Tuesday, June 1, 2021

Spiritual wealth is the best wealth-Periyavaa

தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட..ஆத்ம பலம்தான் பெரும் பணம்…!'

( ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும்........................நிராகரித்த பெரியவா)

( யார் துறவி – எது துறவு என்பதற்கு இலக்கணம்! சொன்ன பெரியவா)

நன்றி-பால ஹனுமான்

பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். 1968ம் வருடம் என்று எண்ணுகிறேன். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள்.

ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க தீர்மானித்திருந்தனர்.

இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமே, அதற்கான வசூலை தடுத்து விட்டார் பெரியவர். அவ்வேளையில் அவர் சொன்னதுதான் யார் துறவி – எது துறவு என்பதற்கு இலக்கணம்!

ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலே, அதன் அதிபதியானவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டு விடுகிறது. சன்னியாசி என்பவனை, ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கியாக, அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட, ஒரு இடம் இருக்க வேண்டாமென்று, சதா ஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.

இருந்தும், சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்பட்டு அதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை (Necessary evil) என்றுதான் கூற வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக் கடமையின் போது, அவனது ஆன்ம தபோ பலத்தைவிட, பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக் கொள்ள வேண்டும். காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது.
-
இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவே கருதினேன். உத்தமமா பார்த்துக்கொள்வது அவன்தான்; பணமல்ல.எனவே, எப்போதும் Nil Balanceலேயே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் என்று சர்ப்ளஸ்ஸில் போகப் பார்த்தது. இதற்கு 'ப்ளஸ்' கூடாது என்று கருதுகிறேன். ஸ்வாமிவாரு தடுத்து விட்டாரே என வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு, நான் பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. நெருக்கடி ஏற்படும்போது, உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்ம பலம்தான் பெரும் பணம்…!' – இப்படிச் சொன்ன பெரியவர், அதன்பின் என்ன செய்தார் தெரியுமா?

விஜயவாடா அன்பர்களிடம், 'தேவைப்படும்போது பணத்தை வாங்கிக் கொள்கிறேன்' என்றார் பெரியவர். ஆனால், அவர்கள் செய்து வைத்திருந்த தங்கக் கிரீடத்தை அப்படித் தட்டிக்கழிக்க முடியவில்லை. அந்தக் கிரீடத்தை தன் சஷ்டியப்த பூர்த்திக்கான ஒரு கௌரவமாக கருதி, அதை அவர் ஏற்றுக்கொள்ள சம்மதித்துவிட்டார்.

இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். பணத்தை வேண்டாமென்று மறுத்த இந்த உத்தமத்துறவி, பொன்னுக்கு மட்டும் எப்படி சம்மதித்தார்? ஒருவேளை தங்கத்தின்பாலான பற்றுதல் இவரையும் விடவில்லையோ என்றுதான் நம்மை எண்ணவைக்கும்.

ஆனால், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், பொருளும் பொன்னும் அவருக்கு ஒன்றே என்பதை நிரூபிப்பது போல் அமைந்துவிட்டன.

'ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர் ஞானியர்' என்பது சான்றோர் வாக்கு.

அதாவது, தங்கள் கைவசம் உள்ள பிச்சைப் பாத்திரமாகிய திருவோட்டைப் போன்றதுதான் தங்கமும். தங்கம் என்பதற்காக மயங்கிவிடுவதோ, இல்லை அது ஒரு உலகப்பணம் என்று கருதி, பாளம் பாளமாக அடுக்கி வைத்துக் கொள்வதெல்லாம் பேராசையின் விளைவுகள்.

பேராசை எல்லாம் பெரியவரிடம் ஏது?

ஓராசையைக் கூட அவரிடம் தேடினாலும் பார்க்க முடியாதே? அன்பர்கள் செய்து தந்த அந்த தங்க கிரீடத்தை அவர் தன் பொருட்டு ஏற்கவில்லை. அதை சூட்ட வைதீக பெரியவர்கள் தாயாரான போது, அவர்களை சற்று தடுத்து நிறுத்திவிட்டு, தன் முன் இருந்த ருத்ராட்ச மாலை ஒன்றை எடுத்து, சிரசின் மேல் வேகமாக தரித்துக் கொண்டார் பெரியவர். அதன்பின் அவர்களை கிரீடத்தை வைக்கப் பணித்தார். அந்த தங்கக் கிரீடமும், சிரசின் மேல் உள்ள ருத்ராட்ச மாலை மேல் ஜம்மென்று அமர்ந்துகொண்டது.

அதாவது கிரீடம் அவருக்கல்ல;

சிவாம்சமான ருத்ராட்சத்துக்கு…!

சொல்லாமலே எல்லோருக்கும் புரிந்துவிட்டது. அந்த கிரீடம் அவர் சிரசின் மேல்தான் இருந்தது. ஆனால், அவர் மேனி மேல் படவேயில்லை.

No comments:

Post a Comment