Wednesday, April 17, 2019

Kaashta maunam is a prayer-periyavaa

பெரியவா திருவடியே
                சரணம்.

காஷ்ட மௌனம் - நம் கஷ்டம் போக்கும் மௌனம்

காஷ்டம் என்றால் கட்டை
கட்டையைப்போல் ஓரு அசைவும் இல்லாமல் இருத்தல். நிறைய மகான்கள் மௌனமாயிருந்தது பற்றி கேள்விபட்டிருப்போம் ஆனால் இது போல் 
காஷ்டமௌனம் இருந்தவர் சித்தர்கள். 

மஹா பெரியவா அடிக்கடி காஷ்ட மௌனம் என்ற நிலைக்கு சென்று விடுவது வழக்கம். அப்போதெல்லாம் யாரிடமும் பேசவோ எந்த அங்க அசைவுகளோ கொள்ளாமல் அமர்ந்து இருப்பார், இது நாம் எல்லோரும் அறிந்ததே. 

ஒருமுறை, அடியார்கள் அவரிடம் 'காஷ்ட மௌனத்தில் என்ன செய்வீர்கள்?' என்ற போது, அந்த மாமகான், 'பிரார்த்தனை பண்ணிக்கொண்டு இருப்பேன்' என்றார். 

'உங்களுக்கென்று என்ன  பிரார்த்தனை பண்ணுவேள்?' என்று கேட்டனர் சில அடியார். 

அப்போது ஐயன் சொன்னாராம். 

'எனக்கு என்ன அபிலாஷைகள் இருக்கு? பிரார்த்தனைகள் இருக்கு? என்கிட்டே நிறைய பேர் வந்து அவாவாளோட கஷ்ட நஷ்டங்களை சொல்லி, நீங்க ஆசிர்வாதம் பண்ணினா நிச்சயம் கஷ்ட நிவர்த்தி ஆகிடும் ன்னு சொல்றா. நானும் க்ஷேமமா இருப்பேள் ன்னு சொல்றேன். ஆனா, எனக்குன்னு அவா கஷ்டத்தை தீர்க்கற சக்தி ஏதாவது இருக்கா என்ன? அதனால் தான் அந்த பகவான் கிட்ட 'இன்னிக்கு இத்தனை (ஒன்னோட) கொழந்தேள் இவ்ளோ கஷ்டத்தோட வந்திருக்கா, அவளோட கஷ்டத்தை தீர்த்து, அவாள க்ஷேமமா வை அப்பா - ன்னு ப்ரார்த்திச்சிண்டு இருக்க தான் இந்த மௌனம். இல்லேன்னா, பூஜை, புனஸ்காரங்கள், வர்ற மனுஷாளோட பேச்சு, இத்யாதி இத்யாதி லே மனம் ஒருமிச்சு அவாளுக்காக பிரார்த்தனை பண்ண முடியலே' என்றாராம். 

அருளாளர் மேலும் அருளினாராம்... 

'வரவாளுக்காக பிரார்த்தனை பண்றதை விட எனக்கு வேற என்ன பெருசான வேலை இருக்க போறது? லோக க்ஷேமம் தானே எங்களுக்கு பிரதானம், அதுக்கு தான் இதெல்லாம்' என்றாராம்.

No comments:

Post a Comment