Thursday, February 25, 2016

Thiruvidaimaruthur Mahalinga swamy temple

Courtesy:Sri.GS.Dattatreyan

திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி
திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2000 வருடங்களுக்கு முன் சோழர்களால் 
கட்டப்பட்டக் கோயில். இத்திருத்தலத்தின் மூலவர் ஸ்ரீ மஹாலிங்க ஸ்வாமி, தாயார் 
பெருமுலையாள். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். ஆலய அமைப்பு முறைப்படி 
திருவலஞ்சுழி-விநாயகர் , சுவாமிமலை-முருகன் , சேய்ஞலூர்-சண்டேசுரர் , 
சூரியனார்கோயில்-சூரியன் முதலான நவகோள்கள், சிதம்பரம்-நடராஜர் , சீர்காழி-
பைரவர், திருவாவடுதுறை - திருநந்தி ஆகிய பரிவாரத் தலங்களுடன்அவற்றின் 
நடுவில் மூல மூர்த்தியாக இக்கோயிலில் நடுநாயகமாக ஸ்ரீ மகாலிங்கப் பெருமான்
விளங்குகின்றார் என்பது சிறப்புவாய்ந்த அம்சமாகும்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 93 வது தேவாரத்தலம் ஆகும்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரிதென்கரைத்தலங்களில் இது 30வது தலம்.

" பொங்குநூல் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை தங்குசெஞ் 
சடையினீர் சாமவேதம் ஓதினீர் எங்கும் எழிலா 
மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் மங்குல்தோய் 
கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே "
-திருஞானசம்பந்தர்

தல வரலாறு: 
உமாதேவியை நினைத்து தவம் செய்ய அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தார். 
உமயவளும் அகத்திய முனிவருக்கு காட்சி அளித்தார். முனிவர்கள் அனைவரும்
தேவியிடம் சிவபெருமானையும் காண வேண்டும் எனக்கூறினர். முனிவர்களுக்காக 
இறைவனை எண்ணி உமாதேவி தவமிருக்கிறார். இறைவன் உமையின் தவத்திற்கு 
இரங்கி உமைக்கும்முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார். 
காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார்.வியப்பு 
கொண்டு அம்பாள் " இறைவா, பிரம்மன்முதலானோரே தங்களை வழிபடுவதுதான் 
முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே!" என்றுவினவ 
"உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே". 
நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர். 
அதனாலே பூசிக்கிறேன் என்றார்.முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை 
காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெற்றனர் என்று தலவரலாறுகூறுகிறது.

ஸ்ரீ மூகாம்பிகை - 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையைப் போலவே 
இத்தலத்திலும் மூகாம்பிகைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. 
இந்தியாவிலேயே கொல்லூரிலும்,திருவிடைமருதூரிலும் மட்டுமே 
மூகாம்பிகைக்குத் தனி சந்நிதி உள்ளது. இக்கோயிலில் அம்பாள்சன்னதிக்குத் 
தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் 
வட இந்திய கோயிற்கோபுர அமைப்பில் அமைந்துள்ளது. இந்த சன்னதியில் 
மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 
இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள்
கர்ப்பம் தரிக்கவும் சுக பிரசவம் அடைவதற்காகவும் வேண்டுகின்றனர். 
இத்திருக்கோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம்வந்து மூலவரை 
வழிபட்டால் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள்,பைத்தியம் 
முதலிய பெருநோய்முதலியவை நீங்கி, நலன்களெல்லாம் பெற்று இன்புற்று வாழ்வர்.
இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். 
மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோகஉயர்வு, ஆகியவற்றுக்காகவும் 
இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை 
நிச்சயம் நிறைவேற்றிகொடுப்பார்.

