கீதாம்ருதம் - அத்தியாயம் 2 (தொடர்ச்சி)
23.நைனம் சிந்தந்தி சஸ்த்ராணி நைனம் தஹதி பாவக:
ந ச ஏனம் க்லேதயந்தி ஆப: ந சோஷயதி மாருத:
ஏனம் – இந்த ஆத்மாவை , சஸ்த்ராணி- ஆயுதங்கள் , ந சிந்தந்தி- வெட்டுவதில்லை. ஏனம்- இவனை , பாவக: - நெருப்பு, , ந தஹதி- எரிப்பதில்லை.
ஏனம்- இவனை, ஆப: - நீர் , ந க்லேதயந்தி- நனைப்பதில்லை . மாருத: - காற்று , ந சோஷயதி- உலர்த்துவதில்லை.
நிலம், நீர், நெருப்பு , காற்று இவைகளால் பஞ்சபூதங்களால் ஆன எல்லா பொருள்களும் அவைகளாலேயே மாறுதல் அல்ல்து நாசம் அடைகின்றன.
யுத்தத்தில் உடலை வெட்டுவது ஆயுதங்கள். நீர் எனப்து வருணாஸ்திரம். நெருப்பு ஆக்னேயாஸ்திரம், காற்று வாய்வாஸ்திரம் . இந்த எவ்வித அஸ்திரங்களினாலும் சஸ்திரங்களினாலும் அழிவது தேகமே அன்றி ஆத்மாவல்ல என்று உணர்த்தும் சொற்கள்
.ஏனென்றால் ஆத்மாவுக்கு உருவம் இல்லை. நித்தியமானது. பஞ்ச பூதங்களைக் காட்டிலும் சூக்ஷ்மமானது. அவயவங்கள் அற்றது . எங்கும் நிறைந்தது.
24. அச்சேத்ய: அயம் அதாஹ்யோ அயம் அக்லேத்யோ அயம் அசோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணு: அசலோ அயம் ஸனாதன:
அதனால்,
அயம் – இந்த ஆத்மா , அச்சேத்ய:- வெட்ட முடியாதது, அதாஹ்ய: அயம் – எரிக்க முடியாதது, அக்லேத்ய:-நனைக்கப்பட முடியாதது, அசோஷ்ய ஏவ ச- மேலும் உலர்த்தப்பட முடியாதது.
ஏனென்றால், இது நித்ய: - என்றும் உள்ளது. ஸர்வகத: - எங்கும் நிறைந்தது. ஸ்தாணு: நிலையானது. அசல:- அசையாதது. ஸனாதன:- சாஸ்வதமானது.
முந்தைய ஸ்லோகத்தில் கூறியதையே இங்கு வலியுறுத்தி அதற்கு காரணத்தை இங்கு கூறுகிறார்.
ஆத்மா நித்தியமானது. எங்கும் வ்யாபித்துள்ளது. பஞ்ச பூதங்களின் உள்ளும் இருப்பதால் அவைகளை விட சூக்ஷ்மமானது. சாஸ்வதமாக உள்ளதாகையால் அழிவு என்பது இல்லை.
ஸ்தாணு என்றால் ஸ்திரமாக உள்ளது என்று பொருள். அசல: என்றால் அசையாதது. இரண்டு சொற்களும் ஒரே அர்த்தம் உள்ளவையாகத் தோன்றினாலும் அவைகளுக்கு வேறு பொருள் உள்ளது. உதாரணமாக ஒரு மரம் ஸ்தாணு அதாவது ஒரே இடத்தில் உள்ளது. ஆனால் அசைவற்றது அல்ல. அதன் கிளைகள் இலைகள் முதலியவை அசைகின்றன அல்லவா? ஆத்மா எங்கும் இருப்பதால் அது ஸ்திரமானது மட்டும் இன்றி அசைவற்றதும் ஆகும்.
No comments:
Post a Comment