Monday, January 16, 2023

Poems of kalidasa

காளிதாசன் கவிதைகள்  -  நங்கநல்லூர்  J K  SIVAN  

நாம்  தமிழர்கள்.  தமிழில் கம்பனை, பாரதியை, ஒளவையாரை நாம்  ரசிப்பது போல் அவற்றை  வேறு மொழியில் எழுதினால்  ரசிக்குமா, படிப்பவர்கள் வேறு மொழியில் தமிழின் இனிமையை, சந்தத்தை, பல்வேறு  உள் அர்த்தங்களை அனுபவிக்கமுடியுமா.?  அதுபோலவே தான் சமஸ்க்ரிதத்திலும். அதன் சுவையை   அறிந்தவர்கள்,அனுபவித்தவர்கள் என்னதான் வேறு மொழியில் அதை மொழி பெயர்த்தாலும் ஒரிஜினல் ருசி கிடைக்காது.

காளிதாசன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அப்படிப்பட்டவை.  போஜ ராஜாவின்  அரண்மனையில் அவன் பாதுகாப்பில், அரவணைப்பில் வளர்ந்தவன் காளிதாசன்.  ஒரு சம்பவம் சொல்கிறேன்.

தாரா நகரம்  போஜராஜனின் தலைநகரம்.  ராஜாக்கள்  அந்த காலத்தில் மாறுவேஷத்தில் இரவில் நகர் வலம்  வந்து நாட்டு நடப்புகளை நேரில் கண்டறிவாரகள்.  குற்றங்களை கவனித்து மறுநாள் அரண்மனையில் குற்றவாளிகளை அழைத்து விசாரித்து தண்டனை கொடுப்பது வழக்கம்.

மாறுவேஷத்தில்  போஜராஜன் நகர்வலம்  சென்றபோது,  ராத்திரி நள்ளிரவு சமயம் ஒரு வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். நள்ளிரவில் விளக்கெரிய காரணம் என்ன என்று அறிந்து கொள்ள, நெருங்கிச் சென்று ஜன்னல் வழியாக  உள்ளே எட்டிப்  பார்த்தான்.  அந்த வீட்டில் மனைவி அமர்ந்திருக்க கணவன் அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்தான். அவர்களது அருகில் தூளியில் உறங்கிக் 
கொண்டிருந்த குழந்தை கண்விழித்து   தூளியை விட்டு  நழுவி  கீழே  இறங்கி தவழ்ந்தது.  அருகில் இருந்த எண்ணெய்  விளக்கைப் பார்த்து  அதோடு விளையாட  தவழ்ந்தது. இதைக் கண்ட மனைவி பதறினாள், மடியில் தலைவைத்து தூங்கிய கணவன் நித்திரை பாதிக்கக் கூடாது குழந்தையையும் போய் பிடிக்கவேண்டும்  என்ன செய்வாள்?  மனதார  அக்னி தேவனைத் துதித்தாள். பதிவிரதையான அவள், கணவனை உறக்கத்திலிருந்து எழுப்புவது பாவம் என்று அக்னி தேவனை நோக்கி தன் சிசுவை எரித்து விடாதே என்று வேண்டினாள். அந்த குழந்தை விளக்கின் நெருப்பைத் தீண்டியும் அதைத்   தீ சுடவில்லை. ஆச்சரியமான இந்த நிகழ்வைக் கண்டான் போஜன்.

மறுநாள் அரசவையில்  இந்த நிகழ்வை மனதில் வைத்து  புலவர்களைப் பார்த்து சொன்னான் "நேற்று இரவு ஒரு அதிசய நிகழ்ச்சியைப் பார்த்தேன்.  ஒரு வீட்டில் தீ சந்தனக் குழம்பானது" ("ஹுதாசனஸ் சந்தன பங்க சீதள:") அதைப்பற்றி உங்களால்  என்ன யூகிக்க முடிகிறது என்று பாடல் அமைத்து பாடுங்கள் என்று சொன்னான். 

சரஸ்வதியின் அவதாரம் என்று கருதப் பட்ட மகாகவி காளிதாசன்  ஒரு கணம் கண்மூடி  யோசித்தான். என்ன நடந்தது என்று தன் ஞானக் கண்ணால் அறிந்தான். அதை ஒரு கவிதையாகவும் சமைத்தான்:

सुतंपतन्तं प्रसमीक्ष्य पावके न बोधयामास पतिं पतिव्रता |
तदाभवत्तत्पति भक्तिगौरवा द्हुतासनश्चन्दनपङ्कशीतल:: ||

''ஸுதம்பதந்தம் ப்ரஸமீக்ஷ்ய பாவகே ந போ³த⁴யாமாஸ பதிம் பதிவ்ரதா |
த³தா³ப⁴வத் தத்பதி ப⁴க்திகௌ³ரவாத்³ த⁴தாஸநஸ்²சந்த³நபங்கஸீ²தல: ||

பதிவிரதை ஒருத்தி,நெருப்பிலே, இறங்கி விட்ட  குழந்தையை  விலக்க,  அதே சமயம் கணவனை அயர்ந்த  உறக்கத்திலிருந்து எழுப்ப  விரும்ப வில்லை. அப்போது, அவளுடைய பதி பக்திக்கு மரியாதை கொடுத்து, நெருப்பு   சந்தனக் குழம்பாக (குழந்தையை சுடாமல்) ஆனது.

இவ்வாறு காளிதாசன் நடந்த சம்பவத்தை கவிதையாக சொன்னான். அரசனும் மகிழ்ந்து காளிதாசனுக்கு பரிசில் கொடுத்தான். தருமங்கள் செழித்து வளர்ந்த போஜன் அரசாட்சியில் பதிவிரதா தர்மமும் சிறந்து விளங்கியது.

No comments:

Post a Comment