Wednesday, August 7, 2019

The obstacles as told in Tiruvaasagam

Courtesy: Sri.Manian

ஒரு உயிரானது கருவாக உருவாகி அது உடலோடு பிறப்பதற்குள் ஏற்படும்  அல்லல்களைமாணிக்கவாசகர் " போற்றி திரு அகவல்" என்ற பகுதியில் விரிவாக சொல்லியுள்ளார்.


உடலோடு பிறந்தபின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அவஸதைகளை ( இவைகளை விபத்துகள் என்று கூட சொல்லலாம்) பட்டியல் போடும் அவர் ,


"இளமுலை  மாதர்தம்

கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்

பித்த உலகம் பெரும் துறைப் பரப்பினுள்

மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்

கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்

நலகுரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்

புல் வரம்பு ஆகிய பல துறைப் பிழைத்தும்

தெய்வம் என்பதோர்  சித்தம் உண்டாகி"

என்கிறார். 


தெய்வத்தைப் பற்றிய ஒரு சிந்தனை ஏற்படுவதற்கே இத்தனை காலம் ஆகி விடுகிறது. இப்படி காலம் கடந்தாவது தெய்வ சிந்தனை ஏற்படுவதற்கு 

"அவன் அருள்" வேண்டும்.

"தவமும் தவமுடையார்க்கு ஆகும" என்பது வள்ளுவர் வாக்கு.

ஆறு கோடி மாயா சக்திகள் ,  தங்களுடைய மாயைகளைக் காட்டி,தொடர்ந்து இருக்க வேண்டிய  தெய்வ சிந்தனைக்கு , தடங்கல்களை ஏறபடுத்துவர். 

உலகத்தில் நாம் இருக்கும் சூழ்நிலையோ மேலும் மேலும் பற்றுக்குள் அழுத்துவதாகத்தான் இருக்கிறது.

இதை எல்லாம் தாண்டி வந்தாலதான் உயிருக்கு,  தெயவத்தின் அருளால் ஆன்ம சிந்தனை அமைந்து இறைவனுடைய திருவடிகளே சரணம் என்று கொண்டு, அத்தகைய திருவடிகளை தரிசிக்கப் பேரவா ஏறபடும்.


ஒரு பிறவியில் செய்யும் முயற்சியினால் , நல்ல எண்ணங்கள் தோன்றாது பல காலம் செய்யும் பயிற்சியினாலே மனம் தெளிவான நிலையில் இருக்கும்.

" நூதன விவேகி உள்ளம் நுழையாது

      நுழையுமாகில்

  பூத சன்மங்கள் கோடி புனிதனாம்

     புருடனாமே"    என்று

கைவல்ய நவநீதம் சொல்லுகிறது


பரிணாம வளரச்சியின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் பிறவிகளுக்குத்தான் , பிறக்கும் போதே இறை நினைவு அமைந்திருக்கும்


"கண்ட பத்தில்" மாணிக்கவாசகர் ஒரு பாடலில் சொல்லுகிறார் .


உருத்தெரியாக் காலத்து என் உள்புகுந்து

கருத்திருத்தி கருணையினால் ஆண்டுகொண்ட

திருத்துருத்தி மேயானை தித்திக்கும் சிவபதத்தை

அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே"


அதாவது கரு உருவாவதற்கு முன்னமேயே, அவன் உள்புகுந்து, உருவாகும் கருவை திருத்தம் செய்ய ஆரம்பித்து விட்டானாம். அழிவை நோக்கிப் போகும்

உயிரை, தடம் மாற்றி, உயர்வை நோக்கிப் போக வேண்டி, அவன் கருணையினால்  ஆண்டு கொண்டு

விட்டானாம், என்ன அற்புதம் பாருங்கள்!


கருவிலேயே இறை சிந்தனை அமைந்துவிட்டால் கரு வளர வளர இறை சிந்தனையும் ஓங்கி வளரும் தானே!

பூர்வ ஜன்ம வினைப் பயனால்தான் இப்படி கருவிலேயே திரு வந்து பொருந்துகிறது.


ஞான சம்பந்த பெருமான் மூன்று வயதில் " தோடுடைய சிவனை" பாடுவதெனபது இயல்பானதா?


நம்மாழ்வார் சிறு குழந்தையாக இருக்கும்போதே  கோவிலில் இருக்கும் புளியமர பொந்தில் போய் அமர்ந்து கொள்ளுகிறாரே, அது இயலபானதா?


