குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும்
தலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி
நிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே **
பெரிய திருமொழி 9. பெடையடர்த்த.....(1535)
பொருள்: இளைய பாக்கு மரங்களில், பழுத்தும், பசுமையுமாகக் காய்த்தும் குளுங்கும் காய்களும், பாளை முத்துக்களும் நிறைந்த சோலைகள் சூழப்பெற்ற வளமான திருநறையூரில் மலை போன்று எழில் கொண்ட மணிமாடக் கோவிலில் நிலை பெற்று நிற்கும் திரு நறையூர் நம்பியின் திருப்பாதக் கமலங்களை, நெஞ்சே நீ அடைவாயாக!
பெரிய திருமடலில் , ஆழ்வார் "திருநறையூர் மாமலைமேல் பொன் இயலும் மாடம்" என்றும் அனுபவிக்கின்றார்.
திருநறையூர் – நாச்சியார் கோவில்
மூலவர் – திரு நறையூர் நம்பி, ஸ்ரீநிவாசன், வாஸுதேவன், நின்ற திருக்கோலத்தில் தாயாரை மணம் புரிந்து கொள்ளும் நிலை. கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – வஞ்சுள வல்லி, - நம்பிக்கை நாச்சியார்
தீர்த்தம் – மணிமுக்தா புஷ்கரிணி, ஸங்கர்ஷண தீர்த்தம். ப்ரத்யும்ன தீர்த்தம், அநிருத்த தீர்த்தம், ஸாம்ப தீர்த்தம்.
விமானம் – ஸ்ரீ நிவாஸ விமானம், ஹேம விமானம்
மேதாவி ரிஷியின் வளர்ப்புப் பெண்ணான வஞ்சுள வல்லியை பெருமான் தனது நிலையில் மணந்து கொள்கிறார். (ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்த, புருஷோத்தம, வாஸுதேவ என்ற ஐந்து உருவங்களில்)
இங்கு பெருமானுடைய கல் கருட வாஹனம் மிகப் பிரசித்தி. இந்த ஸ்தலத்தில் நாச்சியாருக்கே முதல் ஸ்தானம். திருமங்கையாழ்வாருக்கு பெருமான் ஸமாஸ்ரயணம் செய்து வைத்த தலம். மார்கழி மாதம் ப்ருஹ்மோத்ஸவம் மிக விமரிசையாக நடைபெறும்.
இப் பெருமாளைத் திருநறையூர் நம்பி என்பர்.
மங்களாசாஸனம் –
திருமங்கையாழ்வார் 1078,1329,1470,1478, 1535,1577,1611,1659,1852,2067,2068,2673(71), 2674(73/133). மொத்தம் 111 பாசுரங்கள்
ஆழ்வார் திருவடிகளே சரணம்!!
No comments:
Post a Comment