Tuesday, January 2, 2024

Mahabharatam in tamil219

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-219
உத்யோக பர்வம்
..
பங்குதர மறுத்த துரியோதனன்
..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தனக்கு ஏற்பில்லாத வார்த்தைகள் குருக்களின் சபையில் பேசப்படுவதைக் கேட்ட துரியோதனன், வலிய கரங்களைக் கொண்டவனும், பெரும் புகழ்வாய்ந்தவனுமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, அனைத்துச் சூழ்நிலைகளையும் சிந்தித்த பிறகு பேசுவதே உனக்குத் தகும். உண்மையில், எக்காரணமும் இன்றி இத்தகு கடுமையான வார்த்தைகள் பேசும் நீ, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, என்னிடம் மட்டுமே குறை கண்டுபிடித்து, எப்போதும் பிருதையின் மகன்களை {குந்தியின் மகன்களான பாண்டவர்களை} உயர்வாக மதிக்கிறாய். ஆனால், (இரு தரப்புகளின்) பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்த பிறகுதான் நீ என்னைக் கண்டிக்கிறாயா?


உண்மையில், நீ, க்ஷத்திரி {விதுரர்}, மன்னர் {திருதராஷ்டிரர்}, ஆசான் {துரோணர்}, பெரும்பாட்டன் {பிதாமஹரான பீஷ்மர்} ஆகிய அனைவரும் வேறு எந்த ஏகாதிபதியையும் {பாண்டவர்களை} நிந்திக்காமல் என்னை மட்டுமே நிந்திக்கிறீர்கள். எனினும், என்னால் என்னிடம் எந்தச் சிறு குறையையும் காணமுடியவில்லை. இருப்பினும், (முதிய) மன்னன் {திருதராஷ்டிரர்} உட்பட நீங்கள் அனைவரும் என்னை வெறுக்கிறீர்கள். ஓ! எதிரிகளை அடக்குபவனே {கிருஷ்ணா}, ஆழ்ந்து சிந்தித்தபிறகும் கூட, நான் என்னிடம் எந்தப் பெரிய குறையையும் காணவில்லை, அல்லது ஓ! கேசவா {கிருஷ்ணா} மிகச் சிறிய குறையைக்கூட நான் காணவில்லை.


பாண்டவர்களால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பகடையாட்டத்தில், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அவர்கள் வீழ்த்தப்பட்டு, அவர்களது நாட்டைச் சகுனி வென்றார். அதைப் {பகடையாட்டத்தைப்} பொறுத்தவரை என்னுடையது என்று என்ன குற்றம் இருக்க முடியும்?

மறுபுறம், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பாண்டவர்களிடம் வென்ற செல்வத்தை அவர்களிடமே திருப்பிக் கொடுக்கும்படி நானே கட்டளையிட்டேன். ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, வெல்லப்படமுடியாத பாண்டவர்கள் மீண்டும் ஒருமுறை பகடையில் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் காட்டுக்குப் போக வேண்டி வந்ததில் எங்களுடைய தவறு ஏதும் இருக்க முடியாது.


குற்றம் சுமத்தும் அளவுக்கு எங்களிடம் உள்ள என்ன தவறைக் கண்டு, அவர்கள் {பாண்டவர்கள்} எங்களைத் தங்கள் எதிரிகளாகக் கருதுகின்றனர்? ஓ! கிருஷ்ணா, (உண்மையில்) பலவீனமாக இருந்தாலும், ஏதோ தாங்கள் பலமானவர்கள் போல, ஏன் பாண்டவர்கள் இவ்வளவு உற்சாகமாக எங்களிடம் சண்டைக்கு முனைகிறார்கள்? நாங்கள் அவர்களுக்கு என்ன {குற்றத்தைச்} செய்தோம்? (அவர்களுக்கு) இழைக்கப்பட்ட எந்தத் தீங்குக்காக, சிருஞ்சயர்களுடன் {பாஞ்சாலர்களுடன்} கூடிய பாண்டுவின் மகன்கள், திருதராஷ்டிரர் மகன்களைக் கொல்ல முயல்கிறார்கள்?


எந்தக் கடும் செயலின் விளைவாலோ, (அவர்களது) வார்த்தைகளாலோ (அதற்கு அஞ்சியோ), அறிவை இழந்து அச்சத்தால் அவர்களை வணங்கமாட்டோம். பாண்டுவின் மகன்களை விட்டுவிடு, நாங்கள் இந்திரனையேகூட (அப்படி) வணங்கமாட்டோம். ஓ! கிருஷ்ணா, ஓ எதிரிகளைக் கொல்பவனே, போரில் எங்களை வெல்லத் தலைப்படுபவனும், க்ஷத்திரிய அறங்களைக் கடைப்பிடிப்பவனுமான எந்த ஒரு மனிதனையும் நான் காணவில்லை.

பாண்டவர்களை விட்டுவிடு, ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பீஷ்மர், கிருபர், துரோணர் மற்றும் கர்ணன் ஆகியோரை தேவர்களாலும் கூடப் போரில் வீழ்த்த முடியாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, போரில் ஆயுதங்களால் வெட்டும் நாங்கள், எங்கள் வகைக்குரிய நடைமுறைகளை நோற்கிறோம் என்றால், எங்கள் முடிவு வரும்போது, அதுவும் எங்களைச் சொர்க்கத்திற்கே வழிநடத்திச் செல்லும். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் அம்புப்படுக்கையில் எங்களைக் கிடத்திக் கொள்ள வேண்டும் என்ற இதுவும் க்ஷத்திரியர்களான எங்களின் உயர்ந்த கடமையே ஆகும்.


எங்கள் எதிரிகளுக்குத் தலைவணங்காத எங்களுக்கு, போரில் அம்புப்படுக்கையே கிடைக்குமென்றாலும், ஓ! மாதவா {கிருஷ்ணா}, நாங்கள் அதற்காக வருந்த மாட்டோம். உன்னதக் குலத்தில் பிறந்து, க்ஷத்திரிய நடைமுறைகளை உறுதி செய்யும் எவன், தனது உயிரைக் காத்துக்கொள்ள மட்டும் விரும்பி, அச்சத்தால் எதிரியிடம் தலைவணங்குவான்? "(க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை), ஒருவன் எப்போதும் நிமிர்ந்திருக்க வேண்டும், {யாரையும்} எப்போதும் வணங்கக் கூடாது, ஏனெனில் உழைப்பு மட்டுமே ஆண்மையாகும்; வளைவதைவிட, ஒருவன் கணுக்களில் உடைந்தேவிடலாம்" {கணுவில் முறிந்தாலும் முறியலாம். இவ்வுலகில் ஒருவனிடமும் வணங்கக்கூடாது} என்ற மாதங்கருடைய வார்த்தைகளை, தங்கள் சுய நன்மையை விரும்பும் க்ஷத்திரியர்கள் மதிப்புடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

என்னைப் போன்ற ஒருவன் {க்ஷத்திரியன்} வேறு யாரையும் கருதிப் பாராமல் {வணங்காமல்}, பக்திக்காக அந்தணர்களை மட்டுமே வணங்க வேண்டும். (அந்தணர்கள் தவிர்த்த பிறரிடம்) ஒருவன் தனது வாழ்நாள் முழுவதும் மாதங்கரின் சொல்படியே செயல்பட வேண்டும். இதுவே க்ஷத்திரியர்களின் கடமையாகும்; இதுவே எனது கருத்துமாகும்.