பக்த மீரா சிறு வயதிலேயே கிருஷ்ண விகரகத்தின் மீது பிரேமை கொள்ளுகிறாளே, அது இயலபானதா?


திருவண்ணாமலை சேஷாத்திரி சுவாமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே இறை உணர்வை வெளிப்படுத்தும் சம்பவங்கள் நிகழ்கின்றனவே, அவை இயலபானவையா?


அடியவரகள், ஞானிகளுடைய வாழ்க்கைகளைக் கூர்ந்து கவனித்தால், கருவிலேயே திரு வரப்  பெற்றவர்களாக இருப்பதை உணரமுடிகிறது.


அப்பர் சுவாமிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

நல்ல சைவ குடும்பத்தில் பிறந்து சைவ நூல்களைக் கற்றும், சிவ பக்தி செய்தும், சில காலம் ஜைன மதத்தில் இருந்து, இறைவன் கருணையினால் மீண்டும் சைவ சமயம் சார்ந்த அடியார் அவர்.


" நாமாரக்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று முழங்கிய முனிவர் அவர்."


கற்றுணைப்பூட்டி ஓர் கடலில் பாயச்சினும்

நற்றுணை ஆவது நமசிவாயவே"

என்று நமசிவாயத்தின் மேல் பெரும் நம்பிக்கை வைத்த புனிதர் அவர்.


அவர் கரு உற்று இருந்த நாள் முதலாகவே இறைவனுடைய திருவடிகளெயே நினைத்திருந்தேன் என்று சொல்லுகிறார். 


இறைவனுடைய திருவடிகள் அத்தனை பெருமை உடையவை. அது இறை அன்பர்களுக்கு புகலிடமாக இருப்பது.

அடியார் அல்லாராக இருப்பவர்களின் கொடுமைகளை அடக்கும் ஆற்றலுடையது.


செல்வங்களுக்கு எல்லாம் அதிபதியாக இருப்பவர் திருமால். உலகத்தைப் படைக்கும் ஆற்றல்உடையவர் பிரம்மா. இறைவனுடைய திருவடிகளைக்காண வேண்டுமென்று  இருவரும் பெரு முயற்சிசெயதும் காண முடியவில்லை. அகந்தையினால்அடைய முடியாத திருவடிகள் அவை.


மார்கண்டேயனுக்காக யமனை உதைத்த திருவடிகள் அவை.  ராவணன் அகந்தையினால் கைலாயத்தில் மலையையே பெயற்க எண்ணி முயன்ற பேது, இறைவன் திருவடியில் இருக்கும் கட்டை விரலினார் மலையை அழுத்தி பெயறக முடியாத படி செய்து, ராவணனுடைய அகந்தையை அழித்த திருவடிகள் அவை.


அத்தகைய திருவடி சேர்ந்தவருக்கு மரண பயமும் மறு பிறப்பென்னும் மனக் கவலையும் இராது.


கற்றதனால் ஆய பயனெனகொல் வாலறிவன்

நற்றாள் தொழார் எனின்

என்றார் வள்ளுவர். 


திருவடி சேர்வது என்பது சுலபமானதல்ல. பலகாலம் பயின்றால்தான் திருவடி எண்ணமே வரும் என்பதை முன்பு பார்த்தோம்.


பிறந்த குழந்தை தானே எதையும் எடுத்து சாப்பிடுவது இல்லை. பசி வரும் நேரம் அறிந்து தாய் ஊட்டி சாப்பிடப் பழக்குகிறாள். பிறகு பழகப் பழக தானே எடுத்து சாப்பிடும் நிலைக்கு குழந்தை வந்துவிடுகிறது. சாப்பிடுவது என்பது  நமக்கு இப்போது இயலபானதாகத் தெரிந்தாலும் அது பழக்கத்தினால் ஏற்பட்டது என்பதை நாம்உணர வேண்டும்

சாப்பிடுவதற்கே இத்தனை பயிற்சி வேண்டுமாயின் இறைவன் திருவடியே நினைந்து இருப்பதற்கு எவ்வளவு பயிற்சி வேண்டி இருக்கும் என்று எண்ணி அறிந்து கொள்ளலாம்.


