திருமலை சீனிவாசன்
மேற்கு மாம்பலம்.
*சித்திரைத் தேரும் பெரிய நம்பியின் பெருமையும்*
பகவத்ஶ்ரீ ராமானுஜருக்கு மதுராந்தகத்தில் பஞ்ச சம்ஸ்காரம் செய்த ஆச்சாரியன் பெரிய நம்பி. பெரிய நம்பிகள் ஶ்ரீ ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர்.
ஆளவந்தாரிடம் ஆழ்ந்த நம்பிக்கையும் மற்றும் ஈடுபாடும் கொண்டவர். ஆளவந்தாரின் கருத்துக்களைப் பரப்பியவர். பிராமண குலத்தில் பிறந்தவர்.
இருப்பினும் ஜாதி பேதம் பாராத வைஷ்ணவர்களில் ஒருவர்.
*ஆளவந்தாருக்கு பெரிய நம்பியை தவிர சிஷ்யர்கள் பலர். *திருக்கோட்டியூர் நம்பி,திருமலை நம்பி,திருமாலையாண்டான், திருவரங்கம் பெருமாள் அரையர்,திருகச்சி நம்பிகள், மாறனேரி நம்பி மற்றும் பலர் இருந்தனர்.*
அதில் பெரிய நம்பிகள் பிராமண குலத்தில் பிறந்தவர். மாறனேரி நம்பி ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர். மாறனேரி நம்பி ஆளவந்தாரின் சிஷ்யரான கதையே தனி. ஒரு சமயம் ஆளவந்தார் வயல் வெளியில் தனது சிஷ்யர்களுடன் சென்று கொண்டிருக்கையில் மாறனேரி நம்பி ஏர் உழுது கொண்டு இருந்தார். பின் பசி தீர்க்க, உழுத நிலத்திலுள்ள சேற்று நீரில் சேற்றை கரைத்துக் குடித்து கொண்டிருந்தார்.
ஆளவந்தார், மாறனேரி நம்பியிடம்,"
பசி தீர்க்க உணவு இருக்கும் போது சேற்றைப் புசிப்பானேன்? என்று வினவ, அதற்கு மாறனேரி நம்பி தலை நிமிர்த்தி," *மண்ணுக்கு மண்* *இடுகிறேன்*!"என்று பதிலுரைத்தார்.
இதைக் கேட்டவுடன் ஆளவந்தார், இவர் சடவாயுவைக் கோபித்த திருகுருகூர் சடகோபரான நம்மாழ்வார் போன்றவரோ! என அன்புடன் பேசினார். மாறனேரி நம்பியும் ஆளவந்தாரை ஆச்சாரியனாக வரித்தார். ஆளவந்தார் ஜாதி பேதம் பாராது அவரை சிஷ்யராக ஏற்றார்.
ஆளவந்தார் தனது திரு மாளிகையைக் ( இல்லம்) கட்டிக் கொண்டு இருந்தார். திருமாளிகை(வீடு) முழுதும் கட்டி முடித்தாகி விட்டது. புண்ணியாவாசனம் செய்திட நாளும் குறித்து இருந்தார். அதற்கு முதல் நாள் மாறனேரி நம்பி, கட்டிய வீட்டைப் பார்த்து விட்டு சென்றார். இதை அறிந்த ஆளவந்தார், சிஷ்யன் மாறனேரி நம்பி திருவடி , பொன்னடி! அந்த திருவடிகள் பட்ட இடம் புனிதமாகி விட்டது, இனிமேல் சடங்கு சம்பிரதாயம் தேவையில்லை. புனிதமாகி விட்ட. இடத்தை இனி மீண்டும் புனிதமாக்குவதா? என்று சொல்லி எல்லா சடங்குகளையும் ரத்து செய்து விட்டார்.இந்த சம்பவம் மாறனேரி நம்பியின் நல் குணத்தையும் நல் ஆத்மாவையும்
மற்றவர்களுக்கு எடுத்து காட்டிட நினைத்தார் ஆளவந்தார்.
இதனிடையே ஆளவந்தார் இராஜ பிளவை நோய்க்கு ஆட்பட்டார். ஆளவந்தார்,
நம் பெருமாளிடம் ஒரு விண்ணப்பம் வைத்தார். நம்பெருமாள்," என்ன ஆளவந்தாரே? என்ன கவலை?" என்று கேட்டார்.
ஆளவந்தாரே," அடியேனுக்கு மோட்சம் உண்டா இல்லையா தெரியவில்லை! இந்த நோய் முன் வினைப் பயன் என்றாலும் இந்த நோயுடன் இன்னும் எவ்வளவு நாள் வாழ வேண்டுமோ என்று தெரியவில்லையே? அடியேனை திருநாட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்!" என்றார். பகவான் புன்சிரிப்புடன் மறைந்தார்.
