Wednesday, January 16, 2019

28th paasuram karavaigal pin thruppavai in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

திருப்பாவை- கறவைகள் பின் சென்று

28. கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

இந்தப் பாசுரம் அர்ஜுனன் கீதையில் " உன் மகிமை அறியாமல் உன்னை என் தோழன் என நினைத்து கிருஷ்ணா, யாதவா, நண்பனே , என்றெல்லாம் அழைத்தேனே. என்னை மன்னித்துவிடு" என்றதை ஒத்திருக்கிறது. ஆண்டாள் ஆயர் சிறுமி என்ற பாவத்திலேயே பேசுகிறாள்.

கறவைகள்----கானம் சேர்ந்துண்போம்- எங்களுக்கு பசுக்களோடு காட்டிற்குச் சென்று அங்கு அவைகளுடன் கூட உணவு உண்பது தவிர வேறு ஒன்றும் தெரியாது.

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து----புண்ணியம் யாம் உடையோம். இது பகவானின் சௌசீல்யம், சௌலப்யம், இவற்றை வியக்கும் வரி. 
சௌசீல்யம் என்பது அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தில் அவர்களுடன் சமமாகப் பழகுவது. சௌலப்யம் என்பது எல்லோரும் சுலபமாக அணுகும்படி ஆய்க்குலத்தில் வந்து பிறந்தது.

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா- அனந்த கல்யாண குணசீலனாகிய உனக்கு எது குறை?
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது-பகவானோடுதான் நமக்கு நிரந்தர உறவு என்பதைக் குறிக்கிறது.

அறியாத பிள்ளைகளோம் –எங்களுக்கு உன்னை சரியாக வழிபடக்கூடத் தெரியாது. 
அதனால்தான் அவன் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி, இலையோ, பூவோ, பழமோ நீ எது கொடுத்தாலும் பக்தியுடன் கொடுத்தால் போதும் அதை ஏற்கிறேன் என்றான்.
நாம் சரியான வழிமுறை தெரியாமல் இருந்தாலும் அவனை பக்தியுடன் நினைத்தால் போதுமானது.

சிறு பேரழைத்தனவும் சீறி அருளாதே – உன் மகிமை தெரியாமல் எங்களுடன் விளையாடும் சிறுவன் என்றெண்ணி உன்னை பல பெயர் சொல்லி அழித்தாலும் கோபிக்காதே என்று பொருள். அர்ஜுனனின் வார்த்தைகளுக்கு ஒப்பானது.

இறைவா ----பறையேலோரெம்பாவாய்- உன்னை இறைவன் என்று உணர்ந்து சரணடைந்த எங்களுக்கு நீ அருளவேண்டும்

புண்ணியம் யாம் உடையோம். – பகவானிடம் பக்தி வருவதற்கு பூர்வ ஜன்ம புண்ணியம் வேண்டும். 
கீதையில், என்னை வேதம் படித்த்தனாலோ, தவத்தினாலோ,தானதர்மங்கள் செய்வதாலோ, யாகங்கள் செய்வதாலோ அடைய முடியாது. பக்தி ஒன்றினால் தான் அடைய முடியும் என்கிறான்.

கோவிந்தன் என்னும் பெயரின் உயர்வு.

"கோ என்றால் மோக்ஷம் அல்லது சுவர்க்கம். அதைக்கொடுப்பதால் நீ கோவிந்தன்..
கோ என்றால் அஸ்த்ர சஸ்த்ரம். அதை நீ விச்வாமித்ரரிடம் இருந்து பெற்றதால் கோவிந்தன். 
கோ, பசுக்கள் அவற்றை அறிந்தவன் அதாவது அவைகள் தண்டகாரண்ய ரிஷிகள் என்று அறிந்தவன். 
கோ என்றால் வேதம் நீ வேதத்தால் அறியப்படுபவன்..
கோ என்றால் வஜ்ராயுதம் அதை இந்திரன் பெற வழிகாட்டியவன்.
உன்னை வேதம் சஹஸ்ராக்ஷ: என்று சொல்கிறது கோ என்றால் கண் என்றும் பொருள். 
கோ என்றால் நெருப்புஜ்வாலை. நீ சூர்யமண்டல மத்ய வர்த்தி என்று கூறுகிறது வேதம்.
கோ என்றால் பூமி. ஜலம், வேதம், இந்த்ரியங்கள் என்றும் பொருள். நீ வராஹமாக பூமியை வெளிக்கொணர்ந்தாய், மத்ஸ்யமாகவும் கூர்மமாகவும் நீரில் சஞ்சரித்தாய், வேதங்களின் உட்பொருள் ஆனாய். இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்துபவன் , ஹ்ருஷீகேசன்,

இன்னும் பல அர்த்தங்கள் இருந்தாலும் இவையே முக்கியமாகக் கூறப் படுபவை. ஆண்டாளுக்கு மிகவும் பிடித்த நாமம். அதனால் தான் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவிந்தன் வாழுமூர்.

ஆண்டாள் பூமிதேவியின் அவதாரமானதால் வராஹவதாரத்தை நினைவூட்டும் இந்த நாமம் அவளுக்குப் பிடித்ததாக இருக்கலாம்.

கோவிந்தா என்று கூப்பிட, திரௌபதிக்கு செய்ததுபோல் உடனே அருள் செய்வான்.
மூன்று இடத்தில் பகவான் கோவிந்தன் எனப்படுகிறான். திருமலை, சிதம்பரம், ஸ்ரீ வில்லிபுத்தூர். அதனால்தானோ என்னவோ ஆண்டாள் மூன்று முறை கோவிந்தா என்கிறாள்.

  

No comments:

Post a Comment