அப்பர் சுவாமிகள் தல யாத்திரை மேற்கொண்ட போது கச்சியம்பதிக்கு வருகிறார் . அங்கு மா மரத்தினடியில் ஏகாம்பரதாதனாக எழுந்தருளி இருக்கும் இறைவனை பார்க்கிறார் . திருவடியை நினைத்து நினைத்து அவைகளைக் காண வேண்டும், அவற்றை அடைய வேண்டும் என்ற பேரவாவுடன் இருப்பவர் அவர். 

ஏகாம்பரநாதர் சன்னிதியில், அவருக்கு இறைவன் தாளைக் காணவும் அடையவும் தான் செய்த முயற்சிகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது.


பாடுகிறார்

" கருவுற்ற நாள் முதலான உன்பாதமே காண்பதற்கு 

 உருகிற்று என் உள்ளமும், நானும் கிடந்து          அலந்தெயத்து ஒழிந்தேன்.

திருவொற்றியூரா, திருவாலவாயா, திருவாரூரா,

ஓரு பற்றிலாமையும் கண்டிரங்காய் கச்சி எகம்மபனே"

என்று அரற்றுகிறார்


திருவொற்றியூரிலும் திரு ஆலவாயிலும், திருவாரூரிலும் பாத தரிசனத்துக்காக

தான் செய்த பிரார்த்தனைகள் அவர் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.

ஆகவே அந்த மூன்று தலங்களையும் பாடலில்  வைக்கிறார்.

கச்சி ஏகம்பனே, உன்னை விட்டால் எனக்கு வேறு ஒரு பற்றும் கிடையாது.  உன்எ பாதம் காணவும் அடையவும் நான் அலந்து போவது நீ அறியாததா? என் நிலையைப் கண்டு இரங்கி, நான் கருவுற்ற நாள் முதலாகவே உன் பாதம் காண்பதற்கு உருகிப் கொண்டிருக்கிறவன், என்ற  நிலை கண்டு இரங்கி , உன் திருவடி தரிசனம் தந்து எனை ஆட்கொள்ள மாட்டாயா?என்று உருகுகிறார்


சுந்தரரும் இதே கருத்தை தன் பாடல் ஒன்றில் வெளிப் படுத்துகிறார்.

  " மற்றுப்  பற்றெனக்கு இன்றி நின்திருப்

       பாதமே மனம் பாவித்தேன்

    பெற்றலும் பிறந்தேன்  , இனிப் பிற

       வாத தன்மை வந்து எயதினேன்"


திருப்பாதமே சரண் என்று பாவித்ததனால் பிறவாமை நிலையை அடைந்து விட்டதாக , பூரிப்போடு சொல்லுகிறார்


பாவித்தல் என்ற சொல் வரும்போது பாரதி பாடல் ஒன்று நினைவில் தட்டுகிறது

" காவித்துணி வேண்டா கற்றைச்சடை வேண்டா

 பாவித்தால் போதுமடா இறைவனடி எயதுதறகே!"

என்று பாவித்து இருப்பதின் சிறப்பை சொல்லுகிறார்

மனதிலே, எண்ணத்திலே, சதாசர்வ காலமும் இறைவனையே எண்ணிக் கொண்டிருந்தால் அவன் திருவடி சேர்ந்து விடலாம் என்பது குறிப்பு.

ஆக, மரண பயமும், மறுபிறவி என்ற நரகம் 

அனைய பிறப்பையும் எண்ணி அஞ்சுகிற அனைவரும் அப்பர் சுவாமிகளின் பாடலைப் படித்து உருக வேண்டும்

இறைவன் திருவடியை எண்ணுபவரக்கும், அடைபவர்க்கும் வேறு ஒரு தாயின் கருவறைக்குள் புக மாட்டார்கள் என்று நம் சான்றோர்கள் அடித்துச் சொல்லும் போது

நாம் ஏன் மறுபிறவி  வாய்த்தது விடுமோ என்று அஞ்ச வேண்டும்?

பாடலை மறுபடி பார்க்கலாம்


கருவுற்ற நாள்முதலாக உன்பாதமே காண்பதற்கு

உருகிற்று என் உள்ளமும் , நானும் கிடந்து அலந்து

    ஒழிந்தேன்

திருவொற்றியூரா, திருவாலவாயா, திருவாரூரா,

ஒரு பற்றிலாமையும் கண்டிரங்காய் கச்சி ஏகம்பனே!


நம் ஒவ்வொருவரும் பாடி அரற்றவேண்டிய அற்புதமான

அப்பர்சுவாமிகளின் பதிகம் இது.

No comments:

Post a Comment