Monday, July 1, 2019

Velvet pada peetham-periyavaa

மஹா பெரியவா அப்போது மேனாவில் பிரயாணம் செய்வது வழக்கமாயிருந்தது.

பலகையில் சாய்ந்துகொண்டு, தாமரைத் திருவடிகளை நீட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்து கொண்டிருப்பார் . ஹரஹர சங்கர, ஜயஜய சங்கர என்று பக்தர்கள் முழங்க ஆடிக்கொண்டே மேனா செல்லும். உள்ளே புஷ்பம் உட்கார்ந்திருக்கும்.

எல்லோரும் காணக்கூடிய காட்சி இது. அதுவும் மேனாவுக்குள் இருந்தபடி தரிசனம் கொடுக்கும்போது, பாதங்கள் நீண்ட நிலையிலேயே இருக்கும்.

ஒரு பக்தர் சொல்கிறார்:

"பெரியவா பாதங்களை வைத்து கொள்வதற்கு மெத்து மெத்தென்று ஒரு இலவம்பஞ்சு மெத்தை திண்டு செய்து கொடுத்தால் என்ன?.

இப்படி தோன்றியவுடன், ஸ்பாஞ்ஜ் (காற்று_நிறைந்த, இலேசான மிருதுவான ரப்பராலான சொகுசு தயாரிப்பு) வாங்கி, அகலமாக , வட்டமாக வெட்டினேன்; மேலே, வெல்வெட் துணி வைத்து தைத்தேன்; நடுவில் வேறு ஒரு கலர் வெல்வெட்டில் , எட்டு இதழ் தாமரை; ஓரங்களில் லேஸ் வைத்து அழகுபடுத்தினேன்.

பெரியவாள் தரிசனத்துக்கு போன சமயத்தில், அவர்கள் மேனவில் உட்கார்ந்து இருந்தார்கள்.

நானும் என் அம்மாவும் ஸ்பாஞ்ஜ் தயாரிப்பை பெரியவாளிடம் சமர்பித்தோம் (மேனாவை ஒட்டினாற்போல், தரையில் வைத்தோம்) . பெரியவாள், "அஷ்டதளமா?" என்ற கேட்டுகொண்டே, மேனாவுக்குள் நீட்டிகொண்டிருந்த பாதங்களை எடுத்து, வெல்வெட் பாதபீடத்தில் வைத்தார்கள். எங்கள் நெஞ்சுக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டது.

"சரி, வெச்சிட்டு போ" என்று சொல்லாமல், தன் புனித திருவடிகளை, நாங்கள் பக்தியோடு சமர்ப்பித்த பொருளை உடனே ஏற்று கொள்ளும் விதமாக தன் பாதங்களை வைத்து கொண்டார்களே! இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும்?

பெரியவாள் பக்கத்தில் ஓர் அணுக்க தொண்டர் நின்றுகொண்டிருந்தார்.

"உனக்கு லலிதா சஹஸ்ரநாம தியான சுலோகம் தெரியுமா?"

"ஒரு நிமிடம் யோசனைக்கு பின், "அருணா கருணா தரிங்கிதாச்ஹீம்…" என்று தொடங்கினார் அவர்.

"இன்னொன்று …"

"ஸிந்தூராருண விக்ரஹாம்… "

"அதுதான்! அங்கே ஒரு வித்வான் நிற்கிறார், பார். அவரிடம் போய், இந்த ஸ்லோகத்தில் வருகிற, ரத்னா கடஸ்த்த ரக்த சரணாம் – என்பதற்கு என்ன அர்த்தம்னு கேட்டுண்டு வா…"

அவர் உடனே போய் கேட்டுகொண்டு வந்தார். "அம்பாள் ரத்னமயமான கடத்தின் மீது தன் சிவந்த பாதங்களை வைத்து…" என்று அர்த்தம் சொன்னார்.

மேனாவின் அருகிலேயே ஒரு வித்வான் நின்றுகொண்டிருந்தார். அவர் மீது பெரியவா பார்வை விழுந்தது. அவர் அருகில் வந்தார்.

"சாஸ்திரிகளே! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துண்டே இருந்தது. என்னன்னா, அம்பாள் ஒரு கடத்தின் மேலே ஏன் பாதங்களை வெச்சிண்டிருக்கணும், கொஞ்சம் நெருடலா இல்லை?"

"ஆமாம்" என்று பவ்யமாகத் தலையாட்டினார் பண்டிதர். "நீ இதுக்கு என்ன அர்த்தம் சொல்றே? " டக்கென்று என்று பெரியவா கேட்டுவிட்டால் தர்ம சங்கடம் ஆயிற்றே என்ன பதில் சொல்வது?

"அது பொருத்தமாயில்லையோனோ?…"

"ஆமாம்.."

"இப்போ, இந்த பாத பீடத்தை பார்த்ததும் என் சந்தேகம் ஓடியே போயிடுத்து!"

பெரியவா விளக்கினார்கள்:

"அம்பாள் தன் செவந்த பாதங்களை இது மாதிரியான பாதபீடத்தில் வைத்துகொண்டிருகிறாள். – என்பது சரியாக இருக்கும். ஸ்லோகத்தில் வருகிற, "கடஸ்த்த" வை எடுத்திட்டு, "படஸ்த்த" வை போட்டால், சரியாக இருக்குமோன்னு தோன்றது. படம்னா துணி; மெத்தென்ற பாதபீடம். முதல்லே "படஸ்த்த" என்றிருந்த பதம், நாளடைவில் பேச்சு பழக்கத்தில், "கடஸ்த்த" என்று வந்திருக்கலாமோன்னு படறது. படஸ்த்த = துணியில் என்பதை "கம்பளியில்" (மிருதுவாக காலை குத்தாமல் இருக்கணுமே! ) என்று சமவாசகமாக வெச்சுக்கனும்.".

நாங்கள் யாரும் (பண்டிதர் உள்பட) திகைப்பிலிருந்து மீளவில்லை!

"ரொம்ப நாளா யோசிச்சிண்டிருந்தேன். இப்போ இதை, இந்த வெல்வெட் பாதபீடத்தை பார்த்ததும் புரிஞ்சுபோச்சு".

எந்த தகுதியும் இல்லாத, கடைசி வரிசையில் நிற்கிற என் போன்ற ஒரு பேதையின் எளிய சமர்ப்பணத்தால் மஹா பெரியவாளின் வெகுநாளைய ஒரு சந்தேகம் தீர்ந்ததாம்!. நடிப்பில் வல்லவரோ!! இருக்கலாம் அலகிலா விளையாட்டுடையார் அல்லவா !

No comments:

Post a Comment