நாரத பக்தி சூத்திரம்
48.ய: கர்மபலம் த்ய்ஜதி கர்மாணி ஸன்யஸதி , ததோ நிர்த்வந்த்வோ பவதி
கர்ம பலனைத் துறந்தவனும், கர்மத்தையே துறந்தவனும் , இந்த விதத்தில் இருமையைக் கடந்தவனும் மாயையைக் கடக்கிறான்,
நிர்த்வந்த்வ: என்பதற்கு கீதையின் விளக்கம்.
ஞேயஸ்ஸ நித்ய ஸந்யாஸீ யோ ந த்வேஷ்யதி ந காங்க்ஷதி.
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே ( 5.9)
எவன் விருப்பும் வெறுப்பும் அற்றவனோ அவன் இருமையைக் கடந்தவனாக எளிதில் சம்சார பந்தத்தில் இருந்து விடுபடுகிறான். அவன்தான் நித்ய சந்நியாசி எனப்படுகிறான்.
கர்மத்தை விடுவது என்பது சாத்தியம் இல்லை. தேகத்தால் ஓர் செய்கை இல்லாவிட்டாலும் மனதினால் செயல் நடந்துகொண்டுதான் இருக்கும். அதனால் செயல் செய்யவேண்டாம் என்பது தவறு. செய்வதை பலன் கருதாது செய்ய வேண்டும். அதுதான் கர்ம யோகம். அதுவே இந்த சூத்திரத்தில் வலியுறுத்தப் படுகிறது.
கர்மா என்பது சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாமி கர்மா என மூன்று வகைப்படும் . முதலாவது நாம் பல ஜன்மங்களாக சேர்த்து வைத்திருக்கும் மூட்டை. பிராரப்தம் என்பது இந்த ஜன்மத்திற்கு காரணமான, ஏற்கெனவே பலனைக் கொடுக்க ஆரம்பித்த கர்மா. அது இந்த ஜன்மம் முடியும்போதுதான் முடிவுறும்., அதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். ஆனால் அப்படி அனுபவிக்கையில் நாம் விருப்பு வெறுப்பிற்கு இடம் கொடுத்து செயல் படுகையில் புதிதாக கர்மாவை உண்டாகுகிறோம் அதற்கு வரும் ஜன்மங்களில் பலனை அனுபவிக்க நேரிடும்.
உதாரணமாக, ஒருவர் நமக்கு நன்மையோ தீங்கோ செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்., அது நம் ப்ராரப்தத்தின் விளைவு. ஆனால் நாம் அதற்கு எதிர் செயலாக அவரிடம் த்வேஷமோ பிரியமோ கொள்கிறோம். அதற்கேற்ப செயல் படுகிறோம்.
இது நான் என்னும் உணர்வால் வருவது. இதனால் புதிதாக கர்மா ஏற்பட்டு அதன் விளைவை நாம் வரும் பிறவிகளில் அனுபவிக்க நேர்கிறது. இதுதான் ஆகாமி கர்மா எனப்படுவது. ஆனால் என்ன நேர்ந்தாலும் இது நம் ப்ராரப்தத்தினால் வருவது என்று அதனால் பாதிக்கப்படாமல் இருந்தால் ஆகாமி கர்மா உருவாவதில்லை. சஞ்சிதகர்மாவும் பக்தியுடன் எல்லாம் பகவத் சமர்ப்பணமாக செயலாற்றுவதன் மூலம் அழிகிறது. ஆதலால் பிரவித்தளையிலிருந்து விடுபட முடிகிறது.
No comments:
Post a Comment