இதனிடையே ஆளவந்தார், நம்பெருமாளே! நம்பெருமாளே! என்று புலம்பித் தவிப்பதைப் பார்த்த மாறனேரி நம்பி," தாஸன்! அடியேன் ஒரு விண்ணப்பம்! தங்களது நோய்யை அடியேனுக்கு பிரசாதமாய் தாருங்கள்! அடியேன் ஏற்றுக் கொள்கின்றேன்! ஆச்சாரியன் கஷ்டப்படுவதை காண அடியேன் மனமும் கண்களும் வாடுகின்றது. தயை கூர்ந்து விண்ணப்பத்தை ஏற்பீராக!" என்றார்.
ஆளவந்தார் முதலில் சம்மதிக்கவில்லை. கூட இருந்த மற்ற சிஷ்யர்கள் மாறனேரி நம்பியின் ஆச்சாரிய பக்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.
மாறனேரி நம்பி ஆளவந்தாரை மீண்டும் வற்புறுத்தி வேண்டிக் கொண்டார். வேறு வழியில்லாமல் ஆளவந்தார் தனது இராஜ பிளவையை மாறனேரி நம்பிக்கு தத்தம் கொடுத்தார். மாறனேரிக்கு ராஜ பிளவையும் பாதிக்கப் பட்டார். ஆளவந்தார். குணமடைந்தார். சிறிது காலத்தில் ஆளவந்தாருக்கு நோய் நீங்கியது.
எனினும் *ஆளவந்தார் வயதாகி*
*விட்டபடியால் தளர்ந்து போய்* *விட்டார்*. *சில காலம் கழித்து பரமபதம் எய்தினார்.பரமபதம் போகும் முன் தனது* *சிஷ்யர்களிடம்," மாறனேரி நம்பியை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்!"* என்று சொல்லி விட்டு சென்றார்.
இதனிடையே, தாம் ஏற்றுக் கொண்ட ராஜ பிளவை நோய் மாறனேரி நம்பியை வாட்டியது. *தமது ஆச்சாரியனின் கட்டளைக்கு இணங்க பெரிய நம்பி மாறனேரி நம்பியை நன்கு கவனித்துக் கொண்டார்.* *தினமும் அவரை கண்காணித்து, குளிப்பாட்டி, உணவு தருவது போன்ற எல்லா வேலைகளையும் சிரமேற் கொண்டு செய்தார்.சில காலம் கழித்து மாறனேரி நம்பி பரம பதம் எய்தினார். பெரிய நம்பி மாறனேரி நம்பியின் ஈமக்கிரியைகளைச் செய்தார். இதைக் கண்ட மற்றவர்கள் பெரிய நம்பியின் வீட்டை கல்லால் அடித்தனர்.அவரை தள்ளி வைத்தனர்.*
இதை அறிந்த பகவத்ஶ்ரீ ராமானுஜர் அப்போது முற்றிலும் சீர்திருத்தவாதியாக பரிமணிக்காத காலம். *இராமானுஜருக்கு ஐந்து ஆச்சாரியர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் பெரிய நம்பி.எனவே ஒரு சிஷ்யனாக இருந்து பெரிய நம்பியை கவனித்து வந்தார்.* மாறனேரிக்கு செய்யும் தொண்டைப் பார்த்து பகவத் ஶ்ரீராமானுஜர் பிரமித்தார். அவர்,தனக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த ஆச்சாரியனான பெரிய நம்பியை அணுகி," தாஸன்! அடியேனிடம் ஒரு உத்திரவு இட்டு இருக்கலாமே? ஈமச் சடங்குகளை வேறு யாராவது செய்திருக்கலாமே ! அதற்கு அடியேன் வேறு ஏற்பாடுகள் செய்திருப்பேனே" என்றார்.
உடனே பெரிய நம்பி," *அடியேன் தவறு ஒன்றும் புரியவில்லை! ஶ்ரீ வைஷ்ணவன் என்பதை தெரிந்து கொண்டவன் இப்படித்தான் செய்ய வேண்டும்! ஜடாயுவிற்கு இராமபிரான் ஈமக்கிரியைகளைச் செய்தார் அல்லவா? அந்த இராமபிரானை விட அடியேன் உயர்ந்தவன் இல்லை! விதுரருக்கு தர்மர் ஈமக்கிரியைகளைச் செய்தார்! அவரை விடவா அடியேன் உயர்ந்தவன்? மாறனேரி நம்பி தாழ்ந்தவர் இல்லை! மிகச் சிறந்த வைஷ்ணவர்! அடியேன் மாறனேரி நம்பிக்கு இந்த கைங்கர்யம் செய்யாவிட்டால், வைஷ்ணவன் என்பதில் அர்த்தமில்லை! வைஷ்ணவன் என்றாகி விட்டால் மற்ற எதும் பார்க்க தேவையில்லை! அதன் பின் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி," பயிலுஞ் சுடரொளி , நெடுமாற்கடிமை* *என்ற இந்த திருவாய் மொழி பாசுரங்கள் கவைக்குதவாத வெறும் கடலோசை போல் பொருளற்றவயாக அல்லவா ஆகி விடும்? அந்த திருவாய் மொழிகள் வேறும் பாசுரங்களா? இல்லை! அந்த பாசுரத்தின் அர்த்தமறிந்து நடந்து கொண்டேன்! இதில் அடியேன் தவறு காணவில்லை!"* என்றார்.