ஓ! கேசவா {கிருஷ்ணா}, முன்பு அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} என் தந்தை {திருதராஷ்டிரர்} அளித்த நாட்டின் பங்கை, நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களால் {பாண்டவர்களால்} திரும்பப் பெறவே முடியாது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மன்னர் திருதராஷ்டிரர் வாழும் வரை, நாங்கள் மற்றும் அவர்கள் ஆகிய இருதரப்பும் ஆயுதங்களை உறையிலிட்டு விட்டு, ஓ! மாதவா {கிருஷ்ணா} அவரைச் சார்ந்தே வாழ வேண்டும். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் சிறுவனாகவும், பிறரைச் சார்ந்தவனாகவும் இருந்த போது, அறியாமையாலோ, அச்சத்தாலோ கொடுக்கப்பட்டதும், மீண்டும் கொடுக்கப்பட முடியாததுமான நாட்டை, ஓ! விருஷ்ணி குலத்திற்கு மகிழ்ச்சியை அளிப்பவனே {கிருஷ்ணா}, பாண்டவர்களால் மீண்டும் அடைய முடியாது.

தற்போது, ஓ! வலிய கரங்களைக் கொண்ட கேசவா {கிருஷ்ணா}, நான் வாழும்வரை, எங்கள் நிலத்தில் ஒரு கூர்மையான ஊசியின் முனையால் மூடப்படும் பகுதியைக்கூடப் பாண்டவர்களுக்கு எங்களால் வழங்க முடியாது" என்றான் {துரியோதனன்}".

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கோபத்தில் சிவந்த கண்களுடன் இருந்த தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, (ஒரு கணம்) சிந்தித்து, குருக்களின் சபையில் இருந்த துரியோதனனிடம், "வீரர்களின் படுக்கையை நீ விரும்புகிறாயா? அதை உன் ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} சேர்த்து நிச்சயமாக நீ அடைவாய். (சிறிது காலம்) காத்திரு, இதைத் தொடர்ந்து பெரும் அழிவு வரப்போகிறது. ஓ! சிறு புத்தி கொண்டவனே {துரியோதனா}, நீ பாண்டவர்களுக்கு எக்குற்றமும் இழைக்கவில்லை என்றா கருதுகிறாய்? (கூடியிருக்கும்) ஏகாதிபதிகளே அதைத் தீர்மானிக்கட்டும்.



ஓ! பாரதா {துரியோதனா}, உயர் ஆன்ம பாண்டவர்களின் செழிப்பைக் கண்டு வருந்திய நீ, சூதாட்டப் போட்டி குறித்துத் திட்டமிட்டு, சுபலனின் மகனுடன் {சகுனியுடன்} சேர்ந்து சதி செய்தாய். ஓ! ஐயா, அறம்சார்ந்தவர்களும், நேர்மையானவர்களும், மேன்மையானவர்களுமான உனது சொந்தங்களால் {பாண்டவர்களால்}, கபடமுள்ள சகுனி போல எப்படி (வேறுவகையில்) தீச்செயலில் ஈடுபட முடியும்?


ஓ! பெரும் அறிவுடையவனே {துரியோதனா}, நல்லோரின் அறிவையும் சூதாட்டம் திருடிவிடும், மேலும், தீயோரைப் பொறுத்தவரையில், பிளவும், கொடிய விளைவுகளுமே அதிலிருந்து {சூதாட்டத்தில் இருந்து} எழும். நீதிமிக்க நடத்தை கொண்டோரிடம் கலந்தாலோசியாமல், உன் பொல்லாத ஆலோசகர்களைக் {அமைச்சர்களைக்} கொண்டு சூதாட்டப் போட்டியின் வடிவில் பெரும் ஆபத்துக்கான அந்தப் பயங்கர ஊற்றுக்கண்ணை நீயே திட்டமிட்டு உற்பத்தி செய்தாய்.


ஒரு சகோதரனின் மனைவியை அவமதிக்கவோ, அல்லது சபைக்கு இழுத்து வந்து, திரௌபதியை நோக்கி நீ பயன்படுத்திய மொழிகளைப்போல அவளிடம் {சகோதரனின் மனைவியிடம்} பேசவோ இயன்றவன் உன்னைப் போல வேறு எவன் இருக்கிறான்? உன்னதமான பெற்றோரைக் கொண்டவளும், அற்புதமான நடத்தை கொண்டவளும், தங்கள் உயிரைவிட அன்புக்குரியவளுமான பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} பட்டத்து ராணியை {திரௌபதியை} நீ இப்படியே {மேற்சொன்னது போலவே} நடத்தினாய்.

எதிரிகளைத் தண்டிப்பவர்களான குந்தியின் மகன்கள் காட்டுக்குப் புறப்பட்ட போது, அவர்களது சபையில் துச்சாசனன் என்ன வார்த்தைகளைச் சொன்னான் என்பதைக் கௌரவர்கள் அனைவரும் அறிவார்களே.

எப்போதும் தங்கள் நடத்தையில் சரியாக இருப்பவர்களும், பேராசையால் கறைபடியாதவர்களும், அறம்பயில்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், நேர்மையானவர்களுமான தனது சொந்தங்களிடமே, இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள இயன்றவன் {உன்னைத் தவிர} வேறு எவன் இருக்கிறான்?


கர்ணன், துச்சாசனன் மற்றும் நீ ஆகியோர், இதயமற்றவர்களும், இழிவானவர்களும் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மொழியையே திரும்பத்திரும்பப் பேசினீர்கள்.

பாண்டுவின் மகன்கள் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களது தாயோடு {குந்தியோடு} சேர்த்து வாரணாவதத்தில் வைத்து அவர்களை உயிருடன் எரிக்க நீ மிகுந்த சிரமப்பட்டாய். எனினும், அந்த உனது முயற்சி வெற்றியால் மகுடம் சூட்டப்படவில்லை. {உனது அந்த முயற்சி பலிக்கவில்லை}. அதன் பிறகு, தங்கள் தாயுடன் கூடிய பாண்டவர்கள், ஏகசக்கரம் எனும் நகரில், ஓர் அந்தணன் வீட்டில், நீண்ட நாள் மறைந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உனது திட்டமிடல்கள் ஒன்றும் வெற்றியடையவில்லை எனினும், விஷம், பாம்புகள், கயிறுகள் என எல்லா வழிகளிலும் நீ பாண்டவர்களை அழிக்க முயன்றிருக்கிறாய். இப்படிப்பட்ட உணர்வுகளுடன், அவர்களிடம் இவ்வளவு வஞ்சகமாக நடந்து கொண்ட நீ, அந்த உயர் ஆன்ம பாண்டவர்களுக்கு எதிராக எக்குற்றத்தையும் நீ செய்யவில்லை என்று எப்படிச் சொல்கிறாய்?


ஓ! பாவியே {துரியோதனா}, அவர்கள் உன்னிடம் இரந்து {கெஞ்சிக்} கேட்டாலும், அவர்களது தந்தை வழி பங்கான நாட்டை அவர்களுக்குக் கொடுக்க நீ விரும்பவில்லை. செழிப்பை எல்லாம் இழந்து, நீ கீழே கிடத்தப்பட்ட பிறகே, அவர்களுக்கு அதைக் கொடுப்பாய்.

இதயமற்றவன் போலப் பாண்டவர்களுக்கு எண்ணிலடங்கா குற்றங்களை இழைத்துவிட்டு, அவர்களிடம் வஞ்சகமாக நடந்து கொண்டு, வேறுவகையான ஆடையில் {தோற்றத்தில்} தோன்ற இப்போது முயல்கிறாய்.

