Tuesday, August 25, 2015

Tharpanam

Courtesy:Sri.GS.Dattatreyan

தர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை

தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள். தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார். அதேசமயம், எதிர்மறை சொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.

இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.

தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள். அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது. நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.

அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.

மேலே கூறிய இந்த நிகழ்வை மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை கொல்வேன் என்று சபதம் செய்து நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள் என்று கூறும் நிகழ்விலிருந்துபுரிந்துகொள்ளலாம். அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்துகொள்ளலாம். ஆத்மா சாவதில்லை என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது என்பது நமது கோட்பாடு.
ஜடபரதர் என்ற முனிவர் சித்தி அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று யோகவாசிஷ்டம் கூறுகின்றது. இதனால்தான் மனமிறக்க வாயேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள்.

உடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சிசி அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.

சிரார்த்த காரியங்கள் செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.

சந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.

நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.
இந்த ஆராய்ச்சயின் முடிவை அன்றே நமது முனிவர்கள் தமது தவவலிமையினால்கண்டு தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து போகின்றோம்.


No comments:

Post a Comment