Monday, January 21, 2019

Srimad Bhagavatam skanda 7 adhyaya 1 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 7

அத்தியாயம் 1

ப்ரஹ்லாத சரித்ரம்

பரீக்ஷித் சுகரிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்கிறார். (ten dollar quetion)

ஸம: ப்ரிய: ஸுஹ்ருத் ப்ரம்மன் பூதானாம் பகவான் ஸ்வயம்
இந்த்ரஸ்யார்த்தே கதம் தைத்யான் அவதீத் விஷமோ யதா( 7.1.1)

" பிரம்மஸ்வரூபியே பகவான் எல்லா உயிர்களுக்கும் உண்மையில் சமமானவரும் நண்பரும் ஆக அல்லவா இருக்கிறார். அப்படி இருக்க அவர் எவ்விதம் இந்திரனுக்காக அஸுர்களைக் கொன்றார்? "

மேலும் பரீக்ஷித், "முற்றும் ஆனந்த வடிவினராகிய இவருக்கு . தேவர்களால் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை. முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட இவருக்கு அசுரர்களிடம் பகையோ கோபமோ இருக்க இடமில்லையே "என்றார்.

ஒரு குருவானவர் முக்கியமான விஷயத்தை விளக்கும் வகையில் தன் சீடரிடம் இருந்து வரும் கேள்வியைப் பாராட்டுவது போல சுகர் பின் வருமாறு கூறினார்.

" அரசே எங்கு பாகவத மஹாத்மியமும் பகவத் பக்தியின் பெருக்கும் விளங்குமோ அந்த அற்புதமான ஹரி லீலையைப் பற்றி நீர் வினவியது நன்று."

பரீட்சித்தின் சந்தேகத்தின் மூலம் புண்ணியமான ப்ரஹ்லாத சரித்திரம் வாயிலாக நரசிம்ஹாவதாரத்தைக் கூற ஆவலுற்றார்.

ராஜசூய யாகத்தில் சிசுபாலன் கிருஷ்ணனோடு கலந்ததைக் கண்ட யுதிஷ்டிரர் வியப்படைந்து தேவரிஷியான நாரதரிடம், சிசுபாலனுக்கு சாயுஜ்யம் கிடைத்தது. ஆனால் அதேபோல பகவனை நிந்தித்த வேனன் நரகத்தில் வீழ்த்தப்பட்டது ஏன் என்று கேட்டார்.

நாரதர் பின்வருமாறு கூறினார்.

யார் பகவானை விரோதபாவத்திலாவது அனவரதமும் நினைக்கிறார்களோ அவர்கள் முக்தி அடைகிறார்கள். கம்சனுக்கும் சிசுபாலனுக்கும் முறையே பயம், பொறாமை இவை காரணமாக எப்போதும் கிருஷ்ணனின் நினைவு அவர்கள் மனத்தில் இருந்துகொண்டே இருந்தது.

நாரதர் மேலும் கூறினார். 
" காமத்தால் கோபியரும், பயத்தால் கம்சனும் , த்வேஷத்தால் சிசுபாலனும், உறவால் வ்ருஷ்நிகுலத்தாரும், நட்பால் நீங்களும் பக்தியால் என்னைப்போன்றோரும் பகவானை அடைந்துள்ளோம். வேனன் இந்த ஐந்து வகையில் எதிலும் சேர்ந்தவனல்லன் ஆதலால் நரகம் வாய்த்தது.

சிசுபாலனும் தந்தவக்ரனும் விஷ்ணுவின் பாரிஷதர்களாக இருந்து சனகாதியரின் சாபத்தால் அந்தப் பதவியிலிருந்து நழுவியவர்கள் ஆனார்கள். அவர்கள் ப்ரார்த்தனைப்படி பகவானிடம் விரோதம் பாராட்டி மூன்று ஜன்மங்களில் தன்னிலை எய்தினர். 

அடுத்து ஹிரண்யகசிபுவிற்கு தன் மகனிடம் எப்படி பகை உண்டாயிற்று என்றும் ப்ரஹ்லாதனுக்கு எவ்விதம் விஷ்ணுபக்தி ஏற்பட்டது என்றும் யுதிஷ்டிரர் வினவ நாரதர் ப்ரஹ்லாத சரித்திரத்தைக் கூற ஆரம்பிக்கிறார். 

No comments:

Post a Comment