Sunday, March 2, 2025

Rama & soorpanakha

Courtesy:Sri.Balasubramanian Vaidhyanathan
கம்பராமாயணத்தில் வரும் ஒரு சிறந்த பகுதி சூர்ப்பனகைப் படலம். கம்பர் வால்மீகியிடமிருந்து மிகவும் விலகி, சூர்ப்பனகை ஒரு அழகான பெண் உருவங் கொண்டு ராமனை அடைந்தாள் எனக்கூறும் கற்பனை வளம் மிகுந்த படலம்.
ராஜாஜி ராமாயணம் எழுதும் போது பெரும்பாலும் வால்மீகியையே தொடர்ந்திருந்தாலும், சூர்ப்பனகை வரும் போது கம்பர் கூற்றை ஒரு தனி அத்யாயமாக கம்ப சித்திரம் என எழுதியுள்ளார். 

பின்வரும் பாடல்கள் கம்பர் சூர்ப்பனகை அழகியாக மாறி வருவது குறித்த பாடல்கள். (எடுத்துக்காட்டின் பொருட்டு நான்கு மட்டும்)

பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா
அங்கையி னாயமந் திரத்தை யாய்ந்தனள் 
திங்களிற் சிறந்தொளிர் முகத்தள் செவ்வியள்
பொங்கொளி விசும்பினிற் பொலியத் தோன்றினாள். 

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடி பெயர்ப்பாள்
அஞ்சொலிள மஞ்ஞையென வன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.

பொன்னொழுகு பூவிலுறு பூவையெழில் பூவை
பின்னெழில்கொள் வாளிணை பிறழ்ந்தொளிர் முகத்தாள்
கன்னியெழில் கொண்டது கலைத்தட மணித்தேர்
மின்னிழிவ தன்மையிது விண்ணிழிவ தென்ன.

 கானிலுயர் கற்பக முயிர்த்த கதிர்வல்லி 
மேனிநனி பெற்றுவிளை காமநிறை வாசத் 
தேனின்மொழி யுற்றினிய செவ்விநனி் கொண்டோர் 
மானின்விழி பெற்றுமயில் வந்ததென வந்தாள்.

இன்றைக்கு ரகுவம்ஶம் எழுதுகையில் காளிதாஸரும் சூர்ப்பனகை உருமாறி வந்ததைச் சிறு குறிப்பாகத் தந்ததைக் காணமுடிந்தது. அவள் வரும் போது உருமாறியதைக் குறிப்பிடவில்லை. ஆனால் ஸீதை ராம-லக்ஷ்மணர்கள் அவளிடம் பரிகாசம் செய்ததைப் பார்த்து நகைத்த போது மீண்டும் அரக்க உருக் கொண்டதைத் தெளிவாகக் கூறுகிறார்.

रावणावरजा तत्र राघवं मदनातुरा। अभिपेदे निदाघार्ता व्यालीव मलयद्रुमम्॥ 12.33
அங்கே, ராவணின் பின்பிறந்தவள் மன்மதன் ஏற்படுத்திய துயரால் கோடையால் தாக்கப்பட்டு துயருற்ற பெண்பாம்பு சந்தனமரத்தை அடைவது போல ராகவனை அடைந்தாள். (இங்கு சந்தன மரத்தை மலய த்ருமம் என்கிறார் காளிதாஸர். மலயம் என்பது தென்பொதிகை. அங்கு சந்தன மரங்களின் செழிப்பை ரகுவின் திக்விஜயத
தில் முன்னரே கூறியிருக்கிறார் )
- மேலே உள்ளது அவள் ராமனை அடைந்ததைக் கூறும் ஶ்லோகம். இங்கே உருமாறி வந்தது கூறப்படுவதில்லை.
பின்வரும் ஶ்லோகங்கள் விஷயத்தைத் தெளிவாக்குகின்றன.
संरम्भं मैथिलीहासः क्षणसौम्यां निनाय ताम्। निवातस्तिमितां वेलाम् चन्द्रोदय इवोदधेः॥ 12.36
மைதிலியுடைய சிரிப்பு காற்றில்லாமல் அமைதியாக இருக்கும் கரையை சந்திரோதயம் எழுச்சியுறச்செய்வது போல க்ஷண நேரம் ஸௌம்யாவாக இருந்த அவளை (சூர்ப்பனகை), எழுச்சியுற்றவளாக ஆக்கியது. (இங்கு க்ஷணநேரம் ஸௌம்யாவாக இருந்தது கூறப்படுகிறது)
फलमस्योपहासस्य सद्यः प्राप्स्यसि पश्य माम्। मृग्याः परिभवो व्याघ्र्यामित्यवेहि त्वया कृतम्॥ 12.37
"உன்னால் புரியப்பட்ட இந்த பரிஹாஸத்தின் பலனை விரைவில் அடைவாய். புலியிடம் மான்கள் புரியும் அவமானம் இது என அறிவாய். என்னைப்பார்" 
 इत्युक्त्वा मैथिलीं भर्तुरङ्के निविशतीं भयात्। रूपं शूर्पणखा नाम्नः सदृशं प्रत्यपद्यत॥ 12.38
என்று பயத்தினால் பர்த்தாவின் அங்கத்தில் நுழைந்துகொள்ளும் மைதிலியிடம் கூறி சூர்ப்பனகா பெயருடன் பொருத்தமான உருவத்தை எடுத்துக்கொண்டாள் (இங்கு ரூபம் மாறுவது கூறப்படுகிறது - இந்த ஶ்லோகத்திற்கு நிகர்த்த செய்யுள் கம்பராமாயணத்திலும் வருகிறது.)
அஞ்சினள் வஞ்சி யன்ன மின்னிடை யலச வோடிப்
பஞ்சின்மெல் லடிக ணோவப் பதைத்தனள் பருவக் கால 
மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி யென்ன, 
குஞ்சர மனைய வீரன் குவவுத்தோ டழுவிக் கொண்டாள்.

लक्ष्मणः प्रथमं श्रुत्वा कोकिलामञ्जुवादिनीम्। शिवाघोरस्वनां पश्चाद्बुबुधे विकृतेति ताम्॥12.39
முதலில் கோகிலம் போல இனிமையாகப் பேசியவளை, பின்னர் பெண் குள்ளநரியின் ஓலமிட்டவளைக் கேட்டு லக்ஷ்மணன் அவளை விக்ருதா என அறிந்துகொண்டான்.

கம்பர் வால்மீகியோடு மாறுபட்டு, காளிதாஸனோடு ஒத்திருப்பது அகல்யா சிலையானதைக் கூறும் போது பார்த்தோம். இது இன்னொரு இடம். நிச்சயமாக கம்பரிடம் காளிதாஸரின் தாக்கம் இருந்திருக்கிறது என எண்ணவைக்கிறது. அப்படியிருப்பின், நான்கு ஶ்லோகங்களில் வந்த சிறு குறிப்பை காவியச்செழுமையுடன் விரிவாக்கி ரசனை மிகுந்ததாக சூர்ப்பனகைப் படலத்தைக் கட்டமைத்த கம்பரின் திறம் மெச்சத்தக்கது.

பின்குறிப்பு: ராமன் சூர்ப்பனகையை மணக்கமுடியாததிற்குக் கூறும் காரணங்களில் ஒன்று - சூர்ப்பனகை பார்ப்பன மாது - 'அந்தணர் பாவை நீ, யான் அரசரில் வந்தேன்' என்பது 😜

#ரகுவம்ஶ:

No comments:

Post a Comment