Friday, June 14, 2019

Diksha -story

*சின்ன கதை...*

அவர் ஒரு ஆடையே இல்லாமல் திரியும் ஞானி, ஆனால் உண்மையான தேடுதல் உடையவர்,
அனைவராலும் நேசிக்கப்பட்டார்.

 ஒரு நாட்டின் அரசி கூட நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார். 

அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம்தான் வேண்டும் என்றாள்.
 
அவர் உடனே   கொடுத்துவிட்டார் – அது ஒன்றுதான் அவரிடம் உள்ள பொருள். ராணி உள்ளே சென்று வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து நாகார்ஜூனாவிடம் கொடுத்தாள். 

அவள், "இதை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன் –  உங்களின் துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி அது என் கோவிலாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது. 
இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக செய்தேன்". என்றாள். 

அது உண்மையிலேயே விலையுயர்ந்தது. அவரைப் பொறுத்தவரை முன்னதும் இதுவும் ஒன்றுதான், அதனாலும் அவர் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டார். 

அவர் அரண்மனையை விட்டுப் போகும் போது, திருடன் ஒருவன் அவரைப் பார்த்தான். அவனால் அவனது கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு நிர்வாண சந்நியாசியிடம் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா; திருடன் அவரை பின்தொடர்ந்தான். 

நாகார்ஜூனா ஊருக்கு வெளியே உள்ள ஒரு மிகவும் பாழடைந்த கோவிலில் தங்கியிருந்தார்.

திருடன் அதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சீக்கிரமே அவர் தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லை. நான் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொள்வேன் என நினைத்தான். 

திருடன் கதவுக்கு வெளியே ஒரு சுவற்றின் அருகில் பதுங்கியிருந்தான்.அப்போது  நாகார்ஜூனா அந்த தங்க திருஓட்டை  வெளியே விட்டெறிந்தார். திருடனால் நடந்ததை நம்பவே முடியவில்லை. 

அவர் அந்த திருடன் தன்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்திருந்தார். இவன் தனக்காக வரவில்லை இந்த பாத்திரத்திற் காகத் தான் வருகிறான் என்பதை நன்கு அறிந்த அவர் அதை வெளியே வீசி விட்டார். 
எதற்கு அனாவசியமாக அவன் காத்திருக்க வேண்டும் எடுத்துக் கொண்டு அவன் போகட்டும், தானும் ஓய்வெடுக்கலாம் என நினைத்தார். 

இவ்வளவு விலையுயர்ந்த பொருளை அவர் இவ்வளவு சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான் வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக முடியவில்லை. 

அவன், தலையை உள்ளே நீட்டி, "சாமி, மிகவும் நன்றி. ஆனால் நீங்கள் மிக வித்தியாசமான மனிதர் – என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. மேலும் எனக்கு ஆழமான ஆசை ஒன்று எழுகிறது. 
ஒரு திருடனாக இருந்து என் வாழ்நாளை நான் வீணடித்துவிட்டேன். ஆனால் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்களா நான் உள்ளே வந்து உங்கள் காலில் விழலாமா" எனக் கேட்டான். 

நாகார்ஜூனா சிரித்தார், அவர், "வா, அதற்காகத்தான் அந்த பாத்திரத்தை வெளியே வீசினேன். அப்போதுதான் நீ உள்ளே வருவாய்" என்றார். 

 உள்ளே வந்து பாதங்களை தொட்டான். அந்த சமயத்தில் திருடன் மிகவும் வெளிப்படையாக இருந்தான்.
 ஏனெனில் இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவன் கண்டான். அவன் மிகவும் மென்மையாகவும், 
திறந்தும், நன்றியோடும், திகைத்தும், உள்வாங்கத்தயாராகவும் இருந்தான். 
அவன் அவர் காலில் விழுந்து வணங்கிய போது, வாழ்க்கையில் முதன்முறையாக அவன் தெய்வீகத்தை உணர்ந்தான்.

அவன் நாகார்ஜூனாவிடம், "நானும் உங்களைப் போல மாற இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும்" எனக் கேட்டான். 

நாகார்ஜூனா, "எத்தனை பிறவிகளா அது இங்கேயே இப்போதே, இன்றே நடக்கலாம்" என்றார். 

திருடன், "நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். அது இப்போது எப்படி நிகழமுடியும் நான் ஒரு திருடன்,
 நாடே அறியும். அவர்களால் என்னை பிடிக்க முடிய வில்லை. அரசர் கூட என்னை பார்த்து பயப்படுவார். 
ஏனெனில் மூன்றுமுறை பொக்கிஷ அறைக்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். அவர்களுக்கும் அது நான்தான் எனத் தெரியும். 
ஆனால் அத்தாட்சியில்லை. நான் ஒரு பக்கா திருடன் – நீங்கள் இந்த பகுதிக்கு அன்னியராக இருப்பதால் உங்களுக்கு இவை தெரியாமலிருக்கலாம். அப்படிப்பட்ட நான் இப்போதே  எப்படி மாற முடியும்" என்றான். 

