Friday, December 4, 2020

Bhagavad Gita adhyaya 1 sloka 37 to 39 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramnujam

கீதாம்ருதம் (தொடர்ச்சி)

37.தஸ்மாத் ந அர்ஹா வயம் ஹன்தும் தார்த்ராஷ்ட்ரான் ஸ்வபாந்தவான்

ஸ்வஜனம் ஹி கதம் ஹத்வா ஸுகின: ஸ்யாம மாதவ

தஸ்மாத்- அதனால், வயம் – நாம் , தார்தராஷ்ட்ரான் ஹன்தும்- துரியோதனாதியரை கொல்வதற்கு ,ந அர்ஹா-தக்கவரல்லர். கதம் – எவ்வாறு, ஸ்வஜனம்ஹத்வா- உறவினரைக் கொன்று , ஸுகின: ஸ்யாம- சுகமாக இருப்போம்?

38. யத்யப்யேதே ந பச்யந்தி லோபோபஹதசேதஸ:

குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்

லோபோபஹத சேதஸ:- பேராசையால் மதியிழந்த , ஏதே- இவர்கள் , குலக்ஷயக்ருதம் தோஷம் – குலத்தை அழிப்பது குற்றம் என்றும், மித்ரத்ரோஹே- நண்பர்களுக்கு , த்ரோஹம் செய்வது , பாதகம் ச – பாபம் என்றும் , யத்யபி ந பச்யந்தி –பார்ப்பதில்லை ஆயினும்,

39. கதம் ந ஞேயம் அஸ்மாபி: பாபாத் அஸ்மாத் நிவர்திதும்

குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபச்யத்பி: ஜனார்தன

அஸ்மாத் – இந்த , பாபாத்-பாவத்திலிருந்து , நிவர்திதும் – விலகுவதற்கு , அஸ்மாபி: நம்மால் , கதம் ந ஞேயம் – ஏன் அறியப்படாமல் இருக்க வேண்டும்?

தர்மம் என்பது சாதாரண தர்மம் விசேஷ தர்மம் என இருவகைப்படும். ஒரு

உயிரைக் கொல்வது பாபம் என்பது சாதாரண தர்மம்,. கொல்லவரும் ஒருவனைக் கொல்லலாம் என்பது விசேஷ தர்மம். உதாரணமாக பொய் சொல்வது பாபம். அதனால் அதர்மம். ஆனால ஒரு உயிரைக் காப்பாற்றப் பொய் சொல்லலாம் என்பது விசேஷ தர்மம். இங்கு பந்துக்களைக் கொல்லலாகாது என்று கூறுவது சாதாரண தர்மம். ஆததாயிகளைக் கொல்லலாம் என்பது விசேஷ தர்மம்.

இங்கு என்ன விந்தை என்றால் எவரைப் பற்றி பீஷ்மர் 'ஆசாரப்ரபவோ தர்மோ தர்மஸ்ய பிரபுரச்யுத:, தர்மம் என்பது சரியான நடவடிக்கை அதன் அதிபதி அச்யுதன்,' (அதாவது, கண்ணன் செய்வதுதான் தர்மம், ) என்று பின்னர் கூறப்போகிறாரோ அவனே எதிரில் நிற்கையில் அர்ஜுனன் தர்மத்தைப்பற்றி அவனிடமே பேசுவது.

விசேஷ தர்மத்திற்கு பகவானே உதாரணம் காட்டி இருக்கிறார், ராமாவதாரத்தில் குருவாக்ய பரிபாலனம் செய்து தாடகையை பெண் என்று பாராமல் கொன்றது, பரசுராமராக பித்ருவாக்ய பரிபாலனம் செய்து தாயைக் கொன்றது, கண்ணனாக பூதனையைக் கொன்றது இவை மூலம் . விபீஷணன் ராவணனை விட்டு விலகியது நெருங்கிய பந்துவாக இருந்தாலும் அதர்மத்தின் துணை போகலாகாது என்ற விசேஷ தர்மத்தைக் காட்டுகிறது.

இனி வரும் ஸ்லோகங்களில் அர்ஜுனன் குலக்ஷயத்தின் விளைவைப் பற்றிக் கூறுகிறான்.

No comments:

Post a Comment