி போன்ற தலை கொண்ட கணை} ஒன்றைக் காண்டீவத்தில் பொருத்தினான்.(71) பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களால் ஏவப்பட்டதும், ஆகாயத்தில் இருந்து சுடர்விட்டபடி விழும் கண்கவரும் விண்கல்லுக்கு ஒப்பானதுமான அந்தக் கணை, வாளைத் தன் பிடியில் கொண்டிருந்ததும், அங்கதத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான அந்தக் குரு போர்வீரனின் {பூரிஸ்ரவஸின்} கரத்தைத் துண்டித்தது" என்றான் {சஞ்சயன்}.(72)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அங்கதத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வாளைத் தன் பிடியில் கொண்டிருந்ததுமான (பூரிஸ்ரவஸின்) அந்தக் கரம் (இப்படி வெட்டப்பட்டு), அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் துயரத்தை அளிக்கும் வகையில் கீழே பூமியில் விழுந்தது.(1) உண்மையில், சாத்யகியின் தலையை வெட்ட இருந்த {பூரிஸ்ரவஸின்} அந்தக் கரம், {பூரிஸ்ரவஸின் கண்களுக்குக்} காணப்படாத அர்ஜுனனால் வெட்டப்பட்டு, ஐந்து தலை கொண்ட பாம்பொன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(2) பார்த்தனால் {அர்ஜுனனால்} தான் திறனறுபட்டதைக் கண்ட அந்தக் குரு {கௌரவப்} போர்வீரன் {பூரிஸ்ரவஸ்}, சாத்யகியிடம் இருந்த பிடியைக் கைவிட்டுக் கோபத்தால் நிறைந்து பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} கடிந்து பேசினான்.(3)


பூரிஸ்ரவஸ் {அர்ஜுனனிடம்}, "ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, என்னால் காணப்படாதவனாகவும், என்னுடன் (போரில்) ஈடுபடாதவனுமாக இருந்த நீ, என் கரத்தை வெட்டியதால் ஈவிரக்கமற்ற கொடூரமான காரியத்தைச் செய்திருக்கிறாய்.(4) தர்மனின் அரசமகனான யுதிஷ்டிரனிடம், "பூரிஸ்ரவஸ், போரில் வேறொருவனுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் என்னால் கொல்லப்பட்டான்" என்று நீ சொல்ல வேண்டியிருக்காதா?(5) உயர் ஆன்ம இந்திரனாலோ, ருத்ரனாலோ, துரோணராலோ, கிருபராலோ உனக்கு இப்படிப்பட்ட ஆயுதப் பயன்பாடு கற்றுக் கொடுக்கப்பட்டதா?(6) இவ்வுலகில் யாவரையும் விட ஆயுதங்களின் பயன்பாடு குறித்த விதிகளை நன்கறிந்தவன் நீயே. அப்படியிருக்கையில், போரில் உன்னுடன் ஈடுபடாத ஒரு போர்வீரனின் கரத்தை ஏன் நீ வெட்டினாய்?(7) கவனிக்காதவனையோ, பயந்தவனையோ, தேரற்றவனாக ஆக்கப்பட்டவனையோ, உயிரை, அல்லது பாதுகாப்பை இரந்து {கெஞ்சிக்} கேட்பவனையோ, துயரில் வீழ்ந்தவனையோ நீதிமான்கள் ஒரு போதும் தாக்குவதில்லை.(8) அப்படியிருக்கையில், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இழிந்தவனுக்கே தகுந்ததும், பொல்லாதவனால் மட்டுமே செய்யப்படுவதுமான இந்தப் பாவம் நிறைந்த, மிகவும் தகுதியற்ற செயலை ஏன் நீ செய்தாய்?(9) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, மரியாதைக்குரிய ஒருவன், மரியாதைக்குரிய செயலை எளிதாகச் செய்துவிடுவான். எனினும், மதிப்பற்ற ஒரு செயலைச் செய்வது மதிப்புமிக்க ஒருவனுக்கு மிகக் கடினமாகும்.(10) யாருடன் ஒரு மனிதன் திரிகிறானோ, அவனது நடத்தையையே அவன் விரைவில் பிடித்துக் கொள்வான். ஓ! பார்த்தா, இதுவே உன்னில் காணப்படுகிறது.(11) நல்ல நடத்தையைக் கொண்டவனாக, சிறந்த நோன்புகளை நோற்றவனாக, அரசபரம்பரையைச் சேர்ந்தவனாக, அதிலும் குறிப்பாக குரு குலத்தில் பிறந்தவனாக இருப்பினும், க்ஷத்திரிய கடமைகளில் இருந்து எவ்வாறு நீ விலகினாய்?(12) விருஷ்ணி போர்வீரனுக்காக {சாத்யகிக்காக} நீ செய்த இந்த அற்பச் செயல் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} ஆலோசனைகளுக்கு இணக்கமாகவே செய்யப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. உன்னைப் போன்ற ஒருவனுக்கு இத்தகு செயல் பொருந்தாது.(13) வேறொருவனுடன் போரில் ஈடுபட்டுக் கவனமற்று இருக்கும் ஒருவனுக்கு, கிருஷ்ணனின் நண்பனைத் தவிர வேறு எவனால் இத்தகு குற்றத்தை இழைக்க முடியும்?(14) பாவச்செயல்களிலேயே எப்போதும் ஈடுபடுபவர்களான விருஷ்ணிகளும், அந்தகர்களும், நிந்திக்கத்தக்க நடத்தைக்கு இயல்பிலேயே அடிமையான தீய க்ஷத்திரியர்களாவர். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உனக்கு முன்மாதிரியாக அவர்களை ஏன் நீ கொண்டாய்? [1] [2]" என்றான் {பூரிஸ்ரவஸ்}.15

