ராவணனுக்கு தன்னுடைய புஜ பல பராக்கிரமத்தின் மேல் அப்படியொரு கர்வம். தன்னை வெல்ல மூன்று உலகிலும் யாரும் இல்லை என்ற ஆணவம். அதனால் எப்போதும் யாருடனாவது வம்பிழுப்பதே அவனுடைய வேலை. அன்றும் அப்படித்தான். அவனுடைய பார்வை பாதாளலோகத்தின் மேல் பாய்ந்தது.
முடிவெடுத்த நொடி, இலங்கையிலிருந்து இராவணனின் படை பாதாளலோகம் நோக்கிப்புறப்பட்டது. பாதாளலோகத்தை ஆண்டு வந்த மஹாபலிச்சக்கரவர்த்தி பிரஹலாதனின் வழிவந்தவர். மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் ஒரு அவதாரமான ஸ்ரீநரசிம்ஹமூர்த்தி, இரண்யனை வதம் செய்த போது, தன் அருகில் இருந்த குழந்தை பிரஹலாதனை அழைத்து, "இனி உன் தலைமுறையில் யாரையும் நான் கொல்லமாட்டேன்" என்ற வரத்தை தந்தார்.
அதனால் தான், எம்பெருமான் வாமன அவதாரம் நிகழ்த்தியபோது, பிரஹலாதனின் வழித்தோன்றலான மஹாபலிச்சக்கரவர்த்தியை சம்ஹாரம் செய்யாமல், அவரைப் பாதாளலோகத்துக்கு அரசனாக்கி வைத்தார். மேலும், தானே அப்பாதாளலோகத்தைக் காவல் காப்பதாகவும் அருள் புரிந்தார்.
எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனே காவல்காத்து நிற்கும் பாதாளலோகத்துக்கு தன் படைகளுடன் வந்த இராவணன், வாசலில் காவல் நிற்கும் எம்பெருமானைப்பார்த்து, "மஹாபலியைக் காண இலங்கேஸ்வரன் வந்திருக்கிறேன் என்று போய்ச்சொல்" என்று திமிராக விரட்டினான்.
எம்பெருமானும் மஹாபலியிடம் அனுமதி பெற்று இராவணனை உள்ளே அனுப்பினார்.
இராவணனை வரவேற்ற மஹாபலி , "இராவணா. என்னோடு நீ சண்டையிடுவதற்கு முன் அதற்கான தகுதி உனக்கு இருக்கிறதா? என்று நான் ஆராய்ந்து பார்க்கவேண்டும், முதலில் அதோ அங்கிருக்கும் பொருளைத் தூக்கிக்காட்டு.. அவ்வாறு அப்பொருளை நீ தூக்கிவிடும் பட்சத்தில் நான் உன்னோடு சண்டைக்கு வரத் தாயாராக இருக்கிறேன்" என்றார்.
அதில் அப்படி, என்ன இருக்கிறது என ராவணன் ஆச்சரியத்தோடு கேட்க,
"அது ஒன்றுமில்லை இராவணா..
முன்பு ஒருமுறை எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன், நரசிம்ஹ அவதாரம் எடுத்து என்னுடைய பாட்டனாராகிய இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தாரல்லவா! அப்படி சம்ஹாரம் செய்யும் முன்பாக, இரண்யகசிபுவைத் தன் தலைக்கு மேலாக உயர்த்திப் பிடித்துப் பலமுறை பலசுற்று சுற்றினார் ஸ்ரீநரசிம்ஹமூர்த்தி..
அவ்வாறு சுற்றியபோது, என் பாட்டானார் காதில் அணிந்திருந்த கடுக்கனின் ஒருபகுதி கீழே தெரித்து விழுந்துவிட்டது. என் பாட்டனார் நினைவாக அதனைப் பத்திரப் படுத்தி வைத்திருந்தேன். அதைத்தான் தற்போது உன்னைத் தூக்கச் சொன்னேன்" என்று சொன்னார் மஹாபலி.
இதைக் கேட்டதும் இராவணன் பயத்தில் வெலவெலத்துப் போனான். தன்னுடையப் படைகளைக் கூட்டிக்கொண்டு இலங்கைக்கு ஓட்டம் பிடித்தான்.
ஸ்ரீமந்நாராயணன் நரசிம்ஹ அவதாரம் எடுக்கப் புறப்பட்ட காலத்தில், அவரோடு கூடவே அவரது திவ்ய ஆயுதங்களான சங்கும், சக்கரமும் புறப்பட்டன. அவைகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்த ஸ்ரீநரசிம்ஹ மூர்த்தி, "இப்போது நான் எடுக்க இருப்பது புதுமையான அவதாரம். இந்த அவதாரத்தில் எனது நகக்கண்களே எனக்கு ஆயுதம்" என்றார்.
இரண்யகசிபு அணிந்திருந்த கடுக்கனின் ஒருபகுதியின் வலிமையே இப்படியென்றால் இரண்யகசிபுவின் வல்லமை எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும் ? அப்படியான இரண்யனின் உடலைத் தன் மடியிலே கிடத்தி, தன் விரல் நகத்தினாலே கீறி, அவனை சம்ஹாரம் செய்தார் நரசிம்ஹ மூர்த்தி. அவரின் இந்த பலத்தைக் கண்டு தேவர்களெல்லாம் "அகோபலம்.. அகோபலம்." என்று சங்கநாதம் முழங்கினார்கள்.
அப்பெயரே பின்னாளில் அஹோபிலம் என்னும் திவ்யதேசத்தின் திருப்பெயராக மாறியது. அந்த கருணாமூர்த்தியின் திருப்பாதங்களை சரணடந்தவர்களை தீவினைகள் நெருங்காது...
No comments:
Post a Comment