Friday, February 28, 2020

Donot scold your children- periyavaa

பிள்ளைகளை திட்டும் பெற்றோருக்கு
*கர்மபலன்* இதுதான்...!

நம்முடைய வேத-ஶாஸ்த்ர-புராண-
இதிஹாஸங்கள்-பெரியோர்கள் எல்லாருமே ஒருமித்துக் கூறுவது.....

*வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் கஷ்டங்களும், ஸந்தோஷங்களும் நம்முடைய பூர்வஜன்ம கர்மபலன்தான் என்பதே!*

*ப்ரத்யக்ஷ தெய்வம்* என்று நாமெல்லாம் கொண்டாடும் நம் *பெரியவாளும்*
இதைப் பலமுறை கூறியிருக்கிறார்.

இதன் எடுத்துக்காட்டாக ஒரு ஸம்பவம்...

பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்ட ஒரு தம்பதி. மிகவும் அடக்கமானவர்கள். புத்ரஸந்தானம் தவிர மற்ற ஸௌபாக்யங்களுக்கு குறைவில்லை.

பெரியவாளை தர்ஶனம் பண்ண வரும்போதெல்லாம், மானஸீகமாகவும், வாய்விட்டும்... பலமுறை புத்ரபாக்ய அனுக்ரஹத்துக்காக ப்ரார்த்தனை பண்ணுவார்கள்.

ஒரு தடவை கூட, பெரியவா அவர்கள் மனஸு குளிரும்படியாக எதுவுமே சொன்னதில்லை!

ஒருநாள் தம்பதி இருவரும் பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார்கள். நமஸ்காரம் செய்தார்கள்.

"பெரியவாளோட அனுக்ரஹத்ல எல்லாம் இருக்கு! பெரியவாளுக்கு சொல்லித்தான் தெரியணும்-னு இல்ல....! ஆனாலும், எங்களோட கொறையை பெரியவாளைத்தவிர யார்கிட்ட சொல்லி ஆற முடியும்?...."

பெரியவா பதில் எதுவும் பேசாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மிகவும் நல்ல மநுஷ்யர்கள் தான்! குழந்தை வரம் வேண்டி, பாவம், கெஞ்சுகிறார்கள்..... ஆனால், கர்மவினை மிகமிக அதிகமாக இருந்தால், அனுக்ரஹம் கூட தனக்குத்தானே அணை கட்டிக்கொள்ளுமே!

மிகவும் பரிவுடன், அவர்களுடைய ஜன்மாந்த்ர கர்மவினையை அவர்களுக்கு எடுத்துச் சொன்னார்...

"பாருங்கோ! நாம... பண்ற பாப-புண்யங்கள்தான்... நம்மளோட விதியை நிர்ணயம் பண்றது. அது ஜன்ம ஜன்மாவா நம்மளை தொடர்ந்து வந்துண்டேதான் இருக்கும். அதுக்குத்தான் பாபகார்யங்களை பண்ணப்படாது; நெறைய புண்யகர்மாக்களை பண்ணணும்-னு சொல்றது..! நமக்கு எதெது இந்த ஜன்மா-ல வாய்ச்சிருக்கோ.... அது நல்லதோ, கெட்டதோ பகவானோட சித்தம்-னு ஸந்தோஷமா அதை ஏத்துண்டு வாழணும்!....

ஒனக்கு இந்த ஜன்மா-ல புத்ரபாக்யம் கெடையாது!...

ஏன் தெரியுமோ?....

எல்லாமே காரண-கார்யங்கள்தான்! நீ.... போன ஜன்மாக்கள்ள ஒனக்கு பொறந்த கொழந்தேள் எல்லாத்தையும், எப்பப்பாத்தாலும் _மூதேவீ! பீடை! சனியன்!_..ன்னு வாய் ஓயாம கரிச்சுக் கொட்டிண்டிருந்தியே! பின்ன... ஒனக்கு இந்த ஜன்மா-ல எப்டி கொழந்தை பொறக்கும்?... சொல்லு!... "

கண்கள் கலங்க பெரியவா சொன்ன ஜன்மாந்த்ர ஸத்யத்தை ஜீரணித்துக் கொண்டு, கர்மபலனை அனுபவிக்கும் மனோதிடத்தை வேண்டியபடி, பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார்கள்.

நாம் பேசும் பேச்சுக்கூட கணக்காயிருக்கணும் என்று பெரியவா உபதேஸிப்பார். நம் ஆத்திரம், கோபத்தை தீர்த்துக் கொள்ள, அடுத்தவர்களை தூற்றுவது, உருவத்தை வைத்து கேலி செய்வது, நம் குழந்தைகள் மட்டுமில்லை, நம் சுற்றம்-நட்பு, ஏன்? முன்பின் தெரியாதவர்களானாலும், அவர்களை நோக்கி வீசப்படும் வசவுகள், நிந்தனைகள் எல்லாமே..... அப்படி நிந்திப்பவர், அதை தூண்டுபவர், ஆமோதிப்பவர், அதைத் தடுக்காமல் அமைதி காத்து வேடிக்கை பார்ப்பவர் இப்படியாக இத்தனை பேர் கணக்கிலும் debit side-ல் வரவு வைக்கப்படுகிறது.

நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும்,
இது அத்தனைபேருக்கும் பொதுவான இயற்கையின் விதி! நியதி!

இந்த ஜன்மத்தில் நமக்கு வாய்த்திருக்கும் _அம்மா, அப்பா, ஸஹோதர-ஸஹோதரிகள், நண்பர்கள், கணவன்-மனைவி, சுற்றம்_, அத்தனையுமே... நாம் பூர்வ ஜன்மங்களில் ஆசைப்பட்டதுதான்! ஆனாலும், நம்முடைய பூர்வ ஜன்ம கர்மவினைகளால், இவை அநுகூலமாகவோ, ப்ரதிகூலமாகவோ இருக்கும்.

நல்ல அன்பான பெற்றோர்கள், கணவன்-மனைவி, ஸொந்தங்கள் இருந்தும், நாம் அவர்களை மதிக்காமல், கரித்துக்கொட்டி வெறுத்து ஒதுக்கினால், இந்த ஜன்மத்தில் நாம் ஏதோ அவர்களை பழி வாங்கியதாக நினைத்து ஸந்தோஷப்படலாம். ஆனால், இந்த அன்பான நன்மை, அடுத்தடுத்த ஜன்மங்களில், நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் என்பதே ஸத்யம்!

அதோடு, இந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமுமே கிடைக்காது! இல்லாத ஒன்றுக்காக அலைவதை விட்டுவிட்டு, நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு காட்டி, பகவானுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மீள் பதிவு 

No comments:

Post a Comment