*Continuation from yesterday's posting*
*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
Section 2
*ஞானப் பிரஸூனங்கள்*
*1.பற்றின்மை*
சில ஸமயங்களில் ஸ்ரீமத் ஆசார்யாளின் பற்றின்மை வெகு தீவிரமாகத் தெரிந்தபோது, மடம் ஸம்பந்தமான லௌகிக விஷயங்களில் அக்கறையில்லையானால் அவர்கள் பீடாதிபத்யத்தில் இருந்து விலகிவிடலாமே யென்றுகூட சிலர்களுக்கு யோசனை தோன்றியிருப்பதுண்டு. அவர்கள் தைர்யமாக ஆசார்யாரிடம் இவ்வெண்ணத்தை தெரியப்படுத்தியிருந்தால் ஸந்நிதானம் ஸந்தோஷமாய் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவ்விதம் நடந்திருந்தால் பலவிதத்தில் உலகத்திற்கு பாக்கியக் குறைவே ஏற்பட்டிருக்கும். முக்கியமாக, அத்வைத பீடத்திலிருக்கிற ஒரு மஹான் ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைந்து உலகப்பற்று இல்லாமலிருந்தால், அந்த ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஏற்பட்ட காரணத்தினாலேயே மடத்தின் தலைவராக இருந்துவர தகுதி யுள்ளவரல்ல என்ற அபாயமான ஒரு புதிய நியாயத்தை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும்.
ஏகாந்தமாயிருப்பதில் அவர்களுக்கு ஸ்வபாவஸித்தமான மனோபாவம் 1953 ல் நடந்த ஸஹஸ்ரசண்டீ ஹோம ஸமயத்தில் வெகு வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த அபூர்வமான யாகத்தை தரிசிப்பதற்காக நம் தேசத்திலுள்ள பல பிரதேசங்களிலிருந்து ஆயிரம் பதினாயிரம் கணக்கான பக்தர்கள் வந்து குழுமியிருந்தார்கள். ஸ்ரீமத் ஆசார்யாரை நேரில் தரிசிக்க வேண்டுமென்றும், அவர்களை ஒரு தடவையாவது நேரில் வந்தனம் செய்ய வேண்டுமென்றும் மிக்க அவாவுடன் அவர்கள் வெளியில் வருவதை எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். ஸ்ரீமத் ஆசார்யார் அங்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி விவரமாகக் கேட்டுக் கொண்டார்களே தவிர, எத்தனையோ சிஷ்யர்கள் வற்புறுத்திப் பிரார்த்தித்தும், வெளியில் வரவேயில்லை. எல்லாவற்றையும் சின்ன ஸ்வாமிகளையே கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, தம் அறையிலேயே தங்கிவிட்டார்கள். கொஞ்சமேனும் அஹந்தையாவது கியாதியில் (புகழில் ) ருசியாவது இருந்திருந்தால், வெளியில் வந்து சில நிமிஷங்களாவது அங்கு கூடியிருந்த சிஷ்யர்களுக்கு தரிசனம் கொடுத்து அந்த ஏராளமான சிஷ்ய ஸங்கத்தினால் செய்யப்படும் வந்தனாதிகளாகிய மரியாதைகளைப் பெறுவதில் ஸந்தோஷித்திருக்கலாம். அவர் நிலை வேறு. உத்ஸவத்திற்கு வந்திருந்த கூட்டமெல்லாம் கலைந்தபிறகு அவர்கள் வெளியில்
வந்தார்கள். அப்பொழுது ஒரு நெருங்கிய பக்தர் ஸ்ரீமத் ஆசார்யாரிடம் "தங்களுடைய தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அந்த உத்ஸவகாலம் பூராவும் தங்களையே நினைத்துக் கொண்டிருந்தார்கள். தூரத்திலிருந்துகூட தங்களை தரிசிக்க முடியவில்லையே என்ற தாபம் அவர்களுக்கு வெகுவாக இருந்தது. பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் அவர்கள் மனதில் உறுத்திக்கொண்டே எல்லாரும் திரும்பிப்போனார்கள்" என்று சொன்னார். அதற்கு ஸ்ரீமத் ஆசார்யார் தமக்கு அஸாதாரணமான புன்சிரிப்புடன் தமக்கு அஸாதாரணமான ரீதியில், 'அதுவே நல்லது. நான் வெளியில் வந்திருந்தேனேயானால், ஜனங்களுடைய குதூஹலமோ ஆவலோ அப்பொழுதே தீர்ந்திருக்கும். அடுத்த க்ஷணம் முதற்கொண்டு அவர்கள் என்னைப்பற்றி நினைப்பதை நிறுத்திவிடுவார்கள் என்பதும் நியாயம்தானே?" என்றார்கள்.
*To be continued*
No comments:
Post a Comment