Tuesday, April 16, 2019

Srimad Bhagavatam skanda 9 adhyaya 3 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 9- அத்தியாயம் 3

அத்தியாயம் 3
வைவஸ்வத மனுவின் புத்திரனாகிய சர்யாதி ஒரு சமயம் ச்யவனருடைய ஆஸ்ரமத்திற்கு அருகே தன் மகலான் ஸுகன்யாவுடன் தங்கி இருந்தான். அப்போது ஸுகன்யா தன் தோழிகளுடன் ஆஸ்ரமத்தை சுற்றி வருகையில் ஒரு எறும்பு புற்றைக் கண்டாள். அதில் த்வாரத்தில் சூரியன் போல் பிரகாசிக்கும் இரு ஒளிகளைக் கண்டாள். அதை விளையாட்டாக ஒரு முள்ளினால் குத்த அதிலிருந்து உதிரம் பீறிட்டது.

அதைக்கண்டு பயந்த ஸுகன்யா தன் பிதாவிடம் அதைக்கூறச் சென்றபோது சர்யாதி திடீரென்று அவனுடைய பரிவாரங்கள் இயற்கை உபாதையைத் தீர்க்க முடியாமல் சிரம்ப்படுவதைக் கண்டு யாரோ அந்த ஆஸ்ரம வாசிகளுக்குத் தீங்கிழைத்திருக்க வேண்டும் என்று உணர்ந்தான்.

ஸுகன்யாவின் மூலம் நடந்ததைக் கேட்டு அங்கு சென்றபின் ச்யவனமுனிவர் புற்றுக்குள்ளிருந்து தவம் செய்து கொண்டிருக்கையில் அவர் கண்கள் தேஜசால் ஜ்வலிப்பதை உணராமல் ஸுகன்யா அதைக் குத்திவிட்டதை உணர்ந்து அந்த முனிவரிடம் மன்னிப்பு வேண்டி பிராயச்சித்தமாக ஸுகன்யாவை அவருக்கு மணம் செய்து கொடுத்தான். பிறகு அவளை பர்த்தாவுக்கு சேவை செய்ய அங்கேயே விட்டுவிட்டுத் தன் ராஜ்ஜியத்திற்குத் திரும்பினான்.

ஸுகன்யா தன் கணவருக்கு மனம் கோணாமல் பணிவிடை செய்து அவரைத் திருப்திப் படுத்தினாள். ஒரு சமயம் அஸ்வினி தேவர்கள் அவருடைய ஆஸ்ரமத்திற்கு வர அவர்களிடம் ச்யவனர் தன் மனைவியை மகிழ்வுறச் செய்வதற்காக தனக்கு யௌவனமும் அழகும் வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பரிசாகத் யக்ஞத்தில் அதுவரை ஸோமபானத்தில் பங்கு பெறாத அவர்களுக்குத் தன் யாகத்தின் மூலம் அதைக் கொடுப்பதாகக் கூறினார்.

தேவர்களின் வைத்யர்களான அவர்கள் அந்த முனிவரை சித்தர்களால் நிர்மாணிக்கப்பட்ட மடுவில் ஸ்நானம் செய்யுமாறு கூறினார். அவர் அதில் முழுகியதும் அதிலிருந்து சம வயதும் சம உருவமும் ஆடை அணிகளும் கொண்ட அழகிய மூவர் எழுந்தனர். ஸுகன்யா அவர்களில் தன் கணவர் யார் என்று அறிய முடியாமல் அஸ்வினி தேவர்களை பிரார்த்தித்தாள். அவர்கள் உண்மையான ச்யவனரை அவளுக்குக் காட்டி மறைந்தனர்.

பின்னர் ஒருமுறை சர்யாதி ச்யவனரை யாகம் செய்வதற்காக அழைக்க வந்த போது ஸுகன்யா ஒரு அழகிய இளைஞனுடன் இருக்கக்கண்டான். தன் மகள் வயதான கணவரை விட்டு இன்னொருவனுடன் சேர்ந்ததாக எண்ணி கோபம் கொண்டான் . பின்னர் அவளிடம் இருந்து நடந்ததை அறிந்து மகிழ்ச்சியுடன் அவர்களைத் தன் நாட்டிற்கு அழைத்துச்சென்றான். அங்கு ச்யவனர் யாகம் செய்து அஸ்வினி தேவர்களுக்குத் தாம் வாக்களித்தபடி சோமபானத்தை அளித்தார்

சர்யாதிக்கு ஸுகன்யாவிற்குப் பின் பிறந்தவர்கள் மூன்று பேர். அதில் அனந்தன் என்பவனின் மகனான ரைவதன் குசஸ்தலியை தலை நகரமாகக் கொண்ட ஆனர்த தேசத்தை ஆண்டுவந்தான். அவனுக்கு நூறு புதல்வர்களும் ரேவதி என்ற பெண்ணும் தோன்றினர். ரேவதிக்குத் தகுந்த வரனைத்தேடி அவளுடன் பிரம்ம லோகம் சென்ற ரைவதன் அங்கு பிரம்மாவைக் காண ஒரு க்ஷணம் காத்திருக்க நேர்ந்தது.

பிரம்மா அவனுடைய மகள் தகுந்த வரனைப் பெறுவாள் என்று கூறி அவன் அங்கு காத்திருந்த நேரத்தில் பூலோகத்தில் 27 சதுர்யுகங்கள் சென்றுவிட்டன என்றும் தற்சமயம் பகவான் பலராமாவதாரம் எடுத்திருப்பதாகவும் அவருக்கு ரேவதியை மணம் செய்து கொடுக்குமாறும் கூறினார் அவனும் அவ்வாறு செய்து தவம் செய்ய பதரிகாச்ரமம் சென்றான்.

No comments:

Post a Comment