Tuesday, June 15, 2021

Pattinatthar - When moksha?

பட்டினத்தார் -- J K SIVAN
'' எனக்கு எப்போது மோக்ஷம்?''
ஒரு நல்ல திருப்பத்தை கவனித்தீர்களா? facebook எனும் முகநூல் பல முகங்கள் இப்போது தெரிகிறது. சில அற்புத முகங்கள் ஆன்மீகத்தை வளர்க்கும் வகையில் அருமையான விஷயங்களை பதிவிடுகிறது. ஊர் வம்பு இருக்கவே இருக்கிறது. பல முக நூல் பக்கங்கள் அதற்காகவே வாழ்கிறது. நான் இந்த பக்கத்தில் இருக்கிறவன். ஒரு கிணற்றுத் தவளை.
ஒரு எண்ணம் மனதில் தோன்றியதை கை தானாகவே எழுதுகிறது. என் எழுத்து எங்கிருந்து ஆரம்பம் எங்கே முடியும் என்ற வரைமுறை எல்லாம், எதுவுமே கிடையாது. பட்டதை பதிவிடுபவன். பிடிப்பவர்கள் படிக்கட்டும்.
கண் எதிரே ஒரு மயானம் தென்படுகிறது. எல்லோரும் மின்சாரத்தில் உடலை எரிக்கும் நிலை இன்னும் வரவில்லை. இன்னும் கொஞ்சம் பழைய கட்டையில் விரட்டியோடு உடல்கள் நெருப்பு புகைமண்டலமாக எரிகிறது. இதை எங்காவது, எப்போதுவது காணும்போது எவனுக்கும் கொஞ்சம் உலக அநித்ய அதிர்வு இருக்கத்தான் செய்யும். அந்த ஒரு கணத்தை ஓடாமல் கெட்டியாக பிடித்து மனதில் கட்டிப்போடவேண்டும்.
ஒரு உடல் பற்றி எரிகிறது. தீ ஜ்வாலை வீச சதைகள் தீயில் வெந்து பொசுங்கி காற்றில் அதன் விளைவு துர்கந்தமாக வீசுகிறது. எரிந்த ஒரு உடலின் சாம்பல் மேட்டில் அமர்ந்து தியானம் செயகிறார் அந்த சந்நியாசி.
எதிரே ராஜா நிற்கிறான். அதனால் என்ன? அவர் காடுடைய சுடலைப் பொடி பூசியபடி ஒரு மயானத்தில் சாம்பலுக்கு இடையே அமர்ந்திருக்கிறார்.
''சுவாமி நீங்கள் ஏன் இப்படி சுடுகாட்டு சாம்பலில் உட்கார்ந்திருக்கிறீர்கள்?. ''
''நான் அமர, நீ நிற்க,....'`
ஒரு வறண்ட சிரிப்பு பட்டினத்தார் முகத்தில் களை கட்டுகிறது .
பிச்சைக்காரர்கள் அமர்ந்திருக்க, அரசன் நிற்கிறான்...!! இதற்கு மேல் என்ன வியாக்யானம் தேவை.
ராஜாவிற்கு பொறி தட்டியது. புரிந்து கொண்டுவிட்டான். அப்புறம் என்ன.? ராஜ்ஜியம் துறந்தான். கோவணாண்டியானான் பட்டினத்தார் சிஷ்யனானான். அவன் தான் பத்திரகிரியார் ஆனான்.
பத்திரகிரியார் புலம்பல் ஏற்கனவே நான் பதிவிட்டிருந்தாலும் இன்னொருமுறையும் சொல்வதில் பலன் உண்டு .
குருவும் சிஷ்யனுமாக எங்கெங்கெல்லாமோ அலைந்து பல க்ஷேத்ரங்கள் சென்றார்கள்.
ஒரு நாள் ஒரு திருவோடு எங்கோ பத்ரகிரியார் கண்ணில் பட்டது. அதை எடுத்து வைத்துக்கொண்டார்.
''எதற்கு உனக்கு திருவோடு? நீ சந்நியாசி அல்லவா?
''குருவே, யாரேனும் பிக்ஷை கொடுத்தால் பெறுவதற்காக உபயோகப்படட்டுமே. சிவபெருமானே கபாலத்தை கையில் ஏந்திய பிக்ஷாடனர் தானே சுவாமி ''
''சரி, உன் விருப்பப்படி செய்'
மற்றொரு நாள் ஒரு நாய் அவர்கள் செல்லும்போது பின் தொடர பத்ரகிரி அதற்கு சிறு உணவளிக்க பசியோடு இருந்த அந்த நாய் அன்று முதல் பத்ரகிரியுடன் ஒட்டிக்கொண்டது. எங்கு சென்றாலும் கூடவே இருந்தது.
