ரிஷ்யசிருங்கர்
கலைக்கோட்டு முனிவர் என்றும் அழைக்கப்பட்டவர்.
பிறக்கும் போதே தலையில் மான் கொம்புகளுடன் பிறந்தவர்.
இவரது தந்தை விபாண்டக முனிவர்
தாயார் ஊர்வசி.
ஊர்வசி அப்சரஸ் தேவலோக நடனப் பெண்.
இவர்களுக்கு பிறந்தவர் ரிஷ்யசிருங்கர். பிறந்தவுடனே தாய்
ரிஷ்யசிருங்கரை விபாண்டக முனிவரிடம் விட்டு விட்டு இந்திர லோகம் சென்றுவிடுகிறார்.
தாயின் முகத்தை பார்க்காமலேயே
தந்தையிடம் வளர்ந்த பிள்ளை இவர்.
ரிஷ்யசிருங்கரின்
நண்பர்களெல்லாம் காட்டில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, மான்கள், மற்ற விலங்குகள் மட்டுமே. இதைத்தவிர வேறு எந்த உலகப் பொருளையும் அறியாதவர் அவர். தந்தையைத் தவிர பிற மனித முகங்களை அவர் பார்த்ததே இல்லை. தந்தைக்கு சேவை செய்வது மட்டுமே இவரது பணி.
யாகம், ஹோம முறைகளை தந்தையார் மகனுக்கு கற்றுக் கொடுத்தார். தந்தையார் கொடுக்கும் கனிவகைகள், எப்போதாவது தயாரிக்கும் பட்சண வகைகளைத் தவிர வேறு எந்த உணவையும் பற்றி தெரியாதவர். ஆசை என்ற சொல்லையே அறியாதவர். எனவே, பாவங்கள் செய்ய வழியே இல்லாத உத்தமராக இருந்தார்.
ரிஷ்யசிருங்கர் காலடி வைத்த இடமெல்லாம் மழை பெய்தது.
ஊரெல்லாம் மழை பெய்யாத போதும் ரிஷ்யசிருங்கர் இருந்த இடம் அவர் எங்கெங்கு இருக்கிறாரோ அங்கெல்லாம் மழை பொழிந்து பசுமையாக இருந்தது.
அங்கதேசத்து அரசன் ரோமபாதன்
அவனது நாட்டில் பத்து வருடங்களாக
மழை பெய்யாது பொய்த்து போனதால் நாட்டில் பஞ்சமும்
வறுமையும் தலைவிரித்தாடியது.
ரிஷ்யசிருங்கர் பற்றி ரோமபாத மன்னர் அறிந்தவுடன்
விபாண்டக முனிவர் ஆஸ்ரமத்தில் இல்லாத நேரத்திற்காக காத்திருந்தார்.
ஓர் நாள் விபாண்டக முனிவர் ஆஸ்ரமத்தை விட்டு வெகு தூரப்பயணம் போகவே,
அங்க நாட்டு மன்னர் ரோமபாதர், தன் மகள் சாந்தாவையும் அவள் தோழியரையும் கலைக்கோட்டு முனிவரை அங்கநாட்டிற்கு வரவழைக்க அனுப்பி வைத்தார்.
பெண்கள் வாசம் அறியாத கலைக்கோட்டு முனிவரை அணுகி பல நாட்கள் பேசிப் பழகினர்.
சரியான பலகாரங்களை கூட சாப்பிடாத ரிஷ்யசிருங்கரிடம் நிறைய பலகாரங்களை உண்ண கொடுத்தனர். ரிஷ்யசிருங்கருக்கு
வேறு ஓர் இடம் இருப்பதை பார்க்க மனதில் ஆசை ஏற்பட்டது.
சில நாட்கள் கழித்து, கலைக்கோட்டு முனிவரை ஒரு படகில் அமர்த்தி, அங்க நாட்டிற்கு வரவழைத்தனர். முனிவர் அங்கநாட்டில் காலடி எடுத்து வைத்ததும் பெரு மழை பெய்தது.
