Friday, April 19, 2019

Srimad Bhagavatam skanda 9 adhyaya 4,5 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 9 - அத்தியாயம் 4, 5

அத்தியாயம் 4 , 5- அம்பரீஷ சரித்திரம்

மனுவின் மற்றொரு புத்திரனான நபாகனின் மைந்தன் நாபாகன். அவனுடைய புதல்வன் அம்பரீஷன். அவன் சிறந்த நாராயண பக்தன். மஹாபாகவதனான அம்பரீஷன் ஏழு தீவுகளடங்கிய இந்த பூமிக்கு அரசனாகவும், குறைவற்ற செல்வமும், புகழும் உடையவனாகவும் இருந்தபோதிலும் அவற்றில் பற்றற்றவனாக இருந்தான். பகவான் வாசுதேவனிடமும், பகவதர்களிடமும் கொண்ட பரம பக்தியால் இவ்வுலகத்து செலவமனைத்தையும் மண் கட்டிக்கு சமமாகக் கருதினான்.
எப்போதும் பகவத்சேவையிலும் பாகவத சேவையிலும் ஈடுபட்டவனாக இருந்த அவன் பக்தியைக் கண்டு மெச்சி பகவான் அவனுக்கு சத்ருக்களுக்கு பயத்தைக் கொடுப்பதும் அடியார்களை ரக்ஷிப்பதுமான தனது சக்கரத்தை அவனுக்கு அளித்தார். 
பகவானை ஆராதிக்க விரும்பிய அவன் ஒரு வருடம் மனைவியுடன் த்வாதசீ வ்ரதத்தை அனுஷ்டித்தான்., கார்த்திகை மாதம் வ்ரதம் முடியும்போது மூன்று நாள் உபவாசம் இருந்து யமுனையில் நீராடி மதுவனத்தில் ஹரியை பூஜித்தான். மஹாபிஷேக முறைப்படி சிறந்த த்ரவ்யங்களால் அபிஷேகம் செய்து பிராம்மணர்களுக்கு போஜனம் செய்வித்துப் பிறகு அவர்கள் அனுமதியுடன் தன் வ்ரதத்தை முடிக்க பிரசாதம் எடுத்துக்கொள்ளும் சமயம் அங்கு துர்வாச முனிவர் தன் சிஷ்யர்களுடன் வந்தார்.

அம்பரீஷன் அவரை மரியாதையுடன் வரவேற்று அதிதி ஸத்காரம் செய்து அவரை போஜனம செய்யுமாறு வேண்டினான். அதற்கு அவர் தன் அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டு வருவதாகக் கூறி யமுனை நதியில் மூழ்கி த்யானத்தில் அமர்ந்தார்.
. அப்போது ஒரு நாழிகைப் பொழுதே துவாதசி மீதம் இருந்ததால் த்வாதசியில் பாரணை செய்யாமல் இருப்பது தோஷம் என்றும் முனிவர் வரும் முன்பு பாரணை செய்வதும் தோஷம் என்று ஆலோசித்து நீரை மட்டும் அருந்தி பாரணை செய்ய நிச்சயித்தான். பிறகு பகவானை ஸ்மரித்து தீர்த்த பானம் செய்து முனிவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

துர்வாசர் திரும்பி வந்ததும் நடந்ததைத் தன் யோகபலத்தால் உணர்ந்தார். அதனால் தன்னை அவன் அவமதித்ததாக நினைத்து கடுங்கோபம் கொண்டார். பின் தன் ஜடையைக் கிள்ளி அதனால் காலாக்னிக்கு சமமான் ஒரு துர்தேவதையை உண்டாக்கி அரசனுக்கு எதிராக ஏவினார்.

பயங்கரமான அதைக்கண்டு அம்பரீஷன் கடுகளவும் அயரவில்லை. ஆனால் பகவானால் ரக்ஷணத்திற்காக அளிக்கப்பட சுதர்சன சக்கரம் அந்த துர்தேவதையை பொசுக்கியது. 
பிறகு அந்த சக்கரம் துர்வாசரை நோக்கிப் பாய்ந்தது. துர்வாசர் பயந்து எந்த திசையில் எந்த லோகங்களுக்குச் சென்றாலும் அங்கெல்லாம் அந்தச் சக்கரம் பாய்ந்ததும் பிரம்மன் ருத்ரன் முதலிய எல்லா தேவர்களும் அவரைக் கைவிட்டு ஹரியிடமே சரனடையும்படிக் கூறினர். பிறகுக் கடைசியில் அவர் வைகுண்டத்தை அடைந்து நாராயணனிடம் தன்னைக் காக்கும்படி வேண்டினார்.

நாராயணன் தான் பக்தர்களுக்குக் கட்டுபட்டவன் என்றும் தன்னைச் சரண் அடைந்த பக்தர்களைக் காப்பது தன் கடமை என்றும் கூறி துர்வாரை அம்பரீஷனையே சரண் அடையுமாறு கூறினார். 
பிறகு அந்த முனிவர் அம்ப்ரீஷனிடம் சென்று அவன் பாதங்களைப் பிடித்துக்கொண்டு தன்னைக் காக்குமாறு வேண்டினார். அதனால் சங்கடம் அடைந்த அம்பரீஷன் சுதர்சன சக்கரத்தைத் துதித்தான் . அவன் கூறியது:

"சுதர்சனா, ஆயிரம் ஆரங்கள் உடையவனே,அச்சுதனுக்கு ப்ரியமானவனே , எல்லா அஸ்திரங்களையும் அழிப்பவனே இந்த முனிவருக்கு நன்மை அளிக்க வேண்டும். தானபலனும் யாக பலனும் ஸ்வதர்மத்தை நன்கு அநுஷ்டித்த பலனும் எனக்கு இருக்குமேயானால் இவர் தாபமற்றவர் ஆக வேண்டும். எல்லாகுணங்களுக்கும் உறைவிடமான பகவான் எல்லா பிராணிகளிடத்தும் ஆத்மபாவனை செய்யும் எங்களிடத்தில் ப்ரீதியடைந்திருந்தால் இவர் தாபமற்றவர் ஆக வேண்டும்."

இவ்வாறு அரசன் துதிக்கவே முனிவரை நான்கு பக்கமும் சூழ்ந்து தகித்துக் கொண்டிருந்த சுதர்சனம் சாந்தம் அடைந்தது. துர்வாசர் ஆச்சரியம் அடைந்து தீங்கிழைத்தவராயினும் அவருடைய நன்மையே நாடும் விஷ்ணுபக்தர்களின் பெருமையைப் புகழ்ந்தார். பிறகு அம்பரீஷனால் ப்ரார்த்திக்கப்பட்டு அவனுடன் உணவருந்தி அவனிடம் விடை பெற்றுக்கொண்டு ஆகாய மார்க்கமாகச் சென்றார்.

இந்த சரித்திரத்தை கீர்த்தனம் செய்தாலும் தியானம் செய்தாலும் பரம பக்தனாகவும் பாகவதனாகவும் ஆவான்.,

துர்வாசர் முற்றும் துறந்த முனிவராக இருந்தும் இப்படி கோபிஷ்டராக இருந்தது எப்படி என்று ஆராய்ந்தால் நாரதர் கலஹம் துர்வாசர் சாபம் இவைகளின் ஆழம் காண்பது கடினம். பக்தர்களை சோதித்து அவர்கள் பெருமையை உலகிற்கு விளக்குவதற்காக இவர்கள் அதிகார புருஷர்களாக சஞ்சரிக்கிறார்கள். உண்மையில் பகவானின் தூதர்களே ஆவார்.

No comments:

Post a Comment