Tuesday, May 4, 2021

Atma pancakam of Adi shankaracharya

ஆதி சங்கரர் 

ஆத்மா பற்றி பஞ்ச ரத்னங்கள் - நங்கநல்லூர் J.K. SIVAN

சங்கரர் நமக்கு புரிவாரா? ஐந்து வருஷங்களுக்கு முன்பு இப்படி கேட்டிருந்தால் சத்தியமாக இல்லை. மணி சங்கரய்யர் தான் புரிகிறார் என்றிருப்பேன். நான் இப்போது சுனாமியாக மாறிவிட்டேன். ஆன்மிகம் என்னை ஆட்கொண்டுவிட்டது. அதில் திளைக்கிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது 18 மணி நேரம் ஈடுபாடு. துளியும் களைப்பு தரவில்லை. உற்சாகமளிக்கிறது. எனக்கு பேனாவோ, பால் பாய்ன்ட் பேனாவோ பிடித்து எழுதும் பழக்கம் போயே போய் விட்டது. என்றைக்கு இந்த கம்ப்யூட்டரில் இங்க்ளிஷில் எழுதி அது தமிழாக வருகிறதை என் மகன் சொல்லிக் கொடுத்தானோ, அன்று எனக்கு மறுபிறவி. அது முதல் நான் வேறு உலகில் சஞ்சரிக்கிறேன். சுகானுபவம், சந்தோஷம் விடாமல் தொடர்கிறது. எனக்கு இங்க்ளிஷில் டைப் அடிக்க வரும். பல வருஷ அனுபவம். அதனால் என் மன அலைகளை, அசைவுகளை அப்படியே எளிதாக அவ்வப்போது தமிழிலும் வெளிப்படுத்த முடிகிறது. சுலபமாகவும் இருக்கிறது. என் உலகமே இது தான். ஆங்கிலத்தில் நான் வெளிப்படுத்தும் எண்ணங்கள் எனக்கே ஆச்சர்யமளித்து தமிழாக என் கண் முன்னே தோன்றினால் பின் எப்படி இருக்கும்?

கம்ப்யூட்டரில் வேண்டிய அளவுக்கு கண்ணை உறுத்தாமல் பெரிய எழுத்தில், நிறைய படிக்க முடிகிறது. சிலவற்றை எடுத்துச் சொல்லவேண்டும் என்கிற ஆசையில் நான் எப்படி புரிந்து கொள்கிறேனோ, அப்படியே குட்டி குட்டி வாக்யத்தில், மூலத்திலிருந்து பிறழாமல் மூளையை கசக்கி தொந்தரவு பண்ணாமல் சொல்ல முடிந்தால் அது போதுமே. இது தான் நான் எதையும் எதிர்பாராமல் தாராளமாக எல்லோருக்கும் என்னால் செய்ய முடிந்த சேவை. இது யாரேனும் ஒருவருக்காவது திருப்தி அளித்தால் என் முயற்சிக்கு தக்க பரிசு கிடைத்ததாக என் மனது மகிழும்.
ஆதி சங்கரரின் ஆத்ம பஞ்சகம் வாசிக்கும்போது பிடித்தது. உடனே எழுதினேன். முன்பு ஒருமுறை பதிவிட்டதாக ஞாபகம். . அடிக்கடி படிக்க வேண்டிய விஷயம் தான். சில நல்ல சமாசாரங்களை, மஹா பெரியவா பற்றியது போன்றவை, எத்தனை தடவை, யார் யாரோ சொன்னாலும் கேட்க ருசியாகத்தான் இருக்கிறது அல்லவா?. இது இன்னும் கொஞ்சம் '' மஹா மஹா '' பெரியவா சொன்னது. ஆதி சங்கரர் எழுதிய ஐந்து ஸ்லோகங்கள். ஆத்மா பற்றி. இதற்குப் பெயர் ''ஆத்ம பஞ்சகம்'' .