[1] "வங்க உரைகளில் முவ்வரியாக (triplet) இவ்வாறே அச்சிடப்பட்டுள்ளது. தீய க்ஷத்திரியர்கள் என்பது மூலத்தில் விராத்யர்கள் {Vratas) என்று இருக்கிறது. முறையான நேரத்தில் சாத்திரப்பூர்வமான வழக்கமான சடங்குகளைச் செய்து கொள்ளாத ஒரு பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ விராத்யனாகிறான். வீழ்ந்த {தவறு செய்த} மனிதன் என்று அழைக்கப்படும் நிலைக்கு அவன் ஆளாகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] வேறொரு பதிப்பில், "பார்த்தா, விராத்யர்களும், மிகவும் இகழத்தக்க செய்கையை உடையவர்களும், இயற்கையாகவே நிந்திக்கப்பட்டவர்களுமான விருஷ்ணிகளும், அந்தகர்களும் உன்னால் எவ்வாறு நிர்ணயம் சொல்லுகிறவர்களாகச் செய்யப்பட்டார்கள்?" என்றிருக்கிறது.

போரில் இப்படிக் கேட்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பூரிஸ்ரவஸுக்கு மறுமொழியாக, "ஓ! தலைவா {பூரிஸ்ரவஸ்}, மூடத்தனமான இவ்வார்த்தைகள் யாவும் உன்னால் சொல்லப்படுவதால், உடல் பலவீனத்தினால் ஒருவனது அறிவும் சிதைகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது [3].(16) ரிஷிகேசனையும் {கிருஷ்ணனையும்}, என்னையும் நீ நன்றாக அறிந்தாலும், உன்னால் எவ்வாறு எங்களை இப்படிக் கடிந்து கொள்ள முடிகிறது? போர்விதிகளையும், சாத்திரங்களின் பொருள் அனைத்தையும் அறிந்த நான், பாவச்செயல் எதையும் செய்ய மாட்டேன்.(17) இதை நன்றாக அறிந்தும், என்னை நீ நிந்திக்கிறாய். தொண்டர்கள், சகோதரர்கள், தந்தைமார், மகன்கள், உறவினர்கள், சொந்தங்கள், தோழர்கள், நண்பர்கள் ஆகியோரால் சூழப்பட்டவர்களாகவே க்ஷத்திரியர்கள் பகைவரோடு போரிடச் செல்வார்கள்.(18) அப்படித் தங்களைப் பின்தொடர்வோரை (பின்தொடர்வோரின் பலத்தை) நம்பியே அவர்கள் போரிடவும் செய்வார்கள்.(19) அப்படியிருக்கையில், என் சீடனும், அன்புக்குரிய சொந்தக்காரனும், விடுவதற்கு அரிதான உயிரையே துச்சமாக மதித்து எங்களுக்காகப் போரிடுபவனுமான சாத்யகியை நான் ஏன் காக்கக் கூடாது? [4](20) ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, போரில் வெல்லப்பட முடியாதவனான சாத்யகி என் வலக்கரமாவான்.

