Thursday, January 13, 2022

Story of Jayadeva

ஜெயதேவரின் கீத கோவிந்தம் - நங்கநல்லூர் J K SIVAN  
3. யார் இந்த ஜெயதேவர்?

ஒரு முக நூல் நண்பர் சமீபத்தில் என்னைக் கேட்ட கேள்வி:'' ஜெயதேவரைப் பற்றி எழுதுகிறீர்களே அவர் யார்?''ஆகவே சுருக்கமாக ஒரு விருத்தாந்தம்.

ஆதியிலிருந்து எது எப்படி தோன்றியது? கிருஷ்ணாவதாரம் எடுத்த மஹா விஷ்ணுவே கலியுகத்தில் பக்தியை பெருக்க, சுகபிரம்ம ரிஷியை கபீர் தாசராகவும், உத்தவ ரிஷியை நாமதேவராகவும், வால்மீகியை துளசிதாசராகவும், வியாசரை ஜெயதேவராகவும், சிவபெருமானை ஜூனகாத்தில் நார்சி மேத்தவாவும், தானே ஞானதேவராகவும் அவதாரம் எடுத்தவர்கள் என்று பக்த விஜயம் சொல்கிறது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. என் தாய் ஜம்பாவதி அம்மாள் ஒரு பழைய ஓலைச்சுவடி போன்ற பழைய புத்தகம் வைத்திருந்தாள் . அதன் மேல் நிறைய சந்தன குங்குமம். பழுப்பான நிறத்தில் அதன் பக்கங்கள் கொஞ்சம் மடக்கினால் அப்பளம் மாதிரி நொறுங்கும். அவள் கண்ணில் படாமல் அந்த புத்தகத்தை புளி ஜாடி பின்னாலிருந்து எடுத்து ( அங்கு தான் என் கை படாமல் உயரே வைப்பாள்) . அந்த புத்தகத்தின் பக்கங்களை மடக்கி அது படக் என்று ஓடுவதை பார்ப்பதில் ஒரு சந்தோஷம் அடைந்திருக்கிறேன். (சிறுவயதில் தப்பு செயது விட்டேன் அம்மா. என்னை மன்னித்து விடு) நிறைய பேர் வீடுகளில் இது போன்ற பழம் புத்தகங்கள் இன்னும் இருக்கலாம். அவற்றை போற்றி பாதுகாக்க வேண்டும்.

மேலே சொன்ன அவதாரங்களை பற்றி அங்கங்கு என்னுடைய ''தெவிட்டாத விட்டலா'' புத்தகத்தில் தமிழிலும் ''VITOBA THE NECTAR '' ஆங்கில புத்தகத்திலும் பல கதைகளுக்கு நடுவே தெரியப்படுத்தி யிருக்கிறேன். எவ்வளவு உயர்ந்த மஹா புருஷர்கள் நமது பாண்டுரங்கன் கதைகளில் உலா வந்து நம்மை மகிழ்விக்கி றார்கள் என்று அறியும்போது ஆனந்த பெருக்கில் கண்ணீர் வடிகிறது.

ஜெயதேவர் ஒரு ஒரிஸ்ஸா தேச பிராமணர். கல்வி கேள்விகளில் சிறந்து கிருஷ்ணனின் மீது அலாதி ப்ரியம் கொண்டு ராதையும் கிருஷ்ணனும் ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட அதி உன்னத பிரேமையை அருமையான மனம் கவரும் ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களாக எழுதினார். அதற்கு ''கீத கோவிந்தம்'' என்ற பெயர் கொடுத்தார். ஒரு காரண்டீ விஷயம் சொல்கிறேன். அதைப்படித்து அனுபவித்தவர்கள் பிருந்தாவனத்தில் கண்ணன் இருந்த காலத்துக்கே கொண்டு செல்லப்படுகிறார்கள். அந்த ஸ்லோகங்கள் காந்த சக்தி கொண்டவை.

அந்த காலத்தில் ஒரிசாவுக்கு ஒரு ராஜா இருந்தான். பெயர் சாத்விக். பூரி ஜகன்னாதர் மீது அபார பக்தி.. அவன் ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தத்தை படித்து விட்டு தானும் ஒரு புத்தகம் அதே போல் எழுதினால் என்ன என்று யோசித்து கஷ்டப்பட்டு ஒரு புத்தகம் எழுதினான். அதற்கு நிறைய பிரதிகள் எடுத்தான். எல்லோரும் இதை படியுங்கள் என்று கொடுத்தான். ராஜாவின் புத்தகமாச்சே. படிக்காவிட்டால் தலையை வாங்கிவிடுவானே. எனவே தலையை காப்பாற்றிக் கொள்ள தலை எழுத்தே என்று படிக்கவேண்டும். ஊரில் இருந்த அனைத்து பக்திமான்களும் விசனம் அடைந்தார்கள். அதைபடித்தவர்கள் இது எப்படி கீத கோவிந்தத்துக்கு சமமாகும்? கழுதையும் குதிரையும் ஒன்றாகுமா? என்று வருத்தமடைந்தார்கள். வெளியே சொல்ல முடியுமா. தலை தப்பாதே.

ராஜாவோ விடாமல் தனது புத்தகத்திற்கு முதல் மரியாதையும் மதிப்பும் தேடினான்.

