Tuesday, April 11, 2017

Murugan temples martuamalai, ettukudi

🍁 சிவன் மகன் முருகன். 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

மருதமலை மருதாசலமூர்த்தி!

மருத மரங்கள் நிறைந்த மலையில் அருள்பவர் என்பதால், மருதாசல மூர்த்தி என அழைக்கப்படுகிறார் இங்குள்ள முருகன். 

தல விருட்சம். மருதமரம்;
தீர்த்தம். மருது சுனை.

பழனி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடது கையை இடுப்பில் வைத்தபடி, தண்டபாணியாகவும், காலில் தண்டை அணிந்து, தலைக்குப் பின்புறம் குடுமியுடன் காட்சியளிக்கிறார் மருதமலை முருகன்.

தினமும் இராஜ அலங்காரம், விபூதிக் காப்பு, மற்றும் சந்தனக் காப்பும் விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும் நடைபெறும். திருத்திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசம் அணிவிக்கப்படும்.

அர்த்தஜாம பூஜையின் போது, ஆபரணம், கிரீடம் என எதுவுமில்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். 

அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலம் இது!

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

சிக்கல் சிங்கார வேலர்.
சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சம்ஹாரம் என்ற சுலவடைக்குரிய தலம், நாகப்பட்டிணம் மாவட்டத்திலுள்ள சிக்கல் நவநீதீஸ்வரர் கோவில்.

அறுபடை வீடுகளில் திருத்தணியைப் போல, சில கோவில்களை, பொதுப்பெயரான குன்று தோறாடல் என்று குறிப்பிடுவர். அவ்வகையில் இத்தலத்திற்கு , கட்டுமலை என்ற பெயர் உண்டு. மேலும், குன்றுதோறாடல் தலம் என்றும் கூறுவர்.

சூரபத்மனிடமிருந்து  தங்களைக் காக்குமாறு, முருகப் பெருமானுக்கு, திரிசதை எனும் யாகம் செய்து வேண்டிக் கொண்டனர் தேவர்கள்.

இதனால் சூரனை அழித்து தேவர்களை காத்தார் முருகப் பெருமான்.

அம்மன் தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி, அதை வேலாக மாற்றி, இத்தல முருகனுக்கு அளித்தாள். அதைக் கொண்டே சூரனை அழித்தார் முருகபெருமான். 

இவருக்கு, சத்ரு சம்ஹார திரிசதை எனும் அர்ச்சனை.செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகும்.

சிக்கல் சிங்காரவேலனை குறித்து திருப்புகழ் பாடியுள்ளார் அருணகிரிநாதர். 

கோட்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமாரர்.

வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையான முருகன், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் செல்வ முத்துக் குமார சுவாமியாக அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் வைத்தியநாதரை விட முத்துக்குமாரருக்கே செல்வாக்கு அதிகம். செவ்வாய் தோஷம் குறை நீங்க இவரை வழிபடுகின்றனர் பெண்கள்.

சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார் முருக பெருமான்.

தினமும் காலை மற்றும் அர்த்தஜாம பூஜையின் போது, முதலில் முருகனுக்கு முருகனுக்குப் பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடைபெறும்.

அர்த்தஜாம பூஜையின் போது, செல்வமுத்துக் குமாரருக்கு புனுகு, பச்சைக் கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால் சாதம், மற்றும் பாலாபிஷேகம் நடைபெறும். 

முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால், குழந்தை பாக்கியமில்லாதோர்க்கு குழந்தை பேறு கிட்டும்.  இங்கு தரப்படும் திருநீர் நோய் தீர்க்க வல்லது.

முத்துக்குமாரசுவாமிக்கு தை மாதம் செவ்வாய்கிழமை முதல் தொடர்ந்து பத்து நாட்கள் விழா நடக்கும்.

முருகனுக்கு முக்கியத்தத்துவம் வாய்ந்த தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமாரசுவாமிக்குத்தான்.

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

எட்டுக்குடி முருகன்.

நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள் வைத்தேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவர் இருந்தார்.

இவர், சரவண பவ என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதியபடி, அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையைச் செய்தார். 

அச்சிலையின் அழகைப் பார்த்து  ஆனந்தம் கொண்ட அந்நாட்டு சோழமன்னன், இது போன்று இன்னொரு சிலையை செய்து விடக்கூடாது என்பதற்காக அந்த சிற்பியின் கட்டைவிரலை வெட்டச் செய்தான்.

இதனால் வருத்தமடைந்த சிற்பி, அருகிலுள்ள கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். கட்டைவிரல் இல்லாத நிலையில் கடுமையாக முயற்சித்து மற்றொரு சிலையைச் செய்தார்.

வேலை முழுமை பெற்றதும், ஒளி வீசும் அந்த சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில்  பறக்க ஆரம்பித்தது.

அச்சமயம், அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் அங்கு வர, பறந்த மயிலைப் பார்த்து, காவலர்களிடம் எட்டிப்பிடி என உத்தரவிட்டான்.

காவலர்களும் பறந்த மயிலை பிடித்தனர். அதன்பின் மயில் பழையபடி சிலையாகி அங்கேயே நின்றன. 

எட்டிப்பிடி என்ற வார்த்தைதான் காலப்போக்கில் எட்டுக்குடி ஆனது.

நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் இருபது கி.மீ தொலைவில் இருக்கிறது எட்டுக்குடி.

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

திருமுருகன்பூண்டி முருகநாதர்.

கோவையிலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் உள்ளது திருமுருகன்பூண்டி முருகநாதர் கோவில்.

அண்டங்கள் அனைத்தையும் அடக்கியாளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவத்தால் தேவர்களை சிறைபடுத்தி துன்புறுத்துதலை செய்து வந்தான். 

அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டு போகவே அவனை அழித்து தேவர்களை காத்திட சம்ஹாரத்திற்கு தயாரானார் முருகன்.

சூரனுடன் போர் புரிந்து அவனை இரண்டாகப் பிளந்து மயில் மற்றும் சேவலாக மாற்றி, அவனை ஆட்கொண்டார் முருகன்.

இருப்பினும் சூரனை துன்புறுத்தியதன் விளைவாக, ஆறுமுகனுக்கு பிரமஹத்தி தோஷம் பீடித்தது.  தோஷம் நீங்க இத்தலத்திற்கு வந்த முருகன் சிவலிங்கம் அமைத்து வணங்கி வந்தான்.

அப்போது பூஜைக்கு தீர்த்தம் தேவைப்பட, அவ்விடத்தில் அவர் தன் வேலாயுதத்தை ஊன்றவும், தீர்த்தம் உண்டாகி பெருக்கெடுத்தன. 

பின் அந்தத் தீர்த்தத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார். 

பிரம்மஹத்தி தோஷம் நீங்கக் காரணமான தீர்த்தம் தற்போது கோவிலின் வெளியே வேம்படி முருகன் சன்னதி அருகில் , சதுரக்கல்லாக இருப்பதாக கூறுகிறது தலபுராணம்.

இத்தலத்தின் முதன்மையானவரான சிவன், முருகனால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்டதால், திரு முருகநாதர் என்ற திருப்பெயரில் அழைக்கப் படுகிறார்.

முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன், தன் வேலை கோவிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிற்க வைத்தார். இதனால் கோவிலுக்குள் இருக்கும் முருகனுக்கு மயில் வாகனமோ, கையில் வேலோ இல்லை.

           திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment