Wednesday, December 1, 2021

7 items during a pitru sraddham

*பித்ருக்களுக்கு செய்யும் ச்ராத்தத்தில் முக்கியமாக இந்த ஏழு பொருட்கள் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.*

*உச்சிஷ்டம் நிர்மால்யம் வமனம் ஶ்வேத பர்ப்படம்*.
*ஶ்ராத்தே சப்த பவித்ராணி தௌஹித்ர: குதபஸ் திலா:*

*1.உச்சிஷ்டம்* என்றால் எச்சில் பொருள். பசுமாட்டினிடம் பால் கறக்கும்போது முதலில் கன்றுக்குட்டியை பால் ஊட்ட செய்து, பால் சுரந்தபின் கன்றை விலக்கி விட்டு மடியை அலம்பாமல் கன்றுக்குட்டியின் வாய் எச்சிலுடன் கறக்கப்படும் பசும்பால் தான் உச்சிஷ்டம் என்பது. இது பித்ருக்களுக்கு மிகவும் பிரியமானது.பசும்பால் கட்டாயம் சிராத்தத்தில் சேர்க்கவேண்டும்.🙏

*2 . சிவ நிர்மால்யம்* 
தபஸ் செய்து பகீரதனால் ஆகாயத்திலிருந்து பூமிக்கு வரவழைக்கப்பட்ட கங்கா நதியை சிவபெருமான் தனது சிரஸ்ஸில் தாங்கி கொண்டார். அதன்பிறகே ஜடை முடியிலிருந்து கங்கா தேவி பூமியில் இறங்கினாள். ஆகவே கங்கையானது சிவனுக்கு அபிஷேகம் செய்த ஜலமாகையால் சிவநிர்மால்யம்.
சிராத்தத்தில் ஆரம்பத்தில் கங்கா ஜலத்தால் வீடு முழுவதும் குறிப்பாக சமையல் செய்யும் இடத்தை ப்ரோக்ஷித்து பின்னர் ச்ராத்த சமையல் செய்ய ஆரம்பிக்கலாம் மற்றும் கங்கா ஜலத்தை சாப்பிடும் முன்னர் ஆபோசனம் போடுவதற்கும் உபயோகிக்கலாம்🙏

*3 . வமனம்*
என்றால் வாந்தி பண்ணி துப்பியது எனப்பொருள். அதாவது தேனீக்கள் பல பூக்களிலிருந்து தங்கள் வாயில் தேன் சேகரித்து கூட்டில் உமிழ்கின்றன. தேன் என்பது தேனிக்களால் துப்பப்பட்ட எச்சில் பொருள். தேன் நம் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் ப்ரியமானது. ஆகவே தேன் சேர்த்து கொள்வதால் பித்ருக்கள் மிகவும் ஸந்தோஷமடைகிறார்கள் 🙏

*4. ஶ்வேத பர்ப்படம்.*
ஶ்வேதம் என்றால் வெண்மை, பர்ப்படம் என்றால் பட்டுதுணி, பித்ருக்களுக்கு வெண் நிறமுடைய பட்டுதுணி மிகவும் ப்ரியம்.
ஆகவே கர்த்தா ச்ராத்தத்தின் போது வெண்நிற பட்டு வேஷ்டி கட்டிகொள்வதும் ச்ராத்தத்தில் சாப்பிடுபவர்க்கு வெண்பட்டு தந்து அதை கட்டிக்கொண்டு சாப்பிடச்செய்வதும் பித்ருக்களுக்கு ஸந்தோஷத்தையும் சிராத்தம் செய்பவருக்கு நீண்ட ஆயுளையும் பெற்றுத்தரும்.🙏

*5 . தௌஹித்ர* 
என்றால் பேரன், பேத்திகள். யாருக்கு சிராத்தம் செய்கிறோமோ அவருடைய பெண்ணின் குழந்தைகளான பேரன், பேத்திகள். இறந்த தாத்தா பாட்டிக்கு மிகவும் பிரியமானவர்கள்.
மேலும் தௌஹித்ர என்பதற்கு வேறு பொருளும் பெரியோர்களால் கூறப்படுகிறது. அதாவது அமாவாசை திதி அன்று பசுமாட்டிற்கு நிறைய புற்கள் போட்டு சாப்பிடசெய்து மறுநாள் பிரதமை அன்று அம்மாட்டிலிருந்து கறந்த பாலை தயிராக்கி அதை வெண்ணையாக்கி அதை நெய்யாக காய்ச்சினால் அதுவே தௌஹித்ர எனப்படும் பொருள். அதாவது அப்போது காய்ச்சிய நெய் பித்ருக்களுக்கு மிகவும் ப்ரியமானது. 🙏

*6. குதப* என்றால் சிராத்தம் செய்யவேண்டிய நேரம். பகல் சுமார் 11.30க்கு மேல் 12.30 மணி வரையுள்ள காலமே குதப காலம். கூடியவரை இந்த நேரத்தில் சிராத்தம் செய்தல் - முடித்தல் அதிகமான பலனை தரும்.🙏

*7. திலா*
என்றால் கருப்பு நிறத்தில் உள்ள எள். இதுவும் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரும்.

வெள்ளை எள் மஹா கணபதி போன்ற சில தெய்வங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

கருப்பு நிற எள் பித்ருக்களுக்கு மகிழ்ச்சியை தரும். ஆகவே ச்ராத்தத்தில் தாராளமாக உபயோகிக்கலாம்.

ஆகவே மேற்கூறிய

1.பசும்பால்
2.கங்கா ஜலம்
3.தேன்
4.வெண்பட்டு
5.புத்துருக்கு நெய்
6.குதப காலம்
7.கருப்பு எள்

இந்த ஏழு பொருட்கள் ச்ராத்த்தில் சிறிதளவாவது சேர்த்து செய்வது நிறைவான பலனை தரும். பித்ருக்களின் ஆசியையும் பெறலாம்🙏

பதிவு:
பட்டு சாஸ்திரிகள்

No comments:

Post a Comment