*Source:ஸ்ரீ குருகிருபா விலாஸம்*
*தொகுத்தவர்*
*ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் (முன்னாள் ஸ்ரீ ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர், திருநெல்வேலி)*
9.ப்ரஹ்மீபாவம்
மேலே கண்டிருக்கும் ஸம்பவங்கள் ஸ்ரீமத் ஆசார்யாரின் மஹிமையின் லேச லேசத்தை ஒருவாறு உதாஹரணமாகக் காட்டலாமே தவிர அவருடைய திவ்ய மஹிமையை எடுத்துக்காட்ட போதுமானவை அல்லவென்பதை நன்கு உணர்வேன். இதேமாதிரி இன்னும் பல ஸம்பவங்களை எடுத்துச் சொல்லலாம். அவருடன் நெருங்கிப் பழக பாக்கியம் கிடைத்த பக்தர்கள் இன்னும் விசித்திரமான ஸம்பவங்களைப் பற்றிச் சொல்லக்கூடும். இவைகளிலிருந்து ஸ்ரீமத் ஆசார்யார் ஸாமான்ய மனுஷ்யராயிருந்து படிப்படியாய் ஆத்ம நிலையை ஸாதித்த மஹான் என்று நினைப்பதற்கில்லை. மாயையில் அகப்பட்டு கஷ்டப்பட்டு தவிக்கும் ஜனங்களை உத்தாரணம் செய்வதற்காகவே கருணையுடன் அவதரித்த பகவதம்சம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர் உத்தாரணம் செய்யும் விதம் வெறும் உபதேசத்தினால் அல்ல, தாமே அனுஷ்டித்தும் காட்டினார். சிரத்தையுடன் தம்மிடம் வந்து அபேக்ஷிக்கிறவர்களுக்கு அவர்களின் யோக்கியதையை அனுஸரித்து ஸதுபதேசமோ மந்திர உபதேசமோ செய்து அனுக்ரஹித்தார் என்பது வாஸ்தவம். ஆனால் அவருடைய சர்யையை கவனிக்கும்போது அவரிடம் ஸ்வாதீனமாய் யாரும் நெருங்க அச்சப்படுவார்கள்.
ஸ்ரீமத் ஆசார்யார் அவதரித்து அறுபதாவது வயது வந்தவுடன் இதை விசேஷமாக கொண்டாட வேண்டுமென்று சில பக்தர்கள் உத்தேசித்ததற்கு அவர் இடம் கொடுக்கவில்லை. கொண்டாட்டம் வெறும் லௌகிக ரீதியில் இல்லாமல் அதிருத்ர யாகம் ஸஹஸ்ர சண்டீ ஹோமம் முதலானது நடத்த உத்தேசிப்பதாகத் தெரிந்ததும், லோக க்ஷேமார்த்தம் அவைகளை நடத்தலாமென்றும் தம்முடைய ஷஷ்டி அப்த பூர்த்திக்கு ஸம்பந்தமில்லாமல் நடத்த வேண்டு மென்றும் அவர் உத்தரவு செய்ததை அனுஸரித்து 60 வது வயது பூர்த்தியாய் சில மாஸங்களுக்குப் பின் 1953 ஏப்ரலில் இவைகள் அதிவிமரிசையாக நடத்தப்பட்டன. மைஸூர் ஸம்ஸ்தானத்தை திப்புஸுல்தான் ஆண்ட காலத்தில் அவருடைய வேண்டுகோளின்படி ஸ்ரீமடத்தில் இந்த ஸஹஸ்ரசண்டீ ஹோமம் நடந்தது. இப்பால் 150 வருஷங்களுக்கு மேலாக நடந்ததில்லை. இவ்வபூர்வமான யாகங்களை தரிசிக்க பரதகண்டத்திலுள்ள எல்லா பாகங்களிலிருந்தும் ஏராளமான ஜனங்கள் வந்திருந்தார்கள். ஸ்ரீமத் ஆசார்யார் ஸாமான்யமாய் வெளியில் வந்து தரிசனம் கொடுப்பதில்லையென்ற பிரஸித்தி இருந்து வந்த காரணத்தினாலேயே இந்த ஸமயத்திலாவது தரிசனம் கிடைக்குமென்று ஜனங்கள் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீமத் ஆசார்யார் யாக விஷயமாய் செய்திருக்கும் ஏற்பாடு விவரங்களை விசாரித்து விட்டு பரிபூர்ணமாக அனுக்ரஹம் செய்ததுடன் பகவான் இவ்வாராதனத்தை அங்கீகரிப்பார் என்றும் அதற்கு அறிகுறியாக ஹோமகுண்டத்தில் முக்கிய ஆஹுதி செய்யும் காலம் மழை பெய்யும் என்றும் சொன்னார்கள். ஆனால் அங்கு கூடியிருக்கும் லக்ஷக்கணக்கான ஜனங்களை தாம் பார்க்கவாவது அவர்களுக்குத் தாம் தரிசனம் கொடுக்கவாவது ஸம்மதிக்கவில்லை. அவருடைய திவ்ய மூர்த்தியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன் அக்கூட்டத்திலுள்ள யாவரும் அம்மூர்த்தியை தீவிரமாக தியானித்திருப்பார்களென்பதில் ஸந்தேஹமில்லை. அவர் வெளியில் வந்து தரிசனம் கொடுத்திருந்தால் உடனே மறத்திருக்கக்கூடும். இந்த அபரிமிதமான தியானத்தினால் அவர் மூர்த்தியை மறக்கமுடியாமல் மனதில் ஊன்றி வைத்த பாக்கியம் ஏற்பட்டிராது.