உனது பெற்றோர், பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோரால் மீண்டும் மீண்டும் சமாதானம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும், ஓ! மன்னா {துரியோதனா}, நீ இன்னும் சமாதானத்தைச் செய்து கொள்ளவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, உனக்கும் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவருக்கும் சமாதானத்தால் உண்டாகும் பயன் பெரியதாகும். எனினும், அமைதி, உனக்குத் தன்னைப் பரிந்துரைக்கவில்லை. {அமைதியை நீ விரும்பவில்லை}. இதில் புத்தி குறைவைக் காட்டிலும் வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

உனது நண்பர்களின் வார்த்தைகளை மீறிய நீ, உனது நன்மைக்கான எதையும் எப்போதும் அடைய முடியாது. ஓ! மன்னா {துரியோதனா}, நீ செய்யப்போகும் செயல், பாவம் நிறைந்ததும் மதிப்பற்றதுமாகும்" என்றான் {கிருஷ்ணன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} இதைச் சொல்லிக் கொண்டிருந்த போது, பழியுணர்ச்சி கொண்ட துரியோதனனிடம் பேசிய துச்சாசனன், குருக்களுக்கு மத்தியில் இவ்வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! மன்னா {துரியோதனரே}, நீர் விருப்பத்துடன் பாண்டவர்களிடம் சமாதானம் செய்து கொள்ளவில்லை எனில், உம்மைக் (உமது கையையும் காலையும்) கட்டி, நிச்சயம் கௌரவர்களே அந்தக் குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} ஒப்படைத்துவிடுவார்கள். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனரே}, பீஷ்மர், துரோணர் மற்றும் உமது (சொந்த) தந்தை ஆகியோர், விகர்த்தனன் மகனையும் {கர்ணன்}, உம்மையும், மற்றும் என்னையும் சேர்த்து, நம் மூவரையும், பாண்டவர்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள்" என்றான் {துச்சாசனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தீயவனும், வெட்கங்கெட்டவனும், கீழ்ப்படியாதவனும், மரியாதை தெரியாதவனும், வீணனுமான சுயோதனன் {துரியோதனன்}, தனது தம்பியின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, பெரும்பாம்பு போலப் பெருமூச்சுவிட்டு, கோபத்தால் தனது இருக்கையை விட்டு எழுந்து, விதுரன், திருதராஷ்டிரன், பெரும் மன்னனான பாஹ்லீகன், கிருபர், சோமதத்தன், பீஷ்மர், துரோணர், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஆகியோரையும், ஏன், உண்மையில் அவர்கள் {அங்கிருந்தவர்கள்}  அனைவரையும் அவமதிக்கும் வகையில் சபையை விட்டு வெளியேறினான் {துரியோதனன்}. அந்த மனிதர்களில் காளையானவன் {துரியோதனன்}, சபையை விட்டு வெளியேறுவதைக் கண்ட, அவனது தம்பி {துச்சாசனன்}, அவனது அனைத்து ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மற்றும் அனைத்து மன்னர்கள் ஆகியோர் அவனைப் {துரியோதனனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.


கோபத்தில் எழுந்து தனது தம்பிகளுடன் சபையை விட்டு வெளியேறிய துரியோதனனைக் கண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், "அறம் மற்றும் பொருள் ஆகியவற்றைத் தள்ளிவிட்டு கோபத்தின் தூண்டுதலைப் பின்பற்றுபவனுடைய எதிரிகள், அவன் விரைவில் துன்பத்தில் மூழ்குவதைக் கண்டு மகிழ்கிறார்கள். திருதராஷ்டிரனின் இந்தத் தீய மகன் {துரியோதனன்}, (தனது நோக்கங்களை அடைய) உண்மையான வழிகளை அறியாதவனும், தனது ஆட்சியுரிமையை வீணடிக்கும் மூடனும், கோபம் மற்றும் பேராசையின் கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிபவனுமாவன். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, க்ஷத்திரியர்கள் அனைவரின் {அழிவு} நேரமும் வந்துவிட்டதை நான் காண்கிறேன். ஏனெனில், அந்த மன்னர்கள் அனைவரும் மாயையால் தங்கள் ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} துரியோதனனைப் பின்பற்றிச் செல்கிறார்களே" என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் சக்திகளை உடையவனுமான தாமரைக் கண்ணனான தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் (இன்னும் அங்கே) இருந்தோரிடம், "குரு குல முதியவர்கள் அனைவரையும் குற்றவாளிகளாக்கும் இதுவும் ஒரு பெரிய அத்துமீறலே. ஏனெனில், அவர்கள் {குரு குலத்தின் பெரியோர்}, அரசுரிமையின் இன்பத்தில் திளைக்கும் அந்தத் தீய மன்னனைப் {துரியோதனனைப்} பலவந்தமாகப் பிடித்துக் கட்டிப் போடவில்லையே.

எதிரிகளைத் தண்டிப்பவர்களே, இதைச் செய்ய நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். இது செய்யப்பட்டால் {துரியோதனன் கட்டப்பட்டால்}, அது நல்ல பலனைக் கொடுக்கக்கூடும். பாவமற்றவர்களே, உண்மையில், உங்கள் சம்மதத்தின் விளைவால், நான் சொல்வதை நீங்கள் ஏற்றால், ஓ! பாரதர்களே, நான் பேசும் வார்த்தைகள் விரைவில் நல்ல விளைவுகளை உண்டாக்கும்.

முதிய போஜ மன்னரால் {உக்ரசேனரால்} தவறாக நெறிபடுத்தப்பட்ட அவரது தீய மகன் {கம்சன்}, தனது தந்தையின் அரசுரிமையை, அவரது வாழ்நாளிலேயே பறித்துக் கொண்டு, மரணத்துக்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டான். உண்மையில், உக்ரசேனரின் மகனான கம்சன் தனது உறவினர்கள் அனைவராலும் கைவிடப்பட்டு, சொந்தங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய என்னால், ஒரு பெரும் மோதலில் கொல்லப்பட்டான். எங்கள் சொந்தங்களுடன் கூடிய நாங்கள், ஆஹுகரின் மகனான உக்ரசேனருக்கு உரிய மரியாதையைச் செலுத்தி, போஜர்களின் அரசைப் பெருக்குபவரான அவரை {உக்ரசேனரை மீண்டும்} அரியணையில் நிறுவினோம். யாதவர்கள், அந்தகர்கள், விருஷ்ணிகள் ஆகிய அனைவரும், அவர்களது முழு இனத்திற்காகவும், கம்சன் என்ற தனி மனிதனைக் கைவிட்டு, செழிப்பையும், மகிழ்ச்சியையும் அடைந்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேவர்களும் அசுரர்களும் போருக்காக அணிவகுத்து, ஆயுதங்களை உயர்த்திய போது, அனைத்து உயிரினங்களின் தலைவனான பரமேஷ்டின் {பிரம்மா} (நம்மிடையே உள்ள இந்த வழக்கிற்கும் பொருந்தும்படி) இப்படியே சொன்னான். உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உலகத்தில் வசித்தோர் அனைவரும் இரு கட்சிகளாகப் பிரிந்து, கொல்லப்படும்போது, தெய்வீகமானவனும், அண்டம் தோன்ற புனிதக் காரணனுமான அந்தப் படைப்பாளன் {பிரம்மன்}, {தனக்குள்} "{இந்தப் போரில்} தானவர்களுடன் கூடிய அசுரர்களும் தைத்தியர்களும் வீழ்த்தப்படுவார்கள். ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள் மற்றும் தேவலோகவாசிகள் வெல்வார்கள். உண்மையில், தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும், கந்தர்வர்களும், நாகர்களும், ராட்சசர்களும் இந்தப் போரில் கோபத்தால் ஒருவரை ஒருவர் கொல்வார்கள்" என்றான் {என்று நினைத்தான்}.

இப்படி நினைத்தவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் தலைவனுமான பரமேஷ்டின் {பிரம்மா}, தர்மனை {தர்மதேவனை} நோக்கி, "தைத்தியர்களையும், தானவர்களையும் கட்டிப்போட்டு, அவர்களை வருணனிடம் ஒப்படைப்பாயாக" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட தர்மன், பரமேஷ்டினின் {பிரம்மனின்} கட்டளையின் பேரால் தைத்தியர்களையும் தானவர்களையும் கட்டி வருணனிடம் ஒப்படைத்தான். நீர்நிலைகளின் தலைவனான வருணன், தர்மனின் {யமனின்} பாசக்கயிராலும், தன்னுடைய பாசக் கயிறாலும் அந்தத் தானவர்களைக் கட்டி, கடலின் ஆழங்களில் அவர்களை வைத்துக் கவனமாகப் பாதுகாத்தான்.