ஒரு நாள் சாயங்காலம் வீட்டில் மற்றவர்கள் TV யில் ஒரே ஓசையாக எதையோ பார்ததுக் கொண்டிருக்கும்போது அமைதியாக என் அறையில் கம்ப்யூட்டரில் ஆதி சங்கரர், அவருடைய ஆத்ம பஞ்சகம் , நான் மூன்றே பேர் இருந்தோம்.
சந்தோஷம் என்பது நாலு பேருடன் பகிர்ந்து கொண்டால் தானே அது இன்னும் அதிகமாகும். எனவே தான் நான் படித்து மகிழ்ந்த இந்த சிறு எண்ண பிரதிபலிப்பை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்:

नाहं देहो नेन्द्रियाण्यन्तरंगं
नाहंकारः प्राणवर्गो न बुद्धिः
दारापत्यक्षेत्रवित्तादिदूरः
साक्षी नित्यः प्रत्यगात्मा शिवोऽहम् ॥१॥

நாஹம் தேஹோ நேந்திரியன்யந்தரங்கம் நாஹம்கார பிராணவர்கான புத்தி ,தாராபத்ய க்ஷேத்ர விஹதி தூர சாக்ஷி நித்ய பிரத்யாகாத்மா சிவோஹம்: 
தேஹாத்ம புத்தி என்பார்கள். சிவா என்று கூப்பிட்டால் திரும்பி பார்க்கிறேன் இந்த உடம்பு சத்தியமாக நான் இல்லை. இந்த தேகத்தை தான் நாம் ஆத்மா என்று தப்புக் கணக்கு போடுகிறோம். தெரிந்தும் போடுகிறோம். தெரியாமலும் போடுகிறோம். பஞ்ச இந்திரியங்களும் ஆத்மா இல்லை. இன்னும் சொல்லப் போனால் நமது புத்தியும் ஆத்மா இல்லை. விடுகிறோமே மூச்சு. பிராணன். அதுவும் ஆத்மா இல்லை. நான் சிவம் எனும் ஆத்மா.

 குப்பு ராவ் கடைசி மூச்சை விட்டு கட்டையாகி விட்டார். கும்பல் வீட்டில் சேருகிறது. பிராணன் போய் விட்டது என்கிறோமே தவிர ஆத்மா போய் விட்டது என்றா சொல்கிறோம்?. அவரை ஒரு நல்ல ''ஆத்மா'' என்கிறோமே. ஆகவே ஏதோ கொஞ்சம் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் அல்லவா? அதை விஸ்தாரமாக புரிந்துகொள்ள முயலவில்லை. அஹங்காரமும் ஆத்மா இல்லை. பின் எது ஐயா ஆத்மா என்பது? எதுவா? பிள்ளை, பெண் டாட்டி, வீடு வாசல் சொத்து சுதந்திரம் எல்லாவற்றுக்கும் அப்பால் தள்ளி ஒரு சாட்சியாக தூரத்திலிருந்து ஏதோ ஒன்று எந்த சம்பந்தமும் இல்லாமல் வேடிக்கை பார்க்கிறதோ அது தான் ஆத்மா. அடுத்த தெருவில் ஒரு பெரிய மாளிகை வீடு ஒரு செட்டியார் கட்டியிருப்பதை பார்க்கும்போது அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அதுபோல் இந்த உடம்பையும், மற்ற உறவையும் கிட்டே சேர்க்காமல் வைத்துக்கொள்வது. கொஞ்சம் புரிந்ததா?  