மஹா பூஜை ஆராதனை எல்லாம் கிரமப்படி நடந்த பிற்பாடு, ஏற்கெனவே 1931 முதல் சின்னப் பட்டம் வஹித்து ஸ்ரீமத் ஆசார்யாரிடமே கூடவேயிருந்து பாத்திரமாயிருந்துவந்த விசேஷ அனுக்ரஹ ஸ்ரீமத் அபிநவவித்யாதீர்த்த ஸ்வாமிகளவர்கள் இவ்வியாகயான ஸிம்ஹாஸனத்தில் பீடாபிஷிக்தர்களாக பீடாரோஹணம் செய்தார்கள்.
ஸ்ரீகத் ஆசார்யார் சரீரபந்தம் விட்டு தேச கால ரூபாதீதமான பிரஹ்மத்தோடு கலந்து விட்டபடியால் இனி அவர்களுடைய அனுக்ரஹத்தை யாரும் எங்கேயும் எப்பொழுதும் நாடலாம். அவர்கள் மனுஷ்ய சரீரத்துடன் நம் மத்தியில் அறுபது வருஷங்களுக்கு மேலாக இருந்தும் நாம் கிருதார்த்தர்களாகாமல் இன்னும் அவித்யையில் உழலுகிறவர்களாக இருந்தால் அதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? நாமல்லவா அவர்களுடைய திவ்ய ஸந்நிதியைத் தேடிப்போய், அனுக்ரஹம் பெற்று, அவர்களுடைய ஞான வைபவத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்? இப்பொழுதாவது நம் கைக்கு கிட்டினால் போலிருந்த இப்பெரும் விலையற்ற நிதியை அடிக்கடி ஞாபகத்தில் வைத்து அனுஸந்தானம் செய்தாலும் மிக சிரேயஸ்னோயாகும்.
சிருங்கேரியிலுள்ள நதியின் அழகையும், ஸித்தி மலைவனங்களுடைய ராமணீயகத்தையும் ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் லௌகிக ஸம்பத்தையும் கண்டு களிக்க வெகு பேர்கள் நன்கு சிருங்கேரிக்கு வருகிறார்கள். அங்குள்ள இயற்கையின் சோபையையும் ஸ்ரீமடத்தின் உபசாரத்தையும் அனுபவிக்கிறார்கள். ஆனால் இவைகளெல்லாவற்றையும்விட ஸ்ரீமத் ஆசார்யாரின் திவ்ய மூர்த்தியே மேலானதென்பதை மறந்து விடுகிறார்கள். ஆசார்யாரிடம் ஸமீபத்தில் போகிறவர்கள்கூட அவர்களுடைய உண்மையான மஹிமையைத் தெரிந்து கொள்வதில்லை. அவர்களிடம் ஆடம்பரமின்மை, அபாரமான வைதுஷ்யம், த்ருடமான சிரத்தை, ஸர்வபூததயை முதலான குணங்கள் இருப்பதாகக் காண்கிறார்கள்; ஆசார்யாருடைய மஹிமையைப் பற்றி வாயாற மனதினாலும் வாக்கினாலும் ஸ்தோத்திரம் செய்கிறார்கள். இந்த ஸ்தோத்திரங்கள் அவர்களுக்கு எதற்கு? அவர்களுடைய ஸம்பர்க்கத்தினால் எவ்வளவு மட்டும் நாம் பிரயோஜனம் அடைந்தோம், என்பதையல்லவா பார்க்க வேண்டும்? நம் மனஸ் பரிசுத்தமாகி வருகிறதா என்று பார்க்க வேண்டும். இம்மஹான் நமக்கு ஆசார்யாரென்பதில் நாம் கர்வம் கொள்ளலாம். ஆனால் அவருடைய சிஷ்யர் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய யோக்கியதையை நாம் ஸம்பாதித்துக் கொள்ளாமலிருக்கும் வரை இந்த கர்வம் நியாயமாகுமா? சில நவீனர்கள் நன்றாக சில்பவேலை செய்யப்பட்டிருக்கும் விக்நேசுவர மூர்த்திகளை, மேஜையின் மேல் வைத்திருக்கும் காகிதம் காற்றில் பறக்காமலிருப்பதற்காக மேலே வைக்கிறார்கள்! அதுபோலல்லவா ஆகிவிடும், நாம் ஆசார்யாரை ஸ்துதி செய்துவிட்டு ஆத்மலாபத்திற்காக அவர்களை நாடாத விஷயத்தில்? அவ்விதம் நாடுவதற்கும் அவருடைய பரிபூர்ண அனுக்ரஹம் வேண்டும். ஞான நிதியாயும் கருணாநிதியாயுமிருந்துவந்த ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகளின் அனுக்ரஹம் நமக்கு கிடைக்க வேண்டுமென்ற பேரவாவையும் சிரத்தையையும் அளிக்க வேண்டுமென்று பகவானைப் பிரார்த்திப்போம். இம்மஹான் ஊக்கமுள்ள பக்தருக்கு இன்னமும் அனுக்ரஹம் செய்ய ஸித்தமாயிருக்கிறார்.
No comments:
Post a Comment