அதே வழியில் துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் சகுனி, துச்சாசனன் ஆகியோரைக் கட்டி பாண்டவர்களிடம் ஒப்படைப்பீராக. ஒரு குடும்பத்துக்காக, தனிப்பட்ட ஒருவனைத் தியாகம் செய்யலாம். ஒரு கிராமத்திற்காக, ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம். ஒரு மாகாணத்திற்காக {நாட்டிற்காக}, ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம். இறுதியாக, ஒருவனின் சுயத்துக்காக, முழுப் பூமியையும் தியாகம் செய்யலாம். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனனைக் கட்டிப் போட்டு, பாண்டவர்களுடன் சமாதானம் செய்வீராக. ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, உம் நிமித்தமாக க்ஷத்திரிய குலம் முழுமையும் கொல்லப்படாதிருக்கட்டும்" என்றான் {கிருஷ்ணன்}". 

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் நேரத்தைக் கடத்தாமல், அறவிதிகள் அனைத்தையும் அறிந்த விதுரனிடம் பேசினான். அந்த மன்னன் {திருதராஷ்டிரன் விதுரனிடம்}, "ஓ! குழந்தாய், பெரும் அறிவும், முன்னறிதிறனும் கொண்ட காந்தாரியிடம் சென்று, அவளை இங்கே அழைத்து வா. அவளை {காந்தாரியைக்} கொண்டு நான் இந்தத் தீய இதயம் படைத்தவனிடம் (எனது மகனிடம்) {துரியோதனனிடம்} கோரிக்கை வைப்பேன் {பேசிப் பார்க்கிறேன்}. அவளால் {காந்தாரியால்} அந்தத் தீய இதயம் கொண்ட இழிந்த பாவியைத் தணிக்க முடியுமென்றால், நம்மால் இன்னும்கூட நம் நண்பன் கிருஷ்ணனின் வார்த்தைகளுக்கு ஏற்ப செயல்பட முடியும்.



சமாதானத்தைப் பரிந்துரைத்துப் பேசுவதன் மூலம், பேராசையால் பாதிக்கப்பட்டவனும், தீய கூட்டாளிகளை {நண்பர்களைக்} கொண்டவனுமான இந்த மூடனுக்கு {துரியோதனனுக்குச்} சரியான பாதையைச் சுட்டிக் காட்டுவதில், ஒருவேளை அவள் {காந்தாரி} வெல்லக்கூடும். துரியோதனனால் நடைபெற இருக்கும் இந்தப் படுபயங்கர ஆபத்தை அவளால் விலக்க முடியுமென்றால், மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் பாதுகாக்கப்படவும், சாதிக்கப்படவும் அது {அம்முயற்சி} துணைநிற்கும்", என்றான் {திருதராஷ்டிரன்}.


மன்னனின் {திருதராஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட விதுரன், திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில், பெரும் முன்னறிதிறன் கொண்ட காந்தாரியை அங்கே அழைத்து வந்தான். பிறகு திருதராஷ்டிரன் காந்தாரியிடம், "ஓ, காந்தாரி, தீய ஆன்மா கொண்ட உனது மகன் {துரியோதனன்}, எனது கட்டளைகள் அனைத்தையும் மீறி, ஆட்சியுரிமையின் மீது தான் கொண்ட ஆசையின் விளைவாக, ஆட்சியுரிமை மற்றும் உயிர் ஆகிய இரண்டையும் தியாகம் செய்யப் போவதைப் பார். தீய ஆன்மாவும், சிறு மதியும் கொண்ட அவன் {துரியோதனன்}, பாவிகளான தனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்}, தன்னைவிட மேன்மையானோரை அவமதித்து, தன் நலன்விரும்பிகளின் வார்த்தைகளை மீறி, பண்படாத மனத்தைக் கொண்டவன் போலச் சபையைவிட்டு வெளியேறினான்", என்றான் {திருதராஷ்டிரன்}."


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தனது கணவனின் {திருதராஷ்டிரனின்} வார்த்தைகளைக் கேட்டவளும், பெரும் புகழ் வாய்ந்தவளுமான காந்தாரி {திருதராஷ்டிரனிடம்}, உயர்ந்த நன்மையை விரும்பி, "காலந்தாழ்த்தாமல், நாட்டின் மீது பேராசை கொண்டு நோயுற்றிருக்கும் எனது மகனை {துரியோதனனை} இங்கே அழைத்து வாருங்கள். பண்படாத இதயம் கொண்டவனும், அறம் மற்றும் பொருளைத் தியாகம் செய்தவனுமான அவன் {துரியோதனன்}, ஒரு நாட்டை நிர்வகிக்கும் தகுதி இல்லாதவனாவான். இப்படி இவை அனைத்தும் இருந்தாலும், பணிவற்ற அவன் {துரியோதனன்}, அனைத்து வகையிலும் நாட்டை அடைந்தான்.

உண்மையில், ஓ! திருதராஷ்டிரரே, உம் மகனின் மீது கொண்ட பெரும் பாசத்தாலும், அவன் {துரியோதனன்} பாவியாய் இருப்பதை அறிந்தும், அவனது ஆலோசனைகளைப் பின்தொடர்ந்து வருவதாலும், நீரே இதற்காகப் பெரிதும் பழிசொல்லத் தக்கவர். அந்த உமது மகன் {துரியோதனன்}, ஆசைக்கும், கோபத்திற்கும் முழுமையாக ஆட்பட்டு, இப்போது மாயையின் அடிமையாக இருக்கிறான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எனவேதான் உம்மால் இப்போது அவனை {துரியோதனனை} வலுக்கட்டாயமாகத் திருப்ப முடியவில்லை.


ஓ! திருதராஷ்டிரரே, பேராசைக்கு ஆட்பட்டவனும், தீய ஆலோசகர்களைக் கொண்டவனும், தீய ஆன்மா கொண்டவனுமான அந்த அறிவில்லாத மூடனிடம் {துரியோதனனிடம்} நாட்டைக் கொடுத்ததன் {மூலம் உண்டான} கனியையே {பலனையே} இப்போது நீர் அறுவடை செய்து கொண்டிருக்கிறீர். இவ்வளவு நெருக்கமான சொந்தங்களுக்கிடையில் ஏற்படப்போகும் பிளவை மன்னர் {திருதராஷ்டிரர்} (இன்று) ஏன் அலட்சியம் செய்கிறார்? என , உமது சொந்தங்களுக்குள்ளே பிளவு கொண்டிருக்கும் உம்மைக் கண்டு, உண்மையில் உமது எதிரிகள் நகைப்பார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, *சமரசத்தினாலோ {சமாதானத்தினாலோ}, பரிசு மூலமோ {தானத்தினாலோ} கடக்க வேண்டிய அந்த ஆபத்துகளை, பலத்தைப் பயன்படுத்தி {தண்டத்தினால்} எவன் கடப்பான்?" என்றாள் {காந்தாரி}".

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு, திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரிலும், அவனது {துரியோதனனின்} தாயுடைய {காந்தாரியின்} கட்டளையின் பேரிலும், பழியுணர்ச்சி கொண்ட துரியோதனனை மீண்டும் ஒருமுறை சபைக்குள் நுழையச் செய்தான் க்ஷத்திரி {விதுரன்}. கோபத்தால் தாமிரம் போலச் சிவந்திருந்த கண்களுடன், பாம்பு போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, தனது தாயின் வார்த்தைகளை எதிர்பார்த்து அந்தச் சபைக்குள் மீண்டும் நுழைந்தான். தவறான பாதையில் நடந்து கொண்டிருந்த தனது மகன் {துரியோதனன்}, சபைக்குள் நுழைவதைக் கண்ட காந்தாரி, அவனைக் {துரியோதனனைக்} கடுமையாகக் கண்டித்து, சமாதானத்தை ஏற்படுத்த இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.