நாகார்ஜூனா "ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே இன்றி இருண்டு கிடக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு தீபத்தை  ஏற்றிக் கொண்டு வந்தால், அங்கிருக்கும் இருள்....ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன்.  ஒரு தீபத்தை உள்ளே கொண்டு வந்ததால் மட்டுமே என்னால் வெளியே போக முடியாது. நான் இங்கேதான் இருப்பேன்; எனக் கூற முடியுமா?அல்லது இருள் தான் சண்டையிட முடியுமா? ஒருநாள் இருட்டு, அல்லது ஆயிரக்கணக்கான வருட இருட்ட

ு என இருட்டில் பேதம் உண்டா" எனக் கேட்டார்.

திருடனால் புரிந்து கொள்ள முடிந்தது,  நாகார்ஜூனா, "நீ பல பிறவி பிறவியாக இருளில் இருந்திருக்கலாம். – அது ஒரு பொருட்டேயல்ல. நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன்மூலம் நீ உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டு வர முடியும்" என்றார். 

திருடன், "என் தொழில் அதை நான் விட வேண்டுமா" எனக் கேட்டான். 

நாகார்ஜூனா "அதை நீதான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு உன் தொழிலைப் பற்றியோ உன்னைப் பற்றியோ அக்கறையில்லை. உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டுவரக்கூடிய ஒரு ரகசியத்தை நான் உனக்குத் தருவது மட்டுமே நான் செய்வது. மற்றபடி எல்லாமே உன்னை பொறுத்தது" என்றார். 

திருடன், "ஆனால் நான் மற்ற சன்னியாசிகளிடம் சென்றபோது, அவர்கள் எப்போதும், முதலில் திருடுவதை நிறுத்து – பின்புதான் தீட்சையளிக்க முடியும் எனக் கூறுவர்" என்றான். 

நாகார்ஜூனா சிரித்து, "நீ சன்னியாசிகளிடம் செல்லாமல் திருடர்களிடம் சென்றிருக்கலாம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. 

நீ வெறுமனே உன் சுவாசத்தை கவனி, உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் உன் சுவாசத்தை கவனி. 
திருடப் போகும்போது, வேறு யாருடைய வீட்டிற்க்குள் இரவில் நுழையும்போதும், உன் சுவாசத்தை கவனி. 
பொக்கிஷத்தை திறக்கும்போதும், வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும்போதும் உன் சுவாசத்தை கவனி. 
என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் – ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே" என்றார். 

திருடன், "இது மிகவும் எளிதானதாக தோன்றுகிறதே. ஒழுக்கம் தேவையில்லையா குணநலன் வேண்டாமா வேறு எதுவும் தேவையில்லையா" என்றான்.

நாகார்ஜூனா, "நிச்சயமாக வேறு எதுவுமில்லை. உன் சுவாசத்தை கவனி. அவ்வளவுதான்" என்றார். 

பதினைந்து நாட்களுக்கு பிறகு திருடன் திரும்ப வந்தான். ஆனால் அவன் முற்றிலும் புதியவனாக இருந்தான். அவன் நாகார்ஜூனாவின் காலில் விழுந்து வணங்கி, 
"என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் ஒரு துளி கூட சந்தேகப் பட முடியாத விதத்தில் மிக அழகாக என்னை சிக்க வைத்து விட்டீர்கள். 
நான் இந்த பதினைந்து நாட்களாக முயற்சி செய்தேன் – அது நடக்கவே இல்லை. 
நான் என் சுவாசத்தை கவனித்தால் என்னால் திருட முடியவில்லை. 
நான் திருடினால், என் சுவாசத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. 
சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக, விழிப்போடு, தன்னுணர்வோடு, கவனமானவனாக இருக்கிறேன். 
அப்போது வைரங்கள் கூட கூழாங்கற்களாக தோன்றுகிறது. 
நீங்கள் எனக்கு ஒரு கஷ்டத்தை, அலைபாயுதலை உருவாக்கி விட்டீர்கள். 
நான் இப்போது என்ன செய்வது" என்று கேட்டான். 

நாகார்ஜூனா, "வெளியே போ – நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய். அந்த அமைதி, அந்த மௌனம், அந்த ஆனந்தம் என உன் சுவாசத்தை நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் அதை தேர்ந்தெடு. 
அதை விட வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என முடிவெடுத்தால் அதை தேர்ந்தெடு. 
நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் வாழ்வில் தலையிட நான் யார்" என பதிலளித்தார். 

அந்த மனிதன், "என்னால் தன்னுணர்வற்ற நிலையை தேர்ந்தெடுக்க முடியாது. இதுபோன்ற கணங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 
என்னை உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். 
எனக்கு தீட்சையளியுங்கள்" என்று கேட்டான். 

நாகார்ஜூனா, "நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து விட்டேன்" என்றார்.🙏🌹🙏

No comments:

Post a Comment