கலைக்கோட்டு முனிவரை நகரத்திற்கு வரவேற்ற அரசன், முனிவரின் தலைமையில் ஒரு மாபெரும் யாகம் நடத்தினார். யாகத்தின் முடிவில் அரசன், தன் மகள் சாந்தாவை கலைக்கோட்டு முனிவருக்கு மணமுடித்து வைத்தார். முனிவரின் வருகையால் அங்க நாட்டில் தொடர்ந்து மழை பெய்து செழித்தது
உலகம் என்றால் இன்னதென்று அறிந்து கொண்டு, நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருந்த முனிவர், சுக வாழ்வு வாழ்ந்தார். அந்நாடு என்றும் செழித்திருந்தது
ரிஷ்ய சிருங்கரை வரவழைத்து, தசரதச் சக்கரவர்த்தி, புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார்.
யாகஇஷ்டியில் ரிஷ்ய சிருங்கர் பிரதான ஆஹுதி செய்தார்.
அதன் பயனாக, பிரம்மதூதன் தோன்றியதும், திவ்யபாயஸம் வழங்கியதும், புத்திர பாக்யம் பெற்றதும், இராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கனன் ஆகிய நால்வர் அவதரித்ததும் இராமாயண காவியம் தெரிவிக்கிற செய்திகளாகும்.
அவ்வண்ணமே பெரும் சிறப்புகள் உடைய ரிஷ்ய சிருங்க முனிவர் என்னும் கலைக்கோட்டு மாமுனிவர், தென்திசை வந்து, தங்கி, பல ஆண்டுகள் தவம்புரிந்து புனிதமாக்கிய புண்ணிய பூமியே, ரிஷ்யசிருங்கபுரம் என்னும் சிருங்ககிரித் தலமாகும். அதுவே சிருங்கேரி.
ஞாலத்தில் சீலத்தை நெஞ்சத்தில் வளர்க்கிற வனப்பகுதி வராஹபர்வதம். விருக்ஷங்கள் சூழ்ந்த பகுதி.
இந்த இடம்தான் கங்கை மூலத்தில் உற்பத்தியாகிற துங்கா நதியின் தோற்றுவாயாகும்.
துங்கா நதியின் கிளைநதியான நந்தினி நதி பாய்ந்தோடுகிறது.
ஜாபாலி முனிவரால் நந்தினி பூவுலகில் நதியாகப் பிறந்தாள். இந்திரன், ஜாபாலி மற்றும் முனிபுங்கவர்களின் யாக வேள்விகளுக்காக, காமதேனுவின் மகளான நந்தினி நதியாகப் ஆனாள். 'மருகாலி' என்று பண்டைய நாளில் அழைக்கப்பட்ட பகுதியாகும்.
இங்கேதான் தவம்புரிந்து தவத்திலே ஒன்றிவிட்டார் ரிஷ்யசிருங்கர்.
விபாண்டக முனிவர் தம் புத்திரரான ரிஷ்ய சிருங்கருக்கு
மஹா ஸரஸ்வதியின் ஸரஸ்வதி மஹாமந்திரோபதேசம்
உபதேசித்த இந்த
உன்னதமான மேருகிரியான இந்த சிருங்ககிரித்தலம் ஸரஸ்வதி ஆகர்ஷணபூமியாகும்.
திரேதாயுகத்தின் பெருமுனிவர்
ரிஷ்ய சிருங்கர், துங்காநதி மூலஸ்தானத்தில், மலைகளின் கீழ்ப்பகுதியில், காடுகளின் கீழே உள்ள மருகாலியில் முழுமையான பூர்ணமான தவயோகத்தில் ஆழ்ந்து மூழ்கினார்.
நிறைநிலைத்தவம் பரிபூரணமாகி, ஜோதி மயமாகத்தோன்றி, லிங்கத்துடன் ரிஷ்ய சிருங்க அருட்ஜோதி ஐக்கியமாகி, சிங்கேஸ்வரத் திருவாய், கோவில் கொண்ட இடமே ரிஷ்யசிருங்கர் ஆலயமாக உருவாகியது.
இரு கொம்புகளுடன் ஸர்ப்பபூஷணமாக லிங்கத்தின் வடிவில் அருள் பாலிக்கிறார் ரிஷ்ய சிருங்கர்.
யுகங்கள் மாறினாலும் ரிஷ்யசிருங்கர் ஆலயத்து அடிப்படைத் தன்மைகள் மாறவில்லை.
பித்தர்களும் ஞானச் சித்தர்களும் இங்கே உறைந்து உன்னதம் சேர்த்துள்ளார்கள்.
No comments:
Post a Comment