காந்தாரி {துரியோதனனிடம்} சொன்னாள், "ஓ! துரியோதனா, ஓ! அன்பு மகனே, உனக்கும் உனது தொண்டர்கள் {உன்னைப் பின்பற்றுபவர்கள்} அனைவருக்கும் நன்மையைத் தருபவையும், உன்னால் கீழ்ப்படியத் தக்கவையும், உனக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருபவையுமான எனது வார்த்தைகளைக் கவனிப்பாயாக. ஓ! துரியோதனா, உனது நலன்விரும்பிகள் சொல்லும் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. பாரதர்களில் சிறந்தவர்களான உனது தந்தை {திருதராஷ்டிரர்}, பீஷ்மர், துரோணர், கிருபர், க்ஷத்ரி {விதுரன்} ஆகியோர் சொல்லும் வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவாயாக. நீ சமாதானம் செய்து கொண்டால், பீஷ்மர், உனது தந்தை {திருதராஷ்டிரர்}, {காந்தாரியாகிய} நான் மற்றும் துரோணரின் தலைமையிலான உனது நலன் விரும்பிகள் அனைவருக்கும் நீ மரியாதை செய்தவனுமாவாய். {மேற்கண்டவர்களை மதித்தவனுமாவாய்}.

ஓ! பெரும் அறிவு கொண்டவனே, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, ஒரு நாட்டை அடைந்து, அதைப் பாதுகாத்து அனுபவிப்பதைத் தனது சொந்த விருப்பம் ஒன்றால் மட்டுமே எவனாலும் வெல்ல முடியாது. புலன்களைக் கட்டுக்குள் வைக்காதவனால் நீண்ட காலம் அரசுரிமையைத் தக்க வைத்துக் கொள்ள இயலாது. தனது ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டு, பெரும் புத்திக்கூர்மையும் கொண்டவனால் மட்டுமே ஒரு நாட்டை ஆள முடியும். ஆசை மற்றும் கோபம் ஆகியவை ஒரு மனிதனிடம் உள்ள செல்வங்கள் மற்றும் இன்பங்கள் அனைத்தையும் அழித்துவிடும்.


{ஆசை, கோபம் என்ற} இந்த எதிரிகளை முதலில் வென்ற பிறகே, ஒரு மன்னனால், பூமியைத் தனது கட்டுக்குள் கொண்டு வர முடியும். மனிதர்களை ஆள்வது பெரிய காரியமாகும். தீய ஆன்மா கொண்டோர்தான், ஒரு நாட்டை எளிதாக வெல்ல விரும்புவார்கள். ஆனால், (அது வெல்லப்பட்ட பிறகு), அவர்களால் அந்த நாட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஒரு பெரிய பேரரசை அடைய விரும்பும் ஒருவன், அறம், பொருள் ஆகிய இரண்டுக்கும் நிச்சயம் கட்டுப்பட வேண்டும். ஏனெனில், விறகை உண்ணும் நெருப்பு வளர்வதைப் போல, புலன்கள் ஒடுக்கப்பட்டால்தான், புத்திக்கூர்மை அதிகரிக்கும். அவை {புலன்கள்} கட்டுப்படுத்தப்படவில்லையெனில், பழக்கப்படாதவையும், அடங்காதவையுமான குதிரைகள், திறனற்ற ஓட்டுநரைக் கொன்று விடுவதைப்போல, {அந்தப் புலன்களை} உரியவர்களையேகூட அவற்றால் {புலன்களால்} கொன்றுவிட இயலும்.

தன்னை வெல்லாமல், தனது ஆலோசகர்களை வெல்ல முனைபவனும், தனது ஆலோசகர்களை வெல்லாமல், தனது எதிரைகளை வெல்ல முனைபவனும் விரைவில் வீழ்த்தப்பட்டு நிர்மூலமடைகிறார்கள். தனது சுயத்தையே எதிரியாக எடுத்துக் கொண்டு, அதை முதலில் வெல்பவன், தனது ஆலோசகர்களையும், அதன்பின்பு தனது எதிரிகளையும் வீணாக வெல்ல முயல மாட்டான். தன் புலன்களையும், தனது ஆலோசகர்களையும் வென்று, வரம்புமீறுபவர்களைத் தண்டித்து, ஆலோசித்தபிறகு செயல்பட்டு, அறிவுடன் இருக்கும் ஒரு மனிதனையே செழிப்பு வழிபடுகிறது. நெருங்கிய துளைகள் கொண்ட வலையில் இரு மீன்கள் அகப்படுவதைப் போல, உடலில் குடியிருக்கும் ஆசை {காமம்} மற்றும் கோபம் {குரோதம்} ஆகியவை {மனிதனின்} அறிவினால் {ஞானத்தினால்} பலத்தை இழக்கின்றன.


சொர்க்கத்திற்குச் செல்லும் விருப்பத்தால், உலக ஈர்ப்புகளில் இருந்து விடுபடும் ஒருவன், ஆசை {காமம்} மற்றும் கோபத்தால் {குரோதத்தால்} உற்சாகம் அடைந்தால், அந்த இரண்டின் விளைவாக, சொர்க்கத்தின் வாசல்களைத் தேவர்களே அவனுக்கு எதிராக {அவன் உள்ளே செல்லமுடியாதபடி} அடைப்பார்கள். ஆசை, கோபம், பேராசை, தற்பெருமை, செருக்கு ஆகியவற்றை நன்கு அடக்கத்தெரிந்த மன்னனால், முழுப் பூமியின் ஆட்சியதிகாரத்தையும் தன் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

செல்வம் மற்றும் அறம் ஆகியவற்றை ஈட்டவும், எதிரிகளை வீழ்த்தவும் விரும்பும் ஒரு மன்னன், தனது ஆசைகளைக் கட்டுப்படுத்துவதிலேயே எப்போதும் ஈடுபட வேண்டும். ஆசையாலோ, கோபத்தாலோ தன் சொந்தங்களிடமோ, பிறரிடமோ வஞ்சகமாக நடந்து கொள்ளும் ஒருவனால், பல கூட்டாளிகளைப் {நண்பர்களைப்} பெறுவதில் வெற்றி அடைய முடியாது.

ஓ! மகனே {துரியோதனா}, பெரும் அறிவுபடைத்தவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான பாண்டுவின் வீர மகன்களுடன் {பாண்டவர்களுடன்} சேர்ந்து மகிழ்ச்சியுடன் இந்தப் பூமியை அனுபவிப்பாயாக. சந்தனுவின் மகனான பீஷ்மர், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர் ஆகியோர் சொன்னவையெல்லாம், ஓ! மகனே {துரியோதனா}, நிச்சயம் உண்மையே. கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} வெல்லப்பட முடியாதவர்கள் ஆவர். எனவே, உழைக்க வருந்தாதவனான இந்த வலிமைமிக்கவனின் {கிருஷ்ணனின்} பாதுகாப்பை நாடுவாயாக. ஏனெனில், கேசவன் {கிருஷ்ணன்} கருணை இருந்தால், இரு தரப்பும் மகிழ்ச்சியடைவார்கள்.

தனது செழிப்பை மட்டுமே எப்போதும் தேடி, அறிவுடைய கல்விமான்களான தன் நண்பர்களின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படியாத ஒரு மனிதன், தனது எதிரிகளையே மகிழ்ச்சிப்படுத்துகிறான். ஓ! மகனே {துரியோதனா}, போரினால் எந்த நன்மையுமில்லை, எந்த அறமும் பொருளும் இல்லை. பிறகு, அதனால் {போரினால்} மகிழ்ச்சியை எப்படிக் கொண்டு வர முடியும்? வெற்றியும் கூட எப்போதும் நிச்சயமானதல்ல. எனவே, போரில் உனது இதயத்தை நிலைநிறுத்தாதே.

