Monday, January 16, 2023

Why difficulties ? avyaja meaning study

எதையும் தாங்கும் இதயம் தாருங்கள் ஹே குரோ...

என்னிடம் சிலர் கேட்கிறார்கள் நீங்கள் இவ்வளவு பூஜை செய்கிறீர்கள் உங்களுக்கு ஏன் இப்படி ஒரு பெரிய கஷ்டத்தை பகவான் /பெரியவா கொடுத்திருக்கிறார்

அதற்கு பதில் இதோ

"அவ்யாஜ கருணா மூர்த்தி". லலிதா சகஸ்ர நாமத்தில் வருகின்ற அன்னையின் ஒரு நாமம் இது

ஒரு குடும்பம். அதில் தாய், தந்தை, அக்கா, மற்றும் ஒரு குழந்தை இருக்கிறார்கள். ஒரு நாள், அப்பா வீட்டுக்கு வரும்போது நிறைய இனிப்புகள் வாங்கி வருகிறார். அவருக்கு சம்பள நாள் போல இருக்கிறது! 

ஜாங்கிரி என்றால் அந்தக் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதனால் முதலில் ஒரு ஜாங்கிரியை எடுத்து அந்தக் குழந்தை கையில் தருகிறார்கள். சிறு பிள்ளைகளிடம் ஏதாவது இருந்தால், விளையாட்டாக நாம் அதைக் கேட்போமில்லையா, அது நமக்குக் கொடுக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக. அதைப் போல, அப்பா குழந்தையிடம் கேட்கிறார்: "அப்பாக்கு?"

குழந்தை இரண்டு கைகளாலும் ஜாங்கிரியை இறுகப் பிடித்துக் கொண்டு "ஊஹூம்" என்று தலையை ஆட்டுகிறது.

அப்பா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, "அப்பாதானே உனக்கு புதுச் சட்டை வாங்கித் தர்றேன், பொம்மை வாங்கித் தர்றேன், எல்லாம் வாங்கித் தர்றேன்… அப்பாக்கு தர மாட்டியா?"

"ஊஹூம்"

"எனக்குத் தருவாள் பாருங்க", என்று அம்மா வருகிறாள்.

"எனக்கு தர்றியா கண்ணா?" கையை நீட்டிக் கேட்கிறாள்.

"மாத்தேன் போ"

"அம்மாதானே பாப்பாக்கு எல்லாம் பண்றேன். பாப்பாக்கு குளிப்பாட்டி, ட்ரஸ் பண்ணி, கதை சொல்லி, மம்மம் குடுத்து, எல்லாம் பண்றேனே அம்மா. ப்ளீஸ், அம்மாக்கு தாயேன்"

"ஊஹூம். தய மாத்தேன்!" திட்டவட்டமாகச் சொல்கிறது குழந்தை.

அடுத்ததாக அக்கா வருகிறாள்.

"அக்காவுக்கு தர்றியா? அக்காதானே உன்னை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போறேன், அம்மா இல்லாதப்ப உன்னைப் பார்த்துக்கறேன். எனக்கு தா கண்ணா"

கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக் கொண்டு, ஜாங்கிரியை மறைத்துக் கொண்டு, மறுபடியும் 
"தய மாட்டேன்", என்பதாக பலமாகத் தலையை ஆட்டுகிறது குழந்தை.

இந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் குழந்தையுடன் வருகிறார். அந்தக் குழந்தை பயந்து கொண்டே அம்மாவின் சேலைக்குப் பின்னால் மறைந்து கொண்டே தயங்கித் தயங்கி வருகிறது.

இந்தக் குழந்தை அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் இழுத்து, "இந்தா, சாப்பிடு", என்று ஜாங்கிரியைக் கொடுத்து விடுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை இது.

இந்தக் குழந்தையைப் போலத்தான் அன்னை பராசக்தியும். 

"நான் இத்தனை ஜபம் செய்கிறேன், எனக்கு இதைத் தா. இத்தனை முறை சகஸ்ரநாமம் சொல்கிறேன், எனக்கு அதைத் தா. இத்தனை பூஜைகள் செய்கிறேன், எனக்கு இதெல்லாம் தா", என்றெல்லாம் பலரும் கேட்கிறோம், அல்லது பேரம் பேசுகிறோம், இந்தக் கதையில் வரும் குடும்பத்தினரைப் போலவே. 

ஆனால் அதெல்லாம் அன்னைக்கு ஒரு பொருட்டில்லை. காரணம் எதுவும் தேவையில்லாமல் வேலை செய்யும் பெண்மணியின் குழந்தைக்கு இனிப்பைக் கொடுத்து விட்ட குழந்தையைப் போலத்தான் நம் அன்னையும். அவளுக்கும் கருணை செய்வதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை.