[3] வேறொரு பதிப்பில், "முதுமையடைந்த மனிதன் தன்புத்தியையும் முதுமையடையச் செய்து கொள்கிறான்; இது வெளிப்படை" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பயனற்ற வகையில் என்னை நீ இப்படி நிந்திப்பதால், உடலின் சிதைவு மனிதர்களின் அறிவையும் சிதைக்கிறது என்பது தெளிவாகிறது" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் வரிகளே தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.

[4] "20ம் சுலோகம் முழுமையடையாமல் இருக்கிறது. பொருள் புரிந்து கொள்ளத்தக்க வகையில், 'நான் ஏன் காக்கக் கூடாது' என்ற வார்த்தைகளை நானே சேர்த்திருக்கிறேன். 21வது சுலோகத்தின் முதல் வரி 20வது சுலோகத்துடன் இலக்கண ரீதியாக இணைப்புடையதாகும். மோசமான வாக்கியக் கட்டுமானத்தைத் தவிர்க்கும்பொருட்டே இவற்றைத் தனி வாக்கியங்களாக வாசகருக்கு நான் அளிக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

போருக்குச் செல்லும் ஒருவன் தன்னை மட்டுமே பாதுகாத்துக் கொள்வது தகாது.(21) ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, வேறொருவனின் காரியத்தில் ஈடுபடும் ஒருவன், (அந்த வேறொருவனால்) பாதுகாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்கள் பாதுகாக்கப்படுவதால், போரின் தொடர்ச்சியில் மன்னனும் பாதுகாக்கப்படுகிறான்.(22) பெரும்போரில், சாத்யகி கொல்லப்படப்போகும் தருணத்தில், (அவனைக் காக்க முயற்சி செய்யாமல்) நான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தால், என்னுடைய அத்தகைய புறக்கணிப்பின் காரணமாக ஏற்படும் சாத்யகியின் மரணத்தால் நான் பாவத்தையே அடைவேன்.(23) நான் சாத்யகியைக் காத்ததற்காக என்னிடம் ஏன் நீ கோபம் கொள்கிறாய்? ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, "வேறொருவனிடம் போரிட்டுக் கொண்டிருந்தாலும், உன்னால் நான் அங்கம் சிதைக்கப்பட்டேன்" என்று நீ என்னைக் கடிந்து கொள்கிறாய். அக்காரியத்தில் தவறாகத் தீர்மானித்தேன் என்றே நான் பதிலளிப்பேன்.