ஆண்ட விநாயகர் - 
கோயிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் 
சன்னதி அமைந்துள்ளது. இந்த விநாயகக்கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் 
பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார். தேவ கணங்கள் குறையாமல் 
கொண்டுவந்து அளிக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக 
இறைவனை வழிபடுகிறார், மனித சஞ்சாரம் இல்லாதஇந்த இடத்தில், தமது 
அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால் இவருக்கு 
ஆண்ட விநாயகர் என்ற காரணப்பெயர் உண்டு. 
அசுவமேதப் பிரதட்சிணம் : திருவிடைமருதூரில் மருதப் பெருமானை 
வழிபடுவதற்குக் கோயிலையடைந்து முதல் மதிலின்உட்புறத்தில் வலம் 
வருதலை அசுவமேதப் பிரதட்சிணம் என்பர். இந்த அசுவமேதப் பிரதட்சிணம் 
செய்வோர் எல்லா நலன்களும்பெறுவர். தொடங்குங்கால் முருகப்பெருமானை 
வழிபட்டுத் தொடங்க வேண்டும். ஒரு மண்டலம், அரை மண்டலம், கால்மண்டலம் 
என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும். வலம் வருவதும் 
நூற்றி எட்டு, இருபத்து நான்கு,பன்னிரண்டு, ஏழு என்ற அளவில் அமைய வேண்டும். 
திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர்பெரும் பயன் 
அடைவர்.இதனை அடுத்துள்ளது கொடுமுடிப்பிரகாரம். கயிலாய மலையை வலம் வருவதால்
கிடைக்கும் பேறுஇப்பிரகாரத்தை வலம் வருதலால் கிடைக்கும்.
பட்டினத்தார் -
பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்த திருவிடைமருதூர் கோயிலுக்கும் 
உள்ள தொடர்பு நெருக்கமானது.பட்டினத்தார் இத்தலத்து மருவாணர் குறித்து பல 
பாடல்கள் பாடியுள்ளார்.இவரது சீடர் பத்திரகிரியார் ஆவார். இவர் ஒருநாட்டுக்கே 
ராஜாவாக இருந்து விட்டு துறவு பூண்டு பட்டினத்தாரின் சீடரானவர். சிவதலம் 
தோறும் தரிசித்து வந்து இருவரும்திருவிடைமருதூர் வந்த தங்கினர். பட்டினத்தார் 
திருவோடு கூட வைத்துக் கொள்வதில்லை. சீடரோ திருவோடும், ஒருநாயையும்
உடன் வைத்திருந்தார். இறைவன் ஒருநாள் அடியார் உருவில் வந்து பட்டினத்தாரிடம் 
பிச்சை கேட்டார். பட்டினத்தார் நானோபரதேசி என்னிடம் தருவதற்கு ஏதுமில்லை,
இதே கோயிலின் மேலைக்கோபுரம் அருகே ஒரு சம்சாரி இருப்பான் என்றார்.
இறைவனும் அவ்விடத்திற்கு சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் பிச்சை கேட்க, 
இந்த திருவோடும்,நாயும் தம்மைசம்சாரியாக்கி விட்டதே என்று வருந்தி பத்திரகிரியார்
ஓட்டை நாயின் மீது எறிந்தார்.ஓடும் உடைந்தது.நாயும் உயிர் விட்டது.
பின்பு இறைவன் தோன்றி பத்திரகிரியாருக்கும், நாய்க்கும் முக்தி அளித்தார். 
அந்த முக்தி தந்த இடம் இன்றும் உள்ளது. கிழக்கு மாட வீதியில் நாயடியார் 
கோயில் என்று இன்று அழைக்கப்படும் அந்த இடத்தை இத்தலத்துக்கு 
வந்தால் இன்றும் காணலாம்.

அனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம், 
காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன.
27நட்சத்திரத்திற்கும் 27 லிங்கங்கள் உள்ளன. இத்தலத்தின் நான்கு 
திசைகளிலும் விசுவநாதர், ஆன்மநாதர்,ரிஷிபுரீசுவரர்,சொக்கநாதர் 
ஆகிய மூர்த்திகளுக்கு கோயில்கள் அமைந்து பஞ்சலிங்கத் தலம் 
என்றும் அழைக்கப்படுகிறது. வரகுணபாண்டியன் இத்தலத்தை அடைந்து 
தன்னைப் பற்றியிருந்த பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்றான்.பட்டினத்தார்,
பத்திரகிரியார்,வரகுணபாண்டியன், அருணகிரிநாதர்,கருவூர்தேவர் ஆகியோர் 
வழிபட்டு பெரும்பேறு பெற்றபெருமையுடையது.
அனுஷ நட்சத்திரத்திற்கு இது பரிகார தலம்.

காலை 6மணி முதல் 11 மணி வரை
மாலை மணி 5 முதல் 
இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில்,
திருவிடைமருதூர் - 612 104.
தஞ்சாவூர் மாவட்டம்.

No comments:

Post a Comment