Friday, April 10, 2020

Retired Life....

Retired but not tired
நாம் "பிராமின்" ஆக வாழ வேண்டாமா? வெறும் பூணூல் மட்டும் போதுமா? யோசிக்க வேண்டிய விஷயமல்லவா?
("வேதமும் பண்பாடும்" புஸ்தகத்திலிருந்து ஒரு பக்கம்)

உத்தியோகத்திலிருந்து ஓய்வு
இன்று உத்யோகத்திலிருக்கும் அனைவரும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் "ரிடையர்" ஆகின்றோம். அதற்குப் பிறகு பலர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார்களே தவிர மற்றபடி தமது வாழ்க்கை முறையிலேயோ, சிந்தனை முறையிலேயோ, குறிப்பிடத்தக்க எந்த மாறுதலும் கொண்டு வராமல் பொழுதைக் கழித்து விடுகின்றதை பார்க்கின்றோம். அதில் திருப்தியும் அடைந்து விடுகின்றனர். சொச்ச வாழ்நாளும் இப்படியே ஓடிவிடுகின்றது.

இது சரியா? சற்று யோசிப்போம்.
நாம் உயர்ந்த "த்விஜன்ம" குலத்தில் பிறந்த மாத்திரத்தில் நமக்கு "பிராமணத்தன்மை" பூர்ணமாக வந்துவிடுவதில்லை. "சர்வீஸில்" இருக்கும் போது நமக்கு பல நிர்பந்தங்கள் இருந்திருக்கலாம். ஓய்வு பெற்ற பின் எந்த நிர்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. நேரமும் நம் கையில்தான். அதுபோது நாம் தொலைத்துவிட்ட நமது வாழ்க்கையை இனிமேலாவது வாழ நாம் யோசிக்க வேண்டாமா?

நாம் "நாமாக" வாழ வேண்டாமா? சற்று சிந்திப்போம்.

*ஸந்தியாவந்தனாதி அனுஷ்டானங்கள், பூஜை முதலியவைகளை காலத்தில் தினமும் செய்யலாம்.
*தினமும் ஸந்தியாவந்தனத்தை தவிர ஸஹஸ்ர காயத்ரி (1008) ஜபம் செய்ய முயற்சி செய்யலாம்.
*பஞ்சாயதன (அ) ஸாளக்ராம பூஜை நித்யமும் விதிப்படி செய்யத் துவங்கலாம்.
*ஆலயங்களில் கைங்கர்யம் போன்ற பொது சேவைகளில் ஈடுபட முயற்சிக்கலாம்.
*சிகை வைத்துக் கொள்ளலாம். குடுமியை, ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் வைத்துக் கொள்ள வேண்டாமா? பள்ளிக்கூடம், காலேஜ், ஆபிஸ் என்ற காரணங்களை நாமே ஊகித்துக் கொண்டு (அல்லது ஏற்படுத்திக் கொண்டு) குடுமியை ஒதுக்கிவிட்டோம். குறைந்தது ரிடையர் ஆனபிறகாவது மிகவும் விசேஷமானதும், நமது அடையாளமாகயிருக்கின்ற குடுமியை நாம் வைத்துக்கொள்ள யோசிக்க வேண்டும். வெட்கப்படக் கூடாது.
*மீசை வைத்திருந்தால் அதன் மேலுள்ள காதலை முறித்துக் கொள்ள முயற்சி செய்து மீசையை எடுத்துவிட ஆலோசிக்கலாம்.
*ஒற்றை வஸ்த்ரத்துடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
*மூத்ராதி விஸர்ஜனத்தின்போது பூணூலை விதிப்படி போட்டுக் கொள்ள வேண்டும். விஸர்ஜனத்திற்கு பிறகு வாய் கொப்பளிப்பதையும் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.

வீட்டில் வசதி இருக்குமேயானால் தினசரி ஔபாஸனம் செய்யலாம்.

மேற்கொண்ட குறிப்புகள் ஒரு உதாரணத்திற்குத்தான் தரப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் யோசிக்க ஆரம்பித்தால், உங்களுக்கே இன்னும் பல விஷயங்கள் தோன்றலாம்.

சிலர் நினைக்கலாம். "நாம்தான் கோவிலுக்குச் செல்கிறோமே, நாம்தான் அன்னதானம், அனாதாஸ்ரமம் போன்றவைகளுக்கு நன்கொடை அளிக்கின்றோமே, இது போதாதா என்று" இது நல்லது தான், அதனால் இதுமட்டும் "பிராமணத்தன்மை" ஆகாது. இதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சமயத்தில் காஞ்சி மகானின் அருள்வாக்கை தற்போது செவிமடுப்போமாக:

ஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா
"நான் எத்தனையோ அனுஷ்டானங்களைச் சொல்கிறேனே, அவற்றில் எவ்வளவு நாம் பண்ணுகிறோம், எவ்வளவு பண்ணவில்லை, எவ்வளவு பண்ண முடியும் என்று யோசித்துப் பாருங்கள். எல்லாவற்றையும் பண்ண முடியாவிட்டாலும், ஜீவனோபாயத்தை அனுசரித்து முடிந்தவைகளையாவது தவறாமல் பண்ண வேண்டும். மற்றவற்றைப் பண்ணவில்லையே என்று பஸ்சாதாபமாவது பட வேண்டும்."

ஓய்வு பெற்றதை ஒரு வரபிரசாதமாக நினைத்து வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்ளுவோம்

No comments:

Post a Comment