ஓ! பெரும் அறிவு கொண்டவனே {துரியோதனா}, பீஷ்மர், உனது தந்தை {திருதராஷ்டிரர்}, பாஹ்லீகர் ஆகியோர் பாண்டவர்களுக்கு அவர்களுடைய {நாட்டின்} பங்கை {பகைவர்கள் மீது கொண்ட} அச்சத்தின் காரணமாகவே (முன்பு) கொடுத்தார்கள். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவர்களுடன் {பாண்டவர்களுடன்} பிளவை விரும்பாதே. அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} மூலம், முட்கள் {பகைவர்கள்} அற்றதாகச் செய்யப்பட்ட பூமி முழுவதிலும் நீ அரசுரிமை புரிகிறாய். உண்மையில், அப்படி {பீஷ்மர், திருதராஷ்டிரர் மற்றும் பாஹ்லீகர் ஆகியோர்} (அமைதியாக) விட்டுக்கொடுத்ததன் விளைவில் உண்டான கனியையே {பயனையே} நீ இன்று காண்கிறாய்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} உரியதைப் பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} கொடுத்துவிடு. உனது ஆலோசகர்களுடன் {அமைச்சர்களுடன்} (இந்தப் பேரரசில்) பாதியை நீ அனுபவிக்க விரும்பினாலும், அவர்களுடைய {பாண்டவர்களுடைய} பங்கை அவர்களுக்குக் கொடுத்துவிடு. உன்னையும், உனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்} ஆதாரமாகத் தாங்கிக் கொள்ளப் பாதிப் பூமியே போதுமானதாகும். உனது நலன்விரும்பிகளின் சொற்களின்படி செயல்பட்டு, ஓ! பாரதா {துரியோதனா}, பெரும் புகழை வெல்வாயாக.

செழிப்பைக் கொண்டவர்களும், தங்கள் ஆன்மாக்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவர்களும், பெரும் புத்திக்கூர்மை கொண்டவர்களும், தங்கள் ஆசைகளை வென்றவர்களுமான பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நீ பூசல் கொண்டால், அஃது உனது பெரும் செழிப்பை அழிக்க மட்டுமே செய்யும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, உனது நலன்விரும்பிகள் அனைவரின் கோபத்தையும் அகற்றி, பாண்டுவின் மகன்களுக்குச் சொந்தமான பங்கை அவர்களிடம் கொடுத்து, உனது நாட்டை நீ மகிழ்ச்சியாக ஆள்வாயாக.

ஓ! மகனே, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} முழுமையாகப் பதிமூன்று {13} வருடங்கள் அனுபவித்த தண்டனை போதும். ஓ! பெரும் அறிவுடையவனே {துரியோதனா}, ஆசையாலும், கோபத்தாலும் வளரும் (அந்த நெருப்பை) இப்போதே தணிப்பாயாக {அடக்குவாயாக}. பாண்டவர்களின் செல்வத்தில் பேராசை கொண்டிருக்கும் நீ அவர்களுக்கு இணையாக மாட்டாய்; பெரும் கோபம் கொண்ட இந்தச் சூதனின் மகனும் {கர்ணனும்}, உனது தம்பியான துச்சாசனனும் {பாண்டவர்களுக்கு} இணையாகமாட்டார்கள்.

உண்மையில், பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், பீமசேனன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, திருஷ்டத்யும்னன் ஆகியோர் கோபமுற்றால், பூமியில் வாழ்வோர் அனைவரும் அழிவடைவார்கள். ஓ! மகனே {துரியோதனா}, கோபத்தின் ஆளுகைக்குள் சென்று குருக்களை {கௌரவர்களை} அழித்துவிடாதே. உன் நிமித்தமாக இந்தப் பரந்த பூமி அழியாதிருக்கட்டும்.

பீஷ்மரும், துரோணரும், கிருபரும், மற்றும் அனைவரும் முழு வலிமையுடன் (உனக்காகப்) போரிடுவார்கள் என்றே சிறுமதி படைத்த நீ நினைக்காய். அஃது எப்போதும் நிகழாது. ஏனெனில், தன்னறிவைக் கொண்ட இவர்களைப் பொறுத்தவரை, {கௌரவர்களான} உங்களுக்குச் சமமாகப் பாண்டவர்களிடமும் இவர்கள் பாசம் கொண்டுள்ளனர். மன்னரிடம் (திருதராஷ்டிரரிடம்) தாங்கள் பெற்ற வாழ்வாதாரத்தின் பொருட்டு [1], அவர்கள் தங்கள் உயிரையே கொடுக்கச் சம்மதித்தாலும், மன்னன் யுதிஷ்டிரனை நோக்கி அவர்களால் தங்கள் கோபப் பார்வையைச் செலுத்த முடியாது.

[1], ராஜ பிண்டத்தில் உண்டான பயத்தின் {மன்னன் திருதராஷ்டிரன் அளித்த உணவை உண்ட நன்றியின்} பொருட்டு என்பது இங்கே பொருள்.

பேராசை மூலம், மனிதர்கள் செல்வத்தை அடைவது இந்த உலகில் காணப்படுவதில்லை. ஓ! மகனே, உனது பேராசையைக் கைவிடுவாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, நில்" என்றாள் {காந்தாரி}".

*சமரசத்தினாலோ
{சாம, பேத, தான, தண்டம் ஆகியவற்றைக் கைகொண்டு எதிரிகளை வழிக்கு கொண்டுவருதல் வேண்டும் என்பதையே இங்கு காந்தாரி குறிக்கிறாள்}

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தனது தாயால் {காந்தாரியால்} சொல்லப்பட்ட பயனுள்ள வார்த்தைகளை அலட்சியம் செய்த துரியோதனன், கோபத்தால் அந்த இடத்தைவிட்டு அகன்று, தீய மனிதர்களின் முன்னிலைக்குச் சென்றான். சபையை விட்டு வெளியேறிய அந்தக் குரு {கௌரவ} இளவரசன் {துரியோதனன்}, பகடையில் பெரும் அறிவுடையவனும், சுபலனின் அரச மகனுமான சகுனியுடன் ஆலோசிக்கத் தொடங்கினான்.

துரியோதனன், கர்ணன், சுபலனின் மகன் சகுனி ஆகியோரும், நான்காவதாகத் துச்சாசனனும் சேர்ந்து அடைந்த தீர்மானம் இதுவே. "செயலில் வேகமான இந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, மன்னர் திருதராஷ்டிரருடனும், சந்தனுவின் மகனுடனும் {பீஷ்மருடனும்} சேர்ந்து, முதலில் நம்மைக் கைப்பற்ற {சிறைபிடிக்க} முயல்வான். எனினும், விரோச்சனன் மகனைப் {பலியைப்} பலவந்தமாகக் கைப்பற்றிய இந்திரனைப் போல, மனிதர்களில் புலியான இந்த ரிஷிகேசனை {கிருஷ்ணனைப்} நாம் பலவந்தமாகக் கைப்பற்றுவோமாக.



இந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} பிடிபட்டதைக் கேட்கும் பாண்டவர்கள், நம்பிக்கையை இழந்து, விஷப்பற்கள் உடைந்த பாம்புகளைப் போல முயற்சி செய்யும் திறன் அற்றவர்கள் ஆவார்கள்.

உண்மையில், இந்த வலிமைமிக்கவனே {கிருஷ்ணனே}, அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் பாதுகாத்து, அவர்களுக்குத் தஞ்சம் அளிக்கிறான். வேண்டியவற்றை அளிப்பவனும், சாத்வதர்கள் அனைவரிலும் காளையுமான இவன் {கிருஷ்ணன்} பிடிபட்டால், சோமகர்களுடன் கூடிய பாண்டவர்கள் மனம் தளர்ந்து, எந்த முயற்சியையும் செய்யும் திறனற்றவர்கள் ஆவார்கள். எனவே, திருதராஷ்டிரரின் கதறல்களை அலட்சியம் செய்து, செயல்வேகமுள்ள இந்தக் கேசவனைக் {கிருஷ்ணனை} நாம் இங்கேயே பிடித்து வைப்போம். பிறகு எதிரியுடன் போரிடலாம்" {என்றே அந்த நால்வரும் தீர்மானித்தனர்}.


தீய ஆன்மாக்களை உடைய அந்தப் பாவிகள், இந்தப் பாவகரத் தீர்மானத்தை அடைந்த பிறகு, இதயக் குறிப்புகளைப் படிக்கும் திறன் கொண்டவனும், உயர்ந்த புத்திக்கூர்மை கொண்டவனுமான சாத்யகி விரைவில் இதைக் குறித்து அறிந்தான். அந்த அறிவின் காரணமாக, அவன் {சாத்யகி}, ஹிருதிகனின் மகனுடன் (கிருதவர்மனுடன்) சேர்ந்து, விரைந்து சபையைவிட்டு வெளியேறினான்.

சாத்யகி கிருதவர்மனிடம், "துருப்புகளை விரைவில் அணிவகுப்பாயாக. கவசம் பூண்டு, உனது துருப்புகளைப் போருக்கு அணிவகுத்து, உழைப்பால் {முயற்சியால்} களைத்துப் போகாத கிருஷ்ணனிடம் இவ்விஷயத்தை நான் சொல்லும் வரை, சபையின் வாசலில் காத்திருப்பாயாக" என்றான். இதைச் சொன்ன அந்த வீரன் {சாத்யகி}, மலைக்குகைக்குள் நுழையும் சிங்கம் போல மீண்டும் சபைக்குள் நுழைந்தான். (முதலில்) அவன் உயர் ஆன்ம கேசவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பிறகு திருதராஷ்டிரனிடமும், பிறகு விதுரனிடமும் இந்தச் சதியைக் குறித்துச் சொன்னான்.


இந்தத் தீர்மானத்தைக் குறித்துச் சொன்ன அவன் {சாத்யகி} {பரிகாசச் சிரிப்பைச்} சிரித்தவாறே, "அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றைக் கருதும் நல்லோரால் அங்கீகரிக்கப்படாத ஒரு செயலை, இந்தத் தீய மனிதர்கள், இங்கே செய்ய நினைக்கிறார்கள். ஒன்றாகக் கூடி இருப்பவர்களும், பாவம் நிறைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், மூடர்களும், ஆசை மற்றும் கோபத்தின் ஆளுகைக்குள் இருப்பவர்களுமான இந்த இழிந்தவர்கள், செய்யக்கூடாத செயலொன்றை கோபம் மற்றும் பேராசையால் இங்கே செய்யப் போகிறார்கள். சுடர்மிகும் நெருப்பைத் தங்கள் ஆடைகளால் கைப்பற்ற நினைக்கும் பிள்ளைகளைப் போலவும், மூடர்களைப் போலவும், தாமரைக் கண்ணனை {கிருஷ்ணனைக்} கைப்பற்ற {கைது செய்ய}, சிறுமதி படைத்தவர்களும் இழிந்தவர்களுமான அவர்கள் விரும்புகிறார்கள்" என்றான் {சாத்யகி}.

சாத்யகியின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் முன்னறிதிறனைக் கொண்டவனுமான விதுரன், குருக்களுக்கு மத்தியில் இருந்த வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரனிடம், "ஓ! மன்னா, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரின் நேரமும் வந்து விட்டது. ஏனெனில், உண்மையில் தங்களால் முடியாதெனினும், பெரும் புகழ்க்கேட்டைத் தரும் செயலைச் செய்ய அவர்கள் முனைந்துள்ளார்கள். ஐயோ, ஒன்றாகச் சேர்ந்திருக்கும் அவர்கள் {கௌரவர்கள்}, வாசவனின் {இந்திரனின்} தம்பியை வீழ்த்தவும், இந்தத் தாமரைக் கண்ணனைக் {கிருஷ்ணனைக்} கைப்பற்றவும் விரும்புகிறார்களே.


உண்மையில், இந்த மனிதர்களில் புலியிடம் {கிருஷ்ணனிடம்}, இந்த ஒப்பற்றவனிடம், தடுக்கப்பட முடியாதவனிடம் மோதினால், சுடர்மிகும் நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல அவர்கள் அழிந்தே போவார்கள். அவர்கள் {கௌரவர்கள்} அனைவரும் ஒற்றுமையுடன் போரிட்டாலும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} விரும்பினால், யானை மந்தையை விரட்டும் கோபம் நிறைந்த சிங்கத்தைப் போல, அவர்களை யமனுலகுக்கே அனுப்ப முடியும். எனினும், இவன் {கிருஷ்ணன்}, அத்தகு பாவம் நிறைந்ததும், கண்டிக்கத்தக்கதுமான ஒரு செயலை எப்போதும் செய்ய மாட்டான். மனிதர்களில் சிறந்தவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான இவன் {கிருஷ்ணன்}, அறத்தில் இருந்து எப்போதும் வழுவ மாட்டான்" என்றான் {விதுரன்}.

விதுரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, பிறர் சொல் கேட்கும் நல்ல அறிவுடையோருக்கு மத்தியில், தனது கண்களைத் திருதராஷ்டிரன் மீது செலுத்திய கேசவன் {கிருஷ்ணன் திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவர்கள் வன்முறையின் மூலம் என்னைத் தண்டிக்க விரும்பினால், என்னை அவர்கள் தண்டிக்க அனுமதியும். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நான் அவர்களைத் தண்டிப்பதைப் பொறுத்தவரையில், கோபமடைந்திருக்கும் அவர்கள் அனைவரையும் தண்டிக்கவே நானும் விரும்புகிறேன். எனினும், பாவம் நிறைந்த, கண்டிக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்ய மாட்டேன்.


பாண்டவர்களின் உடைமைகள் மீது ஆசை கொண்ட உமது மகன்கள், தங்கள் சொந்த உடைமைகளை இழக்கப் போகிறார்கள். இத்தகு செயலைச் செய்ய அவர்கள் விரும்பினால், யுதிஷ்டிரரின் நோக்கம் இந்நாளிலேயே (எளிதில்) நிறைவேறிவிடும். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவர்களையும், இவர்களைத் தொடர்ந்து வருவோரையும் கைப்பற்றி, அவர்களைப் பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} நான் ஒப்படைத்துவிடுவேன்.

அடைவதற்குக் கடினமானது என்று எனக்கு என்ன இருக்கிறது? எனினும், ஓ!பெரும் ஏகாதிபதியே {திருதராஷ்டிரரே}, கோபத்திலும், பாவம் நிறைந்த புரிதலாலும் மட்டுமே முன்னெழும் அது போன்ற கண்டிக்கத்தக்க செயல் எதையும் உமது முன்னிலையில் நான் செய்ய மாட்டேன். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் விரும்பவது போலவே நடக்கட்டும். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரும் அதைச் செய்வதற்கு நான் அனுமதி அளிக்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.

(கேசவனின்) இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், விதுரனிடம், "அரசுரிமையில் மிகுந்த ஆசை கொண்டவனும், பாவம் நிறைந்தவனுமான துரியோதனனை, அவனது நண்பர்கள், ஆலோசகர்கள், தம்பிகள் மற்றும் தொண்டர்களோடு விரைவாக இங்கே அழைத்து வா. உண்மையில், அவனைச் சரியான பாதைக்குக் கொண்டு வர முடியுமா என்று மற்றும் ஒரு முறை நான் பார்க்கப் போகிறேன்" என்றான்.


திருதராஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்ட க்ஷத்ரி {விதுரன்}, விருப்பமில்லாத துரியோதனனை, அவனது தம்பிகளோடு, {துரியோதனனைப் பின்பற்றும்} மன்னர்கள் சூழ மீண்டும் ஒருமுறை அழைத்து வந்தான். பிறகு, கர்ணன், துச்சாசனன் மற்றும் அந்த மன்னர்கள் அனைவராலும் சூழப்பட்ட துரியோதனனிடம் மன்னன் திருதராஷ்டிரன், "ஓ! பாவங்களைத் திரட்டும் இழிந்தவனே {துரியோதனா}, இழிவான செயல்களைச் செய்யும் மனிதர்களை உனது கூட்டாளிகளாகக் {நண்பர்களாகக்} கொண்டிருக்கும் நீ, பாவம் நிறைந்த நண்பர்களுடன் கூடி, புகழுக்குக் கேட்டைத் தரும் செயலைச் செய்ய முயல்கிறாய். சிறுமதி படைத்த நீ, உனது குலத்திற்கும் புகழ்க்கேட்டை விளைவிக்கிறாய். நல்லோரால் அங்கீகரிக்கப்படாததும், உண்மையில் அடைய முடியாததுமான இந்த இழிவான செயலை உன்னைப் போன்ற ஒருவனால் மட்டுமே முயற்சிக்க முடியும்.

பாவம் நிறைந்த கூட்டாளிகளுடன் இணைந்து, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், தவிர்க்கப்பட முடியாதவனுமான இந்த ஒப்பற்றவனையா நீ {கைப்பற்றி} தண்டிக்க விரும்புகிறாய்? சந்திரனைப் பெற விரும்பும் குழந்தையைப் போல, ஓ! மூடா, வாசவனால் {இந்திரனால்} தலைமை தாங்கப்படும் தேவர்களே தங்கள் பலம் முழுமையும் வெளிப்படுத்தினாலும் சாதிக்க முடியாத ஒரு காரியத்தையா நீ முயல்கிறாய்? கேசவன் {கிருஷ்ணன்}, தேவர்களாலும், மனிதர்களாலும், கந்தர்வர்களாலும், அசுரர்களாலும் உரகர்களாலும் கூடப் போரில் எதிர்க்கப்பட முடியாதவன் என்பதை நீ அறிவாயா? காற்றை, எவன் கைகளாலும் பிடிக்க முடியாததைப் போல, சந்திரனை, எந்தக் கையும் அடைய முடியாததைப் போல, பூமியை, எவன் தலையாலும் தாங்கிக் கொள்ள முடியாததைப் போல, கேசவனை {கிருஷ்ணனை} பலத்தினால் பிடிக்க உன்னால் முடியாது" என்றான் {திருதராஷ்டிரன்}.


திருதராஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, துரியோதனன் மீது தனது கண்களைச் செலுத்திய விதுரன், அந்தப் பழியுணர்ச்சி கொண்ட திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, எனது இந்த வார்த்தைகளை இப்போது கேட்பாயாக. துவிதன் என்ற பெயரால் அறியப்பட்ட குரங்குகளில் முதன்மையானவன் ஒருவன், வலிமைமிக்கக் கற்களின் மழையால், சௌபத்தின் வாயில்களில் கேசவனை {கிருஷ்ணனை} மறைத்தான். மாதவனைப் {கிருஷ்ணனைப்} பிடிக்க விரும்பி, தனது ஆற்றல் மற்றும் உழைப்பு அனைத்தையும் பயன்படுத்தினான். எனினும் அவனால் {துவிதனால்} இவனை {கிருஷ்ணனைப்} பிடிக்க முடியவில்லை. இவனையா நீ பலத்தினால் பிடிக்க முயல்கிறாய்?

சௌரி {கிருஷ்ணன்} பிராக்ஜோதிஷத்திற்குச் {பிராக்ஜோதிஷ நாட்டிற்குச்} சென்ற போது, தானவர்கள் அனைவருடன் கூடிய நரகனால் {நரகாசூரனால்}, அங்கே இவனைப் பிடிப்பதில் வெல்லமுடியவில்லை. இவனையா நீ பலத்தினால் பிடிக்க முயல்கிறாய்? போரில் அந்த நரகனைக் கொன்று (அவனது நகரத்தில் இருந்து) ஆயிரம் {1000} கன்னிகைகளைக் கொண்டு வந்து, அவர்கள் அனைவரையும் விதிப்படி இவன் {கிருஷ்ணன்} மணந்தான்.

நிர்மோசனம் என்ற நகரத்தில், சுருக்குக் கயிறுகளுடன் கூடிய வலிமைமிக்க ஆறாயிரம் {6000} அசுரர்கள் இவனைப் பிடிப்பதில் தோல்வியுற்றனர். இவனையா நீ பலத்தினால் பிடிக்க முயல்கிறாய்? குழந்தையாக இருந்த போதே, இவன் பூதனையையும், பறவைகளின் வடிவில் வந்த அசுரர்கள் இருவரையும் கொன்றான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, (தொடர்ச்சியான மழையில் இருந்து) பசுக்களைக் காப்பதற்காக, (தனது சுண்டு விரலில்) இவன் {கிருஷ்ணன்} கோவர்த்தன மலைகளைத் தூக்கிப் பிடித்தான்.

அரிஷ்டன், தேனுகன், பெரும் பலம் கொண்ட சாணூரன், அஸ்வராஜன், தீமை செய்பவனான கம்சன் ஆகியோரையும் இவனே {கிருஷ்ணனே} கொன்றான். ஜராசந்தன், வக்ரன் {வக்தரன்}, வலிமையான சக்தி படைத்த சிசுபாலன் ஆகியோரும் மற்றும் {இவனிடம்} போரிட்ட பாணன் என்பவனும், இன்னும் எண்ணற்ற மன்னர்களும் இவனால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அளவிலா வலிமை கொண்ட இவன் {கிருஷ்ணன்}, மன்னன் வருணனையும், பாவகனையும் (அக்னியையும்) வீழ்த்தியிருக்கிறான். (தெய்வீக மலர் என்று அழைக்கப்படும்) பாரிஜாதத்தைத் (தேவலோகத்தில் இருந்து) கொண்டு வந்த நிகழ்வின் போது சச்சியின் தலைவனையும் {இந்திரனையும்} இவன் வீழ்த்தியிருக்கிறான். கடலின் ஆழத்தில் மிதந்து கொண்டிருந்த போது, இவன் {கிருஷ்ணன்} மது என்பவனையும், கைடபன் என்பவனையும் கொன்றான். மற்றும் ஒரு பிறவியில் இவன் ஹயக்ரீவனையும் (குதிரைக் கழுத்துடையவனையும்) [1] கொன்றான்.

[1] வேதத்தைத் திருடிக் கொண்டு போனமையால் கொல்லப்பட்டவன் ஹயக்ரீவன்.

யாவையும் செய்பவன் இவனே {கிருஷ்ணனே}, ஆனால் யாதாலும் இவன் செய்யப்பட்டவன் இல்லை. இவனே சக்திகள் அனைத்தின் காரணமாக இருக்கிறான். சௌரி {கிருஷ்ணன்} விரும்பும் எதையும், எந்த முயற்சியும் இன்றியே சாதித்துக் கொள்வான். பயங்கர ஆற்றல் கொண்ட இந்தப் பாவமற்ற கோவிந்தன் {கிருஷ்ணன்} அழிவில்லாதவன் என்பதை நீ அறியாயா?

கடும் விஷம் கொண்ட சீற்றம் மிகுந்த பாம்பைப் போன்ற இவன், முடிவிலா சக்தியின் ஊற்றுக்கண்ணாவான். வலிய கரங்களும் களைப்பிலா உழைப்பும் {முயற்சியும்} கொண்ட கிருஷ்ணனிடம் வன்முறையைக் கையாள முயலும் நீ, நெருப்பில் விழும் பூச்சி போல உனது தொண்டர்களுடன் சேர்ந்து அழிந்து போவாய்" என்றான் {விதுரன்}". 

….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்  

No comments:

Post a Comment