தேர்கள் மற்றும் யானைகள் நிரம்பியதும், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்கள் மிகுந்ததும், கடும் சிங்க முழக்கங்களை எதிரொலிப்பதும், அகன்ற கடலுக்கு ஒப்பானதுமான படைக்கு மத்தியில், சில நேரங்களில் என் கவசத்தை அசைத்துக் கொண்டும், சில நேரங்களில் என் தேரில் ஏறிச் சென்றும், சில நேரங்களில் வில்லின் நாணை இழுத்துக் கொண்டும், நான் என் எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருந்தேன். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு மத்தியில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி} ஒரே ஒருவனுடன் மட்டுமே போரில் ஈடுபடுவது எப்படிச் சாத்தியம் [5]? பலருடன் போரிட்ட அந்தச் சாத்யகி, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரை வென்று களைத்துப் போயிருந்தான்.(24-28) அவனது விலங்குகளும் {குதிரைகளும்} களைத்திருந்தன. ஆயுதங்களால் பீடிக்கப்பட்டிருந்த அவனும் {சாத்யகியும்} உற்சாகமற்றவனாகவே இருந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியை அப்படிப்பட்ட சூழ்நிலையில் வென்று, அவனை உன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உனது மேன்மையை நீ வெளிக்காட்ட முனைந்தாய்.(29) அந்தப் போரில் உன் வாளால் சாத்யகியின் தலையை வெட்டவும் நீ விரும்பினாய்.(30) அந்நிலைக்குக் குறைக்கப்பட்ட சாத்யகியை என்னால் அலட்சியமாகப் பார்க்க முடியாது [6]. (அடுத்தவனுக்குத் தீங்கிழைக்கையில்) உன்னைக் குறித்துக் {உன் பாதுகாப்பில்} கவனமில்லாமல் இருந்ததால், உன்னையே நீ நிந்தித்துக் கொள்ள வேண்டும். உண்மையில், ஓ! வீரா {பூரிஸ்ரவஸ்}, உன்னைச் சார்ந்த ஒருவனிடம் நீ எவ்வாறு நடந்து கொள்வாய்?" என்று கேட்டான் {அர்ஜுனன்}.(31)

[5] வேறொரு பதிப்பில், "குதிரைகளாலும், காலாட்களாலும் நெருங்கியதும், தேர்ப்படைகளும், யானைப்படைகளுமுள்ளதும், சிம்மநாதத்தினால் அதிகமான சப்தத்துடன் கூடியதும், ஆழ்ந்திருக்கின்றதுமான இந்தச் சேனாசமுத்திரத்தில் கவசம்பூண்டவனும், தேரின் மீதேறியிருக்கின்றவனும், எல்லா ஆயுதங்களையும் உடையவனும், எதிர்த்துப் போர் செய்யும் வீரனை எதிர்பார்த்திருக்கின்றவனும், தன்னைச் சேர்ந்த வீரர்களோடு கூடியவனும், அவ்வாறே ரணகளத்தில் பராக்ரமமிக்கவனுமான உனக்குச் சாத்யகியோடு சண்டையிடுவது எவ்வாறு தகுந்ததாகும்?" என்றிருக்கிறது. கங்குலியில் அர்ஜுனன் தன்னைக் குறித்துச் சொல்வதைப் போலுள்ளவை அனைத்தும் இதில் பூரிஸ்ரவஸ் குறித்தவையாகச் சொல்லப்பட்டுள்ளன. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, "குதிரைகளும், காலாட்படை வீரர்களும் நிறைந்ததும், தேர்களையும் யானைகளையும் கொண்டதும், போராளிகளின் போர்க்கூச்சல்களை எதிரொலித்துக் கொண்டிருந்ததுமான தனது எதிரிகளின் படைக்கு மத்தியில், உனக்கு எதிராகத் தன் கவசத்தை அசைத்த சாத்யகி, தன் தேரில் ஏறிச் சென்று, தன் வில்லின் நாணை இழுத்து அந்த எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும் மத்தியில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, ஒருவனோடு மட்டுமே போரிடுவது எப்படிச் சாத்தியமாகும்?" என்றிருக்கிறது. இந்த மூன்றிலும், முழுவதும் சாத்யகியையே குறிக்கும் மன்மதநாததத்தரின் வரிகளே தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.

[6] "உண்மையில், 'இந்த நிலைக்குக் குறைக்கப்பட்ட சாத்யகியை அலட்சியமாகக் காண எவனால் முடியும்?' என்ற பொருள் படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "அவ்வாறு கஷ்டநிலைமையை அடைந்திருக்கும் சாத்யகியைப் பார்த்து எவன் பொறுப்பான்?" என்றிருக்கிறது. 