இதுவே பின்னாளில் பகவத் ஶ்ரீராமானுஜர் மேல் கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்களை," *திருக்குலத்தோர்*" என்று அழைக்கச் செய்தார். பின்னாளில் தனது சிஷ்யர்களான *உறங்காவல்லியும் பொன்னாச்சியும்* பரமபதித்த போது கூரத்தாழ்வானின் திருக்குமாரனைக் ( பராசரபட்டர்) கொண்டு ஈமக்கிரியைகளைச் செய்வித்தார்.
இதனிடையே,
*சித்திரை மாதம் விருப்பண்ண உடையார் திருநாள் உற்சவம்*( தற்போது விருப்பன் திருநாள் உற்சவம் எனச் சொல்லப்படுகிறது) ஆரம்பமாகியது. *சித்திரை தேரில் நம் பெருமாள் சித்திரை வீதிகளில் பவனி வந்தார். பெரிய நம்பியின் பெண் (அம்மாளு)தேர் வருவதைப் பார்த்து விட்டு ஆவேசத்துடன்," நம்பெருமாளே! அடியேனது திருதகப்பனார் என்ன தவறு செய்தார்? ஏன் இப்படி ஊரார் ஒதுக்கிட தேவரீர் கண்டு கொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன? உமது லீலை தான் என்ன? நாங்கள் வாடுவதைக் கண்டு கொள்ளாமல் திருத்தேரில் பவனி வருவது முறையோ? இது அழகோ? இது தர்மம் தானோ? பெரிய நம்பிகளின் பெண் சொல்லி சொல்லிப் புலம்பினாள்.*
*திருத்தேர் கீழச் சித்திரை வீதி ஒரு பகுதியைக் கடந்து விட்டது. பெரிய நம்பி இல்லம் அருகே நின்றது. நின்றது நின்றது தான்.கூட்டம்* *கூட்டமாய்*
*பலரும் வடம் பிடித்து தேர் இழுக்க தேர் நகரவில்லை. நம் பெருமாளுக்கு அர்ச்சனைச் செய்யும்* *பட்டருக்குள் நம்பெருமாள் ஆவேசித்து கூறலானார்:பெரிய நம்பி நமக்கு நல்லான்! அவனை விட வைஷ்ணவன் யாருமில்லை!" என்றார்.*
*ஊர் ஒதுக்கிய பெரிய நம்பியை ஊர் மக்கள் மரியாதை செய்தார்கள்.* *பெரிய நம்பி திருத்தேர் வடம் பிடிக்க, திருத்தேரும் நகர்ந்தது. ஊர்மக்கள் மனமும் மாறியது.* *இப்போதும் பெரிய நம்பி வம்சத்தினர் திருத்தேரின் வடம் முதலில் பிடிப்பார்கள். அது இன்று வரை நடைபெறுகிறது.
(26. 4. 2025:சனிக்கிழமை இன்று சித்திரைத் திருத்தேர் நடை பெற்றுகிறது.)
*குறிப்பு*
அந்த வம்சத்தில் வந்தவர் தான் உயர்திரு BSR அவர்கள்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் சரித்திர பூகோள ஆசிரியராய் பணி புரிந்தவர். இப்போது திருத்தேரின் நிலை அவர் வீட்டின் அருகே தான் உள்ளது.அவர் பரமபதம் எய்தி விட்டார். அவருக்கு இரு மகன்களும் ஒரு மகள் இப்போது இருக்கிறார்கள். அவர்கள் உற்சவத்தில் இன்னும் பங்கு கொள்கிறார்கள்.
*பகவத்ஶ்ரீ ராமானுஜரிடம் பெரிய நம்பி சொன்ன வாக்கியம் தான் வெறும் கடலோசை யாகி விடும் அல்லவா?
*வாழ்க பகவத்ஶ்ரீ ராமானுஜர்! வாழ்க அவரது ஆச்சாரியார் பெரிய நம்பி!*
*பெரிய நம்பி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!*
No comments:
Post a Comment