'உனக்கு எதற்கு இந்த பந்தம், எல்லாம் அற்றவன் அல்லவா நீ, வேண்டாம் என்று தானே எல்லாவற்றையும் உதறித்தள்ளியவன்?''
''குருநாதா, ஏதோ, என் பிக்ஷையில் பசியாக இருந்த அந்த ஜீவனுக்கு ஒருநாள் சிறிது தந்தேன் அதுமுதல் பாவம் அது என் பின்னே தொடர்கிறது''' விட்டதெல்லாம் மீண்டுமா... சரி உன்னிஷ்டம்''
எங்கோ ஒரு இடத்தில் ஒரு கிழிந்த பை கிடந்தது. பத்ரகிரி அதை எடுக்க,
''இது எதற்கு உனக்கு?''
''யாருக்கும் வேண்டாதது தானே இது ? என் துணியையாவது இதில் சுருட்டி வைத்துக்கொள்ளலாமே என்று தான்......''
''சரியப்பா சொத்துக்களை சேர்த்துக்கொள்''
''இல்லை சுவாமி, அதை போட்டுவிட்டேன்.''.
சில தினங்களில் திருவிடை மருதூர் வந்து சேர்ந்தார்கள் குருவும் சிஷ்யனும். மகாலிங்க சுவாமி ஆலயம். இரவு தங்க வடக்கு வாசலில் பட்டினத்தார் சுருண்டு களைத்து படுத்தார் , கிழக்கு றொரு வாசலில் பத்ரகிரியார் நாயுடன், ஓட்டுடன்.
அந்த இரவு நேரத்தில் பசியாக ஒரு பிச்சைக்காரன் அங்கே வந்தான்.
பட்டினத்தாரிடம் ''ஐயா பசிக்கிறது. எனக்கு ஏதாவது உங்களிடம் இருந்தால் கொடுங்களேன்''
''அப்பனே என்னிடம் எதுவும் இல்லையப்பா. அடுத்த கிழக்கு வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான் அவனிடம் ஏதாவது இருந்தால் போய் பெற்றுக்கொள்''
பிச்சைக்காரன் அந்த இரவில் கிழக்கு வாசலில் யாருமே இல்லை. அங்கு இருந்த பத்ரகிரியிடம் வந்தான். பட்டினத்தாரிடம் கேட்டதுபோலவே கேட்டான்.
''என்னிடம் எதுவுமே இல்லையே அப்பா ''
''அந்த வாசலில் இருக்கும் சாமியார் தான் உங்களிடம் நீங்கள் குடும்பஸ்தனாக இருப்பதால் ஏதாவது உணவு வைத்திருப்பீர்கள் என்று சொன்னார் ''
''என் குருநாதர் என்னை குடும்பஸ்தன் என்றா சொன்னார். அதில் ஏதோ அர்த்தம் இருக்கவேண்டும்.
நான் முற்றும் துறந்தல்லவோ சன்யாசியானவன்.. அவர் சொல்வது ஞாயம் தான் எனக்கு எதற்கு இந்த திருவோடு? இறைவன் கொடுத்த கை இருக்க ஓடெதற்கு ? வீசி எறிந்தார் ஓட்டை? அது நாயின் மண்டையில் பட்டு அது தக்ஷணமே அவரை நன்றியோடு பார்த்துவிட்டு மடிந்தது''
எழுந்தார் பத்திரகிரியார் குருநாதனை நோக்கி நடக்க அப்போது தான் எதிரே இருந்த பிச்சைக்காரன் யார் என்று தெரிந்தது?
''மகாலிங்க மூர்த்தி எதிரே புன்னகைத்து நிற்க கண்களில் ஜலம் வழிய இரு கை கூப்பி நின்றார் பத்திரகிரியார். அக்கணமே மஹாலிங்கத்தோடு ஐக்கியமாகி மோக்ஷ பதவி கிடைத்தது.
விஷயம் அறிந்த பட்டினத்தார் வியந்தார்.
''சிஷ்யனுக்கு மோக்ஷம் கொடுத்த மஹாலிங்கா எனக்கு எப்போது அருள்வாய்?''
பட்டினத்தார்க்கு பேய்க்கரும்பு கரும்பு ஒன்றை அளித்த பரமசிவன் ''திருவெண்காடா , இது என்று எங்கே உனக்கு இனிக்கிறதோ அன்று அங்கே நீ என்னை அடைவாய்''
பட்டினத்தார் சென்னையை அடுத்த திருவொற்றியூர் கடற்கரையில் சமாதி அடைந்ததை பற்றி தான் உங்களுக்கு ஏற்கனவே எழுதி இருக்கிறேனே

No comments:

Post a Comment