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படி (அர்ஜுனனால்) சொல்லப்பட்டவனும், வலிய கரங்கொண்டவனும், சிறப்பானவனும், வேள்விக்கம்பத்தை {யூபத்தைத்} தன் கொடியில் பொறித்திருந்தவனுமான பூரிஸ்ரவஸ், யுயுதானனை {சாத்யகியைக்} கைவிட்டு, பிராயம் என்ற நோன்பின்படி {பிராயோபவேசம் செய்து} [7] இறக்க விரும்பினான்.(32) பல நற்செயல்களால் புகழ்பெற்றவனான அவன் {பூரிஸ்ரவஸ்}, பிரம்ம லோகத்தை அடைய விரும்பி தன் இடக்கையால் அம்புப்படுக்கையைப் {கணைகளாலான ஆசனத்தைப்} பரப்பி, அவற்றைப் {அம்புகளைப்} பாதுகாக்கும் தெய்வத்தின் மீது கவனமாகத் தன் உணர்வுகளை நிலைக்கச் செய்தான்.(33) தன் பார்வையைச் சூரியனிலும், தூய்மையான தன் இதயத்தைச் சந்திரனிலும் நிலைக்கச் செய்து, பெரும் உபநிஷதத்தை (மஹா உபநிஷத் மந்திரங்களை) நினைத்த பூரிஸ்ரவஸ் யோகத்தை மேற்கொண்டு பேசுவதை நிறுத்தினான் [8].(34)

[7] "பொதுவாக உணவனைத்தையும் விலக்கிச் சாவது. பிராயம் என்பது யோகத்தால் உடலில் இருந்து ஆன்மாவை விடுவித்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாகும்" என இங்கே கங்குலி விளக்குகிறார்.

[8] வேறொரு பதிப்பில், "புண்யமான லக்ஷணங்களையுடைய பூரிஸ்ரவஸ் இடக்கையினால் அம்புகளைப் பரப்பிப் பிரம்மலோகத்தையடைய எண்ணங்கொண்டு பிராணன்களை வாயுக்களில் ஒடுக்கிச் சூரியனிடத்தில் கண்ணைச் செலுத்திப் பிரஸன்னமான மனத்தை ஜலத்தில்சேர்த்து மகோபநிஷத்தைத் தியானஞ்செய்து கொண்டு யோகாப்பியாஸத்துடன் பிரம்மத்தை மனனம் செய்யலானான்" என்றிருக்கிறது.

அப்போது படைகள் அனைத்திலும் இருந்த மனிதர்கள் யாவரும் கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} நிந்தித்து, மனிதர்களில் காளையான அந்தப் பூரிஸ்ரவஸைப் பாராட்டினர்.(35) நிந்திக்கப்பட்டாலும், அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும் (இறந்து கொண்டிருக்கும் அந்த வீரனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு}) ஏற்பில்லாத எந்த ஒரு வார்த்தையையும் பேசவில்லை. யூபக்கொடி கொண்ட பூரிஸ்ரவஸும், தான் இப்படிப் புகழப்படுவதால் எந்த இன்பத்தையும் உணரவில்லை.(36) அப்போது, பல்குனன் என்றும் அழைக்கப்படும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, உமது மகன்கள் இவ்வகையில் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாகவும், அவர்களின் வார்த்தைகளையும், பூரிஸ்ரவஸின் வார்த்தைகளையும் மனத்தில் கொண்டும், துயரத்துடனும், கோபமற்ற இதயத்துடனும், அவர்கள் அனைவருக்கும் நினைவூட்டும்படி இவ்வார்த்தைகளைச் சொன்னான்.{37, 38) அவன் {அர்ஜுனன்}, "மன்னர்கள் அனைவரும், என் பெருநோன்பான {மகாவிரதமான} 'எங்கள் தரப்பினர் எவரும் என் கணைகளின் எல்லைக்குள் உள்ள வரையில், அவர்களைக் கொல்வதில் எவராலும் வெல்ல முடியாது' என்பதை {என்ற என் சபதத்தை} அறிவர்.(39) ஓ யூபக் கொடியோனே {பூரிஸ்ரவஸ்}, இதை நினைவுகூரும் நீ என்னை நிந்தித்தல் தகாது. அறநெறி எதுவென அறியாத ஒருவன், பிறரை நிந்திப்பது முறையாகாது.(40) போரில் நன்கு ஆயுதம் தரித்திருந்த நீ, (ஆயுதமற்ற) சாத்யகியை கொல்லப்போகும் தருணத்தில், நான் உனது கரத்தை வெட்டியது அறநெறிக்கு முரணானதல்ல.(41) ஆனால், ஓ! ஐயா {பூரிஸ்ரவஸ்}, ஆயுதமற்றவனும், தேரை இழந்தவனும், கவசம் நழுவியவனும், வெறும் பாலகனே ஆனவனுமான அபிமன்யுவின் கொலையை நேர்மையான எந்த மனிதன்தான் பாராட்டுவான்?" என்றான் {அர்ஜுனன்}.(42)

இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட பூரிஸ்ரவஸ் தன் தலையால் தரையைத் தொட்டு, (வெட்டப்பட்டிருந்த தன் வலக்கரத்தை) தன் இடக்கரத்தால் காணிக்கையளித்தான் {அர்ஜுனன் எதிரில் போட்டான்}.(43) கண்கவரும் பிரகாசத்தைக் கொண்டவனும், யூபக் கொடியோனுமான பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தலையைத் தொங்கப் போட்டவாறே அமைதியாக இருந்தான்.(44) அப்போது அர்ஜுனன், "ஓ! சலனின் அண்ணனே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரிடமோ, வலிமைமிக்கோர் அனைவரிலும் முதன்மையான அந்தப் பீமரிடமோ, நகுலனிடமோ, சகாதேவனிடமோ நான் கொண்டுள்ள அன்புக்கு இணையாகவே நான் உன்னிடமும் {அன்பு} கொண்டுள்ளேன்.(45) என்னாலும், சிறப்புமிக்கக் கிருஷ்ணனாலும் கட்டளையிடப்படும் நீ, உசீநரனின் மகனான சிபி எங்கே இருக்கிறானோ, அந்த நல்லோரின் உலகங்களுக்குச் செல்வாயாக" என்றான் {அர்ஜுனன்}.(46) வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, "வேள்விகளையும், அக்னிஹோத்திரங்களையும் நீ தொடர்ச்சியாகச் செய்திருக்கிறாய். எனவே, காந்தியால் எப்போதும் சுடர்விடுவதும், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட முதன்மையான தேவர்களாலும் விரும்பப்படுவதுமான என் தூய உலகங்களுக்குத் தாமதமில்லாமல் சென்று, எனக்கு இணையானவனாகி, கருடனால் சுமக்கப்படுவாயாக" என்றான்.(47)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "சோமதத்தன் மகனால் {பூரிஸ்ரவஸால்} விடுவிக்கப்பட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, எழுந்திருந்து, தன் வாளை உருவி கொண்டு, பூரிஸ்ரவஸின் சிரத்தைக் கொய்ய விரும்பினான்.(48) உண்மையில், வேள்விகளில் அபரிமிதமாகக் கொடையளித்தவனும், போரில் உணர்வுகள் அற்றுப் போனவனும், பாண்டுவின் மகனால் முன்பே கிட்டத்தட்ட கொல்லப்பட்டவனும், வெட்டப்பட்ட கையுடன் அமர்ந்திருந்தவனும், துதிக்கையற்ற யானைக்கு ஒப்பாக இருந்தவனும், சலனின் அண்ணனுமான பாவமற்ற அந்தப் பூரிஸ்ரவஸைச் சாத்யகி கொல்ல விரும்பினான்.(49) போர்வீரர்கள் அனைவரும் (அவனது நோக்கத்திற்காகப்) அவனை உரக்க நிந்தித்தனர். படைவீரர்கள் மறுத்துக் கூச்சலிட்டுக் கொண்டிருந்த போதும், கிருஷ்ணன், உயர் ஆன்ம பார்த்தன் {அர்ஜுனன்}, பீமன், (அர்ஜுனனுடைய தேரின்) இருசக்கரங்களையும் பாதுகாத்தவர்கள் (யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ்), அஸ்வத்தாமன், கிருபர், கர்ணன், விருஷசேனன் ஆகியோராலும், சிந்துக்களின் ஆட்சியாளனாலும் {ஜெயத்ரதனாலும்} கூடத் தடுக்கப்பட்ட போதிலும், அறிவை இழந்தவனான சாத்யகி, நோன்பை நோற்றுக் கொண்டிருந்த பூரிஸ்ரவஸைக் கொன்றான்.(50-52) உண்மையில், பார்த்தனால் {அர்ஜுனனால்} கை அறுபட்டவனும், தன் ஆன்மாவை உடலில் இருந்து விடுவிக்கப் பிராயத்தில் {பிராயம் என்ற நோன்பில்} அமர்ந்திருந்தவனுமான அந்தக் குரு போர்வீரனின் தலையைத் தன் வாளால் அறுத்தான் சாத்யகி.(53)

