Monday, June 15, 2020

Tamarind tree panchayat-periyavaa

*"பக்தருக்காக பஞ்சாயத்து செய்த பரமாசார்யா"*

புளிய மரத்து நிழல் விவகாரமும், தீர்த்து வைத்த பெரியவாளும்.

பக்தருக்கே தெரியாமல், செய்த பெரியவா.

மன்னார்குடிக்கருகில் ஒரு தடவை மகான் முகாமிட்டு இருந்தார். பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.     அது ஒரு கிராமம். தினசரி பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதும், உபதேசம் செய்வதும் மகானின் தினசரி கடமை. எல்லோரும் மனநிம்மதியுடன் வந்து மகானின் ஆசி பெறுகிறார்கள் என்று சொல்ல முடியாது இல்லையா?

சில நேரத்தில் குறைகளை நிவர்த்திப்பதும், நிவாரணம் செய்வதும் மகானின் அன்றாட நிகழ்ச்சிகளாகப் போய்விட்டன. ஏறக்குறைய எல்லா இடங்களிலும் இதே நடைமுறை என்றாலும், எதிர்பாராதவிதமாக சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிய வேலையும் பெரியவாளுக்கு வருவதுண்டு.

இங்கு எதிர்பாராத விதமான பஞ்சாயத்து ஒன்று அவரது தீர்ப்புக்கு வந்தது.

முதலில் மகானைப் பார்த்தவர், தன் குறையை கண்களில் நீர் வழிந்தபடியே சொல்கிறார். அவர் சொன்ன விஷயம் இதுதான்.

கிராமத்தில் பக்கத்து, பக்கத்து வீடுகள் இரண்டு. முதல் வீட்டில் ஒரு பெரிய புளியமரம் ஓங்கி வளர்ந்திருந்தது. புளியமரத்தின் வளர்ச்சிக்கு கேட்கவா வேண்டும். அதுவும் அவ்வப்போது ஒழுங்காகக் கவனித்ததால் வளர்ச்சிக்குக் கேட்க வேண்டியதே இல்லை. ஓங்கி வளர்ந்தது. நல்ல பலனைக் கொடுத்தது. வீட்டுக்காரருக்கு நல்ல குத்தகையை சம்பாதித்துக் கொடுத்தது. இதில் என்ன விவகாரம்  இருக்கப் போகிறது என்று தானே கேட்கிறீர்கள்? இருக்கிறது.

பக்கத்து பக்கத்து வீடுதானே?

ஒரு வீட்டில் புளியமரம் ஓங்கி வளர்ந்திருந்ததால், அதன் நிழல், அடுத்த வீட்டைப் பூரணமாக ஆட்கொண்டு விடாதா?

பக்கத்து வீட்டுக்காரர், தன் வீட்டில் எந்தவிதமான செடி,கொடி,மரம் எதையும் வைத்து வளர்க்க முடியாமல் தடுமாறினார்.

புளியமரத்தின் பண்ணை ஏகபோகமாக அனுபவித்து வரும் வீட்டுக்காரர். அடுத்த வீட்டுக்காரரின் சங்கடத்தைப் புரிந்து கொள்ளவே இல்லை. தன் கஷ்டத்தை 'நிழல்' வீட்டுக்காரர் யாரிடம் சொல்ல முடியும்?.

பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்த மகான், அவரை ஆசிர்வதித்து அனுப்பியதோடு சரி...

மறுநாள் புளியமரத்து வீட்டுக்காரர், மகானின் தரிசனத்துக்காக வந்தார்.

அவரை நிமிர்ந்து பார்த்த மகான், புன்னகை செய்தபடி, " நீ எனக்கு ஒரு தீர்ப்பு சொல்லவேண்டும்" என்று சொல்ல, வீட்டுக்காரர் விவரம் புரியாமல் விழித்தார். மகானுக்கு, நான் தீர்ப்பு சொல்வதா? அவர் அதிகம் யோசிக்கும் முன் மகான் ஆரம்பித்தார;

"ஒரு கிராமத்திலே, பக்கத்து, பக்கத்து வீடு இரண்டு. அதுலே ஒரு வீட்லே ஒரு பெரிய புளியமரம், 
 நல்லாவே பலனைத் தருது. வீட்டோட சொந்தக்காரர்  குத்தகைக்கு விட்டு, நல்லாவே பணம் பண்ணுகிறார்...

"புளியமரத்தோட நிழல் அடுத்த வீட்டுக்காரர் நிலத்தை சுத்தமாக மூடிவிட்டது. அவரால் நிலத்திலே ஏதுமே பயிர் பண்ண முடியவில்லை. அவர் என்ன பண்ணுவார்? நீயாயிருந்தா என்ன பண்ணுவே?' என்று கேட்டார்.

தன் விஷயத்தைத் தான் இப்படி சுற்றி வளைத்துச் சொல்கிறார் மகாபெரியவா என்பதை அறியாத புளிய மரத்தின் சொந்தக்காரர்;

"குத்தகை பணத்திலே அவருக்கும் கொடுக்கணும் பிரபு. அதுதானே நியாயம்?" என்று மகானிடமே கேட்டார்.

"கரெக்ட், அப்படித்தான் செய்யணும், அதுதான் தர்மம்" என்று புன்சிரிப்புடன் அவரை ஆசிர்வதித்து அனுப்பினார்.

மறுநாள் புளியமரத்தின் நிழல் வீட்டுக்காரர் முகமலர்ச்சியுடன் மகானிடம் வந்தார். பக்கத்து வீட்டுக்காரர் தனக்கு குத்தகை பணத்தில் ஒரு பகுதியைக் கொடுத்ததாகவும் இனி தொடர்ச்சியாக அது கிடைக்கும் என்று சொன்னதாகவும் சொன்னார்.

தான் செய்த பஞ்சாயத்தைப் பற்றி அவரிடம் மகான் சொல்லவே இல்லை.

No comments:

Post a Comment