Thursday, December 4, 2014

KARTHIGAI DEEPAM

Courtesy: Sri.Gs.Dattatreyan


வரும் சனிக்கிழமை கார்த்திகை தீபம் 06-12-2014"

"பெரியவாளின் கார்த்திகை தீப திருவிழா காஞ்சிபுரத்தில
கொண்டாடும் விதம்""

தினமலர்-02-012-2014.

காஞ்சி மகாபெரியவர் காலத்தில், காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகவே மடத்தைச் சுத்தப்படுத்தும் பணி துவங்கி விடும். வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்வார்கள்.

திருக்கார்த்திகையன்று அதிகாலை மகாபெரியவர் ஆத்ம ஸ்நானம் செய்து, பூஜைகள் செய்வார். மடத்திலுள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும். பெரிய, சிறிய அகல் விளக்குகள் ஏராளமாக மடத்துக்கு கொண்டு வரப்படும். விளக்கேற்றும் நேரத்துக்கு முன்னதாகவே, அதில் திரியிட்டு இலுப்ப எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் வைக்கப்படும்.

மாலையில், பெரியவர் ஸ்நானம் செய்வார். பின் ஆத்மபூஜை செய்வார். அதன் பின் ஒரு தீப்பந்தத்தில் "குங்குளயம்' என்னும் தீபம் ஏற்றப்படும். அவ்வாறு ஏற்றும் போது மந்திரங்கள் ஒலிக்கும். சிவ சகஸ்ரநாமம், லிங்காஷ்டகம், சிவ அஷ்டோத்ர பாராயணம் ஆகியவை செய்யப்பட்டவுடன், அவல், நெல் பொரி போன்றவற்றுடன் வெல்லம் கலந்து உருண்டைகளாகச் செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வார்கள். பிறகு தீபங்கள் வரிசையாக ஏற்றப்படும்.

அப்போது ஏராளமான பெண்கள் மடத்திற்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றைப் பலரும் தானமாகக் கொடுக்கும் படி மகாசுவாமிகள் சொல்வார்.

பலரும் அவ்வாறு தானம் செய்வர். அப்போது பக்தர்களிடம் பெரியவர், ""மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)'' என்று அறிவுரை சொல்வார்.

அது மட்டுமல்ல, "உங்கள் உடன்பிறந்த சகோதரிகளுக்கு பூ, பழம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றை கார்த்திகை அன்று அவசியம் கொடுங்கள். இதைக் கொடுத்த சகோதரர்களும், பெற்றுக் கொண்ட சகோதரிகளும் ஆயுள்விருத்தியுடன் திகழ்வர். அவர்களிடையே உறவு பலப்படும். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாரும் மடத்தின் அருகிலுள்ள ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கு கொடி மரம் அருகிலுள்ள சூரியனை வணங்குங்கள். அத்துடன், கார்த்திகை பவுர்ணமிஅன்று தோன்றும் சந்திரனையும் வணங்க வேண்டும். இதனால் வாழ்வே பிரகாசிக்கும்,'' என்றும் பெரியவர் சொல்வார்.

கார்த்திகை விளக்கேற்றுவதற்கு மடத்தில் இலுப்ப எண்ணெய் பயன்படுத்துவதற்குரிய காரணத்தையும் பெரியவர் சொல்லியுள்ளார். வீடுகளிலும் கார்த்திகையன்று இலுப்ப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். காரணம், இந்த எண்ணெய் முருகப்பெருமானுக்கு விருப்பமானது. மேலும், எதிரிகளின் தொல்லை, கடன் தீர்தல், ஆயுள்விருத்தி, சகோதர உறவு வலுப்படுதல் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்று அருளாசி வழங்குவார். மொத்தத்தில், கார்த்திகை தீபம் என்பதே சகோதர பாசத்தை வளர்க்கும் திருவிழா என்பார் பெரியவர்.

எல்லாருக்கும் கார்த்திகை அப்பம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்படும். ஆனால், பெரியவர் மட்டும் அரை பழம், சிறிது பால் பிட்சையாக ஏற்றுஉண்பார். சகோதர பாசத்தை வளர்க்கும் கார்த்திகைத் திருவிழாவில் மகாபெரியவரின் அருளாசி நம் எல்லாருக்கும் கிடைக்கட்டும்.



No comments:

Post a Comment