रज्ज्वज्ञानाद्भाति रज्जुर्यथाहिः
स्वात्माज्ञानादात्मनो जीवभावः।
आप्तोक्त्या हि भ्रान्तिनाशे स रज्जु-
र्जीवो नाहं देशिकोक्त्या शिवोऽहम् ॥२॥
ரஜ்ஜ்வகணாத் பாதி ரஜ்ஜயூர்யாஹி ஸ்வாத்மா ஞாநாத் ஆத்மனோ ஜீவா பாவ ஆப்தோக்த்ய ஹி பிராந்தி நாசே ஸ ரஜ்ஜுர் ஜீவோ நாஹம் தேஸிகோக்த்யா சிவோஹம்  
என் வீட்டுக்கு பக்கத்தில் சுவற்றின் மேல் தெரு வழியாக அசைந்து அசைந்து ஒரு ஐந்து அடி நீளத்தில் ஒரு நாகம். ஆஹா. நெளிந்து கொண்டு இருக்கிறது என் வீட்டின் உள்ளே போக பார்க்கிறது. ஐயோ என்று கத்தி நடுங்குகிறேன். வியர்த்து, மார்பு படபடவென்று துடித்து பாதி உயிர் போய் விட்டது. யாரோ ஒரு தைரியசாலி என் அலறல் கேட்டு டார்ச் எடுத்துக் கொண்டு கையில் ஒரு பெரிய மூங்கில் தடி. அருகில் தைர்யமாக சென்று பார்த்து அதை கையில் எடுத்து அது ஒரு பிளாஸ்டிக் தோரண கயிறு என்று காட்டியதும் என் உயிர் வந்தது.
பாம்பு எங்கே போய் விட்டது?. பிரதி பாசிகம் என்பது சமஸ்க்ரிதத்தில் ஒன்றை மற்றொன்றாகவே கண்டு உணர்வது. அரை இருட்டில் பளபள வென்று எவனோ கட்சி தலைவன் பிறந்த நாளுக்கு கட்டிவிட்டு போன ஒரு பளபள பிளாஸ்டிக் தோரணக் கயிறு சுவர் ஓரமாக காற்றில் ஆடி அசைந்து பாம்பாக மாறி என்னை பயமுறுத்தி, கடைசியில் அது பிளாஸ்டிக் கயிறு மட்டுமே என மிஞ்சியது. பயமும் போனது இது பாம்பு இல்லை என்ற ஞானம் வந்ததால். அது போல் உயிரற்ற உடம்பை உயிர் என்று கருதுகிறோம். மகா பெரியவா போன்ற ஒரு ஞானி, குரு, நமக்கு புரியும்படியாக ''சுவாமி உங்க உடம்பு ஆத்மா இல்லை'' என்று உணர்த்தினால் தான் பாம்பு கயிறாகும்.
இப்படி தட்டி எழுப்பின பிறகு தான் என்னுள் இருப்பது ஜீவன் அல்ல அந்த சிவனே என்று அந்த ஞானி, குரு, சொல்லிக் கொடுப்பது புரியும். அப்பறம் என்ன?. சதா ஆனந்தம் எனும் சிவம் நான். 

आभातीदं विश्वमात्मन्यसत्यं
सत्यज्ञानानन्दरूपे विमोहात् ।
निद्रामोहात् स्वप्नवत् तन्नसत्यं
शुद्धः पूर्णो नित्य एकः शिवोऽहम् ॥३॥
ஆபாதீதம் விஸ்வமாத்மன்ய சத்யம் சத்ய ஞாநானந்த ரூபே விமோஹத் நித்ரா மோஹாத் ஸ்வப்னாவைத் தன்ன சத்யம் சுத்த பூர்ணோ நித்ய ஏக சிவோஹம் 

காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். இந்த உலகமே என்றும் சாஸ்வதம். இந்த பூலோக வாழ்க்கை அழிவற்றது என்ற எண்ணங்கள் திரையாக ஒரு உண்மையை மூடி மூடி மறைக்கின்றன. அதனால் எது அழிவற்றது, உண்மையானது, நிரந்தரம்? என்று தெரியவில்லை. உறக்கத்தில் காணும் எல்லாமே வெறும் கனவுத் தோற்றம். நிஜம் மாதிரியே இருக்கும். ஆனால் அது பொய். அநித்யமானது. எது சுத்தமோ, எது பூரணமானதோ, எது ஒன்றேயோ, அது தான் என்னுள் உறையும் சிவம் என்கிற 'நான்'. சட்டை மூக்குக் கண்ணாடி போட்டுக்கொண்டிருக்கும் இந்த உடம்பல்ல.