(சாதாரண ஆள் நான் புத்தகம் எழுதி அதனால் உண்டாகும் தொந்தரவே படிக்கும் உங்களுக்கு பொறுக்க முடியவில்லையே. அதிகாரத்தையும் கூர்மையான வாளையும் கையில் வைத்துக் கொண்டு ராஜா புத்தகம் எழுதி, எல்லோரும் படியுங்கள் என்றால் .....!!!)

அவன் தொந்தரவு தாங்கமுடியாமல் போக அனைத்து பண்டிதர்களும் பக்தர்களும் ஒருநாள் ராஜாவின் சபையில் நுழைந்தனர்.

'' ராஜா நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தத்துடன் உங்கள் புத்தகம் போட்டி போட முடியாது..''

அவர்களுடைய நல்ல நேரம். ராஜாவுக்கு கொஞ்சம் நல்ல புத்தி இருந்த வேளை அது. கோபப்படவில்லை அவன். 

"ஏன் நானும் தானே அந்த ஜகந்நாதனை பணிந்து புகழ்ந்து எழுதியுள்ளேன் எந்த விதத்தில் என் புத்தகம் கீத கோவிந்தத்துக்கு சமம் ஆகாது?" என்றான் சாத்விக். எல்லோரும் நிறைய பேசி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். 
''இந்த விஷயத்தில் ஜகன்னாதனே முடிவெடுக்கட்டும்''

"ஜெகந்நாதா, நீயே முடிவு செய். ஜெயதேவர், ராஜா , ஆகிய ரெண்டு பேர் எழுதிய புத்தகங் களையும் உன் சந்நிதியில் இன்று இரவு வைத்து கர்ப்ப கிரகம் பூட்டி விடுகிறோம். நாளை காலையில் எந்த புத்தகம் உயர்ந்ததோ அது உள்ளே இருக்கும். மற்றதை ஜகந்நாதா நீயே கர்பக்கிரஹத்துக்கு வெளியே எறிந்து விடு"

இரவு அவ்வாறே ஜெயதேவரின் கீதகோவிந்தமும் ராஜா எழுதிய புத்தகமும் ஜெகந்நாதன் முன் வைக்கப்பட்டது. பூஜை எல்லாம் முடிந்து கர்பகிரஹம் பூட்டப்பட்டது மறுநாள் காலையில் ராஜா உட்பட அனைவரும் ஆவலாக கோவிலில் நின்றனர். கர்பக்ரஹத்தின் வாசலுக்கு வெளியே ராஜாவின் புத்தகம் கிடந்தது . பூட்டைத் திறந்ததும் பாண்டுரங்கன் கையில் கீதகோவிந்தம் இருந்தது. ராஜா சாத்விக் ஜெகந்நாதனிடம் முறையிட்டான்.

"ஜெகன்னாதா, நானும் உன் பக்தன். நானும் உன்னைத் தானே பாடினேன். எப்போது என் பக்தியை நீ ஏற்கவில்லை என்று தெரிந்துவிட்டதோ, நான் இனி உயிர் வாழ்ந்து பயனில்லை'' என்று தனது உடைவாளை உருவினான்.

''சாத்விக் , என்ன அவசரம் உனக்கு? அவசரக்குடுக்கையே, நிதானமாக கேள். உன் பாடலில் எனக்கு பிடித்ததை ( 24 ஸ்லோகங்க ளை ) நான் ஏற்கனவே ஜெயதேவரின் கீத கோவிந்தத்தில் சேர்த்து விட்டேனே" என்று சிரித்தான் கிருஷ்ணன் . ராஜா மகிழ்ந்தான். ஜெயதேவரின் பெருமையை உணர்ந்து அடி பணிந்தான் அவருடைய சிஷ்யனானான்

அந்த ஊரில் ஒரு பிராமணனுக்கு ஒரு அழகான பெண் இருந்தாள். அவள் பெயர் பத்மாவதி. பிராமணர் பாண்டுரங்க பக்தர். தன் பெண் விட்டலனையே மணக்க வேண்டும் என்ற வெறி அவருக்கு வந்து எத்தனை ஜாதகங்கள் வந்த போதும் நிராகரித்தார் நிறைய பணம் கொடுக்கி றேன் என்று பெண் கேட்க வந்தவர்களையும் விரட்டினார்.

இப்படி விஷயம் முற்றுவதை உணர்ந்த விட்டலன் ஒருநாள் அவர் கனவில் வந்து "ஓய், பிராமணரே இந்த கலியுகத்தில் எனக்கு விருப்பமான ஒருவருக்கு உமது பெண்ணை மண முடியும்" என்று அருளினபிறகே அவர் விழித்து கொண்டார். விட்டலன் குறிப்பிட்டது ஜெயதேவரை. 
 பிராமணர் ஜெயதேவரைத் தேடி கண்டுபிடித்தார். அவரை பார்த்ததுமே ஒரு கணம் அந்த கிருஷ்ணனே அவர் முன் தோன்றுவதாக பட்டது. யோசனை பண்ணாமல் ஜெயதேவருக்கு சம்பந்தம் பேசி அந்த பெண் ஜெயதேவர் மனைவியானாள்.
தொடரும்  

No comments:

Post a Comment