Monday, July 15, 2019

Srimad Bhagavatam skanda 9 adhyaya 22 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 9- அத்தியாயம் 22

அத்தியாயம் 22

சுகர் குருவம்சத்தைப் பற்றிக் கூற ஆரம்பித்தார். 
குரு ஹஸ்தியின் மகன் . ஹஸ்திதான் ஹஸ்தினாபுரத்தை நிர்மாணித்தவன்., குருவின் புதல்வனான பிரதீபனுக்கு தேவாபி, சந்தனு, பாஹ்லிகன் என்ற மூன்று புதல்வர்கள். மூத்தவனான் தேவாபி அரசுரிமை ஏற்காமல் வனம் சென்றான். ஆகவே சந்தனு அரசனாக பதவி ஏற்றான்.

சந்தனுவுக்கு கங்காதேவியிடம் பிறந்தவர் ஆத்மஞாநியாகிய பீஷ்மர். செம்படவனால் வளர்க்கப்பட்ட ஸத்யவதி என்னும் பெண்ணுக்குப் பிறந்தவர்கள் விசித்திர வீர்யனும் , சித்ராங்கதனும் . சித்ராங்கதன் அதே பெயருடைய கந்தர்வனால் கொல்லப்பட்டான்.

இதே ஸத்யவதியிடம் கன்னிப்பருவத்தில் பராசரரின் தவ மஹிமையால் விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றியவர் வேதவியாசர்.

விசித்ரவீர்யன் பீஷ்மரால் ஸ்வயம்வரத்தில் பலாத்காரமாகக் கொண்டுவரப்பட்ட அம்பிகா அம்பாலிகா என்ற காசிராஜனின் புத்திரிகளை மணந்துகொண்டான். பிறகு க்ஷயரோகத்தால் சந்ததி இன்றி இறந்தான். பின்னர் பாதராயணர் எனக் கூறப்படும் வியாசர் தன் தாயின் சொற்படி அம்பிகை, அம்பாலிகை இருவரிடமும் திருதராஷ்டிரன், பாண்டு இருவரையும் பிறக்கச்செய்தார். பாண்டுவின் புதல்வர்கள் பாண்டவர்கள். திருதராஷ்டிரனின் புதல்வர்கள் கௌரவர்கள்.

சுகர் மேலும் கூறியது ,
திருதராஷ்டிரனுக்கு காந்தாரியிடம் நூறு புதலவர்கள் பிறந்தார்கள். அதில் மூத்தவன் துரியோதனன். பாண்டுவிற்கு ரிஷியின் சாபத்தால் ஸ்த்ரீ சங்கம் தடுக்கப்பட்டிருந்ததால் தர்மதேவன், வாயு, இந்திரன் இவர்களின் அருளால் யுதிஷ்டிரர், பீமன் , அர்ஜுனன் இம்மூவரும் தோன்றினர்.
அஸ்வினி தேவர்களின் அருளால் பாண்டுவின் மற்றொரு மனைவியான மாத்ரியிடம் தோன்றியவர் நகுலசஹதேவர்கள்.

சுகர் கூறினார்.
"உனது பாட்டனான் அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் சகோதரியான சுபத்திரையிடம் உன் பிதாவான மகாவீரனான அபிமன்யு பிறந்தான். அவனுக்கு உத்திரையிடம் பிறந்தவன் நீ. அச்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்தால் பாண்டவ வம்சம் நாசமானபோது ஸ்ரீ கிருஷ்ணருடைய அனுக்ரஹத்தால் நீ காப்பாற்றப் பட்டாய்."

அடுத்து கிருஷ்ணனின் வம்சமான யது வம்சத்தைப் பற்றி சுகர் கூறலுற்றார்.

  

No comments:

Post a Comment