பார்த்தனால் முன்பே கிட்டத்தட்ட கொல்லப்பட்டவனான அந்தக் குருகுலத்தைத் தழைக்க வைத்தவனை {பூரிஸ்ரவஸைக்} கொன்றதற்காகச் சாத்யகியைப் போர்வீரர்கள் மெச்சவில்லை.(54) அந்தப் போரில் சக்ரனை {இந்திரனைப்} போன்ற பூரிஸ்ரவஸ், பிராய நோன்பை நோற்று அமர்ந்திருக்கையில் கொல்லப்பட்டதைக் கண்டும், அவனால் சாதிக்கப்பட்ட செயல்களால் வியப்படைந்தும், சித்தர்கள், சாரணர்கள், அங்கே இருந்த மனிதர்கள், ஏன் தேவர்களும் கூட அவனை {பூரிஸ்ரவஸைப்} புகழத் தொடங்கினர்.(55) உமது வீரர்களும் இக்காரியத்தை வாதிட்டுக் கொண்டே, "இது விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} தவறன்று. ஏற்கனவே விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. எனவே, நாம் கோபமடைய வேண்டாம். கோபமே மனிதர்களின் கவலைகளுக்குக் காரணமாக இருக்கிறது.(56,57) விருஷ்ணி வீரனால் {சாத்யகியால்} பூரிஸ்ரவஸ் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. இது {இக்குற்றம்} யாருடையது, அல்லது யாருடையதில்லை என்று ஆராய்வது பயனற்றதாகும். சாத்யகியே போரில் பூரிஸ்ரவஸின் மரணத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று படைப்பாளன் {பிரம்மன்} விதித்திருக்கிறான்" என்றனர்.(58)

