*" கோபாலா! அந்த டின்னோட, எல்லாத்தையும் அந்தப் பொண் கிட்ட கொடுத்துடு."* - பெரியவா.
ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றிருந்த தன் பெண்ணை அழைத்துக் கொண்டு பெரியவா தரிசனத்திற்கு வந்திருந்தாள்.
"ரொம்ப நாள் கழிச்சு, முழுகாமல் இருக்கு. அதான் கவலையாயிருக்கு. நல்ல படியா குளி குளிக்கணும். ரொம்பத் தொலைவிலேர்ந்து நடந்து வர்றோம். சாமி ஆசிர்வாதம் பண்ணனும்."
பெரியவா கையைத் தூக்கி ஆசி வழங்கினார். தாயார் தொடர்ந்து பேசினாள்," நாங்க ரொம்ப ஏழைங்க சாமி. முழுகாமல் இருக்கிற மவளுக்கு , வாய்க்கு வேண்டிய பதார்த்தங்களை வாங்கிக் கொடுக்கக் கூட முடியலை. சரியா சாப்பாடு போடும் வசதியில்லை. அடுப்பும் சாம்பலை துண்ணுது. "
அந்த சமயம் ஸ்டேட் பாங்க் ரங்கநாதன், ஒரு டப்பா நிறைய கட்டித் தயிர் கொண்டு வந்து சமர்ப்பித்தார். " நீயே அந்த டப்பாவை, அந்த அம்மா கிட்ட கொடுத்துடேன். "பெரியவா கூறினார். தயிர் டப்பா இடம் மாறியது.
கோபாலய்யர் (என்ஜினீயர்) பிறந்த நாள். வழக்கப்படி ஒரு டின் நிறைய இனிப்பு, உறைப்பு தின்பண்டங்கள் கொண்டு வந்தார், வேத பாடசாலை மாணவர்களுக்காக.
" கோபாலா! அந்த டின்னோட, எல்லாத்தையும் அந்தப் பொண் கிட்ட கொடுத்துடு. " டின் இடம் மாறியது.
அசோக் நகரிலிருந்து ராமு என்ற பக்தர் வந்தார். "அந்தப் புள்ளைத்தாச்சி நடந்தே வந்திருக்கா. திரும்பிப் போற போதாவது பஸ்ஸிலே போகட்டும். வழிச் செலவுக்கு ஏதாவது கொஞ்சம் கொடு."
ராமுவுக்குப் பரம சந்தோஷம் பெரியவாளே ஆக்ஞை பண்ணுகிறார்கள் அந்தப் பெண்ணின் தாயாரிடம் சென்று சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தார்.
தாயும், மகளும் ஆயிரம் நன்றி சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அசோக் நகர் ராமுவைப் பார்த்து, "எவ்வளவு ரூபாய் கொடுத்தே?" என்று கேட்டார் பெரியவா. பல பேர் எதிரில் தொகையைக் சொல்வதற்கு அவருக்குத் தயக்கமாக இருந்தது.
பெரியவா சொன்னார்கள் என்றால், லட்சக்கணக்கில் கொண்டு வந்து கொட்டுவதற்குப் பல பெரிய மனிதர்கள் தயாராக இருக்கிறார்கள். நான் எம்மாத்திரம்?
"நாலாயிரத்துச் சொச்சம் தான் இருந்தது. அதைக் கொடுத்தேன்..... "
" நான் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கச் சொல்லலையே? "
இப்போவெல்லாம் டெலிவரிக்காக கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போனால் கூட மூணு, நாலு ஆயிரம் ஆயிடறது பெரியவா..." என்று பணிவுடன் கூறினார் ராமு.
சில நிமிஷங்களுக்குப் பின் பெரியவா சொன்னார்கள், "நீ வெறும் ராமன் இல்லே, தயாள ராமன்!"
"போதும்! நாலு தலைமுறைக்கு இந்த வார்த்தையே போதும் என்று நெஞ்சுருகச் சொன்னார், ராமு என்கிற ராமன்.
ஜய ஜய சங்கர...
ஹர ஹர சங்கர..
காஞ்சி சங்கர ..
காமகோடி சங்கர...
ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்...
இன்றைய நாள் எல்லாம் வல்ல நம் குருவின் திருவருளால், இனிய நாளாக அன்பு பிரார்த்தனைகள்.
No comments:
Post a Comment