मत्तो नान्यत् किञ्चिदत्रास्ति विश्वं
सत्यं बाह्यं वस्तुमायोपक्लिप्तं ।
आदर्शान्तर्भासमानस्यतुल्यं
मय्यद्वैते भाति तस्माच्छिवोऽहम् ॥४॥
மத்தோ நான்யத் கிஞ்சித் அத்ராஸ்தி விஸ்வம் சத்யம் பாஹ்யம் வஸ்து மாயோபாக் லிப்தம் ஆதர்ஸாந்தர் பார்ஸமானஸ்ய துல்யம் மய்யத்வைதே பாதி தஸ்மாத் சிவோஹம் 
எங்கும் பரவி இருக்கும் இந்த உலகம், நானே தவிர வேறில்லை. மாறிக்கொண்டே இருக்கிறதே. மாற்றம் என்றால் என்ன?. கண்ணாடி தனக்கு எதிரே இருக்கும் அசையும் அசையா வஸ்துவை அப்படியே காட்டுவது போல் தான் இந்த உலகமும் நம்மை பிரதிபலிக்கிறது. எதிரே ஒன்று இருந்து, அது மறைந்து வேறொன்றாக காட்சி அளிப்பது தானே மாற்றம். நானும் அப்படித் தானே. ஐந்து வயது நான், இருவது வயது நானில்லை, நாப்பது வயது நான் இப்போதிருக்கும் எண்பத்திரெண்டு வயது நான் கிடையாது. ஆனால் ஐந்து வயதிலிருந்து 82 வயது வரை மாறி மாறி தோன்றும் எல்லாமே நான் தான். அப்போ எல்லாத்திலும் உள்ள சிவனும் நான், நானே தான் எல்லாத்திலும். எல்லாம் ஒண்ணே--- தலை சுற்றுகிறதா? பொறுமை. பொறுமை. மெதுவாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். சுப்பிரமணி கத்தியை கையில் எடுத்துக் கொண்டு அப்பறம் என்ன செய்தான் என்று தெரிந்து கொள்ள இது ஒரு கதை அல்ல.

नाहं जातो न प्रवृद्धो न नष्टो
देहस्योक्ताः प्राकृताः सर्वधर्माः।
कर्तृत्वादिश्चिन्मयस्यास्ति नाहं-
कारस्यैव ह्यात्मनो मे शिवोऽहम् ॥५॥
நாஹம் ஜாதவ் ந ப்ரவ்ருதோ ந நஷ்டோ தேஹ ஸ்யோக்தா ப்ராக்ருத சர்வ தர்மா கர்த்ருத்வாதிஸ் சின்மய ஸ்யாஸிதி நாஹம் காரஸ்யைவ ஹ்யாத்மனோ மீ சிவோஹம் 
அப்படி என்றால், நான் பிறக்கவில்லை, வளரவில்லை, இறக்கவில்லையா? என்ன சார் ? நான் தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே. இந்த உடம்பு நான் இல்லை என்று. உடம்பு தானே இந்த மாறுதல்களை எல்லாம் அடைகிறது. எல்லாம் இந்த உடல் தான் சார். அது தான் நான் இல்லையே! . நான் கல்கத்தாவுக்கு ரெண்டு மணியிலே வரேன் என்று சொல்கிறேனே. நானா பறந்தேன்? ஏதோ ஒரு ஏரோப்ளேன் என்னை தூக்கிக் கொண்டு போய் சேர்த்தது. ப்ளேன் வந்துது என்றா சொல்கிறேன். நான் வந்தேன் என்று தானே என் வாயில் வார்த்தை வருகிறது. அது போல் என்னைத் தாங்கி நிற்கும் இந்த உடம்புக்கு தான் எல்லா மாற்றங்களும். இதில் அஹங்காரம் குடி கொண்டு இருந்தால் அது எனதில்லை. பெருமை, கர்வம்..ஹுஹூம். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் தான் பேரிலும் உள்ளேயும் சிவனாயிற்றே. (அப்பா, நீ எனக்கு இந்த பேர் வச்சதுக்கு நான் பல ஜென்மத்தில் உனக்கு கடமைப்பட்டிருக்கிறேன்). ''நான்'' கண்ணுக்கு தெரியாமல் உள்ளே ஆட்டி வைக்கும் ஆத்மா சார். அதுக்கு எதோடும் அட்டேச்மென்ட் இல்லையே.

नाहं जातो जन्ममृत्यू कुतो मे
नाहं प्राणः क्षुत्पिपासे कुतो मे ।
नाहं चित्तं शोकमोहौ कुतो मे
नाहं कर्ता बन्धमोक्षौ कुतो मे ॥६॥ நாஹம் ஜாதவ் ஜென்ம ம்ருத்யு குதோ மே நாஹம் ப்ராண க்ஷுத் பிபாஸே குதோ மே நாஹம் சித்தம் சோக மொஹௌ குதோ மே நாஹம் கர்த்தா பந்த மோக் குதோ மே  

மறுபடியும் நான் உரக்க சொல்கிறேன் அப்பவாவது புரிகிறதா பார்க்கிறேன். நான் தான் பிறக்கவில்லையே. குழந்தையாக பிறந்தது இந்த என் உடல் தானே. அப்படியென்றால், எங்கேயிருந்து பிறப்பு, அதை தொடர்ந்து இறப்பு? நான் தான் இந்த உடலின் ஜீவன் இல்லையே, எங்கேயிருந்து பசி, தாகம் ? நான் தான் மனம் இல்லையே, இந்த கோப தாப துக்க சந்தோஷ உணர்ச்சிகள் எங்கே இருந்து, எப்படி என்னை அணுகும்?
நான் தான் எதையும் பண்ணவில்லையே எங்கேயிருந்து இந்த சொந்த பந்த பாசம் நேசம் எல்லாம் எனக்கு.? சார் நான் ஆத்மா. இதெல்லாம் கடந்தவன். எனக்கு நிஜமாக பெயரோ, வயதோ, ஆண்பால் பெண்பாலோ, உருவமும் பசி தாகம் எதுவுமே கிடையாதே. நான் தான் உண்மையில் ''அந்த சிவன் '' .

'யாராவது இன்னொருவர் ஆதி சங்கரரைப் போல மீண்டும் பிறக்கமாட்டாரா? வாரி வாரி இன்னும் நிறைய அற்புத விஷயங்களை தரமாட்டாரா ? ''
இதைக் கேட்டு சங்கரர் சொல்வது காதில் விழுகிறதா?

''ஏண்டா, நீ என்ன பேசறே? ஏற்கனவே நான் கொடுத்ததெல்லாம் படிச்சுட்டியா ? படிச்சாலும் புரிஞ்சிண்டிட்டியா? நான் 32 வயசிலே உனக்கு கொடுத்ததே இன்னும் பத்து ஜன்மத்துக்கு நிறைய இருக்கே. புதுசா என்னை மாதிரி இன்னொருத்தரா? அவர் வேறே எழுதணுமா? போ. போ, முதல்லே நான் எழுதினதை படிச்சிட்டு அப்புறம் பேசு. படிச்சா தான் பேசவே மாட்டாயே . அப்படியே ஆனந்த சாகரத்தில் அமிழ்ந்துட்டா பேச்சு எங்கிருந்து வரும்?''

No comments:

Post a Comment