Wednesday, July 31, 2019

Srimad Bhagavatam skanda 10 adhyaya in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

இன்று பௌர்ணமி . கிருஷ்ணன் வந்து விட்டான்.

தசமஸ்கந்தம் – கிருஷ்ணாவதாரம் - முன்னுரை

பரீக்ஷித் சுகரிடம் க்ருஷ்ணாவதாரத்தைப் பற்றி வினவினான். அவன் கூறியது:
நிவ்ருத்ததர்ஷை: உபகீயமாநாத் பவௌஷதாத் ச அத்ர மனோபிராமாத்
க உத்தமச்லோக குணாநுவாதாத் புமான் விரஜ்யேத வினா பசுக்நாத்
உலகப்பற்று நீங்கியவர்களால் கானம் செய்யப்படுவதும், பிறவிப்பிணிக்கு மருந்தாவதும் , செவிக்கும் மனதிற்கும் இனிமையானதுமான உத்தம ச்லோகராகிய கிருஷ்ணனின் குணங்களை சொல்வதிலும் கேட்பதிலும் பசுக்கொலை செய்பவனை விட வேறு யார்தான் விரும்பாமல் இருப்பான். 
இங்கு மூன்று விதமான அதிகாரிகள் சொல்லப்படுகிறார்கள். உலகப்பற்று நீங்கியவர்கள் என்பது முக்தர்களைக் குறிக்கும். அவர்களை பகவானுடைய குணங்களை சதா கானம் செய்கிறார்கள். 
பவௌஷதாத் பிறவிப்பிணிக்கு மருந்தாவது என்பது முமுக்ஷுக்கள் அதாவது முக்தியை நாடுவோர்களுக்கு அது முக்தியளிக்கும் உபாயமாகும். 
ச்ரோத்ர மனோபிராமாத், செவிக்கும் மனதிற்கும் இனிமையானது என்பது நம் போன்ற சம்ஸாரிகளுக்கும் அமைதியை அளிப்பதைக் குறிக்கும். ஆகவே கிருஷ்ணாவதாரம் சகலமானவருக்கும் நன்மை பயப்பதாகும் என்பது இதன் பொருள்.
மேலும் பரீக்ஷித் கிருஷ்ணனுடைய மஹிமையைக் கூறுகிறான். 
கடக்கமுடியாத பீஷ்மர் முதலிய திமிங்கிலங்களைக் கொண்ட சமுத்திரத்தை எவருடைய உதவியால் பாண்டவர்கள் கன்றுக்குட்டியின் குளம்படி நீர் போலக் கடந்தார்களோ, எவர் த்ரோணபுத்திரனின் அஸ்திரத்தில் இருந்து பரீக்ஷித்தைக் காப்பாற்றினாரோ, உடல் படைத்த எல்லோரிடமும் உள்ளே அந்தர்யாமியாக இருப்பவரும்,வெளியே கால ரூபியாக இருந்துகொண்டு அவரைக் அகக்கண்ணால் கண்டவர்க்கு மோக்ஷத்தையும் , மற்றவர்க்கு கால ரூபமான மரணத்தையும் கொடுக்கிராரோ அந்த மாயாமானுட ரூபியான கருஷ்ணனைப் பற்றிக் கூறவேண்டும் என பிரார்த்தித்தான்.
பிறகு சுகர் க்ருஷ்ணாவதாரத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
சுகர் கூறியது. 
பகவானுடைய பாதத்தில் இருந்து பெருகிய கங்கை எவ்வாறு பார்ப்பவர், ஸ்நானம் செய்பவர், பருகுபவர் ஆகியோரை பாவனமாக்குகின்றதோ அது போல வாசுதேவரின் கதையைக் கேட்பவர் , சொல்பவர், சொல்லத்தூண்டுபவர் ஆகிய மூன்று வகையினரை பாவனமாக்குகிறது.
இப்போது நாம் சிறிது விலகி தேசிகரின் இனிய சொற்களை ரசிப்போமா?
தேசிகரின் யாத்வாப்யுதயம் கிருஷ்ணாவதாரத்தை வர்ணிப்பதாகும். அதைக் குறித்து அவர் கூறுகிறார் , வியாசவேதம் என்னும் கடலிலிருந்து வந்தது அமுதமாகிய கிருஷ்ணாவதாரம் என்று. அதாவது மகாபாரதத்திலேயே மிகவும் மதுரமானதும் மகிழ்ச்சி தருவதுமான விஷயம் க்ருஷ்ணனைப் பற்றிய கதைதான் என்பது. 
வியாச வேதம் என்பது வேதங்களையும் குறிக்கும். வேதங்களின் சாரம் பகவான் என்பதை ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யத்தின் மங்கள ஸ்லோகத்தில் கூறுகிறார், 'ச்ருதி சிரஸி விதீப்தே ப்ரம்மணி ஸ்ரீநிவாசே,'என்று. அதாவது வேதங்களின் மணிமுடி என்பது பகவானே. பாகவதம் பின்னர் வியாசரால் சொல்லப்பட்டது என்பதைப் பார்க்கும்போது மஹாபாரதம் என்னும் பாலிலிருந்து எடுத்த வெண்ணை பாகவதம் என்பதுதான் உண்மை. 
தேசிகர் கிருஷ்ணாவதாரம் தேவர்களின் உயிர் காத்த அமுதம், விபுத ஜீவாது, என்கிறார். அவர் தேவர்களை பற்றி குறிப்பிடும் சொல் விபுத என்பது ஞானிகளையும் குறிக்கும். அவர்களுக்கும் அது ஜீவாது அதாவது பிறவிப்பிணியைத் தீர்க்கும் ஔஷதம். 
இனி கிருஷ்ணாவதாரத்தின் முன்னோடியான சம்பவத்தைப் பார்க்கலாம்

No comments:

Post a Comment