"வ்யாஜ" என்றால் காரணம். "அவ்யாஜ" என்றால் காரணமில்லாமல். "அவ்யாஜ கருணா மூர்த்தி" என்றால் காரணமில்லாமல் கருணை பொழிபவள். அதாவது கருணை பொழிய வேண்டுமெனத் தீர்மானித்து விட்டால், அந்த தீர்மானம் ஒன்றே போதும் அவளுக்கு; வேறு எந்த ஒரு காரணமுமே தேவையில்லை. 

ஒரு வேளை நாமும் அவளிடம் காரணமில்லாத, எந்த முகாந்திரமும் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத, அன்பைப் பொழிந்தால், அவளும் நம்மிடம் காரணமில்லாத கருணையைப் பொழிவாளோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ணமும் கூட இல்லாமல் அவளிடம் அன்பு செய்வதே நல்லது.

அதற்காக, நாம் வேண்டிக் கொள்வதெல்லாம் நடக்காதா என்று நினைக்கத் தேவையில்லை. மனமுருகி நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்துக்கும் இறைவன் செவி சாய்க்கிறான் என்பார், ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். "நான் உனக்காக அதைச் செய்தேன், நீ எனக்காக இதைச் செய்", என்று மனிதர்களிடம் எதிர்பார்ப்பது போல அன்னையிடம் முடியாது என்பதே கருத்து.

என்னைப் பொருத்தவரை இன்னும் பக்தியும் பூஜையும் அதிகமாகுமே தவிர குறையாது.சீதாபிராட்டிக்கு ஏற்பட்ட கஷ்டத்தைவிடவா எனக்கு ஏற்பட்டது.

எனக்கும் சில சமயங்களில் தோன்றும் என்னடா நமக்கு இப்படி கஷ்டமா வரதேன்னு.
கடவுளுக்கு கண்ணே இல்லையான்னு,பெரியவா கைவிட்டுடாளேன்னு.

ஆனால் அடுத்த வினாடியே பத்ராசல ராமாதாசரின் இந்த பாடல் என்னை சரியான வழிக்கு கொண்டு செல்லும்

பத்ராசல ராமதாசர் தானேஷாவின் சிறையில் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்.
சவுக்கால் அடி அடி என்று அடிக்கிறார்கள் ராமனுக்கு அரசாங்க பணத்தில் பத்ராசலத்தில்கோவில் கட்டின பணத்தை தரச்சொல்லி.

அப்போது அவர் ராமரை திட்டி நிந்தா ஸ்துதியாக பாடுகிறார்
"இக் வாஷுகுல திலகா " என்ற பாடலில்

ஹே ராமா உன்னோட தம்பி பரதனுக்கு மரகதமணி மாலை,சத்துருக்கணனுக்கு வைரமாலை,லக்‌ஷமணனுக்கு முத்து மாலை எல்லாம் ஒவ்வோன்னும் பத்தாயிரம் வாராகன். 

உன்னுடைய மனைவி சீதாதேவிக்கு புளியமரத்தின் இலைபோல தங்க பதக்கம் போட்டேனே அதன் விலை பத்தாயிரம் வராகன்

அதெல்லாம் விடு உன் கழுத்துலே நவரத்தின மாலை போட்டுண்டு மினுக்கறையே
அதெல்லாம் யார்போட்டது.

உங்க அப்பா தசரதனா இல்லே உன். மாமானார் ஜனகமஹாராஜா போட்டதுன்னு நினைப்பா? 

இந்த ராமதாசன் போட்டது. இதெல்லாம் வாங்கிண்டு என்னை ரக்‌ஷிக்காமல் என்னை இப்படி அடி வாங்க வைக்கிறயே இது நியமா?

இப்படி எல்லாம் சொல்லிட்டு அடுத்த வினாடியே புத்தி தெளிந்து ராமா உன்னை திட்டிட்டேனா. 

தப்பு ராமா இவர்கள் சாட்டையால் அடிக்கும் வலி தாங்க முடியாமல்
திட்டிட்டேன் மன்னிச்சுடு ராமா.

நீ என்னை ரக்‌ஷிக்மால்போனால் வேறு யார் என்னை ரக்‌ஷிப்பார்கள்

இந்தப் பாட்டுதான் எனக்கு ஆறுதல் அளிக்கிறது.


தொழுவது என் தொழில் தர்மம்

அளிப்பதும் மறுப்பதும் அவர் தொழில் தர்மம்.

As received.....

No comments:

Post a Comment