சாத்யகி, "பாவிகளான கௌரவர்களே, நீதி {அறம் / தர்மம்} என்ற ஆடையை மேலுக்குப் போர்த்திக் கொண்டு, இந்தப் பூரிஸ்ரவஸ் கொல்லப்படத்தகாதவன் என்று என்னிடம் நீங்கள் அறச்சொற்களில் {தர்ம வாதங்கள்} பேசுகிறீர்கள்.(59) எனினும், ஆயுதங்களை இழந்திருந்த பாலகனான சுபத்திரையின் மைந்தனை {அபிமன்யுவை} நீங்கள் கொன்ற போது உங்கள் நீதி {அறம்} எங்கே சென்றது?(60) 'போரில், உயிரோடு என்னைக் கீழே தூக்கிப் போட்டுச் சினத்துடன் தன் காலால் எவன் என்னைத் தாக்குவானோ, அவன் தவத்தைச் செய்பவனாகவே இருப்பினும், அந்தப் பகைவன் என்னால் கொல்லப்படுவான்' என நான் ஒரு குறிப்பிட்ட அளவு அகந்தையோடு சபதம் செய்திருக்கிறேன்.(61) கைகளோடும், கண்களோடும், முழுவதும் நலமாக மோதலில் போராடிக் கொண்டிருந்த என்னை இறந்தவன் என்றே நீங்கள் கருதினீர்கள். அஃது உங்கள் மூடத்தனமே. குருக்களில் காளையரே, என்னால் சாதிக்கப்பட்ட பூரிஸ்ரவஸின் படுகொலை முற்றிலும் முறையானதே. எனினும் பார்த்தர் {அர்ஜுனர்}, என் மீது கொண்ட பற்றாலும், (தன் தரப்பில் உள்ள அனைவரையும் பாதுகாக்கும்படி) தான் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றும்பொருட்டும் வாளைப் பிடித்திருந்த இவனது {பூரிஸ்ரவஸின்} கரத்தை வெட்டி என் புகழைக் களவாடிவிட்டார்.(64) எது விதிக்கப்பட்டுள்ளதோ அது நடக்கவே வேண்டும். இங்கே விதியே வேலை செய்கிறது. போர் நடந்து கொண்டிருக்கும்போதே பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டிருக்கிறான். {இதில்} நான் என்ன பாவத்தை இழைத்துவிட்டேன்?(65) பழங்காலத்தில் பூமியில் வால்மிகி "ஓ! குரங்கே, பெண்கள் கொல்லப்படக்கூடாது என நீ சொல்கிறாய்.(66) எனினும், மனிதர்கள் எப்போதும் எதிரிகளுக்கு வலியை {துன்பத்தைக்} கொடுப்பதை உறுதியான கவனத்துடன் {பாதுகாப்புடன்} எக்காலத்திலும் சாதிக்க வேண்டும்" என இவ்வரிகளைப் பாடியுள்ளார்" என்றான் {சாத்யகி} [9].(67)

[9] வாலி ராமனால் மறைந்திருந்து கொல்லப்பட்டான். அதே போல பூரிஸ்ரவஸும், தன்னால் காணப்படாத அர்ஜுனனால் கொல்லப்பட்டான். எனவே, வாலியிடம் ராமன் சொன்னதாக சொல்லும் வால்மிகியின் வார்த்தைகளை இங்கே சாத்யகி கௌரவர்களிடம் சொல்வதாகத் தெரிகிறது. "ஓ குரங்கே" என்பது வாலியைச் சுட்டும் சொல்லாகவே இருக்க வேண்டும்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "சாத்யகி இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களிலோ, கௌரவர்களிலோ எவரும் எதையும் பேசவில்லை. மறுபுறம் அவர்கள் பூரிஸ்ரவஸை மனத்தால் புகழ்ந்தனர்.(68) காட்டில் வாழும் தவசிக்கோ, பெரும் வேள்வியில் மந்திரங்களால் தூய்மையடைந்த ஒருவனுக்கோ ஒப்பானவனும், ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களைக் கொடையாக அளித்தவனுமான சிறப்புமிக்கச் சோமதத்தன் மகனின் {பூரிஸ்ரவஸின்} படுகொலையை எவரும் மெச்சவில்லை.(69) அழகிய நீலக் குழல்களால் அருளப்பட்டதும், புறாக்களைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டதுமான அவ்வீரனின் {பூரிஸ்ரவஸின்} தலையானது, குதிரை வேள்வியில் {அஸ்வமேதயாகத்தில்} அறுக்கப்பட்டு வேள்விப்பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் குதிரையின் தலையைப் போலத் தெரிந்தது [10].(70) தன் ஆற்றலாலும், ஆயுத முனையில் தான் அடைந்த மரணத்தாலும் புனிதமடைந்தவனும், எவ்வரத்துக்கும் தகுந்தவனும், வரங்களை அளிப்பவனுமான பூரிஸ்ரவஸ், அந்தப் பெரும்போரில் தன் உடலைத் துறந்து, தன் அறங்களால் {நற்பண்புகளால்} ஆகாயத்தை நிறைத்தபடியே உயர்ந்த உலகங்களுக்குச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment