Monday, August 23, 2021

Krishna Avatar part 29

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ... 🙏🙏🙏
     
           தஸாவதாரம்

          ஸ்ரீகிருஷ்ணாவதாரம்

 பகுதி 29

 பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர்,

 கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன்,

 ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான்

 தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே.

 பெரியதிருமொழி 01.08.04 திருமங்கையாழ்வார்

 விளக்கம்

அன்று
-
முற்காலத்தில்

பார்த்தற்கு ஆய்
-
அர்ஜூனனுக்காக

பாரதம்
-
பாரத யுத்தத்திலே

கை செய்திட்டு
-
கையும் அணியும் வகுத்து

வென்ற
-
வெற்றிபெற்ற

பரம் சுடர்
-
பரமாத்மாவானவனும்,

அங்கு ஆயர்தம் பாடியில்
-
அங்கே திருவாய்ப் பாடியிலே

குரவை கோத்து பிணைந்த
-
ராஸக்ரீடை செய்தருளின

எம் கோவலன்
-
நமது கோபாலனும்,

ஏத்துவார்தம்
-
தன்னைத் துதிப்பவர்களுடைய

மனத்து
-
நெஞ்சிலே

உள்ளான்
-
வஸிப்பவனும்

இடவெந்தை
-
திருவிடவெந்தையிலே

மேவிய
-
பொருந்திய

எம்பிரான்
-
அஸ்மத் ஸ்வாமியுமானவன் எழுந்தருளியிருக்கப்பெற்றதும்

தீர்த்தம் நீர் தட சோலை சூழ்
-
புண்ய தீர்த்தங்களாலும் பெரிய சோலைகளாலும் சூழப்பெற்றதுமான
திருவேங்கடம் (திருமலை) அடை  நெஞ்சமே!    

அஸ்தினாபுரம் செல்லும் முன் தருமர் பாண்டவர்களிடம் தன் சகோதரர்கள் (கௌரவர்கள்)  குரு உட்பட பலருடைய இறப்புக்கு தாங்கள் காரணமாகி விட்டோமே என வருந்தி தான் காட்டிற்குச் சென்று தவம் செய்யப்போவதாக தெரிவித்தார். இதற்கு பாண்டவர்களனைவரும்  காட்டிற்குச் செல்ல கூடாது என்றும் ராஜ்ஜியத்தை ஏற்க வேண்டுமென வேண்டினர். வியாசரும் பல்வேறு அறிவுரைகள் கூறி அரசை ஏற்க வற்புறுத்தினார். நீண்ட நேர சமாதனத்திற்குப் பின் தருமர் ஒப்புக் கொண்டார்.  
அஸ்தினாபுரத்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். நகரை நன்கு அலங்கரித்தனர். நகரம் கோலாகலமாகத் திகழ்ந்தது. தெருவெங்கும் மாலைகளும், தோரணங்களும் காட்சியளித்தன. சந்தனமும், கஸ்தூரியும் மலர் மாலைகளும் மணம் வீசி அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தின. 'எங்கள் மாமன்னர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்க' என்னும் வாழ்த்தொலிகளுக்கிடையே தருமர் அஸ்தினாபுரம் அடைந்தார்.

தருமர் உயர்ந்த பொற் பீடத்தில் கிழக்கு முகமாக அமர்ந்தார். அவருக்கு எதிரே அழகு மிக்க பொற் பீடத்தில் கண்ணன் அமர்ந்தார். தருமர் நடுவில் இருக்க பின்புறம் இருந்த பீடங்களில் பீமனும், அர்ச்சுனனும் அமர்ந்தனர். அழகான இருக்கையில் நகுலன், சகாதேவன் , குந்தி ஆகியோர் அமர்ந்தனர். திருதிராட்டிரன் முதலான மற்றவர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். தருமர் அருகில் திரௌபதியை அமரவைத்துத் தௌமியர் விதிப்படி ஹோமம் செய்தார். கண்ணன் புனித கங்கை நீரால் தருமருக்கு அபிஷேகம் செய்து முடி சூட்டினார். எங்கும் மேலதாளம் முதலான மங்கள வாத்தியங்கள் முழங்கின. அந்தணர்கள் வாழ்த்தினர். தருமர் அவையினரை நோக்கி' அவையோரே, எங்களது பெரிய தந்தை திருதிராட்டிர மாமன்னர் எங்களுக்கு தெய்வம் போன்றவர், என் நன்மையை விரும்பும் அனைவரும் அவரையும் போற்றுதல் வேண்டும். உங்களுக்கும், எங்களுக்கும் அவரே அரசர். நீங்கள் அவருக்குச் செய்யும் நன்மையே எனக்குச் செய்யும் நன்மையாகும். எனது இந்த விருப்பத்தை நீங்கள் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.' என்று கூறினார். பிறகு அனைவரையும் அவரவர் இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். தருமர் குருக்ஷேத்திர வெற்றிக்குக் காரணமாக இருந்த கண்ணனைக் கை கூப்பித் தொழுதார். கண்ணனை நூறு நாமங்களால் போற்றிப் புகழ்ந்தார். 'யதுகுலத் திலகமே உம் அருளால் இந்த அரசு எனக்குக் கிடைத்தது. உலகம் உம் அருள் பார்வையால் நிலை பெற்றுள்ளது. உமக்குப் பலகோடி வணக்கம்' எனப் பணிவுடன் வணங்கினார்.
பின் கண்ணன் தங்குமிடம் சென்றார். தருமர் அங்கு சென்றபோது கண்ணன்  தியானத்தில் இருந்தார் அது கண்டு வியந்த தருமர் 'மூவுலக நாயகனே உலக உயிர் அனைத்தும் உம்மை நோக்கி தியானம் செய்கையில் நீர் மட்டும் யாரை எண்ணி தியானிக்கிறீர்' என வினவினார்.
'யுதிஷ்டிரா! அம்புப் படுக்கையில் இருக்கும் பீஷ்மர் என்னை நோக்கி தியானம் செய்துக் கொண்டிருக்கிறார். ஆகவே, எனது உள்ளமும் அவரிடம் சென்றிருந்தது. எவரது நாணொலிக் கேட்டு இந்திரனும் நடுங்குவானோ அந்த பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. முன்னொரு சமயம் மூன்று கன்னியர் பொருட்டு அரசர்கள் அனைவரையும் வீழ்த்தி வெற்றி கண்ட அந்த்ப் பீஷ்மரிடம் மனம் சென்றிருந்தது. தெய்வ மங்கை கங்கையின் மைந்தரும் வசிஷ்டரின் சீடருமான பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. எவர் வேத வேதாங்கங்களையும் முக்காலங்களையும் உணர்ந்தவரோ அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. எவர் தேவகுருவிடம் அரச நீதியையும், பிரம புத்திரரான சனத்குமாரரிடம் ஆத்ம வித்தைகளையும், மார்க்கண்டேயரிடம் சந்நியாச தர்மத்தையும் அறிந்தவரோ, அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. எவர் தனது மரணத்தைத் தடுத்து நிறுத்தும் தவ மேன்மை மிக்கவரோ, எவர் புதல்வனின்றியும் புண்ணியம் பெறத் தக்கவரோ அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. யுதிஷ்டிரா அந்தப் பீஷ்மர் மறைந்தால் நல்லறங்களும் மறைந்து விடும். ஆகவே அவர் மரணம் அடைவதற்குள் அவரிடம் உள்ள ஞான நல்லறிவை அறிந்து கொள்வாயாக" என்றார் கண்ணன்.

பீஷ்மப் பிதாமகரின் பெருமையைக் கண்ணன் வாயால் சொல்லக் கேட்ட தருமர் கண்ணீர் விட்டார். 'வஞ்சனையால் அவரை வதைக்கச் செய்த நான் எந்த முகத்துடன் அவரைக் காண்பேன் 'என நா தழுதழுக்க வினவினார்.
பின்னர் கண்ணனும், பாண்டவர்களும் பீஷ்மரைக் காணத் தேரேறிக் குருக்ஷேத்திரம் சென்றனர்.  குருக்ஷேத்திரம் நோக்கிச் சென்றவர்கள் ஓகவதி என்னும் நதிக் கரையில் அம்புப் படுக்கையில் மாலை நேர சூரியன் போல இருந்த பீஷ்மரைக் கண்டனர். கண்ணனும், பாண்டவர்களும், கிருபரும் சிறிது தூரத்திலேயே பீஷ்மரைக் கண்டதும் தேரிலிருந்து இறங்கி நடந்து அவரை நோக்கிச் சென்றனர். அணையும் தீபம் போல் இருந்த பீஷ்மரைப் பார்த்து கண்ணன் வருத்தத்தோடு சொல்லத் தொடங்கினார். 'அறிவின் சிகரமே அம்புகளால் தாக்கப்பட்ட உங்கள் உடம்பு வலியின்றி இருக்கிறதா? உமது அறிவு தெளிவாக உள்ளதா? உம் தந்தையாகிய சந்தனு கொடுத்த வரத்தால் உங்கள் மரணத்தைத் தள்ளிப் போடும் ஆற்றல் பெற்றுள்ளீர் நீர் அனைத்தும் அறிந்தவர், சத்தியத்திலும், தவத்திலும், தானத்திலும் தனுர் வேதத்திலும் அறம் பொருள் இன்பங்களை உணர்ந்த மேன்மையிலும் உம்மைப் போன்ற ஒருவரை நான் மூவுலகிலும் காணவில்லை. தேவாசுரர்கள் அனைவரையும் நீர் ஒருவரே வெல்ல வல்லீர். எட்டு வசுக்களின் அம்சங்களும் ஒன்று சேர்ந்த ஒன்பதாம் வசு என உலகம் உம்மைப் போற்றுவதை நான் அறிவேன். பூமியில் உள்ள மனிதர்களில் உமக்கு ஒப்பான ஒரு மாமனிதன் யாரும் இல்லை. இதிகாச புராணங்களில் உள்ள தரும சாத்திரங்கள் அனைத்தும் உம் உள்ளத்தில் நிலைப் பெற்றுள்ளன.இவ்வுலகில் தோன்றும் சந்தேகம் அனைத்தையும் உம்மால் தான் போக்க முடியும். மனித குல மாணிக்கமே தருமரின் மனதில் உதித்த சோகத்தையும், சந்தேகத்தையும் விலக்க வேண்டும்"

கண்ணனின் உரையைக் கேட்ட பீஷ்மர் கை கூப்பித் தொழுதார். மெல்லத் தலையை உயர்த்திச் சொன்னார் 'உலக உயிர்களின் பிறப்புக்கும், இறப்புக்கும் காரணமான நாயகரே உம்மை நான் சரணடைந்தேன் உமது அருளால் உமது விசுவரூபத்தை நான் காணும் பேறு பெற்றேன். உமது திருமுடி ஆகாயத்தை அளாவியிருக்கிறது. உமது திருப்பாதங்கள் பூமியில் தங்கியிருக்கின்றன. திக்குகள் உமது கைகளாக விளங்குகின்றன. சூரியன் உமது கண் ஆவான். காயாம்பூ மேனி உடையவரே மின்னல் போல் ஒளி வீசும் உமது மேனியைக் கண்டு வியப்படைகிறேன் தாமரைக்கண்ணனே பக்தியுடன் உம்மைச் சரண் அடைந்த எனக்கு நற்கதியை அருள வேண்டும்' எனப் போற்றினார்.

கண்ணபிரான், எம்மிடத்தில் உமக்கு மேலான பக்தி இருப்பதால் எனது விசுவரூபத்தைக் காட்டினேன். இன்று முதல் மேலும் 30 நாட்கள் நீங்கள் உயிருடன் இருக்கப் போகிறீர்கள். இந்த முப்பது நாட்களும் நூறு நாட்களுக்கு நிகரானவை. சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் (உத்தராயணம்) காலத்தை எதிர்ப்பார்க்கும் உம்மைத் தேவர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.உமக்கு உயர்ந்த கதி கிடைக்கும். நீர் அழிவற்ற உலகத்தை அடையப் போகிறீர். பீஷ்மரே நீர் மேலுலகம் சென்றதும் இந்த உலகத்தில் உள்ள ஞானங்கள் எல்லாம் குறைந்து போகும். அதனால் யாவரும் தருமத்தை அறிந்துக் கொள்ள உம்மைச் சூழ்ந்து இருக்கின்றனர். தருமரின் சோகம் போக அவர் சந்தேகம் அகல சகல ஞானத்தையும் அவருக்கு உபதேசம் செய்வீராக. தருமர் உம்மிடம் பெறும் ஞானச் செல்வத்தை உலகுக்கு வாரி வழங்குவார்' என்று கூறினார்.  கண்ணன் கூறியதைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ந்தார் பின் கண்ணனை நோக்கி "கண்ணா உமது சந்நிதானத்தில் நான் என்ன சொல்வேன் உமது வாக்கன்றோ வேத வாக்கு. என் அங்கமெல்லாம் அம்புகளால் துளைக்கப்பட்டு வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறேன் எனது உள்ளத்திலும் தெளிவு இல்லை இந்நிலையில் தருமங்களை என்னால் எப்படி எடுத்துரைக்க முடியும்? மன்னிக்க வேண்டும். உம் எதிரே நின்று பேசும் ஆற்றல் வியாழபகவானுக்குக் கூடக் கிடையாதே எனவே வேதங்களுக்கு வேதமாக விளங்கும் நீரே எல்லாத் தருமங்களையும் யுதிஷ்டருக்கு அருளவேண்டும்' என உரைத்தார்.

அது கேட்டு கண்ணன் 'கௌரவர்களில் சிறந்தவரே உமது தகுதிக்கு ஏற்ப நீர் பேசினீர் அம்புகளால் தாக்கப்பட்டு வேதனைப்படுவதாக உரைத்தீர் இதோ நான் அருள் புரிகிறேன் உமது உடலில் உள்ள எரிச்சலும் சோர்வும், தளர்வும் உடனே நீங்கிவிடும். உம்மிடம் உள்ள மயக்கமும் தொலையும் இனி நீர் தெளிந்த சிந்தனையுடன் அறநெறிகளை தருமருக்கு எடுத்துரைக்கலாம் உமக்கு ஞானவழியையும் காட்டுகிறேன்' என்றார்.
உடன் பீஷ்மர்
"கண்ணா உம் அருளால் என் உடல் எரிச்சல்கள் தொலைந்தன, மயக்கம் விலகியது, இப்போது தெளிந்த சிந்தனையுடன் உள்ளேன். கண்ணா நீ வரம் அளித்தபடி எல்லாத் தருமங்களும் மனதில் ஒளிவிடுகின்றன. ராஜ தருமம், ஆபத்துத் தருமம், மோட்ச தருமம் ஆகிய அனைத்துத் தருமங்களையும் அறிகின்றேன். எந்தத் தருமத்தில் எப்பிரிவைக் கேட்டாலும் விளக்கமாகச் சொல்கிறேன் கண்ணா உன் புண்ணியத்தால் நான் திரும்பவும் இளைஞன் போல உணருகிறேன். நற்கதிக்குச் செல்லவிருக்கும் நான் அக்கதியை அடையும் வழியை எடுத்துக் கூறும் வல்லமை பெற்றவனாக உள்ளேன். ஆயினும் உம்மிடம் மண்டியிட்டுக் கேட்டுக் கொள்கிறேன் இந்தத் தரும உபதேசங்களை நீரே தருமருக்குக் கூறாதது ஏன்?' என்றார்.

 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

 வானமாமலை  ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏

நாளையும்  ஸ்ரீகிருஷ்ணாவதாரம்   தொடரும் ....

🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம் 🙏*

No comments:

Post a Comment