Friday, January 13, 2023

Om

''ஓம்''   ப்ரணவ  சப்தம்.  -   நங்கநல்லூர்  J K  SIVAN 
ரெண்டே ரெண்டு எழுத்து   ''ஓம்''.  அடேயப்பா,  அதற்கு எவ்வளவு சக்தி. எவ்வளவு உள்ளர்த்தம்.  எந்த மந்த்ரமும் இந்த ஓம் இல்லாமல் ஆரம்பிக்காது முடியாது.  எந்த கடவுள் மேல் அர்ச்சனை ஸ்தோத்ரம் சொன்னாலும்  முதலில் இந்த ஓம்  இல்லாமல் அது துவங்காது. அதைப்  பற்றி நாம் ஏன் ரொம்ப  யோசிப்பதில்லை
''ஓம்'' என்பது மூலாதார  பிரணவ மந்த்ரம்..பகவானின் எல்லா நாமங்களையும், குணங்களையும், அழிவற்ற, நித்ய, ஸாஸ்வத,   தூய்மையான, மாறுதலே இல்லாத,  எல்லையற்ற  ஞானத்தையும் அளவற்ற  பெரும் சக்தியையும்  தன்னுள் கொண்டது.
''ஓம்''  எனும் சப்தம் பரமாத்மாவை தியானிக்க அவசியம்.  வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் பகவானை தியானிக்க  ''ஓம்'' என்ற பிரணவ நாமத்தை  உச்சரி, என்கிறது.  வால்மீகி மூல இராமாயணத்தில் இராமபிரான் காலையில் எழுந்ததும்  ''ஓம்''காரத்தை உபாசனை செய்தார்  என்கிறார். 
தெய்வத்தை அழைக்கும் போதும் "ஓம் நம: சிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் பகவதயே நம:, ஓம் கணேசாய நம:, ஓம் சரவண பவ" என்று தான்  ஆரம்பமாகும். மந்த்ர தந்த்ர உச்ச்சாடனங்கள்  ''ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம்''  என்று தான் தொடங்கும். 
கோபத பிராஹ்மணம்  – "ஆத்மபேஷஜ்யம் ஆத்ம கைவல்யம் ஓங்காரஹ:" என்று சொல்கிறது. அதாவது ஓங்காரமானது ஆத்மாவை சிகிச்சை செய்வதும், ஆத்மாவிற்கு முக்திக்கான வழிகாட்டுவதுமாகும்  மேலும்   "அம்ருதம் வை ப்ரணவ:" என்கிறது.  அதாவது ''ஓம்''  என்பது  அம்ருதம் – அமுதம்''  என்று அர்த்தம்.

 சதபத பிராஹ்மணத்தில் யாக்ஞ்யவல்கியர்:    ''ஓங்காரம் மங்களமானது, பவித்ரமானது, தர்ம காரிய ரூபமான செயல்களின் மூலம் எல்லா விருப்பங்களையும் சித்திக்க வைப்பது'' யோக தர்சனத்தில் பதஞ்சலி ரிஷி:  "தஸ்ய வாசக ப்ரணவ:" -- அதாவது  பகவானுடைய நாமம் பிரணவம்''.
முண்டகோபனிஷத்:  'ஆத்மாவின் தியானம் ஓங்காரத்தால் தான் நடக்கிறது''
 கடோபனிஷத் : ''எந்த பதத்தை வேதங்கள் போற்றுகிறதோ, எல்லா தவங்களிலும் மேன்மையான தவமானதோ, புலனடக்கத்தை தரவல்லதோ, பிரம்மத்தின் மீது வேட்கையை உண்டாக்க வல்லதோ, மரணத்தை வெல்ல வல்லதோ, அந்த பதம் ஓங்காரமாகும் என்று யமராஜா நசிகேதனிடம் சொல்கிறார்.
தைத்திரிய உபநிஷத் :"ஓம் இதி ப்ரஹ்ம", "ஓம் இதி இதம் ஸர்வம்" அதாவது ஓங்காரமே பிரம்மம், அந்த முடிவற்ற ஓங்காரத்தினுள்ளே எல்லாம் அடக்கம்'' 
 அக்னி புராணம் : ''ஓங்காரத்தை நன்கறிந்து உணர்ந்தவனே யோகி, அவனே துக்கத்தை வென்றவன்''
  பிறந்த குழந்தை தன் மழலை மொழியில் அ, உ, ம, ஓம், ஓம் என்கிறது.அழுவதும் கூட அப்படியே தான். அந்த குழந்தை எழுப்பும் ஓசையம் அப்படித்தான்.  வயதான பல்லிழந்தவர் கூட "ஓம்''  என்று  நன்றாக சொல்ல முடியும். பிறந்த குழந்தை பருவம் முதல் ஒன்றிரண்டு வயது வரை இராமன், கிருஷ்ணன் என்று சொல்ல வராது. ஆனால் ஓம் என்று சொல்ல நன்றாக வரும். அதே போல் பல் விழுந்த முதியவருக்கும் ஓம் என்று நன்றாக சொல்ல வரும்.
''ஓம்''  சிறியதினினும் சிறியது, பெரியதினும் பெரியது :-பகவான்  நுண்மையினும் நுண்மையானவன். சிறியதினும் சிறியதாய் பெரியதினும் பெரியதாய் உள்ளவன். அவனின் நாமமான ஓம் என்ற ஒலி அளவில் மூன்று மாத்திரை தான். மற்ற நாமங்களோ மாத்திரை அளவில் பெரியது. ஆயினும் ஓங்காரத்தின் அர்த்த விளக்கமோ விளக்க முடியாதது, முடிவற்றது, பெரியதினும் பெரியது. அந்த மூன்று மாத்திரை என்பதின் மகத்துவம் அளவற்றது.

 ''அ, உ, ம் ''என்ற  3 எழுத்துகள் சேர்ந்து ''ஓம்'' ஆகிய  பிரணவ சப்தம் ஒலிக்கிறது.  அ, உ என்பது உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து. மேலும் 'அ' என்பது இறைவனையும், 'உ' என்பது உலக உயிர்களையும், 'ம்' என்பது இந்த பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும். இரண்டு பொருட்கள் உயிருள்ளவை என்பதை உணர்த்த 'அ', 'உ' என்ற இரண்டு உயிரெழுத்துகளும், உயிரற்ற ஜடமான இயற்கையாகிய இந்த பிரபஞ்சத்தை உணர்த்த 'ம்' என்ற மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment