Friday, May 14, 2021

Kanna, please come - Tamil poem

Courtesy:Smt.Padma Gopal
கண்ணா, கொஞ்ச(ம்) வாடா....)
அப்பமொடு அதிரசமும் செய்துதரேன் அச்சுதா;
அழகுவிழிகள் அகலவிரித்து, அருகமர்வாய் அரவிந்தா!
செப்புவாயும் திறந்திடுவாய், சிறிதுசிறிதாய் இட்டிடுவேன்;
சுவைஉனக்குச் சரிதானா, சொல்லிடுநீ, அறிந்திடுவேன்!
கட்டிவெண்ணைக் கொடுப்பதற்கு கோடிபேர்கள் தவமிருக்கார்!
சட்டித்தயிரும் கொண்டுதர, சனக்கூட்டம் காத்திருக்கு;
விட்டுஎன்னை நீங்காமல், நீஇருந்தால் போதுமடா,
சுட்டுஉனக்குத் தந்திடுவேன், விதம்விதமாய் பட்சணமே!
சுட்டித்தனம் நீசெய்தால்− சந்தோஷம் நான்படுவேன்;
கட்டிப்போட மாட்டேன்நான்; கலங்காதே
கண்மணியே!
பட்டுமேனி, பார்வைவிட்டு அகலாது, இருநீயே;
எட்டிவிலகிப் போனால்நான் எள்ளளவும் தாங்கேனே!
எட்டிக்காயே எனக்கும்அந்த வேதமெனும் பாடமெல்லாம்;
என்அருகே நீஇருக்க, எதற்குஅதன் தேவையெல்லாம்?
கட்டிக்கரும்பே, கரும்பொன்னே, கூடவேநீ இருந்திடடா!
கணம்கூட மறையாமல், கண்எதிரே நின்றிடா!
எட்டெழுத்து மந்திரத்தில் எம்பிரான்நீ உறைபொருளாம்;
எட்டவொணா மறைபொருளாம்;
என்போன்றோர்க் கரும்பொருளாம்;
வட்டநேமி வலங்கையனாம், வாழவைக்கும் திருவடியாம்;
கிட்டவந்து காட்டிக்கொடு, கட்டமெல்லாம் போக்கிக்கிறேன்!
கிட்டாமல் போய்விடுமோ, உன்கருணை எனக்கென்று,
கலங்கிதினம் தவிப்பதெல்லாம், கண்ணா, உன்மனமறியும்;
தட்டாமல் என்ஆசை, தயைபுரிய வருவாயோ?
தவிக்குமெந்தன் நெஞ்சுக்கும், அருமருந்தும் இடுவாயோ??

No comments:

Post a Comment